Thursday, October 07, 2004

முதல் டெஸ்ட், இரண்டாம் நாள், தேநீர் இடைவேளை

இந்தியா 34/2 (10 ஓவர்கள்) - கங்குலி 18*, சேவாக் 16*

இந்தியாவின் இன்னிங்ஸ் இதைவிட மோசமாகத் தொடங்கியிருக்க முடியாது. இன்று ஆட்டம் முடியும் வரை சோப்ராவும், சேவாகும் களத்திலேயே இருப்பார்கள் என்று பகல் கனவு கண்டிருந்தேன். ஆனால் முதல் ஓவரில் மெக்ராத் பந்து ஒன்றை ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே குத்தி, சடாரென உள்ளே கொண்டுவந்தார். சோப்ரா பந்தை விட்டுவிட எண்ணியிருந்தார். ஆனால் பின்னங்காலில், ஸ்டம்பிற்கு வெகு அருகில் பந்து பட்டது. ஷாட் எதையும் அடிக்காதிருந்ததால் பக்னார் அது எல்.பி.டபிள்யூ என முடிவு செய்தார். 0/1. சரி, போகட்டும், திராவிட் (இந்தியப் பெருஞ்சுவர்!) பார்த்துக் கொள்வார் என்று நினைத்திருந்தேன்.

அடுத்த கில்லெஸ்பி ஓவரில் சேவாக் ஒரு நான்கை அடித்தார். அடுத்து மெக்ராத் ஓவர். மீண்டும் சீம் (பந்தின் தையல்) ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே குத்தி சடாரென பந்து உள்ளே வந்தது. இந்தியப் பெருஞ்சுவரின் ஓட்டைக்குள் புகுந்து ஸ்டம்பைத் தகர்த்தது:-( திராவிடும் 0. இந்தியா 4/2.

அடுத்து கங்குலி தான் விளையாட வந்தார். ஒருவேளை லக்ஷ்மணை அனுப்புவாரோ என்று எதிர்பார்த்தேன். வந்த முதற்கொண்டே கங்குலி மிகவும் தன்னம்பிக்கையுடன் விளையாடினார். பந்தின் பின் சென்று தடுத்தாடுவதில் அவருக்குக் கஷ்டம் எதுவும் இருக்கவில்லை. ஆஃப் திசையில் கில்லெஸ்பியின் பந்துவீச்சில் இரண்டு அருமையான நான்குகள் பெற்றார். ஆனால் சேவாக் அவ்வப்போது அபாயத்தை தொட்டுப் பார்த்துக் கொண்டேயிருந்தார், அதே நேரம் மெக்ராத்தின் பந்தில் ஒரு பிரமாதமான ஸ்டிரெயிட் டிரைவும் உண்டு.

தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரை வீச ஷேன் வார்ன் வந்தார். நல்ல வேளையாக கங்குலி அவரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வார்ன் தான் எப்பொழுதும் வீசுவதை விட 10 கிமீ/மணி வேகம் அதிகமாக வீசினார். ஆனால் கங்குலி அவர் பந்தை எதிர்கொள்வதில் எந்த சிரமத்திலும் தள்ளப்படவில்லை.

தேநீர் இடைவேளையின்போது இருவரும் விக்கெட் இழக்காமல் 34 ரன்களைப் பெற்றிருந்தனர்.

கடைசி வேளையின்போது இதற்கு மேல் ஒரு விக்கெட்டும் விழக்கூடாது. விழுந்தால் திண்டாட்டம்தான். இந்த ஜோடி சேர்ந்து 200 வரையாவது இந்தியாவை எடுத்துச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால் ஃபாலோ-ஆனைத் தடுப்பது கஷ்டம்.

No comments:

Post a Comment