Friday, October 29, 2004

நாக்பூர் டெஸ்ட், மூன்றாம் நாள்

ஆஸ்திரேலியா 398 & 202/3 (73 ஓவர்கள்) - மார்ட்டின் 41*, கிளார்க் 10*; இந்தியா 185

இன்று காலை ஆட்டம் தொடங்கியதுமே இந்தியாவின் தொல்லைகள் அதிகமாயின. இரண்டாவது ஓவரில், ஷேன் வார்ன் வீசிய அளவு குறைந்த பந்தை டீப் ஸ்கொயர் லெக்கில் சுழற்றி நான்கு அடித்த படேல், அடுத்த பந்து - கூக்ளியை - சரியாகப் புரிந்து கொள்ளாமல் முதல் ஸ்லிப்பில் இருக்கும் ஹெய்டனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். படேல் 20, இந்தியா 150/6. அடுத்து பேட்டிங் செய்ய வந்த அகர்கர் வார்ன் பந்தில் இரண்டு நான்குகளைப் பெற, உடனே கில்கிறிஸ்ட் புதுப்பந்தை எடுத்து மெக்ராத், கில்லெஸ்பியிடம் கொடுத்தார். அகர்கார் ஸ்லிப் திசையில் அடித்து மற்றுமொரு நான்கைப் பெற்றார், பின் கில்லெஸ்பி பந்து வீச்சில் இரண்டாவது ஸ்லிப்பில் கிளார்க் பிடித்த மிக அழகான கேட்சால் அவுட்டானார். அகர்கர் 15, இந்தியா 173/7. இதற்கிடையே ஒரு மூன்றைப் பெற்று காயிஃப் தன் அரை சதத்தை எட்டியிருந்தார்.

கும்ப்ளே துணையுடன் காயிஃப் மேலும் ரன்களைச் சேர்ப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. மெக்ராத் பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் இருக்கும் வார்னிடம் கேட்ச் கொடுத்து எதிர்பாராத விதமாக அவுட்டானார் காயிஃப். காயிஃப் 55 (151), 7x4, 1x6. இந்தியா 178/8. இதற்குப்பிறகு இந்தியா 200ஐத் தாண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. கும்ப்ளே, கார்த்திக் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு பந்துகளை எதிர்கொண்டனர். கார்த்திக் கில்லெஸ்பியின் பந்தில் இரண்டாம் ஸ்லிப்பில் கிளார்க்கிடம் பிடிகொடுத்து அவுட்டானார். கார்த்திக் 3, இந்தியா 181/9. அதன்பின் ஸ்கோரர்களைக் கஷ்டப்படுத்தாமல் ஜாகீர் கான் கில்லெஸ்பியின் நேரான பந்தை எதிர்கொள்ளத் தெரியாது பவுல்ட் ஆனார். இந்தியா 185 ஆல் அவுட். ஆஸ்திரேலியா இந்தியாவை விட 213 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது. ஆஸ்திரேலியா ஃபாலோ-ஆனை விதிக்காமல் மீண்டும் பேட்டிங் செய்யத் தொடங்கியது. இதுவும் எதிர்பார்த்ததுதான்.

இம்முறை கானும், அகர்கரும் நன்றாகவே பந்து வீசினர். முக்கியமாக ஜாகீர் கான். தொடக்கத்திலிருந்தே ஹெய்டன், லாங்கர் இருவருமே கானை எதிர்கொள்ள சிரமப்பட்டனர். உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 19/0 என்ற நிலையில் இருந்தது. உணவு இடைவேளைக்குப் பிறகு இரண்டாவது ஒவரிலேயே ஹெய்டனுக்கு கான் வீசிய பந்து ஒன்று ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வந்து விழுந்து உள்ளே வந்த பந்து, பேட், கால் காப்பு வழியாக ஸ்டம்பில் போய் விழுந்தது. ஹெய்டன் 9, ஆஸ்திரேலியா 19/1. அதன்பின் லாங்கர் கான் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆகியிருக்க வேண்டும். ஆனால் நடுவர் அலீம் தர் அவுட் கொடுக்கவில்லை. நேரம் ஆக, ஆக ஆடுகளத்தில் விழும் பந்துகள் மெதுவாகவே எழும்பி வந்தன. இதனால் ரன்களை வேகமாகச் சேர்க்க முடியவில்லை. ஆனாலும் காடிச் பிரமாதக விளையாடி ரன்களைப் பெற்றார். லாங்கருக்கோ ரன்களைப் பெறுவது மிகவும் கஷ்டமாக இருந்தது. காடிச் வேகமாக தன் அரை சதத்தை தாண்டிவிட்டார். ஆனால் லாங்கர் 30இலேயே இருந்தார். தன்ன்னால் ரன்களை வேகமாகப் பெற முடியவில்லை என்பதால் கார்த்திக் வீசிய பந்து ஒன்றை லாங்கர் இறங்கி வந்து அடிக்க முனைந்தார். ஆனால் காற்றிலே மிதந்து வந்த பந்தில் ஏமாந்த லாங்கர் பந்தை மிட் ஆன் திசையில் உயர அடித்தார். லாங் ஆனில் இருந்த லக்ஷ்மண் ஓடிச்சென்று கேட்சைப் பிடித்தார். லாங்கர் 30, ஆஸ்திரேலியா 99/2.

காடிச், மார்ட்டின் இருவரும் மெதுவாகவே, ஆனால் எளிதாகவே ரன்களைப் பெற்றனர். அவ்வப்போது சில நான்குகளும் வந்துகொண்டிருந்தனர். கும்ப்ளே, டெண்டுல்கர், கார்த்திக் என மூன்று ஸ்பின்னர்கள் பந்துவீசினர். கும்ப்ளே முழுவதும் உபயோகமற்றதாக வீசினார். டெண்டுல்கர் கூட பலமுறை மட்டையாளர்களை சிரமப்பட வைத்தார், ஆனால் விக்கெட் எதையும் பெறவில்லை. கார்த்திக் மட்டும்தான் சிறப்பாக வீசினார் என்று சொல்ல வேண்டும்.

காடிச் தன் சதத்தை நிச்சயம் பெற்றுவிடுவார் என்றுதான் தோன்றியது. ஆனால் 99இல் இருக்கும்போது கார்த்திக் வீசிய சற்று வேகம் அதிகமான பந்தை பின்னால் சென்று வெட்டி ஆட முனைந்தார், ஆனால் பேட்டில் படாமல், கால்காப்பில் பட்டது. காடிச் எல்.பி.டபிள்யூ என்று நடுவர் ஷெப்பர்ட் முடிவு செய்தார். காடிச் தன் 99இல் 14 நான்குகளை அடித்திருந்தார். ஆஸ்திரேலியா 171/3. அதன்பின் மார்ட்டினும் கிளார்க்கும் ஆட்டம் முடியும் வரை ஸ்கோரை 202/3 என்ற நிலைக்க்குக் கொண்டுபோனார்கள். இப்பொழுதைய லீட் 415 ரன்கள்.

நாளை ஆஸ்திரேலியா இன்னமும் 100 ரன்கள் பெற்றபின் டிக்ளேர் செய்வார்கள் என்று நினைக்கிறேன். இந்தியா நான்காவது நாளே ஆட்டமிழந்து தோற்க அதிக வாய்ப்புள்ளது. ஆனால் திடீரென சிலிர்த்துக்கொண்டு இரண்டு நாள்கள் முழுதும் விளையாடி டிரா செய்வார்களா என்று பார்ப்போம். ஆடுகளத்தில் கன்னாபின்னாவென்று பந்து ஸ்பின் ஆகத் தொடங்கியுள்ளது. அப்படியானால் ஷேன் வார்ன் சப்புக்கொட்டிக்கொண்டு பந்து வீசுவார். எதற்கும் இருக்கவே இருக்கிறார்கள் மெக்ராத், கில்லெஸ்பி.

கங்குலி நான்காவது டெஸ்டும் விளையாடப்போவதில்லை என்று தெரிகிறது. இரண்டாம் இன்னிங்ஸில் டெண்டுல்கர் எப்படி விளையாடுகிறார் என்பதையும் கூர்ந்து பார்க்க வேண்டும். தான் அவுட்டானது பிரெஸ் பாக்ஸில் ஒருவர் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்ததாலும், அதனால் தன் கவனம் பாதிக்கப்பட்டதாலும் என்பது போல டெண்டுல்கர் தெரிவித்ததாகச் செய்தி...

இப்பொழுதைய கேள்வி ஆஸ்திரேலியா எத்தனை ரன்கள் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தை வெல்லும் என்பதில்தான்.

No comments:

Post a Comment