Saturday, December 04, 2004

ஜெயேந்திரர் பதவி விலக ஸ்வரூபானந்த சரஸ்வதி கோரிக்கை

உண்மையான சங்கர மடமான த்வாரகா பீடத்தின் சங்கராச்சாரியார் ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி ஜெயேந்திரர் கைதை அடுத்து அவர் காஞ்சி மடப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுதான் இதுவரை ஜெயேந்திரர் பதவி பற்றி வந்துள்ள மிகப்பெரும் கோரிக்கை. மிகப்பெரிய இடத்திலிருந்து வந்துள்ளது.

சங்கர மடங்கள் இந்தியாவில் நான்கு இடங்களில் ஸ்தாபிக்கப்பட்டன. தெற்கில் சிருங்கேரி, மேற்கில் த்வாரகை, வடக்கில் ஜ்யோதிர்மத், கிழக்கில் புரி என்ற இந்த நான்குதான் வழிவழியாக வந்துகொண்டிருப்பவை. இதில் ஜ்யோதிர்மத் பீடத்தின் பரம்பரை வழக்கொழிந்துபோனபின் மீண்டும் 1941இல் புனரமைக்கப்பட்டது. ஆனாலும் இந்தப்பட்டத்திற்கு யார் வருவது என்பது பற்றி பல வழக்குகள் உண்டு. இந்த வழக்கில் ஈடுபட்ட ஒருவர்தான் ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி. ஆனால் பின்னாளில் இவரே நியாயமான முறையில் த்வாரகா பீடத்துக்கு சங்கராச்சாரியாராக நியமிக்கப்பட்டார். 1992வரை ஸ்வரூபானந்த சரஸ்வதி த்வாரகா, ஜ்யோதிர்மத் ஆகிய இரண்டு பீடங்களுக்கும் சங்கராச்சாரியார் என்ற முறையிலேயே செயல்பட்டு வந்தார். (ஜ்யோதிர்மத் பதவிக்கு மட்டும் வேறு சிலரும் தாங்கள்தான் சங்கராச்சாரியார் என்று சண்டையிட்டனரே தவிர இவரது த்வாரகா பதவியில் யாரும் தலையிடவில்லை.)

தெற்கில் சிருங்கேரி தவிர மற்ற மடங்களில் அவ்வப்போது சில குழப்பங்கள் நிகழ்ந்துள்ளன. பாரதி க்ருஷ்ண தீர்த்தா (இவர் ஒரு தமிழ் ஸ்மார்த்த பிராமணர்! பெயர் வெங்கட்ராமன்) என்பவர் 1925 வரை த்வாரகா சங்கராச்சாரியாராக இருந்து, பின் 1925-1960 வரை புரி சங்கராச்சாரியாராக இருந்தவர். (ஆங்கிலத்தில்) வேதிக் கணிதம் என்ற புத்தகத்தை எழுதியவர் . (இந்தப் புத்தகத்தை நான் படித்துள்ளேன். பெருக்கல், ஸ்கொயர் ரூட் கண்டுபிடிப்பது ஆகியவை போன்ற சிலவற்றில் சுவையான சில குறுக்கு வழிகளைக் காண்பிக்கிறதே தவிர பெரிய உயர் கணித உண்மைகள் எதுவுமே இந்தப் புத்தகத்தில் கிடையாது.) சங்கராச்சாரியாராக இருந்தபோதே சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டவர். இவருக்கு எதிராக பிரிடிஷ் அரசு வழக்கு ஒன்றையும் கொண்டுவந்தது.

இப்படி இஷ்டத்துக்கு இந்த மடத்திலிருந்து அந்த மடத்துக்கு சங்கராச்சாரியார் ஆவது, நாலைந்து பேர்கள் ஒரு மடத்தின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுவது என்று பிற மடங்கள் இருக்கையில், சிருங்கேரி மட்டும் அமைதியாக இருந்து வந்தது. அதனால்தான் ஆதி சங்கரரே காஞ்சியில் ஒரு பெரிய மடத்தை உருவாக்கினார் என்று கும்பகோணத்தில் இருந்துவந்த 'மஹா பெரியவாள்' சொல்லிவைத்தார். ஒன்றுக்கு இரண்டாக வாரிசுகளும் வந்தன.

ஆனால் பிற சங்கராச்சாரியார்கள் காஞ்சி மடத்தை தங்களுக்குச் சமமானதாக ஏற்றுக்கொள்ளவில்லை. அதே சமயம் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் காஞ்சி மடத்தை ஒதுக்கி வைக்கவும் முடியவில்லை. எனவே சங்கர மடத்தலைவர்கள் இணைந்து பங்கேற்கும் கூட்டங்களில் நான்கு பெரிய இருக்கைகளும், காஞ்சி மடாதிபதி உட்கார சின்ன இருக்கையும்தான் (ஒருபடி கீழே) இருக்கும். அதனால் 'மஹா பெரியவாள்' இந்தக் கூட்டங்களுக்கு எப்பொழுதுமே ஜெயேந்திரரை அனுப்பி வைத்துவிடுவார். அனைத்து சங்கராச்சாரியார்களும் இணைந்து கையெழுத்திடும் அறிக்கையிலும் (உதாரணத்துக்கு, பாபர் மசூதி இடிப்பு சம்பந்தமான அறிக்கை) காஞ்சி மடாதிபதிக்கு எல்லாக் கையெழுத்தும் முடிந்து கீழாக ஓரிடம். [இந்த மேல்-கீழ் நிலை வேறுவிதமாகவும் நடப்பது உண்டு. சில மாதங்களுக்கு முன்னர் கர்நாடகாவில் நடைபெற்ற, ஹிந்துமதத் தலைவர்கள் ஈடுபட்ட ஒரு மாநாட்டில் ஜெயேந்திரருக்கு மட்டும் உயர்ந்த இருக்கை, மற்ற பிராமணரல்லாத மதத்தலைவர்கள் உட்கார சற்றே தாழ்ந்த இருக்கை!]

ஸ்வரூபானந்த சரஸ்வதி காஞ்சி மடத்தை சிருங்கேரி மடத்தின் ஓர் அங்கமாகவே கருதி வந்தார், அதைப் பளிச்சென்று சொல்லியும் வந்திருக்கிறார். இப்பொழுது ஜெயேந்திரர் தண்டத்தையும், காஞ்சி மடப் பதவியையும் தூர எறிந்துவிட்டு தன் மீதுள்ள களங்கத்தைத் துடைக்க முற்படவேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்லியிருக்கும் சங்கராச்சாரியாரும் இவரே.

சிருங்கேரி, புரி, ஜ்யோதிர்மத் சங்கராச்சாரியார்களும் இனி வரும் நாள்களில் வெளிப்படையாகவே தங்கள் எண்ணங்களை வெளியிடுவதன்மூலம் ஜெயேந்திரர் மூலமாக சங்கர மடம் என்ற பெயருக்கு வந்திருக்கும் களங்கத்தை நீக்க முயலவேண்டும்.

6 comments:

  1. //பரம்பரை வழக்கொழிந்துபோனபின் மீண்டும் 1941இல் புணரமைக்கப்பட்டது.//
    'புனரமைக்கப்பட்டது' என்று இருந்திருக்கவேண்டும்.

    By: Montresor

    ReplyDelete
  2. சங்கர மடம் என்ற பெயருக்கு வந்திருக்கும் களங்கத்தை நீக்க முயலவேண்டும்.
    --- Media trial is over! Character assassination is also completed! Mutt's credibility is almost destroyed as intended by some opportunists. Even if he is declared innocent later by a court of Law, it is of no use/purpose really. So, what is the big point in other Sankaracharyas voicing theri opinions openly NOW?

    By: Anonymous

    ReplyDelete
  3. Montresor: மாற்றிவிட்டேன். நன்றி.

    Anonymous: ஜெயேந்திரர் மீது சுமத்தப்பட்டிருக்கும் கொலைக்குற்றம் பழிதீர்க்கவென்று போடப்பட்டது என நான் நினைக்கவில்லை. அப்படியே பொய்ப்பழி என்றால் அதை வலுவாக எதிர்த்து, இப்படிப்பட்ட பழி போடப்பட என்ன காரணம்; ஜெயேந்திரருக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையில் நடந்ததுதான் என்ன? (பணத்தகராறா? சொத்துத்தகராறா?) என்பன வெளிக்கொணரப்பட்டு தமிழக அரசின் மீது மானநஷ்ட வழக்குப் போடப்பட வேண்டும்.

    ஆனால் அதே நேரம் காஞ்சி சங்கரமடம் பற்றிய உண்மைகள் பலவும் வெளிவர வேண்டும். ஜம்புகேஸ்வரம் ரா. சோமசேகர கனபாடிகள் என்ற பெயரில் வெளியான துண்டுப் பிரசுரங்கள் கிட்டத்தட்ட மூன்று? நான்கு? வருடங்களாகவே வெளியில் கிடைக்கின்றன. அவற்றில் ஏதேனும் உண்மை உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

    ReplyDelete
  4. What you are telling makes sense.

    But, I was talking about the way this issue has been handled by the politicians, police and the media, which is utterly deplorable. If he is proved guilty, he must be punished. Now, it will be difficult to retrieve the lost reputation. That was my basic point, really.

    Hope I am clear.

    By: Anonymous

    ReplyDelete
  5. இதுவரை அறிந்திராத, முற்றிலும் புதிய தகவல்களை தந்துள்ளீர்கள்.

    நன்றி.

    அன்புடன்

    ராஜ்குமார்

    ReplyDelete
  6. "சொர்ணக்காவுடன் டண்டனக்கா" என்றெல்லாம் தரம் தாழ்ந்து எழுதும் அளவிற்கு மீடியா சென்றுள்ளது வருந்தத்தக்கது. போலீஸ் விசாரணையில் தெரியவரும் ஒவ்வொரு விஷயமும் எப்படி நக்கீரனுக்கும் இன்னபிறருக்கும் கசியவிடுகிறார்களோ அல்லது விஷயங்கள் அவ்வளவாக இல்லாத நிலையில் (ப்ராசிக்யூஷன் தரப்பில் கோர்ர்டில் தாக்கல் செய்யப்படாமல்) சும்மாவேனும் காரக்டர் அசாசினேஷனுக்கு கசிய விடுகிறார் போலவும் பல விஷயங்கள் நடக்கின்றன. எது உண்மை எது பொய்.. யாருக்குத் தான் தெரியும் ?

    குமார். வி.

    By: Kumar V

    ReplyDelete