Monday, December 20, 2004

அவ்னீஷ் பஜாஜ் கைது பற்றி

மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் தில்லி போலீஸ் நடந்துகொண்டிருக்கிறது.

பாஸீ.காம் என்னும் இந்திய இணைய ஏலச்சந்தையின் தலைமை நிர்வாகி அவ்னீஷ் பஜாஜ். இவர் இணைந்து உருவாக்கிய பாஸீ.காம் இணைய நிறுவனத்தை அமெரிக்காவின் ஈபே, சில மாதங்களுக்கு முன்னர் விலைக்கு வாங்கியது.

தில்லி பப்ளிக் ஸ்கூல் மாணவர் ஒருவர், மாணவி ஒருத்தியுடன் உடலுறவில் ஈடுபட்டு அதனை செல்பேசி வழியாகப் படமும் எடுத்து ஊரெல்லாம் MMS வழியாகப் பரப்பியுள்ளார். அதனை ஐஐடி கரக்பூர் மாணவர் ஒருவர் VCDயில் வெட்டி எடுத்து (2.37 நிமிடங்கள்) பாஸீ வழியாக 100 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். அதையும் ஆறு பேர் காசு கொடுத்து வாங்கியுள்ளனர்.

விஷயம் வெளியே தெரிய வந்ததும் தில்லி காவல்துறை படு சுறுசுறுப்பாக வேலை செய்தது.

விசாரணைக்கு அழைக்கப்பட்ட பாஸீ தலைமை நிர்வாகி அவ்னீஷ் பஜாஜ் போலீஸால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் கொண்டுவரப்பட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் பஜாஜுக்கு பெயில் தராமல் ஆறு நாள்கள் நீதிமன்றக் காவலில் திஹார் ஜெயிலில் அடைத்துள்ளனர்.

அவ்னீஷ் பஜாஜ் செய்தது கொலைக்குற்றமல்ல. ஊரை விட்டு ஓடிவிடக் கூடியவரும் அல்ல. பாஸீ.காம் ஒரு பெரிய நிறுவனம். விஷயம் வெளியே தெரிய வந்ததும் இந்த "போர்னோ" விசிடி விற்பனை தடுக்கப்பட்டிருக்கிறது.

உடனடியாக அவ்னீஷ் பஜாஜ் பெயிலில் வெளியே விடப்பட வேண்டும். எதற்கெடுத்தாலும் ஆள்களை ஜெயிலில் தள்ள வேண்டியதன் அவசியத்தை போலீஸும், நீதிமன்றமும் சிந்திக்க வேண்டும். அவ்னீஷ் பஜாஜ் பெயிலில் வெளியே விடப்படக்கூடாது என ஆவேசமாக வாதாடிய தில்லி அரசு வழக்கறிஞர், முட்டாள்தனமான சட்டம் இரண்டுமே கண்டிக்கப்படவேண்டியவை. அரசு வழக்கறிஞரின் வாதத்தை அப்படியே ஏற்றுக்கொண்ட நீதிபதியின் நிலை வருத்தத்தைத் தரவைக்கிறது.

மேற்படி தகவல் தொழில்நுட்பச் சட்டத்தைத் தீவிரமாக மறுபரிசீலனை செய்யவேண்டும்.

[பாஸ்டன் பாலாஜியின் பதிவு]
[ராஜேஷ் ஜெயின் பதிவு]

3 comments:

  1. 'பத்தாம் பசலித்தனமான சட்டம்'. என்பதுதான் என் கருத்தும். நாளைக்கு இதே போல ஒரு வலைப்பதிவர் எதாவது ஏடாகூடமாக எழுதினால் தமிழ்மணம்.காம் மாதிரி திரட்டும் தளங்களின் நிர்வாகியைக்கூடக் கொண்டுபோய் உள்ளே போட்டுவிடலாம். என்ன நடக்கிறது இங்கே?

    ReplyDelete
  2. ஆம் என்கிறார்கள் இந்திய தொழில்நுட்ப சட்ட வல்லுனர்கள். உங்கள் வலைப்பதிவுக்கு பிறர் வந்து "போர்ன்" விற்கும் தளம் ஒன்றின் சுட்டியைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டாலும், (அதாவது ஸ்பாம்) தவறு உங்கள் மேலாகுமாம். உங்கள் வலைப்பதிவோ, இணையத்தளமோ எங்கோதான் ஆபாசப்படம் எங்கு வாங்குவது என விளம்பரப்படுத்தப்படுவதாலாம்.

    அதை நீங்கள் அவசர அவசரமாக அழித்துவிட்டாலும், அந்த இடைவெளியில் யாராவது உங்கள் பக்கத்திலிருக்கும் சுட்டியின் மூலமாக சம்பந்தப்பட்ட பொருளை வாங்கியிருந்தால், அவர்களை சாட்சிகளாகவும் கொண்டுவரமுடியும் என்றால், நீங்களும் கம்பி எண்ண வேண்டியதுதான் என்றாகிறது.

    இணையம் பற்றி துளி அறிமுகமும் இல்லாத முட்டாள்களால் உருவாக்கப்பட்ட சட்டம் அப்படித்தானே இருக்கும்?

    இதைக் கடுமையாக எதிர்ப்பது நம் (அட் லீஸ்ட் இந்தியாவில் இருப்பவர்களின்) வேலையாகிறது.

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete