Wednesday, January 26, 2005

கிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும்? - 2

கிராம வருமானத்தை எப்படி அதிகரிப்பது என்று பேச்வதற்கு முன்னால், கிராம வருமானத்தை ஏன் அதிகரிக்க வேண்டும் என்று பார்ப்போம். யாருக்கும் இதில் சந்தேகம் இருக்காது என்று முன்னர் சொல்லியிருந்தேன். ஆனால் சிலருக்காவது சந்தேகங்கள் இருப்பது போலத் தெரிகிறது.

இன்றைக்கு பொருளாதார வளர்ச்சி என்று சொல்லும்போது உற்பத்தி அதிகரிப்பு, GDP அதிகரிப்பு ஆகிய இரண்டையும் கருத்தில் வைக்கிறோம். வருமானம் அல்லது பணம் என்பது ஒரு குறியீடுதான். அதன் பின்னணியில், அடிப்படையில் இருப்பது பொருள் உற்பத்தி. அடிப்படைப் பொருள் இல்லாமல் அதிகமாகப் பணத்தை அச்சடித்து, "நாளை முதல் ஒரு பழைய ரூபாய் என்பது பத்து புது ரூபாய்கள்" என்று சொல்வதால் யாருக்கும் எந்த உபயோகமும் இருக்கப் போவதில்லை.

எனவே ஒருவகையில் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று சொல்லும்போதே உற்பத்தியைப் பெருக்க வேண்டும் என்பதுதான் உட்பொருள். சில நேரங்களில் வருமானத்தை இரட்டிப்பாக்க, பொருள் உற்பத்தியை இரண்டு மடங்குக்கு மேலாகவும் பெருக்க வேண்டிய அவசியம் இருக்கும்! ஏனெனில் சந்தையில் - மாறுகடையில் - பொருள் அதிகமாகக் கிடைக்கும்போது - supply அதிகமாகும்போது - விலை குறையும்.

ஆனால் அதே சமயம் உலகத்தின் வேறொரு பகுதியில் புதிய மாறுகடையில் நமது உற்பத்திப் பொருளுக்கு அதிக விலை கிடைக்கலாம். அப்பொழுது உற்பத்தியைப் பெருக்காமலேயே அதிகம் சம்பாதிக்க முடியும். ஆனால் பிற நாட்டின் மாறுகடைகளுக்குச் செல்லவேண்டுமானால், அதைப்பற்றிய புரிதல் அவசியமாகிறது. சில மாறுகடைகள் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படும் பொருள்கள் மீது மேலதிக வரிகளை (anti dumping duties) விதிப்பார்கள். அமெரிக்க இறால் உற்பத்தியாளர்களின் முறையீட்டால் இந்திய இறால் இறக்குமதியின் மீது அமெரிக்க அரசு அதிக வரி விதித்திருந்தது. [இப்பொழுது சுனாமியால் இந்தியா பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த வரி தாற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.] பிற மாறுகடைகளை அடைய வேண்டுமானால் உற்பத்தித் தரத்தைப் பெருக்க வேண்டியது அவசியமாகிறது. மாறுகடை நுட்பங்களை அறிய வேண்டியதாகிறது. தொழில்நுட்பம் மூலம் பதப்படுத்துதல், பலநாள்கள் பாதுகாத்து வைத்தல் ஆகியவை பற்றி யோசிக்க வேண்டியதாகிறது. நிறைய மூலதனம் தேவைப்படுகிறது.

இப்பொழுது கிராமப்புற சராசரி வருமானத்தை வைத்துக்கொண்டு அடிப்படை வசதிகளைச் செய்வதே பெரும் பாடாக உள்ளது. எந்த முன்னேற்றமாக இருந்தாலும் அரசு இயந்திரங்களின் மூலமே அவை உருவாகும் என்று அதற்காகக் காத்திருக்க வேண்டியதாகிறது. தனியார் நிறுவனங்கள் தங்களின் முதல் மாறுகடையாக மாநகரங்கள், அதன் பின்னர் சிறு நகரங்கள், கடைசியாக (தேவைப்பட்டால்) கிராமங்கள் என்றுதான் பார்க்கின்றனர்.

காலனியாதிக்கத்தில் எப்படி இந்தியா போன்ற நாடுகளின் சொத்து பிற நாடுகளுக்குச் சென்றதோ, அதைப்போலவே இப்பொழுது கிராமங்களின் சொத்தும் நகரங்களை நோக்கியே செல்கிறது. கிராமங்களின் உற்பத்திப் பொருளான உணவுப்பொருள்களின் விலை வெகுவாகக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆனால் இந்த உணவுப்பொருளை உற்பத்தி செய்யவே கிராமங்கள், நகரங்களில் முகாமிட்டிருக்கும் உரக் கம்பெனிகளை நாட வேண்டியுள்ளது. டீசல் முதல், சோப்பு, நகச்சாயம் வரையிலான அனைத்துப் பொருள்களையும் வாங்கும்போது கிராம வருமானம் நகரத்தை நோக்கிச் செல்கிறது. இதில் இந்திய நிறுவனம், MNC நிறுவனம் என்றெல்லாம் பேசி எந்தப் பயனும் இல்லை. மொத்தத்தில் கிராமங்களால் இப்பொழுதைக்கு நகரங்களுக்குத் தருவதற்கு ஒன்றே ஒன்றுதான் உள்ளது. உணவுப் பொருள். ஆனால் அதற்காக அவர்களுக்குக் கிடைக்கும் வருமானத்தை விட, கிராமங்கள் நகரப் பொருள்களை வாங்கச் செலவிடும் தொகை அதிகமாகிறது.

இந்திய கிராமங்களுக்கும், நகரங்களுக்குமான வர்த்தக வித்தியாசம், இந்திய சுதந்தரத்துக்குப் பிறகு அதிகரித்துக்கொண்டுதான் வந்துள்ளது. விளைவாக கிராம-நகர வருமான வித்தியாசமும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.

இதன் விளைவாக கிராமங்கள் தங்கள் உடைமைகளை சிறிது சிறிதாக பணம் உள்ள நகரத்தாருக்கு விற்று, அடிமைகளாக மட்டுமே இருக்க வேண்டிய நிலை வந்து சேரும். நகர வங்கிகளிலிருந்து கடன் வாங்கி - அதென்ன நகர வங்கிகள் என்று கேட்கிறீர்களா? வங்கிகளின் தலைமை அலுவலகங்கள் எங்குள்ளன? அங்குதான் உபரி வருமானம், நிகர லாபம் போய்ச்சேருகிறது. வங்கிகளின் பங்குதாரர்கள் எங்கு வசிக்கிறார்கள்? முக்கால்வாசிப் பேர் நகரங்களில். ஈவுத்தொகையும், முதல் பெருக்கமும் அவர்கள் கைக்குத்தான் போய்ச்சேருகிறது - அந்தக் கடனிலும் கிராம மக்கள் முழுகிப் போகின்றனர். வானம் பொய்க்கும்போதோ, சுனாமிப் பேரலைகளுக்குப் பிறகோ, தற்கொலை செய்து கொள்வது மட்டும்தான் ஒரே வழி.

ஒரு நாட்டின் அரசுதான் இந்த ஏற்றத்தாழ்வுகளை சமப்படுத்தி, பணம் பெருகியுள்ள இடங்களிலிருந்து வரிகள் மூலம் அவற்றைப் பெற்று பணம் இல்லாத இடங்களுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் இதன் விளைவாக ஏற்றத்தாழ்வுகள் ஓரளவுக்குத்தான் குறையுமே ஒழிய கிராமங்கள் உற்பத்தி ஸ்தனங்களாக மாறாவிட்டால் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும்.

இதிலிருந்து மீள வேண்டுமானால், இந்திய கிராமங்கள் தங்களைத் தனி நாடாக உருவகம் செய்து கொள்ள வேண்டும். எந்த விதத்தில் புது உற்பத்திப் பொருள்களையும், சேவைகளையும் உருவாக்கி அவற்றை நகர மக்களிடம் விற்க முடியும், பிற நாடுகளில் விற்க முடியும் என்பதை கிராமங்கள் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். அதே நேரத்தில், ஒவ்வொரு கிராமமும் பக்கத்தில் உள்ள கிராமங்களின் தேவையை நகரங்களை விட வேகமாக, உயர்வாக எப்படி திருப்திப்படுத்த முடியும் என்பதையும் கவனிக்க வேண்டும்.

நாடுகளாகப் பிரிந்திருந்தால் வர்த்தகத் தடைகள் மூலம் ஒரு நாடு பிற நாடுகளிடமிருந்து தன் மக்களைக் காப்பாற்ற முடியும். ஆனால் ஒரே நாடாக இருக்கும் பட்சத்தில் கிராமங்கள் நகரங்களின் பொருள்கள், சேவைகள் மீது எந்த அதிக வரியையும் விதிக்க முடியாது. எனவே (பொருள்/சேவை) உற்பத்திப் பெருக்குதல், தன்னளவில் அல்லது சுற்றியுள்ள கிராமங்கள் சேர்ந்து தனது தேவையை கவனித்துக் கொள்வது, கிராம உற்பத்திப் பெருக்கத்துக்குத் தேவையான முதல், நுட்பம், கல்வி, மனிதவளம் ஆகியவற்றைக் கொண்டுவந்து சேர்ப்பது என்பதில் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

[பகுதி 1: கிராம வருமானத்தை இரட்டிப்பாக்க என்ன செய்யவேண்டும்? - 1]

6 comments:

  1. பத்ரி அவர்களுக்கு
    வணக்கம். தங்களது சமூகப் பொறுப்போடு எழதிவரும் கிராம வருமானத்தை எப்படி பலமடங்கு
    பெருக்கலாம் என்பதை மிக கவனமாகப் படித்து வருகிறேன். நல்ல பதிவு.
    முடிந்தால் எப்படியெல்லாம் நம் பங்கினைச் செலுத்தலாம் எனச் சொல்லுங்கள். நம்மால் ஆன
    பங்கினை தொடருவோம்.
    நன்றி.வண்க்கம்!
    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  2. உங்களையெல்லாம் ஒன்னும் சொல்ல முடியாது! டாபிக் ஆரம்பிச்சு முன்னாடி போவீங்கன்னு பாத்தா பினாடி போறீங்க?(முட்டிக்கிறேன்)(முட்டிக்கிறேன்)

    By: karthikramas

    ReplyDelete
  3. இல்லை ஜேஸ்ரீ, உங்கள் தவறு என்றெல்லாம் பெரிதுபடுத்தாதீர்கள். அப்படியே நீங்கள் கேட்டாலும் அதிலும் தவறில்லை, விளக்கவேண்டியதுதான் சரியானது.
    பொதுவாக பதிர்யின் கருத்தொ0டு(கிராம பெர் காப்பிட்டா வருமானத்தை அதிகரிக்கவேண்டும்) நான் ஒத்துபோகிறேன். உங்களுக்கு இல்லை என்றாலும் எழுதாத பிறர் பலருக்கும் இந்த கேள்வி இருக்கலாம். உங்கள் கமண் முழுதாய் படிக்க முடியவில்லை ; ஏதோ கவலைப்படுவதாக தெரிகிறது. அது வேண்டாம் என்பதற்காக இந்த கமண்ட். மீதி வீட்டுக்குப் போனபின்.


    By: karthikramas

    ReplyDelete
  4. கிராம பொருளாதாரத்தை மேம்படுத்துவதுப் பற்றி நீங்கள் பேசி வருவது நிறைவான விஷயம். நான் பதியப்போகிற விசயம்

    எந்தளவிற்கு உங்களின் பதிவோடு ஒத்துப்போகும் எனத்தெரியவில்லை. ஆனாலும், நீங்கள் சொல்வதைப் போலவே இது ஒரு

    விவாதத்தில் முடியக்கூடிய விசயமில்லை. அடிப்படை வசதிகள், கல்வி, சுகாதாரம் போன்றவை மிக அவசியம். அதில் ஜெயஸ்ரீ,

    கார்த்திக் கருத்துகளுடன் ஒத்துப் போகிறேன்.

    நான் சொல்லவிழைவது இந்தியாவில் உள்ள பெரிய நிறுவனங்கள் இதனை ஒரு பெரும் காரியமாக எடுத்துக்கொண்டு அதில் முழு

    முனைப்போடு இறங்கியிருக்கின்றன என்பது எத்தனை பேருக்கு தெரியும். இதனால, இந்தியா மாறிவிட்டது என்று பொருள் அல்ல.

    நாம் மாற்றவேண்டியவை, முன்னெடுத்து செல்ல வேண்டியவை நிறைய உண்டு. அதில் எனக்கு கருத்து வேறுபாடுகளில்லை.

    இங்கே நான் பதிய விரும்புவது, தற்போது நடைமுறையில் உள்ள முயற்சிகளும் அதன் பலன்களும் மட்டுமே.

    அமுல் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. அமுலின் முக்கியமான விற்பனையாளர்கள், குஜராத் மற்றும் சுற்றியுள்ள மாநிலங்களிலுள்ள

    சிறு விவசாயிகள், ஆடு, மாடு வளர்ப்பவர்கள். இன்று இந்தியாவில் ஒரு இன்றியமையாத பிராண்டாக அது மாறியுள்ளது என்பது

    ஒரு கூட்டுறவினால் என்பது மெச்சத்தக்கது. கூட்டுறவு அமைப்பில் சில, பல குறைபாடுகள் இருக்கலாம், அதில் எனக்கு கருத்து

    வேறுபாடுகளுண்டு. ஆனாலும், இது ஒரு முக்கியமான பாதை.

    சென்னை ஐஐடியின் என்-லாக் பற்றி அறிந்திருப்பிர்கள் என்று நினைக்கிறேன். என் - லாக் செய்வது ஒரு மிக முக்கியமான பணி

    என்பது என் எண்ணம். ஒரு பன்னூடக கியாஸ்கை (Multimedia & Browsing Kiosk) ஒவ்வொரு கிராமங்களில்

    உருவாக்குவதன் மூலம் ஒரு வலைப்பின்னலை சத்தமில்லாமல் செய்துக் கொண்டிருக்கிறது. ஒரு கியாஸ்கினால் பெரிய வேலை

    வாய்ப்புகள் வாராது என்பது ஒரு சாரரின் கருத்து. என்னைப் பொருத்தவரை, அது மிகச் சிறந்த ஒரு முன்மாதிரி. இணையம்,

    மின்னஞ்சல், வெப்கேம் மற்றும் பிற தகவல் சாதனங்களின் மூலமாக ஒரு கிராமத்தையும் (அல்லது பல கிராமங்களையும்) , அந்த

    கிராமத்திற்குத் தேவைப்படும் விசயங்களையும் ஒருங்கிணைக்க இதனால் முடியும். எல்லாவிதமான தகவல்களையும் இதன் மூலம்

    விநியோகிக்க முடியும். ஏறக்குறைய, 11/2 வருடங்களுக்கு முன்பே, வெப்கேமின் வழியே மருத்துவ ஆலோசனைகளையும்,

    விவசாய சார்புள்ள விசயங்களையும் இந்த கியாஸ்கள் செய்து வருகின்றன என்பது உண்மையிலேயே நிறைய பேருக்கு

    வியப்பூட்டும் செய்தியாக இருக்கும். மேலும் விவரங்களுக்கு http://www.n-logue.com

    தனியார் நிறுவனங்களின் மீது வீசப்படும் பெரும் குற்றச்சாட்டுகளில் மிக முக்கியமானது அவர்கள் கிராமப்புறத்தைப்(rural

    market) பற்றி கவலைபடுவது என்பது தான். ஆனால், உண்மை என்னவென்றால், அரசாங்கத்திற்கு முன்னர், எல்லா

    வசதிகளையும் முன் எடுத்து செல்பவை தனியார் நிறுவனங்கள். உதாரணத்திற்கு, ஐடிசி யை எடுத்துக்கொள்வோம். ஐடிசியின்

    ஈ-சோபால் என்ற திட்டத்தில், மகாராஷ்டிரா, உத்தரான்ஞல் போன்ற மாநிலங்களில் மட்டும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட

    விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதுவும் ஏறத்தாழ, என் - லாக் செய்வதுப் போல, ஒரு கியாஸ்கை நிறுவி, அதன் முலம்

    விவரங்களை தருகின்றது. மிக முக்கியமாக இங்கு நீங்கள் கவனிக்க வேண்டியது, அவர்களின் distribution network. ஐடிசியின்

    விவசாயப் பொருட்களுக்கான சந்தையின் நீட்சிதான் இது. ஈ-சோபாலில் உறுப்பினராக உள்ள விவசாயியின் வீட்டிற்கு

    உரமுட்டைகளும், விதைகளும், நிலம் சார்ந்த அறிவியலாளரின் குறிப்புகளும், ஆலோசனைகளும் வந்து இறங்குகின்றன.

    இதற்குமுன் ஒரு விவசாயி, தன் விதைகளையும், பயிர் சார்ந்த பிறப் பொருட்களையும் வாங்க டவுனுக்கோ, பிற சந்தைக்கோ போக

    வேண்டிய நிலைமை இருந்தது. இது ஒரு மனரீதியான மாற்றமாய் பார்க்கலாம். ஒரு விற்பனையாளன் என்ற நிலை மாறி,

    இன்றைக்கு, ஐடிசி, அவர்களை தங்கள் வியாபாரத்தின் ஒரு பங்காளியாய் (Channel Partner) பார்ப்பது ஒரு ஆரோக்கியமான

    மாற்றம்.

    இதைப் போன்றதொரு காரியத்தை, முருகப்பா குழுமத்தின் ஒரு அங்கமான பாரி விவசாயப்பொருட்களின் பிரிவும் செய்கிறது

    (Parry Agro Division). இதைத்தவிர மும்பாயினை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பெண்களுக்கான் தன்னார்வ

    நிறுவத்தோடு (பெயர் மறந்துவிட்டது....சில மாதங்களுக்கு முன் பிபிசி - இந்தியா ஷோவில் பார்த்த்து) இந்தியாவின் மிகப்பெரிய

    வாடிக்கையார் பொருட்களை உற்பத்தி செய்யும் ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனம் (HLL) கைக்கோர்த்துக் கொண்டுள்ளது. அதன்

    பணி, ஒவ்வொரு கிராமத்திலும் அல்லது கிராம குழுமத்திலும் ( 10 -15 கிராமங்கள் அடங்கிய ஒரு குழு) உள்ள பெண்களை

    தயார்படுத்தி ஒரு குழு அமைத்து (Self Help Group) அதன் மூலம் பொருட்களை விற்பனை செய்வது. இந்த அமைப்புக்கு

    "ஷக்தி" என்று பெயர். உடனே நாம் அவர்கள் அவர்களின் தயாரிப்புகளைத் தான் விற்பார்கள், இதில் எங்கு பொருளாதார

    முன்னேற்றத்திற்கான வாய்ப்பு இருக்கிறது என்று, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிட வேண்டியதில்லை.

    இதன் மூலம் வெளியுலகத் தொடர்புகள் பெருகும். ஒரு கிராமத்தின் உற்பத்தியென்ன, அதை வைத்துக்கொண்டு, கையில்

    இருக்கக்கூடிய குழுவின் மூலம் எப்படி புதுப் பொருட்களை தயாரிக்கலாம் என்ற சிந்தனைகள் வளர இது உதவும்.

    சென்னையைச் சார்ந்த கவின்கேர் நிறுவனம் HLLக்குப் போட்டியாக இன்று சந்தையில் உள்ளது.கவின்கேரின் (Cavin Care)

    இன்றைய வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் அவர்கள் மிகத்தீவிரமாய் கிராம சந்தையை குறிவைத்து வியாபாரத்தை

    அமைத்து.

    C.K. பிரஹாலாத் போன்ற மேலாண்மை குருக்கள் கூட மிக முக்கியமான எதிர்காலப் பிரச்சனையாக கிராமப் பொருளாதார

    முன்னேற்றத்தைத் தான் முன் வைக்கின்றார்கள். இதை எப்படி தீர்ப்பது அல்லது வழிகள் கண்டறிவது என்பதில் தான் எதிர்கால

    இந்திய சந்தை அடங்கியிருக்கிறது.

    இவற்றைப் போல் ஆங்காங்கே சிறிதும் பெரிதுமாய் காரியங்கள் நடக்கின்றன. இவற்றை ஒருங்கிணைத்து இதன் மூலம் ஒரு வணிக

    சாத்தியமான நிறுவதலை (Business Model) கண்டெடுக்க முடிந்தால், அதன்பின் விசயங்கள் தானாய் நடக்க ஆரம்பித்துவிடும்.

    இதற்கு உறுதுணையாயிருந்த தளங்கள்:

    N-Logue - http://www.n-logue.co.in/
    Shakthi - http://www.blonnet.com/catalyst/2003/05/29/stories/2003052900020100.htm
    E-choupal - http://www.echoupal.com/default.asp
    EID Parry - http://www.eidparry.com/stories.asp
    http://www.washingtonpost.com/ac2/wp-dyn?pagename=article&node=&contentId=A13442-2003Oct11&notFo

    und=true

    ReplyDelete
  5. நல்ல தகவல்கள் நரைன் நன்றி!

    By: karthikramas

    ReplyDelete
  6. மன்னிக்கவும். கவலைப்படுவதில்லை என்பதுதான். கொஞ்சம் சொதப்பிவிட்டேன். ஹி..ஹி....

    ReplyDelete