Friday, March 25, 2005

இன்ஸமாம்-உல்-ஹக் = 100/100

பாகிஸ்தான் 323/2 (யூனுஸ் கான் 127*, இன்ஸமாம் 184*)

தன் நூறாவது டெஸ்டில் சதமடித்து பிரமாதமான சாதனை புரிந்தார் இன்ஸமாம். முதல்நாள் ஆட்டத்தின் சிறப்பம்சம் யூனுஸ் கான் - இன்ஸமாம் இணைந்து எடுத்த 300க்கும் மேலான ஜோடி. இது முடியாமல் இன்னமும் தொடர்கிறது என்பது இந்தியாவுக்கு கலக்கத்தைத் தடரக்கூடியது.

காலையில் இன்ஸமாம் டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தபோது அவரை யாருமே குறஒ சொல்லியிருக்க முடியாது. பெங்களூர் ஆடுகளம் சிமெண்ட் தரையைப் போல கெட்டியாக, பிளவுகள் ஏதுமின்றி, வேண்டிய அளவுக்கு ரன்கள் நிறைந்ததாகவே காணப்பட்டது.

ஆனால் பாலாஜி வீசிய முதல் பந்தில் - இந்தியாவின் இரண்டாவது ஓவரில் - ஷாஹீத் ஆஃப்ரீதி முதல் ஸ்லிப்பில் நிற்கும் திராவிடுக்கு கீழாகச் செல்லும் ஒரு கேட்சைக் கொடுத்தார். சென்ற டெஸ்ட் போட்டியில் சில கேட்ச்களைத் தடவவிட்ட திராவிட் இம்முறை தவறேதும் செய்யவில்லை. ஆஃப்ரீதி 0, பாகிஸ்தான் 4/1. தொடர்ந்து பதான் வீசிய பந்தில் யாசிர் ஹமீது விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்குக்கு எளிதான கேட்சைக் கொடுத்தார். ஹமீது 6, பாகிஸ்தான் 7/2.

இந்நேரத்தில் இன்ஸமாம் உள்ளே வந்தார். ஏற்கெனவே உள்ளே இருந்த யூனுஸ் கானும் ரன்ன்கள் ஏதும் பெற்றிருக்கவில்லை. இக்க்கட்டான சூழ்நிலை. யூனுஸ் தடுத்தாடவும், இன்ஸமாம் அடித்தாடவும் முடிவு செய்தனர். இன்ஸமாம் தானடித்த முதல் நான்கிலிருந்தே அற்புதமாக ஆட ஆரம்பித்தார்.

காலை, முதல் அரை மணிநேரத்துக்குள் விழுந்த இரண்டு விக்கெட்டுகளுக்கு மேல் நாள் முழுதும் வேறெந்த விக்கெட்டுகளும் விழவில்லை. அது கிடக்கட்டும்! நாள் முழுதுமாகச் சேர்ந்து மொத்தமாகவே இந்தியர்கள் பத்துமுறைதான் விக்கெட் கிடைக்குமோ என்று அப்பீல் செய்தார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்?

யூனுஸ் கான் பந்துகளை கால்களில் படுமாறு வைத்துக்கொள்ளவேயில்லை. அனைத்துமே பேட்டின் நடுவில்தான். விளிம்பில் பட்டு எதுவுமே ஸ்லிப் திசையில் கேட்ச் போலச் செல்லவில்லை. மட்டை, கால்காப்பு வழியாக எதுவுமே அருகில் நிற்கும் தடுப்பாளர்களிடம் கேட்ச் ஆகச் செல்லவில்லை. ஒரேயொருமுறை ஹர்பஜன் பந்தில் யூனுஸ் கான் சிக்ஸ் அடித்தபிறகு, அடுத்த பந்தில் அதையே திருப்பிச் செய்வதற்காக, இறங்கி வந்து தூக்கி அடிக்கப் போய் பந்து மேல்நோக்கிச் சென்று கவர் திசையில் விழுந்தது. ஆனால் அங்கு எந்தத் தடுப்பாளரும் இல்லாத காரணத்தால் கேட்ச் பிடிக்க முடியவில்லை.

மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் இன்ஸமாம் தன் சதத்தைப் பெற்றார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு இன்ஸமாம் 150ஐயும், யூனுஸ் கான் தன் சதத்தையும் பெற்றனர்.

கும்ப்ளே கொல்கத்தாவில் விக்கெட் எடுத்துக் குவித்தவரைப் போலவே காணப்படவில்லை. ஹர்பஜன் ஐசிசிக்குப் பயந்து ஒரு தூஸ்ராவையும் போடவில்லை. (இது முட்டாள்தனம். ஏற்கெனவே இவர் மீது குற்றச்சாட்டு வந்துவிட்டது. இந்த டெஸ்டில் தூஸ்ரா போட்டால் யாரும் இவரை ஆட்டத்தை விட்டு வெளியேற்ற முடியாது.) இதனால் ஹர்பஜன் ஒன்றுக்கும் உபயோகமில்லாமல்தான் வீசிக்கொண்டிருந்தார்.

இந்தியா நான்கு சப்ஸ்டிடியூட்டுகளையும் பணியில் இறக்கியது. வெய்யிலிலும், பாகிஸ்தானியர்களின் ஆட்டத்தாலும் சோர்வுற்று வெவ்வேறு நேரங்களில் லக்ஷ்மண், கங்குலி, ஹர்பஜன் ஆகியோர் வெளியேற, யுவ்ராஜ், ஜாகீர் கான், காயிஃப், நேஹ்ரா என்று அனைவரும் வந்து வந்து பந்தைப் பொறுக்கிப் போட்டனர்.

நாளின் கடைசிப் பந்தில் இன்ஸமாம் அற்புதமான நான்கை அடித்தார். அத்துடன் நாள் முழுதும் தான் ஆட்டத்தின் மீது வைத்திருந்த ஆளுமையை நிலை நாட்டினார். நிமிர்ந்த மார்போடு இன்ஸமாமும், யூனுஸ் கானும் வெளியேற, தலையைக் குனிந்து கொண்டு இந்தியர்கள் சோர்வுடன் வெளியேறினர்.

ஆனால் இந்தச் சோர்வு தேவையில்லை. இந்தப் போட்டித் தொடரில் ஓரணி முன்னுக்கு வரும்போது எதிரணி எப்பொழுதுமே எதிர்த்துப் போராடியுள்ளது.

நாளை மற்றுமொரு நாளே.

1 comment:

  1. எப்படியும் டிரா தானே? ஒருவேளை தோற்க சான்ஸ் இருக்கா?

    ReplyDelete