Friday, March 11, 2005

சதமடிக்கவில்லை டெண்டுல்கர்!

மூன்றாம் நாள் மழையால் தொல்லை ஏதுமில்லை. சேவாக் தன் அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்து வெகு விரைவிலேயே சதமடித்தார். திராவிட் தன் எண்ணிக்கையை அதிகரித்து 50ஐத் தொட்டார். ஆனால் உடனேயே சாமியின் பந்து வீச்சில் கல்லியின் நின்ற அசீம் கமாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். திராவிட் இம்மாதிரி அவுட்டாவது ஆச்சரியத்தைத் தந்தது. இப்படி உடலுக்குத் தள்ளி மட்டையை நீட்டி பந்தை மேலாகத் தட்டுவது அவரது வழக்கமல்ல.

அடுத்து டெண்டுல்கர் ஆட வந்தார். டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களைத் தாண்ட 121 ரன்கள் பாக்கி. இன்னுமொரு சதமடித்தால் டெஸ்ட் வாழ்க்கையில் மிக அதிக சதங்களைப் பெற்றவர் என்ற புது ரெகார்டை ஏற்படுத்துவார். ஆனால் ஆரம்பத்தில் அவர் விளையாடியது எந்தவிதமான நம்பிக்கையையும் தரவில்லை. ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை அனாவசியமாகத் தட்டப்போய் தோற்றுக்கொண்டே இருந்தார். மறுமுனையில் சேவாக் எந்தவிதக் கவலையுமின்றி ரன்கள் சேகரித்தார். திடீரென டெண்டுல்கர் சுயநிலைக்க்கு வந்தவராக சேவாகையும் மிஞ்சும் வகையில் ஆடத் தொடங்கினார்.

இதற்கிடையில் நடுவர் கோர்ட்சன் உதவியுடன் ஓர் அவுட்டிலிருந்து டெண்டுல்கர் தப்பினார். தனீஷ் கனேரியா பந்துவீச்சில் மட்டை-கால் காப்பு வழியாக சில்லி பாயிண்டில் ஒரு கேட்ச். ஆனால் நடுவர் கண்ணில் பந்து கால்காப்பில் மட்டும் பட்டது போலத் தோன்றியது.

உணவு இடைவேளைக்குப் பின் நிலைமை சற்று மாறியது. டெண்டுல்கர் அரை சதத்தைத் தாண்டினாலும் மேற்கொண்டு ரன்கள் பெறத் தடுமாறினார். சேவாக் அப்துல் ரஸாக்கை அரங்கை விட்டு வெளியேற்ற நினைத்து அடித்த அடி வானளாவச் சென்று மிட் ஆனில் நின்ற யூசுஃப் யோஹானா கையில் விழுந்தது. சேவாக் 173 ரன்கள் பெற்றிருந்தார். அதில் மூன்று கேட்ச்களை பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் நழுவ விட்டிருந்தனர். அதைத்தவிர எண்ணற்ற அரை-வாய்ப்புகள் வேறு இருந்தன. ஆனால் சேவாக் ஆட்டம் எப்பொழுதுமே இப்படித்தான் இருக்கும்.

கங்குலி டெண்டுல்கருடன் ஜோடி சேர்ந்து 'தடவு தடவு' என்று தடவிக்கொண்டிருந்தார். தேநீர் இடைவேளை வரை விக்கெட்டுகள் ஏதும் விழவில்லை. ரன்களும் அதிகமாகக் கிடைக்கவில்லை.

பொதுவாகவே பாகிஸ்தான் கேட்ச் பிடிப்பது படு மோசமாக இருந்தது. அப்படி தவறிப்போய் ஒரு கேட் பிடித்தாளும் அது நோ-பாலாக அமைந்தது. மொஹம்மத் சாமி வீசிய ஒரு நோ-பால் - கங்குலி ஸ்லிப்புக்குத் தட்ட, யூனிஸ் கான் அற்புதமாக அந்த கேட்சைப் பிடித்தார்! அடுத்த பந்து, இம்முறை நோ-பால் இல்லை, ஆனால் பாயிண்ட் திசையில் கையில் விழுந்த கேட்சைத் தடவினார் தவ்ஃபீக் உமர்!

கங்குலி பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமப்படுவதில்லை. ஆனால் கனேரியா பந்துவீச்சில் மிகவும் தடுமாறினார். சாதாரணமாக இரண்டடி முன்னால் ஓடி வந்து மட்டையைச் சுழற்றி ஆறு ரன்கள் பெறுவார். இப்பொழுது கனேரியாவின் கூக்ளி, லெக் பிரேக் இரண்டிலுமே நிறையத் தடுமாறினார். தேநீர் இடைவேளையைத் தாண்டியதுமே சீக்கிரமாகவே கனேரியா பந்துவீச்சில் சில்லி பாயிண்டில் இலகுவான கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் கங்குலி.

இனி இன்றைய நாளின் ஒரே சுவையான கட்டம் டெண்டுல்கர் 100ஐத் தொடுவாரா என்பதுதான். 90லிருந்து ஒரு நான்கைப் பெற்று 94 சென்றார். 120 ஓவர்கள் வரை பழைய பந்தை வைத்தே காலத்தை ஓட்டிய பாகிஸ்தான் கடைசியாக புதுப்பந்தை எடுத்தனர். ரானா நவீத்-உல்-ஹஸன் புதுப்பந்துடன் வீசிய மூன்றாவது பந்தில் திராவிடைப் போலவே கல்லியில் நின்ற அசீம் கமாலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் டெண்டுல்கர்.

அத்துடன் அரங்கில் இருந்த கூட்டமும் பெரும்பாலும் காலியானது. ஆட்டம் இன்னமும் தொடர்ந்தது. லக்ஷ்மண் மீதியுள்ள சிறுவர்களுடன் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக ரன்கள் சேகரித்தார். இப்பொழுதைக்கு இந்தியாவின் லீட் 135 ரன்கள். இன்னமும் இரண்டு நாள்கள்தான் பாக்கி.

மழை ஏதும் பெய்யாவிட்டால் இந்தியா ஜெயிப்பது உறுதி.

No comments:

Post a Comment