Monday, March 14, 2005

கல்கி சதாசிவம் நினைவு விருது

சில வாரங்களுக்கு முன்னர் கல்கி சதாசிவம் நினைவு விருதுக்காக தமிழ்ப் பத்திரிகைகளில் வந்திருக்கும் சமூக நோக்குடன் கூடிய விளம்பரங்களுள் சிறந்ததாக ஒன்றைத் தேர்ந்தெடுக்க என்னை ஒரு நடுவராக இருக்க அழைத்திருந்தனர்.

நடுவர்கள் நாங்கள் தேர்ந்தெடுத்த விருதுக்கான விளம்பரம் Indian Centre for Plastics in the Environment என்னும் நிறுவனத்துடையது. இந்த விளம்பரம் பிளாஸ்டிக்கை அடியோடு நிராகரிக்க வேண்டும் என்ற கோணத்தில் சில சூழலியல் போராளிகள் பேசிக்கொண்டிருந்தபோது வெளியான விளம்பரம். பிளாஸ்டிக்கை நிராகரிக்க முடியாது. ஆனால் உபயோகித்தபின் கண்டபடி தூக்கியெறியாமல் பத்திரமாகப் பாதுகாத்து மறுசுழற்சிக்கு அனுப்பவேண்டும். இந்தத் தகவலைச் சொல்லவேண்டும். அதே நேரத்தில் பிளாஸ்டிக் எப்படிப்பட்ட மாறுதலை மக்கள் மத்தியில் கொண்டுவந்துள்ளது என்பதை உணர்வுப்பூர்வமாகத் தெரிவிக்க வேண்டும். அதற்கு விளம்பர நிறுவனம் தேர்ந்தெடுத்தது பிளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட ஜெய்ப்பூர் செயற்கைக் கால்கள். நான்கைந்து கால் ஊனமுற்ற சிறுவர் சிறுமிகள் பிளாஸ்டிக் செயற்கைக் கால்களைப் பொருத்திக்கொண்டு ஓட்டப்பந்தய மைதானத்தில் ஓடிவருகிறார்கள். எல்லைக்கோட்டுக்கருகே சிறுமி. இந்த விளம்பரத்தில் ஒரு பெண்குழந்தை மையப்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் எவ்வாறு ஊனத்தை ஓரளவுக்கேனும் வெல்ல உதவுகிறது என்பது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பிளாஸ்டிக்கை எவ்வாறு கையாளவேண்டும் என்று விளக்கும் வரிகள்.

விருது வழங்கும் விழா சனிக்கிழமை (12 மார்ச் 2005) சென்னை பாரதீய வித்யா பவன் அரங்கத்தில் நடைபெற்றது.

ICPE சார்பாக சென்னை CIPET டைரக்டர் ஜெனரல் டாக்டர் சுஷில் வர்மா வந்திருந்தார்.

மேற்சொன்ன விருதுடன், பத்திரிகை/இதழியல் சார்ந்த படிப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கான கல்கி சதாசிவம் உதவித்தொகையும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியின்போது சக்தி டெக்ஸ்டைல் நிறுவன சேர்மன் கிருஷ்ணராஜ் வாணவராயர் "நவீன சமுதாயத்தில் மீடியாவின் பங்கு" என்ற தலைப்பில் பேசினார்.

கடைசியில் "A Gift of the Gods" என்னும் அவினாஷ் பஸ்ரிச்சா எடுத்த எம்.எஸ்.சுப்புலட்சுமி மீதான ஆவணப்படம் ஒன்றும் காண்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment