Friday, March 18, 2005

யூனிஸ் + யோஹானா = ஸ்டைல்

இந்தியா-பாகிஸ்தான் இருவரும் சமீப காலத்தில் விளையாடும் ஐந்தாவது டெஸ்ட் இது. முந்தைய நான்கில் காணாத பேட்டிங் இந்த டெஸ்டில் காணக்கிடைத்தது. பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளம் இது என்றாலும் பாகிஸ்தான் எப்பொழுதுமே முன்னணி விக்கெட்டுகளை இழந்து பின் இன்ஸமாம்-உல்-ஹக் மற்றும் கடைசி சில ஆட்டக்காரர்களின் திறமையால் மட்டுமே பிழைத்து வந்தது.

இரண்டாம் நாள் காலையில் மிச்சம் மீதி உள்ள இந்திய விக்கெட்டுகளை பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் எடுத்தனர். கடைசி விக்கெட்டுக்காக ஹர்பஜனும் கும்ப்ளேயும் சில ரன்களைப் பெறாதிருந்தால் இந்தியா 400ஐத் தாண்டியிருக்காது! பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாஹீத் ஆஃப்ரீதி, தவ்ஃபீக் உமர் இருவரும் மிக மாறுபட்ட ஆட்டத்தைக் காண்பித்தனர். ஆஃப்ரீதி எடுத்தவுடனேயே - சேவாக் போல - அடிதடியில் இறங்கினார். மறுமுனையில் உமர் மிகவும் தடுமாறியே விளையாடினார். எண்ணிக்கை எதையும் சேர்க்காதபோது பாலாஜியின் பந்துவீச்சில் முதல் ஸ்லிப்பில் திராவிட் கையில் ஒரு சுலபமான கேட்ச் கொடுத்தார். ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் திராவிட் அந்த கேட்சைத் தடவினார்! உணவு இடைவேளை வரையில் பாகிஸ்தான் விக்கெட் எதையும் இழக்கவில்லை.

இடைவேளைக்குப் பின் பதான் பந்துவீச்சில் ஆஃப்ரீதி மிட் ஆனில் நின்றுகொண்டிருக்கும் டெண்டுல்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பாலாஜி பந்துவீச்சில் உமர் மூன்றாவது ஸ்லிப்பில் இருக்கும் சேவாகிடம் ஒரு கேட்ச் கொடுத்து அதுவும் தவற விடப்பட்டது! ஆனால் அதிக நாசம் ஏற்படும் முன்னர் பாலாஜியின் பந்துவீச்சிலேயே உமர் ஸ்கொயர் லெக் திசையில் தூக்கி அடிக்க ஹர்பஜன் எம்பிக் குதித்து அருமையான கேட்ச் ஒன்றைப் பிடித்தார். பாகிஸ்தான் 70/2.

அவ்வளவுதான். அதற்கடுத்து உள்ளே வந்த யூசுஃப் யோஹானா, தற்போதைய உதவி அணித்தலைவர் யூனிஸ் கானுடன் சேர்ந்து அற்புதமாக விளையாடினார். யூனிஸ் கான் தொடக்கத்தில் தடாலடியாக அடித்துக்கொண்டிருந்தார். ஏகப்பட்ட நான்குகள். ஆனால் சற்று நேரம் செல்லச்செல்ல தான் நாள் முழுவதும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்தியப் பந்துத் தடுப்பாளர்களை மிகவும் தொல்லைப்படுத்தினார். அங்கும் இங்குமாகத் தட்டி ஒரு ரன், இரண்டு ரன்கள் என்று எடுத்தனர் இருவரும். இருவரும் அரை சதத்தைத் தாண்டினர். பின் தேநீர் இடைவேளைக்குப் பிறகு தமது அருமையான ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.

இந்தியாவுக்கு அடுத்த விக்கெட் எங்கிருந்து கிடைக்கும் என்பதே தெரியாமல் இருந்தது. கும்ப்ளே பலமுறை இரண்டு மட்டையாளர்களையும் கஷ்டப்படுத்தினார். பலமுறை எல்.பி.டபிள்யூ அப்பீல் செய்தார். ஆனால் நடுவர்கள் அவரது அப்பீல்களை நிராகரித்துக்கொண்டே இருந்தனர். ஹர்பஜன் நன்றாகவே பந்துவீசினாலும் விக்கெட் ஏதும் கிடைக்கவில்லை. பதான், பாலாஜி இருவரும் மீண்டும் வந்து ரிவர்ஸ் ஸ்விங் வீசியும் ஒன்றும் நடக்கவில்லை. ஓவருக்கு 5.5 ரன்கள் எடுத்துக்கொண்டிருந்த பாகிஸ்தான் மெதுவாக 4.2 என்ற அளவுக்குக் குறைந்தது.

யூனிஸ் கான், யூசுஃப் யோஹானா - இருவருமே ஆஃப் திசையில் அற்புதமாக கட், டிரைவ் விளையாடினர். யோஹானா லெக் திசையிலும் தனது மணிக்கட்டின் திறமையைக் காட்டினார். பல சமயங்களில் லக்ஷ்மண் விளையாடுவதைப் போலவே இருந்தது. யூனிஸ் கான் ஸ்பின்னர்களின் பந்தை, தடுப்பாளரின் தலைக்கு மேல் தூக்கி அடிப்பதற்கு சிறிதும் பயப்படவில்லை. ஆட்டம் முடிவதற்கு முன்னதாகவே இருவரும் தத்தம் சதத்தைப் பெற்றனர்.

மூன்றாம் நாள் ஆட்டம் இப்பொழுது மிக முக்கியமான கட்டத்தில் உள்ளது. பாகிஸ்தான் இப்பொழுதைக்குப் பார்க்கும்போது இந்தியாவின் எண்ணிக்கையைத் தாண்டும் என்றே தோன்றுகிறது. எத்தனை லீட் எடுக்கும் என்பதுதான் ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்கும். இன்ஸமாம், அசீம் கமால், அப்துல் ரஸாக், சென்ற டெஸ்டில் சதமடித்த கம்ரான் அக்மல் ஆகியோர் இனிமேல்தான் பேட்டிங் செய்யவேண்டும். பாகிஸ்தான் 600 வரை செல்ல ஆசைப்படுவார்கள்.

No comments:

Post a Comment