Monday, March 28, 2005

சுவாரசியமாகும் ஐந்தாம் நாள்

பாகிஸ்தான் 570 & 261/2 டிக்ளேர்ட். இந்தியா 449 & 25/0.

நான்காம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் தன் ஆளுமையை முழுவதுமாகக் காட்டியது. ஆனாலும் ஐந்தாம் நாள் இந்தியா ஜெயிக்கவும் ஒரு வாய்ப்பு உள்ளது. இந்த ஆட்டத்தை எப்படியும் ஜெயித்தே தீருவது என்ற எண்ணத்தில் இன்ஸமாம், இந்தியா வெற்றி பெற 383 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தார்.

முதலில் இந்தியாவுடைய ஆட்டம் திசையிழந்து தவித்தது. இர்ஃபான் பதான், மொஹம்மத் சாமி பந்தில் பாயிண்ட் திசையில் தூக்கியடித்து யூசுஃப் யோஹானவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பதான் 5, இந்தியா 386/7. அடுத்து ஹர்பஜன் சிங் கனேரியாவின் கூக்ளியைத் தூக்கி அடிக்கப்போய் மிட் விக்கெட்டில் நின்றிருந்த அப்துல் ரஸாக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஹர்பஜன் 1, இந்தியா 388/8. அடுத்து பாலாஜி கனேரியாவை ஸ்வீப் செய்யப்போய் விக்கெட் கீப்பரால் பிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் ரீப்ளேயில் பந்து மட்டையில் பட்டிருக்காது என்று தோன்றியது. பாலாஜி 2, இந்தியா 396/9.

கும்ப்ளே நின்று விளையாடியிருக்காவிட்டால் லக்ஷ்மண் துணையின்றி மாட்டிக்கொண்டிருப்பார். தொடக்கத்தில் லக்ஷ்மணை விட கும்ப்ளேயே நன்றாகவும், தைரியமாகவும் விளையாடினார். சில நான்குகளை அடித்தார். பின் லக்ஷ்மண் சிறப்பாக விளையாட ஆரம்பித்தார். மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் ஏதும் கொடுக்காமல் இந்தக் கடைசி விக்கெட் ஜோடி நன்றாக ரன்களை சேர்த்து பாகிஸ்தான் அணியை சோர்வுறச் செய்தது. ஆனால் இடைவேளைக்குப் பின்னர் ஆஃப்ரீதி வீசிய வேகமான பந்தில் கும்ப்ளே பவுல்ட் ஆனார். கும்ப்ளே 22, லக்ஷ்மண் 79*, இந்தியா 449 ஆல் அவுட். பாகிஸ்தான் 121 ரன்கள் முன்னிலையில்.

தொடர்ந்து விளையாட வந்த பாகிஸ்தான் அற்புதமான தாக்குதலைக் காண்பித்தது. ஷாஹீத் ஆஃப்ரீதி தான் சந்தித்த முதல் மூன்று பந்துகளை நான்குகளாக விளாசினார். 26 பந்துகளில் தன் அரை சதத்தைத் தொட்டார். பாலாஜி, பதான் இருவரையும் கதற வைத்தார். இதனால் கங்குலி கும்ப்ளே, டெண்டுல்கர் இருவரையும் பந்துவீச்சுக்குக் கொண்டு வந்து, இருவரையும் வீசும் கை விக்கெட்டை விட்டு விலகி வர வந்து லெக் ஸ்டம்புக்கு வெளியிலிருந்து லெக் பிரேக் போடுமாறு பணித்தார். டெண்டுல்கரை இறங்கி வந்து அடிக்க முயற்சி செய்து ஆஃப்ரீதி ஸ்டம்பிங் ஆனார். ஆஃப்ரீதி 34 பந்துகளில் 58, பாகிஸ்தான் 91/1. அடுத்து உள்ளே வந்த யூனுஸ் கானும், தொடக்க்க ஆட்டக்காரர் யாசிர் ஹமீதும் பிரச்னை ஏதுமின்று ரன்களைப் பெற்றனர். இருவரும் அரை சதங்களைத் தாண்டினர். யாசிர் ஹமீத் கும்ப்ளே பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். ஹமீத் 76, பாகிஸ்தான் 183/2.

பின் முதல் இன்னிங்ஸ் ஹீரோக்கள் யூனுஸ் கான், இன்ஸமாம்-உல்-ஹக் இருவரும் அருமையாக விளையாடி அணியின் எண்ணிக்கையை 50 ஓவர்களில் 261 ஆகக் கொண்டுவந்தனர். அந்நிலையில் இன்ஸமாம் ஆட்டத்தை முடித்துக்கொள்வதாக அறிவித்தார். இந்தியாவுக்கு நான்காம் நாள் மாலை 6 ஓவர்களும், ஐந்தாம் நாள் 90 ஓவர்களும் உண்டு. அதில் 383 ரன்கள் அடித்தால் ஜெயிக்கலாம். முதல் ஆறு ஓவர்களில் இந்தியா 25/0 என்ற எண்ணிக்கையில் இருந்தது.

ஐந்தாம் நாள் இந்தியா ஜெயிக்க வேண்டுமானால் சேவாக் ஒருவரால்தான் அதைச் செய்ய முடியும். சேவாக் சீக்கிரம் அவுட் ஆகிவிட்டால், ஆட்டம் டிரா, அல்லது பாகிஸ்தான் வெற்றி.

2 comments:

  1. பத்ரி,
    சேவாக் அவுட்டாகி விட்டார்.
    ஆனால், எனக்கு இன்னமுன் நம்பிக்கை இருக்கிறது.
    பார்க்கலாம்.

    ReplyDelete
  2. I think India is playing for a draw - the scoring almost stopped after Sehwag was out.

    ReplyDelete