Saturday, March 12, 2005

வெல்லும் வாய்ப்பை இழந்தது இந்தியா

நான்காம் நாள் ஆட்டத்தின் இறுதியில் இந்தியாவால் இந்த ஆட்டத்தை இனி வெல்லாமல் இருக்க முடியாது என்றிருந்த நிலை ஐந்தாம் நாள் முற்றிலுமாக மாறிப்போனது.

முதலில் நான்காம் நாள்.

இந்தியாவின் எஞ்சியுள்ள விக்கெட்டுகள் சில உருப்படியான ரன்களைச் சேர்த்தன. பாலாஜி மட்டையாலும் சில அதிரடிகளை வழங்கினார். லக்ஷ்மண் அரை சதமடித்தார். தனீஷ் கனேரியா விழுந்த மிச்சமுள்ள நான்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இந்தியாவுக்கு 204 ரன்கள் அதிகப்படியாகக் கிடைத்திருந்தன.

பாகிஸ்தானின் ஆட்டம் கோமாளித்தனமாகத் தொடங்கியது. தவ்ஃபீக் உமர் முன்காலில் வந்து தடுத்தாட, பந்து கால் காப்பில் பட்டு எழும்பி மட்டையின் அடி விளிம்பில் பட்டு மேல் நோக்கிச் சென்றது. அதுவரை எல்.பி.டபிள்யூவுக்காக அப்பீல் செய்து கொண்டிருந்த பாலாஜி ஓடிச்சென்று அந்த கேட்சைப் பிடித்தார். அடுத்து யூனுஸ் கான் பாலாஜியின் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே விழுந்த பந்தை, தோள்களைக் குலுக்கி விட்டுவிட எத்தனிக்க பந்து சடாரென உள்ளே புகுந்து அவரை பவுல்ட் ஆக்கியது. உச்சபட்ச கோமாளித்தனம் அடுத்த ஓவரின் முதல் பந்தில் நிகழ்ந்தது. இர்ஃபான் பதான் வீசிய அளவு குறைந்த பந்தை, குனிந்து உட்கார்ந்து விட்டுவிடத்தான் தீர்மாணித்தார் சல்மான் பட். ஆனால் பந்து அவர் நினைத்த அளவு எழும்பவில்லை. சல்மான் பட்டும் மட்டையை கீழாக நிறுத்தி வைக்காமல் நீர்மூழ்கிக் கப்பலின் பெரிஸ்கோப் போல மேல்நோக்கி வைத்திருந்தார். பந்து மட்டையின் அடிவிளிம்பில் பட்டு விக்கெட்கீப்பர் தினேஷ் கார்த்திக் கையில் கேட்ச் ஆனது. 10/3! இதைவிட மோசமான நிலை பாகிஸ்தானுக்கு இருந்திருக்க முடியாது.

ஆனால் தொடர்ந்து இன்ஸமாம்-உல்-ஹக்கும் யூசுஃப் யோஹானாவும் அற்புதமாக விளையாடினர். தம் அணி இருக்கும் மோசமான நிலைமை அவர்களை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தவில்லை. ஓர் ஓவரில் இன்ஸமாம் பாலாஜியை பிரமாதமாக அடுத்தடுத்த பந்துகளில் மூன்று நான்குகள் அடித்து தன் ஃபார்மை வெளிப்படுத்தினார்.

அடுத்த விக்கெட் எங்கிருந்து வரப்போகிறது என்று இந்தியர்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். கடைசியாக தேநீர் இடைவேளைக்கு முன்னர் கும்ப்ளே முதல் இன்னிங்ஸைப் போலவே நேராக வீசிய வேகமாண டாப் ஸ்பின்னர் மூலம் இன்ஸமாமை எல்.பி.டபிள்யூ ஆக்கினார். இன்ஸமாம் 86 ரன்கள் எடுத்திருந்தார். அதே ஓவரில் புதியவர் ஆசீம் கமால் முதல் ஸ்லிப்பில் நின்றிருந்த திராவிடுக்குக் கொடுத்த கேட்ச் நழுவிப்போனது. அங்கிருந்துதான் இந்தியர்களின் அதிர்ஷ்டம் திசைமாறிப் போயிருக வேண்டும்.

தேநீர் இடைவேளைக்குப் பின்னர் கும்ப்ளே யோஹானாவை பவுல்ட் ஆக்கினார். அப்படிச் சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போகக்கூடிய நிகழ்வல்ல இது. அடுத்தடுத்து நான்கு பந்துகள் கும்ப்ளே ஸ்டைல் லெக் பிரேக் ஆக அமைந்தது. அதாவது அதிகமாக ஸ்பின் ஆகாத, லெக் ஸ்டம்பில் விழுந்து மிடில்/ஆஃப் ஸ்டம்பை நோக்கிச் செல்லும் பந்துகள். அதே சமயம் பந்துகளின் வேகம் சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே வந்தது. நான்கையுமே தடுத்தாடினார் யோஹானா. ஐந்தாவது பந்து அதி வேக டாப் ஸ்பின்னர். பந்து எதிர்பார்த்ததை விட ஓவர் ஸ்பின் ஆனது. கால் காப்பில் பட்டு, மட்டையில் பட்டு பின் நோக்கிச் சென்று ஸ்டம்பை நோக்கி உருண்டு பெயில்களைத் தட்டிவிட்டது. யோஹானா 68 ரன்கள் பெற்றிருந்தார்.

ஆசீம் கமாலும், அப்துல் ரஸாக்கும் மிகப் பொறுமையாக விளையாடினர். ஆசீம் கமால் ஆட்டம் முடியும் தருவாயில் பாலாஜியின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். நாளின் இறுதியில் பாகிஸ்தான் 53 ரன்கள் அதிகத்தில், கையில் வெறும் நான்கு விகெட்டுகளை மட்டும் வைத்திருந்தது.

ஐந்தாம் நாள் ஆட்டம் முடிய எத்தனை நேரம் ஆகும் என்பது மட்டும்தான் பலரின் யோசனையாக இருந்தது.

ஆனால் பாகிஸ்தான் விகெட் கீப்பர் கம்ரான் அக்மல் வேறு சில ஐடியாக்களை வைத்திருந்தார். ஐந்தாம் நாள் காலை சிறிதும் கவலைப்படாமல் அடித்தாடத் தொடங்கினார். ஒருவர் விடாது விளாசித் தள்ளினார். இந்திய ரசிகர்கள் எரிச்சல் அடைந்தாலும் அவரைப் பாராட்டத் தவறவில்லை. கங்குலி தன் கையில் உள்ள எல்லாத் துருப்புச் சீட்டுகளையும் பௌஅன்படுத்தினார். ம்ஹூம்! விக்கெட் விழுவதாக இல்லை. மறுமுனையில் ரஸாக் கட்டை போட்டுத் தள்ளிவிட்டார். "அறுவை, பிளேடு என்று எப்படி வேண்டுமானாலும் திட்டிக்கொண்டு போங்கள், என் பணி அவுட்டாகாமல் இருப்பதே" என்று தன் பணியைத் திறம்படவே செய்தார்.

அக்மல் தன் சதத்தை அடித்து முடித்தபின்னர்தான் பாலாஜியின் பந்துவீச்சில் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதற்குள் பாகிஸ்தான் லீட் எகிறியிருந்தது; நேரமும் அதிகம் கையில் இல்லை. மிச்சமிருந்த விக்கெட்டுகளும் சில ரன்களைப் பெற. இன்ஸமாம் 496/9 என்ற கணக்கில் டிக்ளேர் செய்தார்.

இந்தியா ஜெயிக்க 25 ஓவர்களில் 293 ரன்கள் பெற வேண்டும்! ஆனால் கடைசியில் 17 ஓவர்களில் 85/1 என்ற கணக்கில் இருகும்போது இனியும் ஆட்டம் நடைபெறுவதில் எந்த பிரயோசனமும் இல்லை என்று முடிவாகி ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்ததாகத் தீர்மானிக்கப்பட்டது.

தன் பிடிவாத ஆட்டத்தால் கம்ரான் அக்மல் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

இந்தியா நிச்சயம் ஏமாற்றம் அடைந்திருக்கும்.

No comments:

Post a Comment