Saturday, March 26, 2005

யூனுஸ் கான் பாத்ஷாஹ்

பாகிஸ்தான் 570, இந்தியா 55/0

இரண்டாம் நாள் ஆட்டம் இரண்டு ஆட்டக்காரர்களின் கதை. ஒருவர் யூனுஸ் கான். அடுத்தவர் ஹர்பஜன் சிங். யூனுஸ் கான் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். ஹர்பஜன் சிங் முதல் நாள் செய்யாததைச் செய்தார்.

இரண்டாம் நாள் காலை முதல் ஓவரில் யூனுஸ் கான் இரண்டு நான்குகளைப் பெற்றார். அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பாலாஜி இன்ஸமாம்-உல்-ஹக்கை ரன்கள் ஏதும் புதிதாகப் பெறாமலேயே எல்.பி.டபிள்யூ ஆக்கினார். இன்ஸமாம் 184, பாகிஸ்தான் 331/3. ஆனால் யூசுஃப் யோஹானாவும், யூனுஸ் கானும் இணைந்து வேகமாக ரன்கள் சேர்க்க ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட நிமிடத்துக்கு ஒரு ரன் வீதம் வந்துகொண்டிருந்தது. இர்ஃபான் பதான் பந்துவீச்சில் யூனுஸ் கான் இரண்டாம் ஸ்லிப்பில் நின்ற லக்ஷ்மண் கைக்கருகில் ஒரு கேட்ச் கொடுத்தார். லக்ஷ்மண் பிடிக்கவில்லை. அதைத் தவிர யூனுஸ் வேறெந்தத் தவறையும் செய்யவில்லை.

உணவு இடைவேளை நெருங்கும்போது யாரும் எதிர்பாராத வகையில் யோஹானா ஹர்பஜன் சிங் பந்தை வெட்டி ஆட முயன்று மெலிதான விளிம்பில் பட்டு தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்தார். யோஹானா 37, பாகிஸ்தான் 415/4.

ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகுதான் ஹர்பஜன் தன் முழுத்திறமையையும் காட்டினார். ஆசீம் கமால் பல நிமிடங்களை வீண் செய்துவிட்டு ஹர்பஜன் சிங்கை ஸ்வீப் செய்யப்போய் டாப் எட்ஜ் பட்டு ஷார்ட் ஃபைன் லெக்கில் இருக்கும் கங்குலியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கமால் 4, பாகிஸ்தான் 428/5. அடுத்து வந்த அப்துல் ரஸாக்கும் நிறைய நேரத்தை வீணாக்கினார். வேகமாக ரன்கள் சேர்க்காமல் 37 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஹர்பஜன் பந்துவீச்சில் - அருமையான ஆஃப் பிரேக் - உள்புற மட்டையில் பட்டு ஹர்பஜனுக்கே கேட்ச் கொடுத்தார். பாகிஸ்தான் 446/6.

ஆனால் அடுத்த ஜோடி:- கம்ரான் அக்மல்+யூனுஸ் கான் வேகமாக ரன்கள் எடுத்து எண்ணிக்கையை 500க்கு மேல் கொண்டு சென்றது. யூனுஸ் கான் தனது இரட்டை சதத்தைப் பெற்றார். தேநீர் இடைவேளைக்கு முந்தைய ஓவரில் ஹர்பஜன் அதிகமாக ஸ்பின் ஆன ஆஃப் பிரேக் மூலம் கம்ரான் அக்மலை பவுல்ட் ஆக்கினார். அக்மல் 28, பாகிஸ்தான் 504/7.

தேநீர் இடைவேளைக்குப் பின்னர் பாகிஸ்தான் எந்தவொரு திட்டமும் இல்லாமல் நேரத்தைக் கடத்தினர். மொஹம்மத் சாமி யூனுஸ் கானுக்கு நல்ல ஆதரவு கொடுத்தார். இருவரும் சேர்ந்து 61 ரன்கள் பெற்றனர். பின் சாமி கும்ப்ளே பந்துவீச்சில் பந்தை மிட்விக்கெட் தட்டிவிட்டு ரன் எடுக்கப் போனார். ஆனால் யூனுஸ் கான் நகரவேயில்லை. மிட்விக்கெட்டில் கம்பீர் பந்தைப் பிடித்து கார்த்திக்கிடம் கொடுக்க, அவர் எளிதான ரன் அவுட்டை நிகழ்த்தினார். சாமி 17, பாகிஸ்தான் 565/8. அடுத்த ஓவரில் யூனுஸ் கான் ஹர்பஜனை மிட் விக்கெட் மேலாக அடிக்க முனைய, பந்தில் ஏமாந்து கவர் திசையில் இர்ஃபான் பதானிடம் கேட்ச் கொடுத்தார். யூனுஸ் கான் 267. பாகிஸ்தான் 569/9. இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இந்தியாவில் அடித்த மிக அதிகமான ஸ்கோர், இந்தியாவில் அவர்கள் அடித்த முதல் இரட்டை சதமும் கூட. அத்துடன் இதுதான் இந்தியாவில் வெளிநாட்டவர் அனைவரும் அடித்த ரன்களிலேயே மிக அதிக ஸ்கோரும் கூட. இதுதான் பாகிஸ்தான் இந்தியாவில் 500க்கு மேல் அடித்த முதல் எண்ணிக்கை. மிக அதிகமான எண்ணிக்கையும் கூட. இதுதான் பெங்களூரின் வெளிநாட்டினர் அடித்த முதல் 500+ எண்ணிக்கை. பெங்களூரின் எந்த அணியும் (இந்தியா சேர்த்து) அடித்த அதிகமான எண்ணிக்கை.

இரண்டு பந்துகள் கழித்து தனீஷ் கனேரியா ஹர்பஜனை மிட் விக்கெட் திசையில் தூக்கி அடித்தார். லக்ஷ்மண் கேட்சைப் பிடிக்க, பாகிஸ்தான் 570க்கு ஆல் அவுட் ஆனது.

தொடர்ந்து ஆட வந்த இந்தியாவுக்கு பத்து ஓவர்கள். பத்திலும் சேவாக் விளாசித் தள்ளினார். ரஸாக் பந்தில் மிட் ஆன், மிட் ஆஃப் இரண்டிலும் நான்குகள். தனீஷ் கனேரியா பந்தில் லாங் ஆன் மேல் ஒரு சிக்ஸ். மற்றும் சில நான்குகள். கம்பீர் தன் சாக்குக்கு இரண்டு நான்குகள் அடித்தார். ஆக பத்து ஓவர்களில் இந்தியா 55/0 என்ற ஸ்கோரில் இருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டம் இந்த விளையாட்டு எந்தத் திசையில் செல்லப்போகிறது என்பதை நிர்ணயிக்கும்.

No comments:

Post a Comment