Friday, April 01, 2005

Whose Truth - response to Venkat

வெங்கட்: உங்கள் பதிவில் 5000 char வரம்பு இருப்பதால் இந்த நெடிய பின்னூட்டம் இங்கே.

[முன்-பின் புரியாதவர்களுக்கு: வெங்கட் முதலில் எழுதிய பதிவு இது. அதில் என் பின்னூட்டம் இருக்கும். என் பின்னூட்டத்தை முன்வைத்து வெங்கட் இரண்டாவதாக எழுதிய பதிவு இது. அதற்கான பதில் இந்தப் பதிவில்.]

வெங்கட்: போராளிகளாக மாறுபவர்கள் வற்புறுத்தலின் பேரிலும் இருக்கலாம், சுய விருப்பத்தாலும் இருக்கலாம். அப்படியிருக்கும்போது வயது இடையில் வந்து என்னவிதத்தால் மாறுபாட்டினைக் கொண்டுவர முடியும்? 17 வயதான, தானாகவே போராளியாக மாற விரும்பும் ஒருவர். 19 வயதான, கையில் ஆயுதமெடுக்க விரும்பாத, ஆனால் வற்புறுத்தலின் பேரில் ஆயுதத்தைக் கையிலெடுத்த ஒருவர். இதிலிருந்து 18 வயது என்கிற arbitrary கோடு அபத்தமானதொரு வரம்பு என்று தெரிகிறதல்லவா?

சட்டபூர்வமான படைகளுக்கு ஆளெடுக்கும் போது ஒரு குறிப்பிட்ட வயது வரம்பை வைக்கின்றனர். ஆனால் தற்காப்புப் படைகள் இந்த வரம்பைப் பின்பற்ற முடியாது. தன்னைத் தாக்கவருபவனை எதிர்த்துத் தாக்காமல் "எனக்கு 16 வயதுதான் ஆகிறது, அதனால் நான் அடி வாங்கிக்கொள்கிறேன்" என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

விடுதலைப் புலிகள் பல்வேறு காரணங்களால் வயது குறைந்தவர்களைத் தங்கள் படைகளில் வற்புறுத்தியே சேர்த்திருக்கலாம். அதையும் நான் குறை கூற மாட்டேன். போரே கூடாது என்ற நிலையே நான் விரும்புவது. ஆனால் அப்படி இல்லாத பட்சத்தில் ஒரு சமூகத்தைக் காப்பாற்ற ஒருவர் தேவையான அனைத்தையும் செய்யலாம் - வயது குறைந்தவர்களைக் கையில் ஆயுதமெடுக்க வைப்பதிலிருந்து. சமூகமே சீரழிந்து வாழ வகையில்லாத போது சிறுவர்களை மட்டும் விட்டுவைத்து என்ன பிரயோசனம்? அவர்களையும் போராட்டத்தில் இணைத்து அதன்மூலம் ஓரளவுக்கு அடுத்து வரும் சந்ததிகள் வாழ வழி செய்வது விரும்பத்தக்கதல்லவா?

தந்தை இல்லாத வீட்டில், மூத்த பிள்ளை - 18 வயதுக்குக் கீழே இருந்தாலும் - ஏதோ வேலை பார்த்து தன் தம்பி தங்கைகளைக் காப்பதில்லையா? சில சமயங்களில் குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்கிறோம் என்ற பெயரில், மாற்று வழிகளை வைக்காமல் செய்வதால் எத்தனையோ பேரின் வாழ்க்கைகளைப் பாழடிக்க வேண்டியிருக்கும். நம் நாட்டில் முழு சமூகப் பாதுகாப்புத் திட்டம் இருந்தால் நாமும் தைரியமாக குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்கலாம்.

அதைப்போல முழு அமைதி இருந்தால் ... நம் படைகளில் குழந்தைப் போராளிகளையும் ஒழிக்கலாம். Survival என்று வந்துவிட்டால் நாகரிக நாடுகளின் சட்ட திட்டங்கள் அனைத்தும் காற்றில்தான் பறக்கவேண்டும். These are wars fought in extraordinary circumstances. There cannot be any rules in guerilla warfare. Unfortunately.

மற்றபடி, மேற்படி வானொலி நிகழ்ச்சி நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியது. யாரும் எதையுமே பேசாத நேரத்தில் இவர்கள் அதையாவது செய்திருக்கிறார்கள். ஆனால் இன்னமும் நன்றாக இருந்திருக்கலாம் என்பது என் எண்ணம். டொராண்டோவில் விடுதலைப் புலிகள், அவர்களது ஆதரவாளர்கள் வம்பு செய்கிறார்கள் என்ற பேச்சு வரும்போது, இவர்கள் மட்டும்தானா அல்லது இன்ன பிறரும் சட்டம் ஒழுங்கைக் குலைக்கிறார்களா என்ற கேள்வி எழுவது நியாயமற்றது என்று நினைக்கிறீர்களா?

புலிகளுக்கு ஆதரவாக பிரான்சிஸ் சேவியர் பேசினாலும் அதைப் பற்றி விமர்சிக்கும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்: "There is a contradiction here." அதாவது ஒருவர் ஒரே நேரத்தில் பாதிரியாராகவும், புலிகள் ஆதரவாளராகவும் இருக்க முடியாது என்பதே மறைபொருள். இந்த வரியின் மூலம் சேவியரின் வாக்குமூலத்தை சற்றே நீர்த்துப்போகச் செய்கிறார் ஒருங்கிணைப்பாளர்.

ஆனால் பத்திரிகையாளர் டேவிட் ஜெயராஜ் பேசுவதை ஆமோதிக்கிறார். ஜெயராஜின் சோகம் சேவியரின் சோகத்தை விட அதிகமாகிறது. ஜெயராஜின் வாக்குமூலம் புலிகளை "assholes" என்கிறது. நான் ஏன் இந்த "assholes"களுடன் என் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறேன் என்று ஜெயராஜ் வருந்துகிறார். ஒருங்கிணைப்பாளரும் அதையே ஆமோதிப்பது போலப் பேசாமல் இருக்கிறார்.

புலிகள் மீதான கடுமையான குற்றச்சாட்டை மென்மையாக வைக்கிறார் லக்ஷ்மி. புலிகள் ஜார்ஜ் புஷ்ஷைப் போல "you are either with us or against us" என்ற கொள்கைகளை உடையவர்கள் என்று சொல்லாமல் சொல்கிறார். அவர் மீது ஜெர்மனியில் நடந்த தாக்குதல்கள் அவர் புலி ஆதரவாளர் இல்லை என்பதால் ஜெர்மனியில் இருந்த புலிகள்/ஆதரவாளர்கள் நிகழ்த்தியது என்பது.

சமீபத்தில் "ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்" புஷ்பராஜாவைச் சந்தித்த போது, தான் இப்பொழுது இலங்கை சென்றால் தன்னைக் கொல்ல பலரும் ஆவலாயிருப்பார்கள் என்றார். அதில் புலிகளும் உண்டு. டக்ளஸ் தேவானந்தாவும் உண்டு என்றார்!

டேவிட் ஜெயராஜோ, 'லக்ஷ்மி'யோ, புஷ்பராஜாவோ, யாராயிருந்தாலும் புலிகளுக்கு எதிரானவர் என்றால் அவர்கள் உயிர் எப்பொழுது வேண்டுமானாலும் போய்விடலாம் என்பது உண்மை நிலையா அல்லது வெறும் propagandaவா என்பது எனக்குத் தெரியவில்லை.

இது உண்மை என்றால் இவர்கள் இவ்வளவு தைரியமாக புத்தகங்கள் எழுதுவது, பத்திகள் எழுதுவது, வானொலிப் பேட்டிகள் கொடுப்பது என்று செயல்படுகிறார்களே? கடந்த ஆறு மாதங்களின் டொராண்டோவில் புலிகள் யாரையாவது கொன்றிருக்கிறார்களா? கை கால்களை உடைத்திருக்கிறார்களா? ஜெர்மனியில்? பிரான்சில்? பிரிட்டனில்? இந்தப் புள்ளி விவரம் இல்லையென்றால் புலிகள் மீது சுமத்தப்படும் அபாண்டமான குற்றச்சாட்டு இது என்றாகும்.

ஆனால் இந்த வானொலி நிகழ்ச்சி மறைமுகமாக இதையெல்லாம் endorse செய்கிறது. இந்த நிகழ்ச்சியைக் கேட்டவர்களுக்கு மனதில் இதுதான் பட்டிருக்கும்:

* புலிகள் தீவிரவாதிகள். சிலர் அவர்களை விடுதலைப் போராளிகள் என்றும் சொல்கின்றனர்.
* குழந்தைகளை ஆயுதப்போரில் வற்புறுத்தி ஈடுபடுத்துகிறார்கள்.
* ஒரு பத்திரிகையாளர் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் இப்பொழுது புலிகளின் உண்மை முகத்தைக் கண்டு, அவர்களை எதிர்க்கிறார். அதனால் அவரது காலை உடைத்தனர். இருந்தும் விடாது, அச்சுறுத்துதலுக்கு இடையே, புலிகளை எதிர்க்கும் தன் பணியை நியாயமான வழியில் செய்து வருகிறார்.
* ஒரு சமூக சேவகி, இலங்கை ராணுவத்தின் அச்சுறுத்துதலின் போது வீரத்துடன் பல பெண்களைக் காத்தவர். ஆனால் நடுநிலையாக நிற்கிறார் என்ற காரணத்துக்காக அவரைப் புலிகளும், ராணுவமும் அச்சுறுத்தினர். ஜெர்மனி வந்தார். அங்கு அவர் மீது கொடிய தாக்குதல் நடந்தது. அதனால் கனடா வந்து மறைந்து வாழ்ந்து வருகிறார். புலிகளால் அவருக்கு எப்பொழுதும் அபாயம் நேரலாம்.
* ஒரு கிறித்துவப் பாதிரியார். ஆனாலும்!! புலி ஆதரவாளராக இருக்கிறார்.

மேலே சொன்ன அனைத்தும் உண்மையாக இருக்கலாம். ஆனால் இந்த மாதிரியான ஒருங்கிணைத்தலில் ஒரேயோர் 'உண்மை' மட்டும்தான் புலனாகும். டேவிட் ஜெயராஜின் பாஷையில்: Tigers are assholes.

That may be quite unfair in the end.

3 comments:

  1. // ஆனால் வற்புறுத்தலின் பேரில் ஆயுதத்தைக் கையிலெடுத்த ஒருவர். இதிலிருந்து 18 வயது என்கிற arbitrary கோடு அபத்தமானதொரு வரம்பு என்று தெரிகிறதல்லவா?//

    //தன்னைத் தாக்கவருபவனை எதிர்த்துத் தாக்காமல் "எனக்கு 16 வயதுதான் ஆகிறது, அதனால் நான் அடி வாங்கிக்கொள்கிறேன்" என்று யாரும் சொல்ல மாட்டார்கள். //

    //சமூகமே சீரழிந்து வாழ வகையில்லாத போது சிறுவர்களை மட்டும் விட்டுவைத்து என்ன பிரயோசனம்? அவர்களையும் போராட்டத்தில் இணைத்து அதன்மூலம் ஓரளவுக்கு அடுத்து வரும் சந்ததிகள் வாழ வழி செய்வது விரும்பத்தக்கதல்லவா?//

    sensible argument!

    ReplyDelete
  2. வெளியில் இருப்பவர்கள், மனித ஆர்வலர்கள், ஜனநாயகக் காப்பாளர்கள் என்று பலரும் இன்று பல்வேறு கோணங்களில் அலசுகின்றனர். அவரவர்க்கு அவரவர் கருத்துச் சரி. அவ்வளவு தான்.
    என்னைப் பொறுத்தவரை யுனிசெவ் வெளியிடும் 1300 சிறுவர் போராளியாயுள்ளது பற்றிய புகார் அப்பட்டமான பொய். இவ்வெண்ணிக்கை உண்மையென்றால் புலிகளின் மொத்தத் தொகையில் கணிசமான வீதமாக இருக்கும்.
    அடுத்து கட்டாயப்படுத்தி அட்சேர்ப்புப் பற்றி பலரும் புலம்புவது வேடிக்கையாக உள்ளது. எதிரியிடம் பிடிபடும் ஒருவன் தான் அப்படித்தான் சேர்க்கப்பட்டதாகக்
    கூறுவதிலுள்ள 'உண்மையை' லாவகமாக மறந்து விடுவர். விரும்பிச் சேர்ந்த ஒருவன் இடையில் விலகுவதற்கு இருக்கும் நடைமுறைகளைக் கருதி தப்பியோடி, தான் வலுக்கட்டாயமாகத்தான் சேர்க்கப்பட்டதாகச் சொல்வதும் யாருக்கும் பிடிபடுவதில்லை. இராணுவக்கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருக்கும் பெற்றோர் தமது பிள்ளை கட்டாயப்படுத்தித்தான் அழைத்துச் செல்லப்பட்டான் என்று கூறுவதைத்தவிர வேறெதைச் செய்ய முடியும்.

    சரி. சிறுவர்களை வைத்துத்தான் (குழந்தைப் போராளிகள் என்று கதைப்பவர்களின் கதையைக் கேட்டால் அதைவிட பைத்தியக்காரத்தனம் இல்லை) புலிகள் சண்டையிட்டார்கள், வென்றார்கள் என்றே வைத்துக் கொள்வோம். நான் சொல்ல வருவது இதைத்தான்.
    இன்று வரையான போராட்ட வெற்றிக்கு, இன்று வரையான ஈழத்தமிழரின் இருப்புக்கு, இன்று வரையான சமாதானப்பாதைக்கு அந்த சிறார்களின் போராட்டமே காரணம். அந்த வகையில் இது தவிர்க்க முடியாததாகும்.

    வல்லரசு நாடுகளே தமது நாடு எனும்போது கட்டாய இராணுவப் பயிற்சி, கட்டாய இராணுவ சேவை என்று வைத்திருக்கும் போது, வல்லரசுகளின் துணையோடு போரிடும் பிரமாண்டமான எதியொருவனுடன் சண்டை செய்து தன்னைக் காத்துக் கொள்ள ஒரு இயக்கத்துக்கு எத்தனை திருகு தாளங்களைச் செய்ய வேண்டி வரும். அப்படி 'நாடுகளுக்கு' இணையாகக் கூட கேவலங்களைச் செய்யாத ஒரு இயக்கத்தையும் போராட்டத்தையும் உலகம் எப்படிப் பார்க்கிறது?

    மிக இறுக்கமான ஒழுக்கக் கட்டமைப்பைக் கொண்ட ஒரு இயக்கம்; எவருமே பீடி புகைக்கக்கூட அனுமதியற்ற இயக்கம்; பாலியல் சம்பந்தமான எந்தவொரு குற்றச்சாட்டையும் எதிரியால் கூட சுமத்த முடியாத இயக்கம்; தமது துணையணிகளைக் கூட (காவல்துறை, நீதித்துறை, துணைப்படை) இதே கட்டுக்கோப்புடன் வைத்துள்ள இயக்கம், சர்வதேசத்தில் வாங்கும் பெயர் என்ன?
    கட்டுநாயக்காவில் ஒரு பயணிக்குக்கூட சிறு கீறல் கூட வராமல் தாக்குதல் நடத்திய இயக்கம்; (இதைக்கட்டாயமாகக் கடைப்பிடிக்கும்போது அவர்கள் இழந்தவை நிறைய இருக்கலாம்.) கலதாரி ஹோட்டல் குண்டு வெடிப்புத்தாக்குதலின்போது 100 பொதுமக்கள் இருந்த (எல்லோரும் சிங்களவர்)கட்டடமொன்றினுள் புகுந்த அணி அவர்கள் எல்லோரையும் பத்திரமாக வெளியேற்றிவிட்டு தம்மைத்தாமே வெடிவைத்துத் தகர்த்த சம்பவம்.
    இப்பிடி அந்த இயக்கத்தைப் பற்றி நிறைய இருக்கிறது அவர்களை புரிந்து கொள்ள.
    இவ்வளவும் செய்தும் அவர்கள் பயங்கரவாதிகள் என்றால் உலகம் என்ன நினைக்கிறதென்று அறியும் ஆர்வம் எவனுக்குத் தேவை?

    மேற்குறிப்பிட்ட கொழும்புத்தாக்குதல்கள், புலிகள் தான் செய்தார்கள் என்று அந்த ஊடகங்களே சொல்வதால் அவர்களின் வார்த்தைகளையே பாவித்தேன். மற்றும்படி புலிகள் இன்னும் ஒத்துக்கொள்ளவில்லை.

    ReplyDelete
  3. பத்ரி - என் தளத்தில் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கிறேன்.

    பிரகாஷ் - sensible சரிதான். ஆனால் வலுவற்ற சிறுவர்களைப் பற்றிப் பேசும்பொழுது கொஞ்சம் sensitivity-ம் அவசியம் என்று கருதுகிறேன்.

    ReplyDelete