Thursday, May 19, 2005

ஆனந்த விகடன் பற்றி

சென்ற திங்கள் கிழமை Madras Musings-ல் S.முத்தையா ஆனந்த விகடன் No. 1 பற்றி எழுதியிருந்தார். அப்பொழுதே அதற்கு சுட்டி கொடுக்க வேண்டும் என்று நினைத்து மறந்துவிட்டேன்.

Back in the lead

* 1925-ல் ஆனந்த விகடன் என்னும் மாதப்பத்திரிகை பூதூர் வைத்யநாத அய்யர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. அப்பொழுது ஏற்கெனவே ஆனந்த போதினி என்னும் ஒரு பத்திரிகை (1915-ல் தொடங்கப்பட்டது) வந்துகொண்டிருந்தது. இரண்டுமே இன்றைய பத்திரிகைகள் போலக் கிடையாது. அவர்களின் நோக்கம் மெயில் ஆர்டர் - அஞ்சல் வழியாகப் பொருள்களை விற்பனை செய்வது. அதற்கான பொருள் பட்டியலை வெளியிடுவதற்குத்தான் இந்த பத்திரிகைகளைப் பயன்படுத்தினார்கள்.

* 1926-ல் வைத்யநாத அய்யர் ஆனந்த விகடனை S.S.வாசனுக்கு விற்றார். வாசனும் மெயில் ஆர்டர் வியாபாரம்தான் செய்து வந்தார்.

* நடுவில் மாதம் இருமுறையாகவும், பின் 1933-ல் வாரம் ஒருமுறையாகவும் ஆனந்த விகடன் வர ஆரம்பித்தது. இந்த முறையைத்தான் இன்று (வணிக) தமிழ் இதழ்கள் அனைத்தும் பின்பற்றுகின்றன. இந்த நேரத்தில்தான் கல்கி ஆசிரியராகச் சேர்கிறார். மாலி, மார்கபந்து ஆகியோர் படங்கள் வரையவும், கல்கி எழுதவும் தொடங்குகின்றனர். சதாசிவம் விளம்பரப் பிரிவில் சேர்கிறார். இதன்பின் கல்கி, சதாசிவம் இருவரும் விலகி கல்கி பத்திரிகை தொடங்கும் வரையில் விகடன் பெருவளர்ச்சி அடைகிறது. பிறகு தொடர்ந்தும் தேவன் ஆசிரியராக இருக்கும்போது வளர்ச்சிதான்!

-*-

தமிழ் இதழியல் ஆராய்ச்சியாளர்கள் யாராவது ஒரு நல்ல வரலாற்று நூலைக் கொண்டுவரவேண்டும். விகடன், குமுதம், கல்கி, கலைமகள், சாவி, குங்குமம் ஆகிய பத்திரிகைகளின் தோற்றம், வளர்ச்சி, அவை கொண்டுவந்த மாற்றங்கள், பின் வீழ்ச்சி என்று அனைத்தையும் எழுதவேண்டும்.

2 comments:

  1. //தமிழ் இதழியல் ஆராய்ச்சியாளர்கள் யாராவது ஒரு நல்ல வரலாற்று நூலைக் கொண்டுவரவேண்டும். விகடன், குமுதம், கல்கி, கலைமகள், சாவி, குங்குமம் ஆகிய பத்திரிகைகளின் தோற்றம், வளர்ச்சி, அவை கொண்டுவந்த மாற்றங்கள், பின் வீழ்ச்சி என்று அனைத்தையும் எழுதவேண்டும்//

    அ.மா. சாமி , இதழியல் ஆராய்ச்சி நூல்கள் சிலவற்றைக் கொண்டுவந்திருக்கிறார் என்று நினைக்கிறேன். ஆய்வ்ய் நோக்கில், தமிழில் கிறிஸ்துவ இதழ்கள், முஸ்லீம் இதழ்கள் என்று குண்டு குண்டான புஸ்தகங்களைப் பார்த்திருக்கிறேன். குரும்பூர் குப்புசாமி என்ற பெயரில், விடலைத்தனமாக எழுதிய சாமியின் இந்த இதழியல் ஆராய்ச்சி முகம் சுவாரசியமானது. சொன்னாற்போல, வெகுசன இதழ்களின் தோற்ற வளர்ச்சி பற்றி ஆராய்ச்சி நோக்கில் யாராவது எழுதினால் எத்தனை நன்றாக இருக்கும். ( யாராவது முன்பே எழுதியிருக்கிறார்களோ? )

    ReplyDelete
  2. விகடனின் பவழ விழா மலர் மற்றும் வாசன் மலர் ஆகிய இரண்டும் தோற்றமும் வளர்ச்சியும் குறித்த (விகடன் பார்வையில்) விரிவான கட்டுரைகளை உள்ளடக்கி இருக்கிறது.

    ReplyDelete