Sunday, May 29, 2005

ராசி (இல்லாத?) மையங்கள்

தமிழக அரசு, ராசி மையங்கள் என்னும் அமைப்புகளின் மூலம் கிராமப்புற மக்களுக்கு அரசுச் சேவைகளை வழங்க முடிவு செய்து கடந்த ஒரு வருடமாக செயல்படுத்திக்கொண்டு வருகிறது.

ராசி - RASI - Rural Access to Services through the Internet - என்பதால் வந்த பெயர்.

உண்மையில் ராசி மையங்கள் எப்படி இயங்குகின்றன, இதில் என்ன பிரச்னைகள் என்பதை அறிய நேற்று எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.

ராசி மையங்களை நடத்த விரும்புவோர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பது சரியாகத் தெரியவில்லை. ஆனால் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பல இடங்களின் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 51 ராசி மையங்கள் இருக்கின்றனவாம். அதில் ஒன்றை நடத்துபவரை சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் கொட்டிவாக்கத்தில் நேற்று சந்தித்தேன்.

தமிழக அரசு ராசி மையத்தை நடத்த இருப்பவருக்கு வங்கிகளிலிருந்து ரூ. 60,000 கடன் வாங்கித் தருகிறது. இந்தக் கடனில் அரசு கைகாட்டும் ஒருவரிடமிருந்து கணினி, பிரிண்டர் வாங்கவேண்டும். இந்த மையத்தை நடத்துபவர் கடனை மாதாமாதம் வங்கியில் கட்டிவிட வேண்டும். கடனை முழுவதும் கட்டியபின் அரசு அவர்களுக்கு மான்யமாக ரூ. 30,000 தரும்.

ராசி மையம் இருக்கும் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு அரசுச் சான்றிதழ் தேவைப்பட்டால் (ஜாதிச் சான்றிதழ், பிறப்பு இறப்பு சான்றிதழ், பட்டா, பிற வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்கள்) அதற்கு நேரடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லவேண்டியதில்லை. ராசி மையத்தில் வந்து விண்ணப்பிக்கலாம். ஆனால் இங்குதான் கூத்து ஆரம்பிக்கிறது. விண்ணப்பம், தக்க சான்றுகள் ஆகியவற்றைக் கொடுத்ததும் ராசி மையத்தவர் கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறார். அவ்வளவே! அதற்குத்தான் ரூ. 60,000 பெறுமானமுள்ள கணினியும், இணைய இணைப்பும்! பின் அவர் கால்நடையாக (அல்லது பேருந்தில் ஏறி) விண்ணப்பங்களை எடுத்துக்கொண்டு ஆட்சியர் அலுவலகத்துக்குச் செல்லவேண்டும். அங்கு சான்றிதழ்கள் கிடைக்கும். அதை எடுத்துக்கொண்டு அவர் தன் கிராமத்துக்குத் திரும்பி வந்து யார் விண்ணப்பித்திருந்தாரோ அவருக்கு சான்றிதழைக் கொடுப்பார்.

இப்படியான சேவையைச் செய்யும் ராசி மையத்தார் பெற்றுக்கொள்ள வேண்டிய கூலியை அரசே நிர்ணயித்துவிட்டது. ரூ. 30க்கு மேல் வாங்கக் கூடாது. ஆனால் கொட்டிவாக்கத்திலிருந்து காஞ்சிபுரம் சென்று திரும்ப ஆகும் பேருந்துக் கட்டணம்? ரூ. 30க்கு மேல் ஆகிவிடும்!

கொட்டிவாக்கம் மீனவர் குப்பத்தில் ரூ. 60,000 பெறுமானமுள்ள காம்பாக் கணினி, எச்.பி பிரிண்டர், ஸ்கேனர், பேக்ஸ் கருவி! ஆனால் இப்பொழுது ராசி மையத்தைப் பயன்படுத்த யாரும் இன்றி தேவையின்றிக் கிடக்கிறது. ஆனால் இந்தப் பெண்மணி மாதாமாதம் ரூ. 1,500 இந்தியன் வங்கிக்குச் செலுத்த வேண்டியதாக உள்ளது. இதே நிலையில்தான் பிறர் பலரும் உள்ளனர் என்கிறார் இந்தப் பெண்மணி.

மேலும் ராசி மையத்துக்கென வாங்கிய கணினியை பிற வேலைகளுக்கு உபயோகிக்கக் கூடாது என்று அரசு சொல்கிறதாம். தனியாக அனுமதி வாங்கினால்தான் பிற "உபயோகமான" வேலைகளுக்கு இந்தக் கணினியைப் பயன்படுத்தலாம்.

இதைப்பற்றிய என் கேள்விகள்:

1. ஒரு கணினியும், பிரிண்டரும் வேண்டுமென்றால் அதற்கு எதற்கு ரூ. 60,000? வெறும் ரூ. 20,000த்தில் வாங்கலாமே? அதுவும் வெறும் மின்னஞ்சல் மட்டும்தான் செய்கிறார்கள்!

2. ஏன் காம்பாக், எச்.பி போன்றவர்களுக்கு இந்த ஒப்பந்தம் சென்றுள்ளது? இதில் யார் எவ்வளவு ஊழல் செய்துள்ளனர்? குறைந்த விலையில் கணினிகளைக் கொடுக்க இந்தியாவிலேயே பல நிறுவனங்கள் உள்ளனவே?

3. அரசு வருமானம் செய்துகொடுக்கிறேன் பேர்வழி என்று ஏன் ஏழை மக்களைக் கடனாளிகளாக ஆக்கியுள்ளது? இப்பொழுது மாத வருமானம் அதிகமின்றி மாதம் ரூ. 1,500 வங்கிக்குக் கட்டும் பலர் இருக்கிறார்கள்.

4. வெறும் மின்னஞ்சல் செய்துவிட்டு பின் நேரடியாக வந்து நிற்கவேண்டுமென்றால் இந்தக் கணினி எதற்கு? அதற்கு பேசாமல் கணினியைத் தூக்கிப்போட்டுவிட்டு வந்து நிற்கலாமே?

மேலோட்டமாகப் பார்க்கும்போது நல்ல திட்டம் போலத் தோன்றுவது மோசமான செயல்முறையால் யாருக்கு நன்மை செய்யவேண்டுமென்று கொண்டுவரப்பட்டதோ அவர்களுக்கே தீங்கு செய்துள்ளது.

காஞ்சிபுரத்தில் குன்னவாக்கம் என்ற கிராமத்தில் ராசி மையம் வைத்திருக்கும் முரளி என்பவர் ஆங்கிலத்தில் ஒரு வலைப்பதிவு வைத்துள்ளார். இந்த மாதத்தில் இரண்டு பதிவுகள் இதுவரையில். ராசி மையம் காஞ்சிபுரம் சேவைகளுக்கான ஓர் இணையத்தளம் உள்ளது. http://rasikanchi.tn.nic.in/ என்ற சுட்டி, ஆனால் இன்று வேலை செய்யவில்லை.

12 comments:

  1. செயல்பாடுகள் நீங்கள் கூறுவது போலத்தான். ஆனால் சான்றிதழ்கள் தபால்மூலம் நேரடியாக சம்பந்தப் பட்டவர்களுக்கு அனுப்பப்படும் என்று இங்குள்ள ஒரு நண்பர் தெரிவித்தார்.

    ReplyDelete
  2. மென்பொருள் தொடர்பான கடற்கரைச் சந்திப்பின் விபரம்?

    ReplyDelete
  3. புலியைப் பார்த்து பூனையும் சூடு போட்டுக்கொண்ட கதை போல இருக்கு.

    அதாவது, எங்காவது வெளிநாட்டில் இந்த RASI போன்ற முறை இருந்து, அதை நம்மவர்கள் அப்படியே காப்பி அடித்து செயல்படுத்த நினைத்திருப்பார்கள்; ஆனால் RASI-க்கு எதிர்பார்த்த பலன் இல்லாமல் போய்விட்டதோ என்னவோ.

    ReplyDelete
  4. Both this post and the previous (on Kalyanam) are very interesting, very useful (and, as always, very well written). Many thanks for your efforts.

    ReplyDelete
  5. RASI tuticorin: http://rasitut.tn.nic.in

    Thanks, Google.
    ::Yagna

    ReplyDelete
  6. யக்ஞா: ராசி தூத்துக்குடி தளம் சென்று பார்த்தீர்களா? ஏதாவது உபயோகமாக இருந்ததா?

    (அனுராக்: கடற்கரை சந்திப்பின் விவரங்கள் மற்றுமொரு பதிவில் வெளியாகும்.)

    ReplyDelete
  7. Badri,

    There are similar centers in AP and Karnataka. Recently Bangalore One was launched with much fanfare. Here also in these places one can pay telephone, water, electricity bills, property tax, birth, death certificates, RTO and other items.

    I see this as lack of focus from govt officials - esp. TN Govt ministers unlike their counterparts in AP, Karnataka.
    check http://www.bangaloreone.gov.in/
    http://esevaonline.com/

    Details of implementation at
    http://www.hindu.com/2005/04/02/stories/2005040209010400.htm

    problems galore in AP too
    http://www.hindu.com/2005/05/18/stories/2005051817280300.htm

    - Alex

    ReplyDelete
  8. This very interesting Badri - I think the first of this kind was launched in AP - eseva - touted as a "one stop non stop service" for citizens - Naidu also did a smart thing here - apart from using the computers / centres for the chief intended purpose - governance - they were also being used post-working hours by the Azim Premji Foundation as centres for CD-based learning for the local children - optimisation of the investment made on the computers - or they can allow owners to use the computers for commercial purposes (say printing / email) post official working hours...?
    (I am on www.indsight.org/blog but your blog does not allow non blgger comments?)

    ReplyDelete
  9. >>>ஏன் காம்பாக், எச்.பி போன்றவர்களுக்கு இந்த ஒப்பந்தம் சென்றுள்ளது? இதில் யார் எவ்வளவு ஊழல் செய்துள்ளனர்

    பத்ரி,

    இது உண்மையிலேயே நல்ல திட்டம்.
    அதில் சில குறைகள் இருக்கின்றன.
    இதில் ஊழல் இருக்கிறது என்று நீங்கள் எப்படி முடிவு செய்தீர்கள்?

    ReplyDelete
  10. சுரேஷ்: ஊழல் எங்கிருக்கிறது என்பதை மேலோட்டமாகப் பார்த்தாலே நீங்கள் கண்டிபிடித்திருக்க முடியும்.

    ரூ. 20,000க்கு கணினி + பிரிண்டர் வாங்கியிருக்கலாம். ஆனால் அதற்கு ரூ. 60,000 என்று யார் முடிவு செய்தது? ஏன் காம்பாக், எச்.பி பிராண்ட்? பிரிட்டனில் இருந்துகொண்டு உங்களுக்கு காம்பாக் மேல் சந்தேகம் வராதது இயற்கை. ஆனால் எங்கள் ஊரில் காசுக்குத் திண்டாடுபவர்கள் காம்பாக் கணினி வாங்க மாட்டார்கள்.

    எச்.சி.எல், செனித் போன்ற நிறுவனங்கள் மிகக் குறைந்த விலைக்குக் கணினிகளைக் கொடுக்கிறார்கள். தெருவோரத்தில் இருக்கும் கந்தன், வேலன், குமரன், செந்தில் போன்றோர் எச்.சி.எல் கணினியை விடக் குறைந்த விலைக்கு கணினியைச் செய்து தருகிறார்கள். அதன்பின் ஏன் அரசு காம்பாக், எச்.பி பொருள்களை வாங்க ராசி மையம் நடத்துனர்களைத் தூண்டுகிறது?

    ஒவ்வொரு ஏழையும் ரூ. 40,000 அதிகக் கடனாளியாக்கப் பட்டுள்ளனர் என்பது உங்களுக்குப் புரியவில்லையா? இந்தக் கடனுக்கான வட்டியும் சேர்த்து அவர்கள் கட்டவேண்டும்.

    இது சாதாரணப் பிரச்னை என்றா நினைக்கிறீர்கள்?

    இத்தனைக்கும் அரசு இவர்களைக் கடனாளியாக்கி உள்ளதே தவிர இவர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் கொடுக்கவில்லை!

    இது கொடுமையல்லவா?

    ReplyDelete
  11. //Today i have seen nearly +2 results for 15 students in my village , i feel as a great achivement regarding our days.//

    பதிவையும் பின்னூட்டங்களையும் படித்தபின் உங்கள் கருத்துடன் உடன்பட்ட நிலையிலேயே இருந்தேன். ராசி மையம் வைத்திருக்கும் திரு.முரளியின் பதிவிலுள்ள இந்த வாசகங்கள் என்னை சிந்திக்க வைத்தன. மின்சார சேவையே சரியாக இல்லாத இடங்களில் அரசின் செயல்பாட்டைக் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறதென்பதே முரளி போன்றவர்களுக்கு சந்தோஷமான நிலைதான். பல வசதிகள் இன்னும் நம் கிராமங்களைச் சென்றடையவில்லை. நடைபெறும் நல்ல முயற்சிகளையேனும் ஆதரிப்போம்.

    ReplyDelete
  12. பத்ரி:

    அரசுத் திட்டங்கள் ஊழல் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பதே பாவம் என்று கருதப்படும் சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எனவே இதுபோன்ற திட்டங்களிலுள்ள ஊழல் பகிரங்கமான, ஆனால் தவிர்க்க முடியாத ஒன்று. (தவிர்க்கப்பட வேண்டாதது என்னும் பொருளில் கூறவில்லை; நமது இயலாமை தரும் முகத்தில் அறையும் உண்மை!)

    ஆனால் ராசி மையம் என்பது ஒரு நல்ல பயனுள்ள திட்டம் தான். ஆனால் அது தேவையானவர்களுக்கே இன்னும் போய்ச் சேரவில்லை. அதன் பயன்பாடுகள் பற்றியும் அது எங்கே இருக்கிறது என்பது பற்றியும் அரசு சரியான விளம்பரம் கூட செய்யவில்லை.

    எங்கோ ஒரு மூலையில் யாருக்கோ எந்தத் தகுதியிலோ? இது வழங்கப்படுகிறது. அப்படி ஆரம்பிக்கப் படும்போது நீங்கள் சொன்ன அதிகப்படி (கடன்) செலவினத்தோடு போதுமான வருமானமும் ஈட்ட முடியாததாகிறது.

    உண்மையில் மேற்சொன்ன அரசுச் சான்றிதழ்களை அலைச்சலின்றியும் (ஊழலின்றியும்) பெறுவதற்காகத் தொடங்கப்பட்ட திட்டம் தான் இது!.
    கணிப்பொறி, பிரிண்டர், பேக்ஸ், ஸ்கேனர், வெப்கேம் ஆகியவற்றுடன் 24 மணி நேர இலவச இணைய இணைப்பும் வழங்கப் படுகிறது.

    காஞ்சியில் எப்படி இருந்தாலும் சான்றிதழகள் நேரடியாகத் தபால் மூலம் அனுப்புவதுதான் திட்டம். ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் வேண்டினால் மையத்தை நடத்துபவர்கள் நேரடியாக வாங்கிக் கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. அது தனிப்பட்ட விருப்பம் என்பதால் அதற்கான செலவை சம்பந்தப் பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கவேண்டும். அதற்கும் அரசுக்கும் தொடர்பில்லை.

    இது தவிர கால்நடை மருத்துவ ஆலோசனை, விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள் ஆகியவற்றை வீடியோ கான்பரன்சிங் முறையில் தீர்த்து வைப்பதும் இத்திட்டத்தில் அடங்கும். கால்நடைகளுக்கு ஏற்படும் பொதுவான சில நோய்களுக்கு வீடியோ கான்பரன்சிங் முறையிலேயே சிகிச்சை அளிப்பதும் இதில் உட்படும்.

    அரசுத் துறை, உள்ளாட்சி போன்றவற்றில் ஏற்படும் குறைபாடுகளை, ஊழல், நிர்வாகப் பிரச்சினைகளை மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு எடுத்துச் செல்லும் புகார்களை பொதுமக்களிடமிருந்து பெற்று மின்னஞ்சலாக உடனுககுடன் மாவட்ட ஆட்சியருக்குத் தெரிவித்தல் இதன் இன்னொரு பயன்பாடு. மாதத்தில் குறிப்பிட்ட சில தினங்களில் மாவட்ட ஆட்சியரே இம்மையங்களில் உள்ள கணிப்பொறி வழியே பொதுமக்களோடு கலந்துரையாடி குறைபாடுகளைக் கேட்டறிதலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    உள்ளூரில் இருந்து வெளிநாடுகளில் பணிபுரியும் உறவினர்களுக்கு மின்னஞ்சல் அல்லது பேக்ஸ் அனுப்பவும் தேவையானால் அவர்களோடு வீடியோபோனில் பேசவும் இம்மையங்களில் வசதி உண்டு.

    பொதுத்தேர்வு முடிவுகள், வேலைவாய்ப்புப் படிவங்கள், அரசுப்பணித்தேர்வு முடிவுகள் போன்றவற்றைப் பார்க்கவும் பிரின்ட் காப்பி பெறவும் முடியும்.

    கிராமத்துப் பெண்களுக்குக் கணிப்பொறி அடிப்படைகளைப் பயிற்றுவிக்கவும் இந்த மையக் கணிப்பொறிகளைப் பயன்படுத்த முடியும்.

    இத்தனை பயனுள்ள நோக்கங்களோடு உருவாக்கப் பட்ட இம்மையங்கள் இன்று உண்மையில் பயனாளிகள் இன்றி நலிவடைந்து வருவது அரசின் நிர்வாகக் கோளாறுகளால்தான்.

    தவிர மையங்களை நடத்துவோரும் குறிக்கோளும் முன்னேறும் நோக்கமும் புதியனவற்றைப் புகுத்தும் ஆர்வமும் கற்கும் ஆற்றலும் கொண்டிருந்தால் அல்லாமல் இத்திட்டம் வெற்றி பெற முடியாது. ஏதோ அரசு கடனாகத் தந்தது தானே என்றும் மானியம் கிடைக்கிறதே என்பதற்காகவும் இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களைப் பெற்றவர்கள் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது.

    இத்திட்டங்களை வழங்கும்போதே ஆர்வமுடையவர்களாகப் பார்த்து வழங்க வேண்டும். கூடவே நோக்கங்கள் குறித்து சரியானமுறையில் பயிற்சி அளிக்கவும் வேண்டும். அப்போதுதான் இது போன்ற தொலைநோக்குள்ள திட்டங்கள் வெற்றி பெற முடியும்.

    ReplyDelete