Tuesday, June 21, 2005

கண்டதேவி தேர்த் திருவிழா

இன்று சிவகங்கைக்கு அருகில் உள்ள கண்டதேவி ஸ்வர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் தேர் திருவிழா. பொதுவாக தேர் திருவிழாவில் நடப்பதுபோல பொதுமக்கள் வந்து தேரை இழுத்துவிட்டுப் போவது இந்த ஊர் வழக்கமல்ல.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரை தலித் இனத்தவரை விலக்கிவைத்தே இந்தத் தேர் இழுத்தல் நடைபெற்றது. சென்ற வருடம் எக்கச்சக்கமான போலீஸ் பாதுகாப்புடன் பெயருக்கு இரண்டு தலித் இனத்தவரைக் கொண்டுவந்து வடத்தைத் தொடவைத்து தேர் இழுக்கப்பட்டது - என்று நினைக்கிறேன்.

திமுக, அதிமுக, பாமக, பாஜக, காங்கிரஸ் என்று யாரும் இந்தப் பிரச்னையில் நேரடியாகத் தலையிடுவதில்லை. கம்யூனிஸ்டுகள் மாத்திரம்தான் தலித்கள் பக்கம். புதிய தமிழகம் கிருஷ்ணசாமிதான் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டது போலத் தெரியவில்லை. பாமகவும் குரல் ஏதும் எழுப்பவில்லை.

இன்று மதியம் செய்தியின்படி, கிருஷ்ணசாமியும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு முந்தி என நினைக்கிறேன் - இப்பொழுது ஞாபகமில்லை - காவல்துறையும், அதிகாரிகளும் சேர்ந்து, பிரச்னை வரும் என்று பயந்து, இந்தத் தேர்த் திருவிழாவையே தடை செய்துவிட்டனர்.

இம்முறை சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி ஒப்புக்காக இரண்டு தலித்கள் தேர் இழுப்பார்கள் என்று இல்லாமல் தேர் இழுக்கக் கூடும் தலித்கள் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்று மாலைதான் தேர் இழுப்பில் என்ன நடந்தது என்று தகவல் வரும்.

பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தேர்தல்களைப் போன்றே கண்டதேவி தேர்த் திருவிழாவும் தமிழகத்தில் தலித்களின் நிலையை வெளிச்சமிட்டுக் காட்டும் வருடாந்திர நிகழ்வு.

5 comments:

  1. thozhiyar link not working?

    ReplyDelete
  2. //பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தேர்தல்களைப் போன்றே கண்டதேவி தேர்த் திருவிழாவும் தமிழகத்தில் தலித்களின் நிலையை வெளிச்சமிட்டுக் காட்டும் வருடந்திர நிகழ்வு.//
    அறியத் தந்ததிற்கு நன்றி பத்ரி

    ReplyDelete
  3. திருமாவளவன் மதுரையிலும், கிருஷ்ணசாமி திருச்சியிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட மாஜிஸ்டிரேட் மொத்தம் 24 தலித்கள் தேர் இழுத்தனர் என்றும், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எல்லாம் நல்லபடியாக நடந்தது என்றும் தகவல் சொல்லியிருக்கிறார். மாலை 5.00 மணிக்குத் தேர் இழுக்கப்படவிருந்தது, திடீரென கடைசி நேரத்தில் மதியம் 2.30க்கே இழுக்க ஆரம்பிக்கப்பட்டு கிடுகிடுவென மீண்டும் நிலைக்கு வந்துள்ளது.

    தமிழக அரசு தலித்களுக்குத் தேவையான பாதுகாப்பைத் தரவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  4. //மொத்தம் 24 தலித்கள் தேர் இழுத்தனர் //

    ஆச்சர்யம்தான். மற்ற தலித்துகள் புத்தமதத்துக்கும், நாத்திகர்களாகவும் ஆகிவிட்டார்களா என்ன?

    பதிவுக்கு நன்றிகள் பத்ரி.

    ReplyDelete
  5. பதிவிற்கும்-follow up-க்கும் நன்றிகள் பத்ரி.

    ReplyDelete