Wednesday, August 31, 2005

விஜயேந்திர கஸ்தூரி ரங்க வரதராஜ ராவ் (1908-1991)

[18-06-2014 அன்று எடிட் செய்யப்பட்டது]

காஞ்சிபுரத்தில் பிறந்து தமிழகத்தில் சில வருடங்கள் பள்ளிக் கல்வி படித்து, மும்பையில் கல்லூரிக் கல்வி வரை படித்து, கேம்பிரிட்ஜ் பல்கலையில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்று, கல்வித்துறையில் பல வருடங்கள் ஆசிரியராகவும் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி, Delhi School of Economics-ஐத் தோற்றுவித்து, பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணிபுரிந்து, திட்டக்குழு உறுப்பினராக இருந்து, பின் காங்கிரஸ் சார்பாக பெல்லாரி (கர்நாடகா) தொகுதியில் போட்டியிட்டு இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகி, இந்திரா காந்தி அமைச்சரவையில் தரைப் போக்குவரத்து/ கப்பல் போக்குவரத்து அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும் பணியாற்றிய VKRV ராவ் பற்றி நான் இதுவரையில் கேள்விப்பட்டிருக்கவில்லை.

அவரது முடிவுபெறாத சுயசரிதை நூல் சென்ற வாரம் கையில் கிடைத்தது.

பொதுவாக அறிவுஜீவிகள், தங்கள் கடைசிக்காலத்தில் அரசியலில் ஈடுபட்டது கிடையாது. சில விதிவிலக்குகள் உண்டு. இப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஒருவர். மன்மோகன் சிங் ஒருமுறை தேர்தலில் நின்று தோற்றுப்போனார். அதன்பின் தேர்தலிலேயே நிற்காமல், மாநிலங்கள் அவை உறுப்பினராக - அதுவும் அசாம் வழியாக - வரவேண்டிய நிலைதான் அவருக்கு இருந்தது.

VKVR ராவ், மன்மோகன் சிங் போன்றவர்களுக்கு முன்னோடி. ராவ், தன் இளமைப் பருவத்தில் மிகக்கொடிய வறுமையைச் சந்தித்திருக்கிறார். அவரது தந்தையார் ஒரு ஜோதிடர். ஊர் சுற்றி. சரியான வருமானம் இல்லாதவர். ஆனால் தனது பல மகன்கள்/மகள்களில் இவர்தான் மிகப் பிரகாசமாக ஜொலிப்பார் என்று கணித்தாராம் (ஜோதிடத்தின் மூலமா, அல்லது வேறு உள்ளுணர்வின் வழியிலா என்று தெரியவில்லை). ராவ் கேட்டதும் விரும்பியதும் அவருக்குத் தொடர்ந்து கிடைத்துக்கொண்டே இருந்தது. சில காலம் தமிழகத்தில் கழித்தபின்னர் மும்பை சென்று அங்கு உயர்நிலைக் கல்வி கற்றார். சில கல்வி அறக்கட்டளைகள் அளித்த நன்கொடைதான் முழுக்க முழுக்க அவருடைய கல்விக் கட்டணத்துக்கும் உடைகளுக்கும் உதவியது. பள்ளிக் கல்வியை முடித்ததும் மும்பையிலேயே பொருளாதாரத் துறையில் கல்லூரிப் படிப்பை முடித்தார். “பிரிட்டிஷ் இந்தியாவில் வரிவிதித்தல்” என்ற தலைப்பில் ஒரு மிக முக்கியமான ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதினார்.

கேம்பிரிட்ஜ் பல்கலையில் சேர விரும்பினார். ஆனால் முனைவர் படிப்புக்காக இல்லாமல் மீண்டும் இளநிலைப் படிப்பில் சேர்ந்தார். அதற்குக் காரணம், தான் பொருளாதாரத் துறையில் இன்னமும் நிறையக் கற்றுக் கொள்ளவேண்டும் என்று அவர் நினைத்ததே. தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலையில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.

இந்தியா வந்ததும் முதலில் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும், பின்னர் அகமதாபாத்தில் ஒரு கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தார். அந்த நேரத்தில் கொல்கொத்தாவில் கடும் பஞ்சம் காரணமாக ஏகப்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டன. அதனால் ராவ் தன் பல்கலைக்கழக வேலையிலிருந்து அனுமதி பெற்று, தேசிய உணவுப் பொருள் விநியோக வாரியத்தில் மூன்று வருடங்கள் வேலை செய்தார்.

பின் மீண்டும் தில்லி பல்கலைக்கழகம் வந்து London School of Economics போன்றே Delhi School of Economics என்ற, தனித்து இயங்கும் பொருளாதாரக் கல்விக்கழகத்தை நிர்மாணித்தார். இந்தியாவில் பொருளாதார உயர்கல்விக்கு வித்திட்டவரே ராவ்தான். இந்தியாவிலேயே முதலாவதாக இவரிடம்தான் பொருளாதார முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவர்கள் சேர்ந்து படித்தனர். பல முக்கியமான பொருளாதார ஆசிரியர்களைத் தேடிப் பிடித்துவந்து தில்லி பொருளாதாரக் கழகத்தை இவர் பலப்படுத்தினார். பின்னர் தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆனார். துணைவேந்தர் பதவியை விட்டு விலகுவதற்கு முன்னால் Institute of Economic Growth (IEG) எனப்படும் கல்விக்கூடத்தை நிர்மாணித்தார்.

நேரு காலத்தில் திட்டக்குழுவில் உறுப்பினர் ஆனார்.

காங்கிரஸ் சற்றே ஆட்டம் கண்டிருந்த நிலையில், கட்சிக்குப் பலம் சேர்க்கவேண்டுமானால் அறிவுஜீவிகள் கட்சியில் சேரவேண்டும் என்று காமராஜ் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப ராவ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அப்போதைய கர்நாடக முதல்வர் நிஜலிங்கப்பாவின் வேண்டுகோளின்படி கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியில் நின்றார். அங்கு போட்டியிட்ட சுதந்தரா கட்சி வேட்பாளரைத் தோற்கடித்தார். முதலில் இந்திரா காந்தி இவரை கேபினெட்டில் சேர்த்துக்கொண்டு வர்த்தக அமைச்சரகத்தைத் தருவதாகச் சொன்னார். ஆனால் பல குழப்பங்களுக்குப் பிறகு இரும்பு/எஃகு என்றாகி பின் கடைசியாகத் தரைப்போக்குவரத்து, கப்பல் போக்குவரத்து அமைச்சகம்தான் இவருக்குக் கிடைத்தது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு கேபினெட் மாற்றம் ஏற்பட்டபோது இவருக்குக் கல்வி அமைச்சகம் கிடைத்தது.

கல்வி பொதுப் பட்டியலில் இருப்பது. இப்போது மனிதவள மேம்பாட்டு அமைச்சரகத்தின்கீழ் வந்துவிட்டது. ஆனால் அப்போது கல்வி, தனி அமைச்சரகமாக இருந்தது. சிறந்த கல்வியாளரான ராவால் கல்வி அமைச்சராக இருந்தும் கல்வித் துறைக்கு உருப்படியாக ஒன்றுமே செய்ய முடியவில்லை. அடுத்த தேர்தல், வங்கதேசப் போரைத் தொடர்ந்து நடந்தது. அதிலும் ராவ் தன் தொகுதியில் வென்றார். ஆனால் இம்முறை இந்திரா காந்தி அவருக்கு அமைச்சர் பதவி எதையும் தரவில்லை.

ராவ் இதனைத் தனக்கு சாதகமாகவே எடுத்துக்கொண்டார். இந்த நிலையைப் பயன்படுத்திக்கொண்டு 1972-ல் Institute of Social and Economic Change (ISEC) என்னும் கல்விக்கூடத்தை பெங்களூரில் தொடங்கினார்.

அத்துடன் தேர்தல் எதிலும் பங்குகொள்ளாமல் அரசியலை விட்டு விலகினார்.

இந்தியாவின் தேசிய வருமானத்தை சரியாகக் கணிக்க, ராவ் 1930-களிலேயே ஒரு முறையை உருவாக்கினார். பின்வரும் வருடங்களில் அவரது முறைதான் பின்பற்றப்பட்டது. வரி விதித்தல் குறித்து தொடக்கம் முதலாகவே ஆராய்ச்சி செய்த ராவ், சோசியலிசத்தால் ஈர்க்கப்பட்டு நாட்டில் மக்களுக்கிடையேயான ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கும் வண்ணம், அதிகம் சம்பாதிப்பவர்கள்மீது மிக அதிகமாக வரி விதிக்கவேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தினார். இதன் விளைவாக 1950-1980களில் இந்தியாவில் தொழில் வளர்ச்சி வெகுவாகப் பாதிக்கப்பட்டது. வரி ஏய்ப்பு பெருகியது.

ஆனால் ராவ் விவசாய வருமானத்தின்மீது வரி விதிக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவராக இருந்தார். அரசியல்வாதிகளோ அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. ராவும்கூட, தேர்தலில் நிற்கும்போது தனது கொள்கையைச் சற்றே மாற்றிக்கொண்டு விவசாய வருமானத்தின்மீது வரி விதிக்கவேண்டியதில்லை என்று சொல்லிவிட்டார்.

ஒரு நிலைக்குமேல் ராவ் பொருளாதார ஆராய்ச்சிகளில் அதிகமாக ஈடுபடவில்லை. கல்லூரி முதல்வர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், கேபினெட் அமைச்சர், கல்விக்கூடங்களை நிர்மாணிப்பவர் என்று அவருடைய வாழ்க்கை செல்லத் தொடங்கியதால், ஆராய்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டது. இல்லாவிட்டால் பின்னால் வந்த அமர்த்யா சென் போல ராவும் பொருளாதாரத்தில் நோபல் பரிசு பெற்றிருக்கக்கூடும்.

இந்தியாவில், இந்தியர்களுக்குப் பயன்படுமாறு இருக்கவேண்டும் என்பதற்காக சர்வதேச நிதியம், ஐ.நா சபை ஆகியவற்றிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் தனக்குக் கிடைத்த வேலை வாய்ப்புகளைத் தூக்கி எறிந்தவர் இவர்.

இன்று இவர் பேர் சொல்லும் வகையில் பொருளாதாரத் துறையில் மூன்று கல்விக்கூடங்களும் ஆராய்ச்சிச் சாலைகளும் உள்ளன.

The partial memoirs of VKRV Rao, Edited by SL Rao, Oxford University Press, 2002, Pages: 288, Hardbound, Price: Rs. 1,300

7 comments:

  1. நன்றி..பத்ரி..கேப்ஸ்யூல் முழுங்கியது போல் சுருக்கமாகத் தந்தமைக்கு நன்றி..

    ReplyDelete
  2. இது வரை கேள்விப்பட்டிராத ஒருவரைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. வணக்கம் பத்ரி
    தாங்கள் படித்து, உங்களுக்கு பிடித்த ராவ் பற்றிய எழுதியமைக்குப்
    பாராட்டுகள்!!!. இதுப் போல் நிறைய எழுதுங்கள்.
    நன்றி
    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  4. நன்றி பத்ரி, vkrv. ராவ் அவர்களை பற்றி பகிரிந்து கொண்டதற்கு, இன்னும் மிக பெரிய மேதைகளை மற்றும் போராளிகளை நம் இந்திய அரசியல் (முக்கியமாக) அழிக்க மற்றும் மறைக்க முற்படுகிறது.
    இதுபோல் பல விசயங்களை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன்
    மீண்டும் ஒருமுறை நன்றி உங்கள் செயலுக்கு..

    ReplyDelete
  5. Interesting unknown information given in nutshell good attempt.

    ReplyDelete
  6. Thanks Badri...!!! Stories of people like Rao are always inspiring...Please keep sharing

    ReplyDelete