Monday, August 01, 2005

8% விகிதத்தில் வளருமா இந்தியா?

வெள்ளிக்கிழமை அன்று மாண்டேக் சிங் அஹ்லுவாலியா ஐஐடி மெட்ராஸ் 42வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.

தொடக்கத்தில் வழக்கமான ஐஐடி புகழ்பாடல். அமெரிக்க காங்கிரஸே அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியர்களும், குறிப்பாக ஐஐடியினரும் ஆற்றிய தொண்டைக் குறிப்பிட்டு ஒரு ஸ்பெஷல் 'ஓ' போட்டதாகச் சொன்னார். ஆனால் இந்திய நாடாளுமன்றம் இதுவரையில் இந்தியாவுக்காக ஐஐடி ஆற்றிய அருந்தொண்டு பற்றி எதுவும் சொன்னதா என்று ஞாபகமில்லை. ஒருவேளை சொல்லிக்கொள்ளுமாறு இந்தியாவுக்காக ஐஐடியினர் எதையும் செய்யவில்லையோ என்னவோ. அப்புறம் ஜவாஹர்லால் நேஹ்ருவின் temples of modern India மேற்கோளும் அவசியமாக இருந்தது.

தான் பட்டம் பெற்று கல்லூரியை விட்டு வெளியே வந்தபோது இருந்த நிச்சயமற்ற சூழல் இப்பொழுது இல்லையென்றும், இன்று பட்டத்துடன் வெளியேறும் மாணவர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கூடிய சூழ்நிலை உள்ள இந்தியாவில் காலடி எடுத்து வைக்கிறார்கள் என்றார். இப்பொழுது 6% வளர்ச்சியில் இருக்கும் இந்தியா ஒருசில அரசின் செயல்திட்டங்களால் 8% வளர்ச்சியை எட்டுவது கடினமல்ல என்றார். மேலும் அவர் சொன்னது:

அடுத்த 30 வருடங்களில் இந்தியா தொடர்ச்சியாக 8% வளர்ச்சியில் இருந்தால் நாடு எப்படியிருக்கும்? இந்தியா அப்பொழுது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இருக்கும். (சீனா, அமெரிக்காவுக்கு அடுத்ததாக). உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு இப்பொழுதிருக்கும் 0.8%-லிருந்து கிட்டத்தட்ட 3% ஆகும். இப்பொழுது இருக்கும் 25% நகர மக்கள் தொகை கிட்டத்தட்ட 40% ஆகும். அந்த அளவுக்கு மக்கள் கிராமங்களிலிருந்து குடிபெயர்ந்து நகரங்களுக்குச் செல்வார்கள். இனி பிறக்கும் ஒவ்வொருவரும் அடிப்படைக் கல்வியுடன் மட்டும் இல்லாமல் உயர்நிலைக் கல்வியும் பெறுவார். (!!)

ஆனால் இதெல்லாம் நடக்க வேண்டுமானால் அரசு சில செயல்திட்டங்களில் முதலீடு செய்யவேண்டும். அவை:
  1. கல்வி + சுகாதாரம்
  2. விவசாயம்
  3. அடிப்படைக் கட்டுமானம்
கல்வி, சுகாதாரம் இரண்டிலும் நாம் பல வளரும் நாடுகளை விட மோசமான நிலையில் இருக்கிறோம். அடிப்படைச் சுகாதாரத்தை எடுத்துக்கொண்டால் சீனாவை விடவும், பல கிழக்காசிய நாடுகளை விடவும் நம் நாட்டில் சிசு மரணம் (infant mortality) அதிகமாக உள்ளது. அதைப்போலவே கருவுற்ற தாய் மரணம் (maternal mortality ratio) என்னும் அலகிலும் நம் நாடு மோசமாகவே உள்ளது. கல்வி, சுகாதாரம் இரண்டையும் மேம்படுத்த அரசிடமிருந்துதான் முதலீடு வரவேண்டும்.

விவசாயம்... 1980களில் இந்தியாவில் விவசாயம் 3.5% என்ற விகிதத்தில் வளர்ந்தது. ஆனால் 1990களில் இது 1.5% என்று குறைந்துவிட்டது. இந்தியா 8% வளர்ச்சி காணவேண்டுமென்றால் விவசாயம் 3.5-4.0% வளர்ச்சியில் இருக்கவேண்டும். வெறும் உணவு தானியங்களை அறுவடை செய்வதால் மட்டுமே இந்த வளர்ச்சியை நாம் அடையமுடியாது. அதனால் விவசாயத்தில் நாம் உணவு தானியங்களைத் தாண்டி உலகச்சந்தையில் விற்கக்கூடியதாக பழவகைகள், பூக்கள், காய்கள் (horticulture) என்று பயிரிடவேண்டும். பால் உற்பத்தியில் ஈடுபடவேண்டும். இங்கு பெரும் பண முதலீடு தேவைப்படுகிறது. இங்கு தனியாரின் தேவை இருக்கிறது. ஒப்பந்தச் சாகுபடி முறை (contract farming) வரவேண்டும். இதன்மூலம் தனியார் மூலதனம் அதிக அளவில் விவசாயத்தில் விளைச்சலை அதிகப்படுத்தவும் விளைபொருளை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்தவும் உபயோகப்படும்.

அடுத்ததாக அடிப்படைக் கட்டுமானம். நகரங்கள் அதிகமாகும் மக்கள் தொகையை நிர்வகிக்கமுடியாமல் தடுமாறும். இந்தியாவில் அடிப்படைக் கட்டுமானத்தை புதுப்பிக்க, அடுத்த பத்து வருடங்களில் கிட்டத்தட்ட $ 200 பில்லியன் தேவைப்படும் என்று மதிப்பிடுகிறார்கள். இத்தகைய பணம் அரசிடமிருந்தோ, பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்தோ வரமுடியாது. தனியாரும் இந்த முயற்சியில் ஈடுபடவேண்டும். பொதுத்துறை-தனியார் துறை இணைந்து செயலாற்றும் public private partnership - ppp (build-operate-transfer bot) மூலம் மட்டும்தான் இதைச் சரியாகச் செய்யமுடியும். (உ.ம்: துறைமுகங்கள், விமான நிலையங்கள், நகர சுங்கச்சாலைகள்.) ஆனால் அதே நேரத்தில் லாபம் இல்லாத பல இடங்களில் (உ.ம்: கிராமப்புறச் சாலைகள், விவசாயப் பாசனம்) தனியார் பங்கேற்பு இருக்காது. அங்கு அரசுதான் எப்படியாவது பணத்தைக் கொண்டுவரவேண்டும்.

இந்தக் கட்டுமானத்தின் முக்கியத்துவம் கருதி, பிரதமர் தலைமையில் ஓர் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. திட்டக்குழுவும் தேவையான நிதியை எங்கிருந்து கொண்டுவருவது என்பது பற்றி யோசித்து வருகிறது.

-*-

உப்புச் சப்பில்லாத தி ஹிந்து கவரேஜ்
கொஞ்சம் உசத்தியான நியூஸ் டுடே கவரேஜ்

No comments:

Post a Comment