Tuesday, August 02, 2005

இந்திய கம்யூனிஸ்டுகள் பற்றி ராமச்சந்திர குஹா

சத்யா வழியாக, Good practice, bad theory among Left politicians

சுவையான கட்டுரை. 1977-ல் ஸ்பானிய கம்யூனிஸ்ட் தலைவர் சாண்டியாகோ கேரில்லோ எழுதிய "Eurocommunism and the State" என்ற புத்தகத்தை இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் B.T.ரணதிவே கடுமையாக விமரிசித்து எழுதினார். ஆனால் இன்று பார்க்கும்போது கேரில்லோவின் கொள்கைகள்தான் இந்தியச் சூழலில் சரியாக இருக்கும் என்று தெரிகிறது.

"இந்திய கம்யூனிஸ்டுகள் பிற கட்சிகளில் உள்ளவர்களை விட அறிவாளிகள். சந்தேகமே இல்லாமல் பிற கட்சியினரை விட நாணயமானவர்கள். பிற கட்சியினர் சமூகத்தின் உயர்மட்டத்தவரோடு மட்டும் உறவாடும்போது கம்யூனிஸ்டுகள்தான் இன்றும் உழைக்கும் வர்க்கத்தவரோடு உறவு வைத்திருக்கிறார்கள்.

அப்படி இருந்தாலும் காலாவதியான கொள்கைகளை இன்னமும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருப்பது வருத்தத்தைத் தருகிறது. 20-ம் நூற்றாண்டில் நாம் கற்றுக்கொண்டிருப்பது என்னவென்றால், குடியாட்சி முறை, அதன் எல்லாவிதக் குறைபாடுகளிடனூடாகவும், இடதுசாரி, வலதுசாரி சர்வாதிகாரங்களை விட எவ்வளவோ மேலானது; சந்தை, அதன் எத்தனையோ குறைபாடுகளின் இடையேயும் கூட, பணத்தையும், உழைப்பையும் அரசை விட நேர்த்தியாகவும், குறைந்த செலவிலும் விநியோகிக்கிறது. வரலாற்றிலிருந்து நாம் மேலும் தெரிந்து கொள்ளும் முக்கியமான மூன்றாவது விஷயம்: தாகோர், காந்தி, நேஹ்ரு, அம்பேத்கார் ஆகியோர் எவ்வளவுதான் குறைகளுடையவர்களாக இருந்தாலும், மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின் போன்றவர்களைவிட - இந்தியாவைப் பொறுத்தமட்டில் - அதிகம் தேவையானவர்கள்."

10 comments:

  1. நல்ல கட்டுரை. நன்றி.

    //Carillo believed that the Communist Party was not infallible either, that at least in non-political matters individuals should feel free to follow their own conscience//

    இதில் கேள்வி என்ன இருக்கிறது. ஏதோ இது சமுதாயத்துக்கு வழங்கப்படும் சலுகை மாதிரிச் சொல்வது எரிச்சலூட்டினாலும், இப்பொழுதாவது புரிந்ததே என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

    //Ranadive - the encouragement of a diversity of thought outside the sphere of politics was “the final denigration of the Marxist-Leninist Party in the name of freedom for all its members to profess any opinion they like on any subject”//

    இவர் என்னடாவென்றால் அது கூட வேண்டாமென்கிறார்!

    //For the prejudices he (Ranadive) held — and so vigorously articulated — are unfortunately still quite widespread in the CPI(M) today.//

    இப்படி இருக்கும் வரையில் அவர்கள் முன்னேறாதது நம் சமுதாயத்திற்கு நல்லது தான்.

    ஜனநாயகமும் கருத்துச் சுதந்திரமும் இல்லாத சமுதாயத்தை நிறுவ முயலும் எந்த தத்துவமும் எதிர்க்கப் பட வேண்டும்.

    ReplyDelete
  2. இந்தியாவில் ஐரோப்பாவைப் போல சோஷலிஸ்ட் டெமாக்ரட்ஸ் போன்ற கட்சிகள் தோன்றாமல் இருப்பதும் கம்யூனிஸ்டுகள் மட்டுமே இடதுசாரிக்கொள்கைகளின் ஒரே வாரிசு என்ற தோற்றம் தரும்படி ஆகிவிட்டது. பொருளாதாரம், அரசமைப்பு போன்ற விதயங்களில் நடக்க வேண்டிய முக்கிய விவாதங்களும் கரார் பார்வையில் நடைபெற முடியவில்லை. ஆனால் அக்குறையை 'ரீஜினல் பார்ட்டீஸ்' என்று இதுநாள் வரை தீண்டத்தகாதவையாக கருதப்பட்டவை இட்டு நிரப்பின - அவற்றின் கொள்கைகள் கறாராக வழிமுறைப்படுத்தப்படவில்லை. ஆயினும் அவை மட்டுமே மக்களின் அருகில் நின்ற கட்சிகளும் ஆகும்.
    அருள்

    ReplyDelete
  3. பத்ரி : நான் பார்த்த வரையிலும், இந்த இடதுசாரிக் கட்சியினர், நடைமுறைக்கு ஒவ்வாத, ஒரு விதமான வீம்புடன் செயல்படுவதாகவே நினைக்கிறேன். அரசியல் சித்தாந்தங்கள் அடிப்படையில், அவர்கள் பார்வை சரியா தவறா என்று உறுதியாகச் சொல்ல எனக்குத் தெரியாவிட்டாலும், நேரடியாக பொருளாதாரத்தையும், தொழில்துறையையும் பாதிக்கிற விஷயங்களில் தொலை நோக்குப் பார்வை இல்லாமல், கடிவாளம் போட்ட குதிரை போல ஒரே விஷயத்தைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறார்கள் என்று நினைக்கிறேன். பாரத மிகுமின் நிலைய பங்குகள் விற்பனை விவகாரம், ஒரு சமீபத்திய உதாரணம். காங்கிரஸிலோ, அல்லது பாரதீய ஜனதாவிலோ, இடது சாரிக் கட்சிகளில் இருக்கிற அளவுக்கு புத்திஜீவிகள் இல்லை என்பதும், அடித்தட்டு மக்களுடன் இணைந்து செயல்படுகிறவர்கள் இல்லை என்பதும் உண்மைதான். ஆனால், நடைமுறையுடன் ஒத்து வருகிற மாதிரியான செயல்திட்டங்களை உருவாக்குவதில், அந்த புத்திஜீவிகள் முனைப்பு காட்டுவதில்லை என்பதும் கேள்விக்குரியது.

    இடதுசாரி சிந்தனையாளர்கள் என்பவர்கள், CPI, CPI(M), CPI(ML), போன்ற கம்யூனிஸ்ட் என்கிற முன்னொட்டு சேர்த்த பெயர்களைக் கொண்ட கட்சிகளில் மட்டுமில்லை. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளிலும் இருக்கிறார்கள். நான் இடதுசாரிக் கட்சிகளின் சித்தாந்தங்களைக் குறை சொல்லவில்லை. ஆனால், அவர்களுடைய செயல்பாடுகள் எரிச்சலை ஊட்டுகிறது. அவர்களுக்கு நிரம்ப அறிவிருக்கிறது. ஆனால், அதை உபயோக்கிமாட்டார்கள் என்பது என்ன தருக்கத்தில் அடங்கும் என்பது புரியவில்லை.

    ReplyDelete
  4. ஸ்ரீகாந்த்: ஜனநாயகம், கருத்துச் சுதந்தரம் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகவேண்டியதில்லை. நமக்கு கம்யூனிசம் மீதான புரிதல்கள் குறைவு. ரஷ்யாவிலும் பிற நாடுகளிலும் நடந்த தோல்வியுற்ற சோதனைகள், இந்தியாவில் கம்யூனிஸ்ட்கள் நடத்தும் கூத்து, அமெரிக்க ஊடகங்கள் கம்யூனிசத்துக்கு எதிராகச் செய்யும் பிரசாரம், கம்யூனிசத்தைப் புதுப்பித்து மாறும் சமூகச் சூழ்நிலைக்கேற்ப சிந்தனைகளை வெளியிடாமை ஆகியவை கம்யூனிசத்தின் மீதான கெட்டதொரு பிம்பத்தை ஏற்படுத்துகிறது.

    கம்யூன் முறைப்படி கம்யூன் உறுப்பினர்களிடையே கருத்துச் சுதந்தரம் உண்டு. ஜனநாயகம் என்று இன்று நாம் அறியும் முறை கிடையாது, ஆனால் அடிப்படையில் பல ஜனநாயகச் சிந்தனைகள் உண்டு.

    ஆனால் கேரளாவில் தேசாபிமானி பத்திரிகையின் புகைப்படக்காரர் கணினியில் உள்ள ஸ்கிரீன்சேவர்களில் பிரகாஷ் காரத் படத்தைப் பார்த்து, "இந்த அளவுக்கு தனி மனிதரை ஏத்துவது தேவையா?" என்ற கேள்வியைக் கேட்டதன் காரணமாக வேலையை விட்டு தூக்கி எறியப்பட்டுள்ளார்.

    இதுதான் நம்மூர் கம்யூனிஸ்டுகளின் லட்சணம். நம்மூர் கட்சிக்காரர்களின் செயல்பாடுகளை வைத்து கம்யூனிசம் என்னும் கொள்கையைக் குறைவாக மதிக்கக்கூடாது.

    ReplyDelete
  5. அருள்: பிராந்தியக் கட்சிகள் மக்களுக்கு அருகில் நிற்கிறார்கள் என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளமாட்டேன். திமுக/அதிமுக/பாமக/மதிமுக, தெலுகு தேசம், சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றைப் பார்த்தால் எந்தவகையில் அவர்கள் மக்களுக்கு அருகில் இருக்கிறார்கள்?

    அவர்களது கொள்கைகள் கறாராக இருப்பதில்லை. பலருக்குக் கொள்கைகளே இருப்பதில்லை - ஆட்சியைப் பிடிப்பதைத் தவிர.

    திமுக, மொழி உணர்வு பாதிக்கப்படும்போது தலைதூக்கி அதன்மூலம் தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டது. அதிமுக அம்மாதிரி எந்தவொரு கொள்கையும் எப்பொழுதுமே வைத்திருக்காத கட்சி. திமுகவை சமன்டுத்தும்விதமாக மொழி உணர்வை மங்கவைத்த, இந்திய உணர்வு அவசியம் என்று சொன்ன கட்சி என்றுவேண்டுமானால் கொள்ளலாம். (அதிமுக -> அ இந்திய அதிமுக ஆனது அதற்காகத்தான்). பாமக மிகக்குறுகிய ஒரு சமூகத்துக்கான இட ஒதுக்கீடு நீதியைக் கேட்டது. ஆனால் பாமகவின் முன்னேற்றம் அந்தக் காலக்கட்டத்தினைத் தாண்டி, அதாவது பாமகவின் கோரிக்கைகள் வெற்றிய்டைந்த சில வருடங்கள் கழித்துத்தான் சட்டமன்ற, பாராளுமன்ற இடங்களில் ஜெயிக்க வைத்தது. அதற்குக் கூட முக்கியக் காரணம் முக்கியக் கட்சிகள் பலம் குன்றியதுதான்.

    தெலுகு தேசத்துக்கு மொழி, மதம் அல்லது உள்ளூர் வளர்ச்சி சார்ந்த எந்தக் கருத்துகளும் இருந்ததாகத் தெரியவில்லை.

    சமாஜ்வாதி கட்சிக்கும் அப்படியே.

    இன்றும்கூட திமுக, அதிமுக, பாமக ஆகியவை நாட்டின் அடுத்தக் கட்டத்துக்கான தங்கள் திட்டத்தையோ, தங்கள் கொள்கைகளையோ மேலோட்டமாகக் கூட வரையறுத்துச் சொல்வதில்லை.

    ReplyDelete
  6. ------------------------------------
    >>>>
    அருள்: பிராந்தியக் கட்சிகள் மக்களுக்கு அருகில் நிற்கிறார்கள் என்பதை நான் முழுமையாக ஏற்றுக்கொள்ளமாட்டேன். திமுக/அதிமுக/பாமக/மதிமுக, தெலுகு தேசம், சமாஜ்வாதி கட்சி ஆகியவற்றைப் பார்த்தால் எந்தவகையில் அவர்கள் மக்களுக்கு அருகில் இருக்கிறார்கள்?
    அவர்களது கொள்கைகள் கறாராக இருப்பதில்லை. பலருக்குக் கொள்கைகளே இருப்பதில்லை - ஆட்சியைப் பிடிப்பதைத் தவிர.
    ----------------------------------------
    மேலே குறிப்பிட்டவை தவிர இன்னும்: அகாலி தளம், அஸ்ஸாம் கொண பரிக்ஷத், நேஷனல் கான்பரன்ஸ் இவையும். இவர்களெல்லாம் நிச்சயமாக காங்கிரஸ், பாஜக - வை விட மக்களின் ஆதரவை பெற்றவையாக இருக்கின்றன, அவர்களின் உடனடி தேவைகளுக்கு குரல் கொடுக்கின்றன என்பது உண்மை. இவை அனைத்தும் பதவி சுகம் கண்டு, ஊழல் கட்சிகளாக மாறியதும் உண்மை. இவை பெரும் தத்துவங்களின் அடிப்படையில் கட்டப்பட்ட கட்சிகள் அல்ல. ஆனால் ஜனநாயக அரசியலுக்குத் தேவையான naive கருத்தாக்கங்கள் இவர்களிடம் இருந்தன. தேசியக் கட்சிகள் அவர்களின் பொய் தேசப்பற்றையே ஒரு virtue ஆகக் காட்டி மக்களை பயமுறுத்தி சுரண்டிக்கொண்டிருந்தார்கள். கம்யூனிஸ்டுகள் இந்திய மொழி, தேசிய இனப் பிரச்சினைகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள். சோவியத்தை போலவோ, சைனாவைப் போலவோ அடக்குமுறை தீர்வுகள் சரியா, இல்லை இங்கே சாத்தியமா என்பதே இவர்கள் பேசித்தீர்ந்த பாடில்லை.
    ----------------------------
    >>>>
    திமுக, மொழி உணர்வு பாதிக்கப்படும்போது தலைதூக்கி அதன்மூலம் தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்டது. அதிமுக அம்மாதிரி எந்தவொரு கொள்கையும் எப்பொழுதுமே வைத்திருக்காத கட்சி. திமுகவை சமன்டுத்தும்விதமாக மொழி உணர்வை மங்கவைத்த, இந்திய உணர்வு அவசியம் என்று சொன்ன கட்சி என்றுவேண்டுமானால் கொள்ளலாம்.
    ---------------------------
    திமுக வையும். அதிமுகவையும் வேறு மாதிரியாகவும் பார்க்கலாம். சாதாரண மக்களின் உடனடித் தேவைகளுக்கு, ஆசாபாசங்களுக்கு நிறுவனமயப்படுத்தப்பட்ட அங்கீகாரம் கொடுத்தவை என. இந்த இரண்டு கட்சிகளும் நிர்வாக கட்டமைப்பு, அதில் மகளிர் பங்கு, பலவித சமூக மனநிலை சீர்திருத்தங்களுக்கு உதவியாக மக்களைத் தயார் செய்வது போன்ற அரசியல் பண்பாட்டுத் தளங்களில் இயக்கம் போன்று தமிழ்ச் சமுதாயத்தில் இவற்றின் பங்களிப்பு ஆகக்கூடியது. சும்மா எப்போதும் கருணாநிதி, ஜெயலலிதாவின் ஊழல், எம்ஜீயாரின் சினிமா மாயை என்றே பேசிப் பயனில்லை. இவற்றை வெறும் சமுதாயச் சீர்கேடுகளின் ஊற்றுக்கண் என்றே பார்க்க நம்மை அறிவுஜீவிகள் பழக்கப்படுத்தி இருக்கிறார்கள். இவை அதற்கு மேலும் செய்த ஜனநாயக செயல்பாடுகள்தான் இந்தியாவை ஒரு வலிமையான ஜனநாயக நாடாக வைத்திருக்கின்றன என கருதுகிறேன். நிச்சயம் இது விவாததுக்குரியதுதான்.
    -----------------------------------------------
    >>>
    (அதிமுக -> அ இந்திய அதிமுக ஆனது அதற்காகத்தான்).
    --------------------------
    இல்லை. இல்லை. நடுவண் அரசு மாநிலக்கட்சிகளுக்கு தடைவிதிப்போம் என்று பயமுறுத்தியதால். :-)
    ---------------------
    >>>
    இன்றும்கூட திமுக, அதிமுக, பாமக ஆகியவை நாட்டின் அடுத்தக் கட்டத்துக்கான தங்கள் திட்டத்தையோ, தங்கள் கொள்கைகளையோ மேலோட்டமாகக் கூட வரையறுத்துச் சொல்வதில்லை.
    ---------------------------
    உண்மை.
    ------
    அன்புடன்
    அருள்

    ReplyDelete
  7. அருள்: நீங்கள் சொல்வது சரிதான். நான் அசாம் கண பரிஷத், அகாலி தள், நேஷனல் கான்ஃபரன்ஸ் பற்றி சரியாக யோசிக்கவில்லை. அகாலி தள் சுதந்தரத்தின்போதே இருந்தது. நேஷனல் கான்ஃபரன்ஸும் அப்படியே. அசாம் கன பரிஷத் நேரடியாக மக்களுடன் தொடர்புள்ள, அசாமிய-வங்காள குடியேற்றப் பிரச்னைகளை முன்வைத்து உருவான AASU மாணவர் இயக்கத்திலிருந்து வந்தது.

    இவையனைத்துமே இந்தியாவின் ஜனநாயகத்தன்மையை வலிமைப்படுத்திய சக்திகள் என்பதில் சந்தேகமில்லை. திமுகவும் கூடத்தான்.

    பாமகவை நான் நியாயமாக மதிப்பிடவில்லை... ராமதாஸ் கல்வி பற்றிய ஒரு கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கல்வி என்பது மாநிலப் பட்டியலில் வரவேண்டும் (இப்பொழுது concurrent பட்டியலில் உள்ளது) என்பது பாமகவின் தனிப்பட்ட அபிப்ராயம் என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் வரவேற்கத் தக்கது.

    ஆனால் பிராந்தியக் கட்சிகள் இன்னமும் அதிக தூரம் போகவேண்டும். இவர்கள் பல விஷயங்களில் - பொருளாதாரம், வெளியுறவு ஆகியவற்றில் - தேசியக் கட்சிகள் என்ன சொன்னாலும் அதை ஏற்பவர்களாக இருக்கிறார்கள். உதாரணம்: இலங்கைப் பிரச்னை. ஒரு கட்டத்துக்குப் பிறகு மதிமுக தவிர யாருமே இலங்கைத் தமிழர்களைக் கண்டுகொள்ளவில்லை.

    உலகமயமாதல், அதில் இந்தியாவின் பங்கு, இது இந்தியர்களைப் பாதிக்குமா இல்லை வளப்படுத்துமா ஆகிய எதைப்பற்றியுமே திமுக, பாமக முதலாக நேஷனல் கான்ஃபரன்ஸ் ஈறாக யாருக்குமே எந்தக் கருத்தும் இல்லை.

    கம்யூனிஸ்டுகளுக்கு இருக்கிறது.

    கம்யூனிஸ்டுகள் இந்தப் பிராந்தியக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து உருவாக்க எந்த முயற்சியையும் எடுத்துக்கொள்வதாகத் தெரிவதில்லை.

    தேசப் பிரச்னைகளிலும் மேலோட்டமான கருத்துகளைக் கூட பிராந்தியக் கட்சிகள் உருவாக்க முனைவதில்லை - அவர்களது தொகுதிகளை பாதிக்கும் விஷயங்களில் கூட. உதாரணம் நதிநீர் இணைப்பு, நீர் வளப் பாதுகாப்பு, நகர நிர்வாகம், மேலாண்மை, கட்டுமானம் ...

    ReplyDelete
  8. வணக்கம்
    இன்று ஒரு தொலைக்காட்ச்சி செய்தியைப் பார்த்தேன்.,அதில் வட இந்தியா வரை சென்று வணிகம் செய்துவரும் ஒருவர் தனது சகா ஒருவருடன் அங்கிருந்து திரும்பிவரும் போது இருவருடைய பெட்டியும் திருடு போய் விட்டதையும் அதி இருந்த இலட்ச்சக்கணக்கான பணமும், வசூலான
    காசோலைகளும் இழந்துவிட்டதையும் வேதனையுடன் குறிப்பிடும் போது ( ஒருவருடைய பெட்டி
    காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டு , அதிலிருந்த பணம் கிடைகாமல் காசோலை கள் மட்டும்
    கிடைத்திருக்கிறது., இன்னொருவருடைய காசோலை, பணம் கிடைக்கவில்லை, திருடர்கள் சிக்கவில்லை) " என்னுடைய பதினைந்து வருட உழைப்பு பறி போய் விட்டது " என்கிறார்.( திருட்டு நடந்தது அதிகாலை நாலரை மணிக்கு}

    ஜனநாயகம் வாழ்க்கைக்கு என்ன உத்தரவாதம் தருகிறது? நீங்கள் , அதாவது அத்தனை கோடிமக்களும்
    கடுமையாக!? உழைத்தால் டாடா, அம்பானி போன்ற பெரிய பணக்காரர் ஆகலாம். உங்களோடு இருக்கும்
    மக்கள் பஞ்சப் பராரியாக இருக்கலாம், அவர்களைப் பற்றி உங்களுக்கும்,ஜனநாயகத்திற்கும் கவனிக்க கூட நேரமிருக்காது. ஒரு அருங்காலை நேரத்தில் உங்கள்
    சமூகத்திலே வசிக்கும் கணவான் (களவானி)! ஒருவர் உங்களுக்கு தெரியாமலோ, அல்லது தெரிந்தோ, உங்களை
    தாக்கியோ கைப்பற்றிக் கொண்டோ போனால், பிறகு நீங்கள் மீண்டும் ஏழையாகி, பிறகு கடுமையாக
    உழைத்து மீண்டும் பனக்காரர் ஆகலாம்.

    சோசலிசம் என்ன சொல்லுகிறது, தனது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத்
    தேவைகளை நிரவேற்றுவது - உழைப்பிற்கு, உனவிற்கு, கல்விக்கு, மருத்துவத்திற்கு, உறைவிடம் தருவது என அனைத்தையும் தன்னுடைய கடமையாக, இலட்ச்சியமாக சொல்கிறது .இச்சமூகத்துல் சமத்துவம் பேனப்படும் என்கிறது. ஆனால் சமத்துவம் தேவையில்லை, தனக்கு தனித்துவம் தான் தேவை என வாதிடும் அறிவு ஜீவிகள் எக்காலத்திலும் தன்னை மட்டுமேதான் நினைக்கிறார்கள், சக மனிதனை நினைக்க அவர்களுக்கு மனமில்லை. வறுமையை பகிற்தளிக்கிறதே சோசலிசம் என்று வியாக்கியானம்
    பேசுகிறார்கள். அறிவு ஜீவிகளென நினைக்கும் இவர்கள் ! சீனா தனது மக்களுக்கு, ஐரோப்பிய மக்களுடைய வாழ்க்கை தரத்தை விட வசதிகளை கூடுதலாக்கி காட்டியும் அதனை நம்ப மறுக்கிறார்கள்.

    சந்தை பொருளாதாரத்தில் சீனா , அமெரிக்கா வையும் மிஞ்சி விட்டாலும், தங்களுடைய கனக்கில்
    கோளாரரகி விட்டதால் குழம்பி, ஏதாவது காரணத்தைத் தேடுகிறார்கள். அங்கெல்லாம் தனிநபர்
    சுதந்திரம் இல்லையே என புலம்புகிறார்கள். இதே கனவான் தனது பக்கத்து வீட்டுக்காரன் பஞ்சத்தில்
    இருந்தாலும் இது ஜனநாயகம் என்பார், நீட்டி முழங்கி தனது வருமானத்திற்காக எழுதும் சுதந்திரம்
    குறித்தும் அச்சம் கொல்வார், ஏனெனில் உலகம் இவரிலிருந்துதானே தொடங்குகிறது?

    ReplyDelete
  9. Communists have been universally bad. Mao and Stalin -- the poster boys of communists-- are some of the worst mass murderers in human history. If not for democracic setup in India, communists would have preferred dictatorship here too. I cannot think of a communist state that has promoted freedom and democracy.

    ReplyDelete
  10. >>>>
    உலகமயமாதல், அதில் இந்தியாவின் பங்கு, இது இந்தியர்களைப் பாதிக்குமா இல்லை வளப்படுத்துமா ஆகிய எதைப்பற்றியுமே திமுக, பாமக முதலாக நேஷனல் கான்ஃபரன்ஸ் ஈறாக யாருக்குமே எந்தக் கருத்தும் இல்லை.
    தேசப் பிரச்னைகளிலும் மேலோட்டமான கருத்துகளைக் கூட பிராந்தியக் கட்சிகள் உருவாக்க முனைவதில்லை - அவர்களது தொகுதிகளை பாதிக்கும் விஷயங்களில் கூட. உதாரணம் நதிநீர் இணைப்பு, நீர் வளப் பாதுகாப்பு, நகர நிர்வாகம், மேலாண்மை, கட்டுமானம் ..
    -----------------------------------

    இந்த மாநிலக் கட்சிகள் தத்தம் இடங்களில் செயல்படும் நூற்றுக்கணக்கான அரசுசாரா தன்னார்வக் குழுக்களை சேர்த்து "brain storming" செய்தாலே பல அவசரமான அவசியமான செயல்முறைகள் பற்றி எளிதில் தீர்மானம் எடுக்க முடியும். பல துறை அறிஞர்களையும் இத்தகைய கூட்டங்களில் ஈடுபடுத்தலாம். இதில் ஆளும் கட்சி எதிர்கட்சி என்றெல்லாம் பார்க்காமல் கருத்துகளை முன்னிருத்தி விவாதம் செய்தால் அவற்றை எல்லோருக்கும் அறிய ஊடகங்கள் பரவலாக்கினால் பல மாறுதல்களை நடத்திக் காட்டலாம். ரொம்ப உடோபியன் ஐடியாவாக இருந்தாலும் இயலாததில்லை. இப்போதைய மாநிலக் கட்சிகளுக்கு முன்பிருந்த ஒரு insecurity இருப்பதாகத் தெரியவில்லை. தராளமாக அவை செய்யலாம் என்பதே என் கணிப்பு.
    அருள்

    ReplyDelete