Tuesday, September 27, 2005

ஹச் - பிபிஎல் மொபைல் நிறுவன இணைதல்

சில மாதங்களுக்கு முன்னர் தொலைதொடர்பு வட்டங்களான தமிழகம், சென்னை ஆகியவை மொபைல்களைப் பொறுத்தவரையில் இணைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து முன்னணி நிறுவனங்களான ஏர்டெல், பி.எஸ்.என்.எல், ரிலையன்ஸ் ஆகியவையும் தமிழ்நாட்டில் மட்டும் இருக்கும் ஏர்செல்லும் தமிழகம் முழுவதற்குமான ரோமிங்கை ரத்துசெய்து, மொபைல் -> மொபைல் அழைப்புகளின் விலையையும் குறைத்தன. ஆனால் சென்னையில் மட்டும் இயங்கும் ஹச், சென்னை தவிர்த்த தமிழகத்தில் மட்டும் இயங்கும் பிபிஎல் ஆகியவை சிறிது தடுமாற வேண்டியிருந்தது.

ஜூலை மாதத்தில் எஸ்ஸார் நிறுவனம் பிபிஎல் மொபைல் நிறுவனத்தை விலைக்கு வாங்க முடிவுசெய்தது. அதைத் தொடர்ந்து விரைவிலேயே பிபிஎல் நிறுவனம் ஹச்சிசன் எஸ்ஸார் நிறுவனத்துடன் இணைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படியான செய்திகள் அதிகாரபூர்வமாக நேற்று வெளியாயின.

தமிழகத்தில் பிபிஎல் நிறுவனம் வளர்ச்சி குறைவாகவே இருந்துவந்தது. தேவையான முதலீடு செய்யக்கூடிய சக்தி அவர்களிடத்தில் இல்லை. இனி விரைவில் தமிழகம் முழுவதும் ஹச் சேவை வேகமாகப் பரவத்தொடங்கும்.

கடந்த பத்து தினங்களாக தமிழகத்தில் பல இடங்களுக்குச் சென்று வந்தேன். மொபைல் தொலைபேசிகள் எந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாததாகப் பயன்படுகிறது என்பதைப் பார்க்க முடிந்தது. அதே நேரம் கூட்டம் அதிகமான பேருந்தில் "நீங்க சொல்லுங்க மச்சான், நான் மதியமா வீட்டுக்கு வந்து பேசறேன்" என்று ஆரம்பித்து அடுத்த அரைமணிநேரம் குடும்பக் கதைகளை மிகச் சத்தமாகப் பேசுவதும் அதிகரித்துள்ளது. விரைவில் பிறருக்குத் தொல்லை கொடுக்காமல் பேச நம் மக்கள் கற்றுக்கொள்வார்களாக!

No comments:

Post a Comment