Saturday, November 26, 2005

தமிழக வெள்ளம், பொருள்/உயிர்ச்சேதம்

கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை, அதன் தொடர்ச்சியாக வெள்ளம், அதன் தொடர்ச்சியாக பொருள், உடைமைகள் நாசம், பயிர்கள் நாசம் என்று தமிழகம் தவித்துக்கொண்டிருக்கிறது.

இம்முறை சென்னையில் அதிக மழை இல்லை. ஆனால் தென் தமிழகத்திலும் காவிரிப் படுகையிலும் நிறைய மழை. மீண்டும் கொள்ளிடம் உடைத்துக்கொள்ளுமோ என்ற பயம் - கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறை. பல சிற்றாறுகளில் காட்டு வெள்ளம். நேற்று நடந்த இரண்டு பஸ் அசம்பாவிதங்களில் 150 பேருக்கு மேல் பலி என்பது வருத்தத்தைத் தருகிறது. இந்தக் காட்டு மழையில், சிறு வாய்க்கால்கள் உடையலாம் என்ற நிலையில் அந்த பஸ்கள் அந்தப் பாதை வழியாகச் சென்றிருக்க வேண்டுமா?

இரண்டு இடங்களிலுமே ஓட்டுனர்களின் கவனக்குறைவால், எச்சரிக்கைகளையும் மீறி வண்டியை எடுத்துச் சென்றதால்தான் இந்தச் சாவுகள் நிகழ்ந்திருக்கின்றன. இதில் ஒன்று தனியார் வண்டி, மற்றொன்று அரசுப் பேருந்து.

இங்கு சன் நியூஸ் தொலைக்காட்சியின் கவரேஜைப் பற்றிக் குறிப்பிட்டே ஆக வேண்டும். மனுஷ்ய புத்திரன் தன் வலைப்பதிவில், சென்னை மழையில் சன் டிவியின் உளவியல் வன்முறை என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதியிருந்தார்.

இந்த உளவியல் வன்முறை தொடர்ந்து வருகிறது. மழையின் தீவிரம் அதிகம்தான், மழையால் பாதிப்புகளும் அதிகம்தான். ஆனால் சன் நியூஸ் எல்லாவற்றையும் இருநூறு மடங்கு உயர்த்திச் சொல்லி, அடுத்து உலகமே அழிந்துவிடப் போகிறதோ, பிரளயம் வந்துவிட்டதோ என்ற மாதிரியெல்லாம் செய்தி படிக்கிறார்கள். அத்துடன் தமிழக அரசு உஷாராக இருந்தால் இந்த அழிவையெல்லாம் தடுத்திருக்கலாம் என்பது போலச் செய்திகள். இதைவிட அநியாயம் வேறொன்றும் இருக்க முடியாது. என்ன செய்து மேலிருந்து கொட்டும் மழையைத் தடுப்பது? இந்த வரலாறு காணாத மழையில் மக்கள் அனைவருக்கும் பாதிப்பு. எல்லாவற்றுக்கும் அரசை மட்டுமே கைகாட்டுவது நியாயமில்லை.

அரசு நிவாரணம் என்று சென்னையில் நடக்கும் கூத்தில் பொதுமக்களை மட்டும்தான் குற்றம் சாட்டமுடியும். சென்னை மழையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுக்கு ரூ. 2,000, 10 கிலோ அரிசி, 1 லிட்டர் மண்ணெண்ணை என்று அரசு கொடுக்க உத்தரவிட்டது. இதை வாங்கச் சென்றபோதுதான் வியாசர்பாடியில் கூட்ட நெருக்கடியில் சிலர் இறந்தனர். வெள்ளமே இல்லாத பகுதிகளிலும் (எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலும்) பலரும் போராடி தங்களுக்கும் வெள்ள நிவாரணம் வேண்டும் என்று சண்டையிடுகின்றனர். இதற்காக இரண்டு நாள்களுக்கு முன்னர் பலர் கூட்டமாகச் சென்று ராதாகிருஷ்ணன் சாலையில் சோழா ஹோட்டல் முன் அமர்ந்து தர்ணா. அதைத் தொடர்ந்து போயஸ் தோட்டத்துக்குள் புகுந்து ரகளை செய்ய முயற்சி செய்ய, அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டிருக்கின்றனர். பின் காவல்துறை அவர்களிடம் நயமாகக் கெஞ்சி அடையாறு எங்கேயோ சென்று அங்குள்ள அலுவலகத்தில் பதிவு செய்யவேண்டும் என்று சொல்ல, மக்கள் அனைவரும் அடையாறு சென்றிருக்கின்றனர்.

அடையாறில் உள்ள அலுவலகத்தில் அனைவரையும் ஒரு விண்ணப்பப் படிவத்தை நிரப்பச் சொல்ல, எழுத்தறிவில்லா மக்கள் (ஆமாம்!) அதைச் செய்யத் தெரியாமல் வாசலில் இதற்காகவே அமர்ந்திருக்கும் ஒருவரிடம் ஆளுக்கு ரூ. 10 கொடுத்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பியுள்ளனர். ஆனால் படிவங்களைப் பெற அதிகாரிகள் நேரடியாக வருவார்களாம். அதனால் கூட்டம் மீண்டும் வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.

அவர்களை இடைமறித்த ஓர் இடைத்தரகர் ஆளுக்குக் கிடைக்கும் ரூ. 2,000 பணத்தில் ரூ. 500ஐ வெட்டினால் பணம் கிடைக்கத் தான் ஏற்பாடு செய்வதாகச் சொல்லியுள்ளார்.

இப்படி ஒவ்வோர் ஊரிலும் நிவாரணப் பணம் தேவையற்றவர்களுக்குப் போய்ச் சேருகிறது. அது தமக்கு வந்தே ஆகவேண்டும் என்பது போல மக்களும் வெட்கமில்லாமல் போராட முனைகிறார்கள். அந்தப் பணத்தில் ஒரு பங்கு இடைத்தரகர்களுக்குப் போய்ச்சேருகிறது.

1 comment:

  1. சென்னை மழையில் சன் டிவியின் உளவியல் வன்முறை குறித்த கவலை மிகவும் நியாயமானதே. காரணம் பீதியடையும் மக்களை சாந்தப் படத்துவதே ஊடகத்துறையின் தொழில் தர்மம் ஆகும்.

    ஆனால் நீதியும் தர்மம் தேர்தலில் வாக்களிக்காது என்பதும் உண்மையே.

    ReplyDelete