சென்ற வெள்ளி, சனி ஹைதராபாத் புத்தகக் கண்காட்சியைப் பார்க்கச் சென்றிருந்தேன். இந்த நேரத்தில் மதியம் கடுமையான வெய்யிலும் இரவு நேரங்களில் குளிருமாக உள்ளது. இதனால் மதியம் 2.30க்குத் தொடங்கும் புத்தகக் கண்காட்சிக்குக் கூட்டம் குறைவாகவே வருகிறது. வெப்பம் என்றால் கடுமையான வெப்பம். சென்னை போன்று வியர்வை வருவதில்லையே தவிர உதடுகளும் தோலும் வறண்டுபோய் எரியத் தொடங்கும் அளவுக்கு வெப்பம். முப்பது கடைகளைத் தாண்டுவதற்குள் தலை வலிக்க ஆரம்பித்துவிட்டது!
இது இருபதாவது வருடமாக நடக்கும் கண்காட்சியாம். சென்ற வருடம் கிட்டத்தட்ட 1 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனதாகவும் இந்த வருடம் 1.5 கோடிக்கு வியாபாரம் ஆகும் என்று எதிர்பார்ப்புகள் இருப்பதாகவும் சில செய்திகள் தெரிவித்தன. (ஒப்பீட்டுக்கு, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 5-6 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆவதாகக் கணிப்புகள் கூறுகின்றன.)
கிட்டத்தட்ட 200 கடைகள். நிசாம் கல்லூரி மைதானத்தில் தட்டிகள் வைத்துக் கட்டி எழுப்பியிருந்த கடைகள். பெங்களூர் அளவுக்கு அழகாக இல்லை. சொல்லப்போனால் சென்னையை விட மோசமாகத்தான் இருந்தது. 200 கடைகளில் அதிகபட்சம் 25 தெலுங்கு பதிப்பாளர்கள் இருந்தால் அதிகமே. ஓரிரண்டு உருது பதிப்பகங்களும் சில ஹிந்திப் புத்தக விற்பனையாளர்களும் இருந்தனர்.
தமிழுடன் ஒப்பிடும்போது தெலுங்குப் புத்தகங்கள் பரிணாம வளர்ச்சியில் மிகுந்த பின்னணியில் உள்ளன. இலக்கியப் புத்தகங்கள், பிற அ-புனைவு/அறிவுசார் நூல்கள் என அனைத்திலும் குறைவுபட்டதாகவே இருந்தன. இரண்டே இரண்டு பதிப்பகங்கள்தான் நல்ல முறையில் நூல்களை அச்சிட்டு, கட்டு கட்டி வெளியிட்டிருந்தன. (பீகாக், ப்ரத்யுஷா). பிற பதிப்பகங்கள் அனைத்துமே பளபளா அட்டை, 1940-1950 காலத்தைய கோட்டோவியங்கள் அலங்கரிக்கும் அட்டைகள்; மிக மெலிதான, விஷய ஞானம் குறைவான உள்ளடக்கம் என்ற நிலைதான்.
இந்திய மொழிகள் போகவேண்டிய தூரம் மிக அதிகம்.
Tuesday, December 13, 2005
Subscribe to:
Post Comments (Atom)
ஹைதராபாதில் தவறான இடத்திற்குச் சென்று விட்டீர்கள். இங்கு திரையரங்குகளும், உணவகங்களும்தான் பிரசித்தம் :)
ReplyDelete