Friday, January 06, 2006

கோழிக்கோடில் ஒரு மாலை நேரம்

(கிழக்கு புத்தகங்கள் - 3: ஆல்ஃபா)

மலையாள எழுத்தாளர்கள் இருவரது புத்தகங்கள் பிற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாவதைக் கொண்டாடும்விதமாக 5 ஜனவரி, வியாழன் அன்று ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டுவிட்டு சென்னை திரும்பும் வழியில் இப்பொழுது பெங்களூர் விமான நிலையத்திலிருந்து இந்தப் பதிவை எழுதுகிறேன்.

T.D.ராமகிருஷ்ணன் எழுதிய நாவலான 'ஆல்ஃபா' தமிழில் கிழக்கு பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது. K.P.ராமனுண்ணி எழுதிய நாவலான 'சூஃபி பரஞ்ச கதா' ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சாஹித்ய அகாதெமியால் வெளியிடப்பட்டுள்ளது. (அடுத்து இதன் தமிழாக்கம் கிழக்கு மூலம் வெளியாகும்.)

மலையாள எழுத்துலக ஜாம்பவான் M.T.வாசுதேவன் நாயர் தலைமை தாங்க கூட்டம் காலிகட் பிரெஸ் கிளப்பில் நடந்தது. தொலைக்காட்சி சானல்கள், செய்தித்தாள் நிருபர்கள் குவிந்திருந்தனர். (ஆனால் எம்.டி பேசி முடித்ததும் பலர் எழுந்து சென்றுவிட்டனர்.)

இதுவரையில் பிறமொழிகளிலிருந்து மலையாளத்துக்கு கிட்டத்தட்ட 5000-6000 நூல்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளனவாம். ஆனால் மலையாளத்திலிருந்து பிறமொழிகளுக்குச் சென்றுள்ளவை சுமார் 2000 நூல்கள்தானாம். (தமிழுக்கு என்ன கணக்கு உள்ளது என்றாவது நமக்குத் தெரியுமா?) அதனால் பிறமொழிகளுக்கு மலையாளம் கொண்டுசெல்லப்படுவதை வரவேற்கவேண்டும், அதற்கான உதவிகளைச் செய்யவேண்டும் என்று எம்.டி..வாசுதேவன் நாயர் பேசினார்.

கிழக்கு இப்பொழுது ஈடுபட்டிருக்கும் ஒரு திட்டம் பிறமொழிகளிலிருந்து முக்கியமான நூல்களை தமிழுக்குக் கொண்டுவருவது. இதை கன்னாபின்னாவென்று செய்யாமல் ஒருமுகமாக, கவனமாகச் செய்ய விரும்புகிறோம். அதன்படி முதலில் நாங்கள் எடுத்துக்கொண்டிருப்பது மலையாளம். ஒவ்வோர் ஆண்டும் மலையாளத்தில் வெளியான சிறந்த 25 நூல்களை எடுத்துக்கொண்டு அவற்றை ஓர் ஆண்டுக்கு உள்ளாகவே தமிழுக்குக் கொண்டுவருவது. இந்தத் திட்டத்தை முன்னின்று நடத்தித் தருபவர் மலையாளம்-தமிழ் மொழிமாற்றத்தில் முக்கிய இடத்தைப் பெறுபவரான குறிஞ்சி வேலன். இவர் இதுவரை 32 நூல்களை மலையாளத்திலிருந்து தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார். இவருக்கு உறுதுணையாக ஆறு மொழிமாற்றுக் கலைஞர்களைக் கண்டறிந்துள்ளோம். இவர்கள் அனைவரும் இந்த மொழிமாற்றத் திட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவார்கள்.

25 சிறந்த நூல்கள்.... இது எந்த வகையில் சாத்தியம்? சில சிறந்த நூல்கள் எஙகள் கண்களில் படாமல் போகலாம். சில பட்டும், அதற்கான மொழிமாற்றும் உரிமை வேறு நிறுவனங்களுக்கு, தனியார்களுக்குப் போகலாம். பல்வேறு காரணங்களால் சில நூல்கள் தமிழாக்கம் செய்யப்படாமல் போகலாம். ஆனால் நாங்கள் கொண்டுவரும் நூல்கள் சிறப்பானவையாக, மலையாளத்தில் நன்கு பேசப்பட்டனவாக இருக்கும் என்று நம்புகிறோம்.

ஆல்ஃபா இந்த வரிசையில் முதல் நூல். முதல் வருடத்தில் மொழிமாற்றப்படும் சில நூல்கள் கடந்த சில வருடங்களில் எழுதப்பட்டவை. ஆனால் அடுத்த இரண்டு மூன்று வருடங்களுக்குள்ளாக புதிய நூல்களை மட்டுமே தேர்வுசெய்யத் தொடங்குவோம். 25 நூல்கள் என்பது அதிகமாகி 50 அல்லது அதற்கும் மேல் ஆகலாம்.

மலையாளம்->தமிழ் மொழிமாற்றத்தில் ஈடுபடவிரும்புபவர்கள், இரண்டு மொழிகளிலும் நல்ல திறமை உள்ளவர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

3 comments:

  1. நல்லதொரு முயற்சி. வாழ்த்துக்கள் பத்ரி. கூடிய சீக்கிரமே 50 என்பது 100 ஆகட்டும்.

    ReplyDelete
  2. Thakazhi's 'yeenippadigal' is great one. really we need more.

    ReplyDelete
  3. கோழிக்கோடில் என்பது கோழிக்கோட்டில் என்று இருக்கவேண்டும்.

    ReplyDelete