Thursday, January 12, 2006

நாட்டு நடப்பு - தொலைப்பேசியில் ஒட்டுக்கேட்டல்

(முன்குறிப்பு: நேற்று வாங்கிய புத்தகத்தில் - பிழை இல்லாமல் எழுதுவோம், செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார், மாணவர் பதிப்பகம், 2004, பக்கங்கள் 96, கிரவுன், விலை ரூ. 40 - 'தொலைபேசி' என்பது தவறு, 'தொலைப்பேசி' என்பதுதான் சரி என்ற விளக்கம் இருந்தது. ஏன் என்று காரணம் புரிந்ததால் இனி தொலைப்பேசி, தொலைத்தொடர்பு என்ற சொற்களையே தொடர்ந்து பயன்படுத்துவேன். இந்தப் புத்தகம் தமிழில் வலைப்பதிவு எழுதுபவர்களுக்கு அத்தியாவசியமானது என்று சொல்வேன். பல தவறுகளைத் தவிர்த்து நல்ல தமிழில் எழுத ரூ. 40 முதலீடுதான்!)

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த அமர் சிங் - உத்தரப் பிரதேச மாநில முதல்வர் முலாயம் சிங் யாதவின் வலதுகை - தனது செல்பேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது என்று புகார் கூறினார். அதையடுத்து தில்லி காவல்துறை ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தின் முதலாளியையும் ரிலையன்ஸ் இன்ஃபோகாம் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரையும் கைது செய்தது. அமர் சிங் நாடு தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு ஜெயலலிதா, புத்ததேவ் பட்டாசார்யா, நிதீஷ் குமார் ஆகியோரின் ஆதரவைக் கேட்டார். தன் தொலைப்பேசியை ஒட்டுக்கேட்க வைத்தது சோனியா காந்தி என்றார். பின் மன்மோகன் சிங் அலுவலகத்துக்கும் இதில் தொடர்பு என்றார். பின்னர் மன்மோகன் சிங்கிடம் மன்னிப்பு கேட்டார். இப்பொழுதைக்கு காங்கிரஸ் கட்சி + சோனியா காந்தி காரணம் என்று சொல்லி, உண்மை வெளியில் தெரிய வேண்டும் என்பதற்காக உச்ச நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

ஜெயலலிதாவும் இதுதான் சாக்கு என்று தன் தொலைப்பேசியும் மத்திய அரசால் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஒரு குண்டு போட்டார்.

மத்திய சட்ட அமைச்சர் HR பாரத்வாஜ், இப்பொழுது பெரும்பாலான தொலைப்பேசி இணைப்புகள் தனியார் நிறுவனத்திடமிருந்து வருவதால், பிரச்னை அங்குதான் என்றும், ஒட்டுக்கேட்பதைத் தடுக்க புதிய சட்டம் இயற்றவேண்டும் என்றும் சொன்னார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சர் ஷிவராஜ் பாடீல் தனியாக புதியதொரு சட்டம் தேவையில்லை என்றும் இப்பொழுது இருக்கும் சட்டமே போதும் என்றும் குறிப்பிட்டார்.

காவல்துறை தமக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவ்வப்போது பலருடைய தொலைப்பேசிகளையும் ஒட்டுக்கேட்கின்றனர் என்பது நமக்குத் தெரிந்ததே. இது பல வருடங்களாக நடந்துவருகிறது. கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் நேரத்தில் பல தொலைப்பேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டன. தொடர்ச்சியாக மும்பை "அண்டர்வேர்ல்ட்" ஆசாமிகளின் தொலைப்பேசிகள் (எண்கள் தெரியவரும்போது) ஒட்டுக்கேட்கப்படுகின்றன.

ஆனால் ஒரு நீதிபதியை ஏற்றுக்கொள்ளச் செய்தால்தான் ஒட்டுக்கேட்கும் அனுமதி காவல்துறைக்குத் தரப்படும் என்று நினைக்கிறேன். அமர் சிங் தொலைப்பேசியை ஒட்டுக்கேட்க இதுபோன்ற ஓர் உத்தரவு போலியாகத் தயாரிக்கப்பட்டு தொலைப்பேசி நிறுவனத்தில் அதிகாரி ஒருவரை உள்கையாக வைத்து நிகழ்ந்திருக்கிறது என்று தில்லி போலீசார் கூறுகின்றனர்.

இதில் உண்மை வரும்வரை காத்திருப்போம்.

ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை மனத்தில் வைத்திருக்க வேண்டும். GSM செல்பேசிகளை ஒட்டுக்கேட்பது மிக எளிது. இதற்கான கருவிகள் சில நாடுகளில் நேரடிச் சந்தையிலும் பல நாடுகளில் கள்ளச் சந்தையிலும் கிடைக்கின்றன. இந்தியாவில் Privacy சம்பந்தப்பட்ட சட்டங்கள் ஏதும் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. செல்பேசிகளை ஒட்டுக்கேட்கும் ஒருவரை சட்டபூர்வமாகத் தண்டிக்க வழி இருக்கிறதா என்று தெரியவில்லை.

அமர் சிங் பிரச்னையை முன்வைத்து மேற்படி கேள்விகளுக்கெல்லாம் சரியான விடை கிடைத்தால் நன்றாக இருக்கும்.

2 comments:

  1. ஏன் என்று காரணம் புரிந்ததால்
    >>
    எங்களுக்கும் கொஞ்சம் சொல்றது :)

    ReplyDelete
  2. அங்குதான் -> அங்குத்தான்.

    ReplyDelete