Thursday, January 12, 2006

நாட்டு நடப்பு - எம்.பி பதவி நீக்கம்

கோப்ராபோஸ்ட்.காம் / ஆஜ்தக் தொலைக்காட்சி மூலம் 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (10 மக்களவை, 1 மாநிலங்களவை) கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியது விடியோவாகக் காண்பிக்கப்பட்டது. அதையடுத்து கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டு இந்த உறுப்பினர்கள் செய்தது மாபெரும் குற்றம் என்று முடிவுசெய்யப்பட்டு அவர்கள் அனைவரும் உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கப்பட்டனர்.

இந்திய நாடாளுமன்ற சரித்திரத்தில் இந்த முறையில் உறுப்பினர்கள் பதவி இழப்பது இதுவே முதல்முறை. இதற்கு முன்னர் கட்சித்தாவல் தடை சட்டத்தின் காரணமாக, தேர்தல் நேரத்தில் நடந்த முறைகேடுகள் என்று நீதிமன்றங்கள் தீர்மானித்ததன் விளைவாக என்று உறுப்பினர்கள் பதவி இழந்திருக்கிறார்கள். கட்சித்தாவல் தடை சட்டத்தால் பதவி இழந்தவர்கள்கூட நீதிமன்றம் சென்றுள்ளார்கள்.

ஆக நீதிமன்றம் நாடாளுமன்ற விவகாரங்களில் மூக்கை நுழைக்கவேண்டியுள்ளது. அவ்வாறு செய்யும்போது அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தின் காவலர்களாகவும், ஏற்கெனவே நாடாளுமன்றம் ஏற்படுத்தியுள்ள சட்டங்களைக் காப்பவர்களாகவும்தான் செயல்படுகிறார்கள்.

தற்போதைய பதவி விலக்கலில் பாதிக்கப்பட்ட சில எம்.பிக்கள் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் லோக்சபா, ராஜ்யசபா காரியாலயங்களுக்கு நோடீஸ் அனுப்பியது. அந்த நோடீஸை அலட்சியம் செய்யப்போவதாக நாடாளுமன்ற அவைத்தலைவர் சோம்நாத் சாட்டர்ஜீ குறிப்பிட்டுள்ளார். அதாவது சம்பந்தப்பட்ட விஷயத்தில் மூக்கை நுழைக்க தில்லி உயர் நீதிமன்றத்துக்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்பது அவரது கருத்து.

அந்தக் கருத்தை நான் ஏற்கவில்லை. ஏற்கெனவே சொன்னதுபோல கட்சித்தாவல் தடைச்சட்டத்தால் பதவி இழந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிமன்றங்க்களுக்குச் சென்றுள்ளார்கள். தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக நீதிமன்றங்களே ஒருவர் Representation of People's Act படி பதவி இழக்கக்கூடியவரா இல்லையா என்று தீர்மானிக்கிறது. ஆக நீதிமன்றங்கள் லெஜிஸ்லேச்சர் தொடர்பான விவகாரங்களில் தேவைப்பட்டால் ஈடுபடத்தான் செய்கின்றன. அவைத்தலைவர் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஏற்படுத்தும் குழப்பங்கள் மீதாகவும் வழக்குகள் நீதிமன்றங்களில் நடக்கின்றன. (கவனிக்க்க: கோவா சட்டமன்றம்)

ஆக "நான் நீதிமன்றங்களுக்க்குக் கட்டுப்பட்டவன் அல்லன்" என்பதுபோல சாட்டர்ஜி பேசுவது சரியல்ல. இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை இவர் ஏற்பாடு செய்திருக்கிறார். அதற்குபதில் பேசாமல் நீதிமன்றம் கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் எழுதி அனுப்பி, நாடாளுமன்றம் செய்தது ஏன் சரி என்று விளக்கலாம்.

சபாநாயகரும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களும் சேர்ந்து வாக்கெடுப்பின் மூலமாக வேறு ஓர் உறுப்பினரை பதவி விலகச் செய்யக்கூடும் என்பது அதிர்ச்சியான ஒரு விஷயம். காரணம் எதுவாக இருந்தாலும் சரி... நாளை பெரும்பான்மை உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து அத்வானியை (ஏதோ காரணத்துக்காக) பதவி விலக்கலாம். எனவே நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு எம்மாதிரியான சமயங்களில் இந்தப் "பதவி விலக்கல்" அங்கீகரிக்கக் கூடியது என்று விளக்குவது இப்பொழுது தேவையாக இருக்கிறது.

2 comments:

  1. இது ரொம்ப அதிகம். எம்பிக்கள், அஞ்சாயிரத்துக்கும் பத்தாயிரத்துக்கும் விலை போனார்கள் என்று மீடியாவில் நாறடித்ததும், சோம்நாத் சாட்டர்ஜி, இது பற்றி பாராளுமன்றத்திலேயே விசாரணை செய்ததுமே, போதுமானது. பிக்பாக்கெட் அடிக்கிறவனுக்கும், கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கிறவனுக்கும் கிடைக்கும் மரியாதை வெவ்வேறானது. இந்த சமூக நீதி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொருந்தும் போலிருக்கிறது.

    ReplyDelete
  2. பிரகாஷ்: இந்தத் தண்டனை அதிகம், குறைவு என்று நான் சொல்ல் விரும்பவில்லை. ஆனால் தண்டனை கிடைத்ததும் அவர்களுக்கு மேல்முறையீடு செய்ய அனுமதி வேண்டும். அது நீதிமன்றமாக இருப்பதில் தவறில்லை.

    இவர்கள் அனைவரையும் பதவியிலிருந்து விலக்கிவைப்பதில் எனக்கு வருத்தம் ஒன்றும் இல்லை. ஆனால் இப்பொழுது செயல்படுத்தப்பட்ட முறைதான் வியப்புக்கு இடமளிக்கிறது.

    எந்தத் தவறுக்கு எதுமாதிரியான தண்டனை என்பது codify செய்யப்படவேண்டும். அதற்கு மேல்முறையீட்டு வசதிகள் இருக்க வேண்டும்.

    ஏன் நட்வர் சிங்கை "பதவி விலக்க" எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளப்படவில்லை? ஊழல் என்றால் நாடாளுமன்றம் சம்பந்தப்பட்ட ஊழல்தான் முக்கியமா? அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈடுபட்டிருக்கும் அனைத்து ஊழல்களும் கவனத்தில் கொள்ளப்படவேண்டுமா?

    சபாநாயகரும் சட்ட அமைச்சரும் இதைக் கலந்தாலோசித்து ஒரு நடைமுறைத் திட்டத்தைக் கொண்டுவருவது நல்லது.

    ReplyDelete