Friday, March 24, 2006

ஹிந்துத் திருமணச் சட்டத்தை திருத்த வேண்டும்

இரண்டு நாள்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் ஹிந்துத் திருமணச் சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டுவர மத்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஒரு திருமணம் ஒட்டவைக்க முடியாத அளவுக்கு உடைந்துவிட்டால் விவாகரத்துக்கு வழிவகை செய்யவேண்டும் என்பதுதான் அது. இப்பொழுது இருக்கும் ஹிந்துத் திருமணச் சட்டம் (1955)-ன்படி, கீழ்க்கண்ட காரணங்களுக்காக விவாகரத்து கோரலாம்.

கணவன், மனைவி இருவருள் ஒருவர்:

1. கள்ள உறவு வைத்திருந்தால் (adultery)
2. மற்றவரைத் துன்புறுத்தினால் (cruelty)
3. விட்டுவிட்டு ஓடிவிட்டால் (குறைந்தது இரண்டு வருடமாவது ஆகியிருக்கவேண்டும்!)
4. ஹிந்து மதத்தைவிட்டு மாறினால்
5. மனம் பேதலிக்கப்பட்டால்
6. தொழுநோயால் பீடிக்கப்பட்டால்
7. அடுத்தவரைப் பற்றும் பால்வினை நோயால் பீடிக்கப்பட்டால்
8. துறவு பூண்டால்
9. இறந்துவிட்டார் என்று கருதப்பட்டால்

பாதிக்கப்பட்ட மற்றவர் விவாகரத்து கோரலாம். மேலும்,

(10) நீதிமன்றத்தில் மனு செய்து ஒருவரை ஒருவர் பிரிந்து வாழும் உரிமையை (judicial separation) பெற்றபின் ஒரு வருடமோ, அதற்கு மேலோ ஆகியும் இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால், விவாகரத்து கோரலாம்.

(11) இருவரும் தானாகவே பிரிந்து இருக்கும்போது ஒருவர் நீதிமன்றத்தில் மனு செய்து சேர்ந்து வாழ விருப்பம் தெரிவிக்கலாம். அதைத் தொடர்ந்து நீதிமன்றம் அவர்கள் இருவரையும் சேர்ந்து வாழப் பணிக்கும்போது (Restitution of Conjugal Rights) அதை மறுத்து, சேரவில்லையென்றால் பாதிக்கப்பட்டவர் விவாகரத்து செய்யக் கோரலாம்.

இந்தக் காரணங்களுக்கு மேலாக, இப்பொழுது உச்சநீதிமன்றம் இன்னொரு புதிய காரணத்தையும் சேர்க்கலாம் என்று அரசைக் கேட்டுக்கொண்டுள்ளது. அதாவது கணவன், மனைவி இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் - இருவரும் ஒருமனதாக அதை ஒப்புக்கொண்டால் - அதாவது திருமணத்தை இனியும் ஒட்டவைக்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டால் அந்த விவாகத்தை ரத்து செய்யலாம் என்பதே அது.

உண்மை என்னவென்றால் மேலை நாடுகள் பலவற்றிலும் இந்த வகை விவாகரத்துதான் அதிகம். இருவரும் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்றால் அமெரிக்காவில் பல மாநிலங்களில் ஒரு வாரத்துக்குள்ளாகப் பிரிய முடியும்.

ஆனால் இதுநாள்வரையில் இந்த வசதி இந்தியாவில் இல்லை. இனிச் சட்டம் இயற்றினால்தான் இந்த வசதி ஹிந்துக்களுக்குக் கிடைக்கும். முஸ்லிம் திருமணங்களில் இதை எளிதாகச் செய்யமுடியும். (அதாவது திருமணம் நீடிக்கவேண்டாம் என்று இரு தரப்பினரும் முடிவுசெய்துவிட்டால்...)

====

இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவருவதைப் பற்றி All-India Democratic Women's Association (AIDWA) கவலை தெரிவித்துள்ளது. இந்தத் திருத்தம் பெண்களுக்கும் நன்மை செய்யக்கூடியதே என்றாலும் ஆண்கள் இந்தச் சட்டத்தைத் தங்களுக்கு ஆதரவாகச் செயல்படுத்துவார்கள் என்று AIDWA நினைக்கிறது. அதற்கென அவர்கள் சொல்லும் காரணமும் சரியானதே. AIDWA தலைவி சுபாஷினி அலி சொல்கிறார்:
Government should not take such a step in the absence of legislation on women's rights to marital property, child support and adequate maintenance. Given the status of deserted women and children, a law to get divorce on this ground would worsen their position. Indian women do not have the right to any of the assets in the matrimonial home even after years of marriage.
ஏற்றுக்கொள்ளவேண்டிய கருத்து. முதலில் விவாகரத்தின்போது சொத்துக்களைப் பிரிப்பது, குழந்தைகளுக்கான செலவை ஏற்பது, ஆணோ/பெண்ணோ - அவர்களுக்கான ஜீவனாம்சத்தைச் சரியாகக் கணக்கிடுவது, அதைக் கட்டாயமாகச் செலுத்த வகை செய்வது ஆகியவற்றுக்கான சட்டங்களை இயற்றியபின், அத்துடனே உச்சநீதிமன்றத்தின் யோசனையையும் நிறைவேற்றலாம்.


====

நான் சென்ற வாரம் எழுதியிருந்த பிரிட்டனில் ஷரியா - சரியா? பதிவுக்கு வழக்கறிஞர் பிரபு ராஜதுரை எதிர்வினை செய்திருந்தார்.

ஏற்கெனவே நம் நாட்டில் பொது சிவில் சட்டங்கள் உள்ளன, யார் விரும்பினாலும் அதை ஏற்றுக்கொள்ளலாம் என்கிறார் பிரபு. ஆனால் அதே சமயம் யார் விரும்பினாலும் அவரவர் மதத்துக்கென இருக்கும் தனிச்சட்டத்தையும் பின்பற்றலாம். அதுதான் என்னைப் பொருத்தவரை பிரச்னையே. ஹிந்துச் சட்டங்கள்தான் உயர்வு, முஸ்லிம் சட்டங்கள் தாழ்வு என்று நான் சொல்லவில்லை. இரண்டிலும் பல ஏற்கத் தகாத விஷயங்கள் உள்ளன. இரண்டிலும் பல நல்ல வழிகள் இருக்கின்றன. இவற்றைக் களைந்து ஒரே சட்டமாக, அனைவருக்கும் பொதுவாக இருக்கச் செய்வதில் யாருக்கு நஷ்டம் என்று பார்க்கவேண்டும்.

இது ஒருமைப்பாட்டு விஷயம் அல்ல. சட்டங்கள் நாம் வாழும் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும். தனித்தனியாக ஒவ்வொரு மதத்தினருக்கும் சட்டங்கள் என்றால் இந்தச் சட்டங்களில் ஒரேமாதிரியான திருத்தங்கள் ஏற்படுவதில்லை. சில மதத்துக்கான - முக்கியமாக சிறுபான்மை மதங்களுக்கான - சட்டங்கள் பின்தங்கிவிடுகின்றன. அதில் மாற்றங்களை ஏற்படுத்த அந்தந்த மதத்தின் முக்கியமான தலைவர்கள் விரும்புவதில்லை. Status quoதான் அவர்களுக்கு வசதி. எதிர்த்து நின்று போராட அந்தந்த மதங்களில் உள்ள பாதிக்கப்படுபவர்களுக்கு (பொதுவாக பெண்களுக்கு) போதிய சக்தி இல்லை.

ஆனால் பொதுவாக ஒரு சீரான சட்டம் இருந்தால் எதிர்ப்பு ஒருமுகப்படுத்தப்படும், மாற்றங்கள் தொடர்ந்து நிகழும். ஹிந்துச் சட்டங்களில் எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, முஸ்லிம் சட்டங்களில் எவ்வளவு மாற்றங்கள் இதுவரையில் ஏற்பட்டுள்ளன என்பதைக் கவனித்துப் பார்த்தாலே இது தெரியவரும்.

மதக் கடமையையும் சட்டங்களையும் குழப்பிக்கொள்ளவேண்டாம். ஒவ்வொருவரும் அவரவர்க்கு விருப்பமான முறையில் திருமணம் செய்துகொள்ளலாம். (சர்ச்சிலோ, கோயிலிலோ, மசூதியிலோ, குருத்வாராவிலோ...) ஆனால் அந்தத் திருமணங்களும், தொடரும் விவாகரத்தும், சொத்துரிமையும் ஒரே சட்டத்தைப் பின்பற்றினால் அதன்மூலம் மக்களுக்கு நன்மை பிறக்கும் என்பது என் கருத்து. எனவே திருமணம் வெவ்வேறு முறைகளில் செய்யப்படக்கூடாது என்று நான் சொல்லவில்லை. திருமணத்தைப் பதிவு செய்வது ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

பிரபுவின் தீர்ப்பு: "தற்பொழுது நிலுவையிலுள்ள சட்ட முறைகளிலேயே அவ்வப்போது தேவையான மாற்றத்தினை ஏற்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனமான காரியமாக இருக்கும்."

இது சரியாகப் படவில்லை எனக்கு. ஏகப்பட்ட சட்டத் திருத்தங்கள் தேவைப்படும். Uniformity இருக்காது. ஒவ்வொரு சமுதாய மக்களுக்கும் அவர்களுடைய உரிமைகள் என்ன என்பதைத் தனியாக விளக்கவேண்டும். ஒவ்வொரு சட்டத்திலும் திருத்தம் கொண்டுவர ஒவ்வொரு சமுதாயத்திலும் பெரும்பான்மை ஒப்புதல் பெறவேண்டும். சில நேரங்களில் இது சாத்தியமில்லாமல் போகும்போது ஒரு குறிப்பிட்ட சமுதாயம் மட்டும் பின்தங்கிவிட நேரிடும்.

"அதைப்பற்றிக் கவலைப்பட நீ யார்? அவரவர்கள் தங்களைப் பார்த்துக் கொள்வார்கள்" என்று சிலர் சொல்லலாம். மக்களின் தனிப்பட்ட வாழ்க்கைமுறையில் தலையிட பிறருக்கு உரிமை வேண்டியதில்லை. ஆனால் சமுதாயம், சட்டங்கள் என்று வரும்போது அனைவரும் ஒரேபோல முன்னேறிட உதவும் சட்டங்களை உருவாக்க பொதுக்கருத்து என்று ஒன்று வேண்டும். இதையெல்லாம் ஒவ்வொரு சமூகமும் தனக்குத் தானே முடிவு செய்துகொள்ளவேண்டும், பிறர் தலையிடக் கூடாது என்று சொல்வது சரியல்ல என்றே நினைக்கிறேன்.

ஹிந்து சமுதாயத்தில் தீண்டாமை கூடாது; இந்தியாவிலேயே தீண்டாமை கூடாது என்று சொல்ல முஸ்லிம்களுக்கும் பிற மதத்தினருக்கும் முழு உரிமை உண்டு. அதற்காகப் போராட அவர்களுக்கு உரிமை உண்டு. அதேபோல பிற மதச் சட்டங்களிலோ, பிற சமுதாயங்களிலோ உள்ள பிரச்னைகளைப் பற்றிப் பேச, போராட மற்றவர்களுக்கும் உரிமை உண்டு.

6 comments:

  1. "பொது சிவில் சட்டம்" கோருகிறீர்களோ என்று எண்ண வைக்கும் படி எழுதப்பட்டுள்ளது பத்ரி. அம்மாதிரியானால், ஏகப்பட்ட வாக்குவாதங்கள்தான் மிச்சமாகும்!

    உங்கள் பதிவு சரியான திசையில் செல்கிறதா என கணிக்க முடியவில்லை :)

    ReplyDelete
  2. பதிவின் நோக்கம் பற்றியெல்லாம் யோசிக்காமல் எங்காவது எதாவது வார்த்தைகள் தென்பட்டால் அதைப்பிடித்துக்கொண்டே அப்பதிவை வேண்டுகிற திசைக்கெல்லாம் இழுத்துச்செல்ல முடிவது இங்கு பழகிப்போன விடயம்தானே நியோ?:))

    ஆனால் பத்ரி குறிப்பிட்டிருக்கிற கருத்துக்கள் உண்மையிலேயே சிந்திக்க வேண்டியவை. திருமணச் சட்டம் என்று மட்டுமின்றி நம் தண்டனைச்சட்டங்கள்கூட மாற்றங்களுக்குள்ளாகவேண்டியவையே. இங்கு, இருப்பதில் எத்தனை ஓட்டைகள் இருந்தாலும் பின்பற்றமுடிகிற நமக்கு மாற்றங்களை ஏற்றுக்கொள்கிற, குறைந்தபட்சம் விரும்புகிற மனமாவது வாய்க்கும்வரை இப்படியேதான் நிலைமைகள் தொடரும். பதிவுக்கு நன்றி பத்ரி.

    ReplyDelete
  3. அன்பு பத்ரி, பொது சிவில் சட்டம் பற்றித்தான் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    ஆனால் நீங்களே கொஞ்சம் குழம்பியிருப்பதுபோல் தெரிகிறது. திருமணம், விவாகரத்து, சொத்துரிமைகள் ஆகியவை ஒரே விதமான சட்டங்களுக்குள் வரவேண்டும் என்று கூறுகிறீர்கள். அதேசமயம், அவரவர் முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூறுகிறீர்கள்.

    இப்படிப் பொதுவான சட்டம் வந்தால் மக்களுக்கு அது நன்மை பயக்கும் என்று சொல்கிறீர்கள். எந்த மக்களுக்கு? அதுதான் பிரச்சனை.

    ஒவ்வொரு சமுதாயத்தினரும் தங்கள் வழக்கப்படி திருமணம், விவாகரத்து, சொத்துரிமை கோருதல் ஆகியவையே தங்களுக்கு நன்மை என்று கருதுகின்றனர். ஒரு முஸ்லிமுக்கு இஸ்லாமிய ஷரியத் அல்லாத ஒரு சட்டத்தின் அடிப்படையில் சொத்துரிமை வழங்கப்படுவது அவருக்கு நன்மை என்று அவர் நினைப்பார் என்று கருதுகிறீர்களா? இதே மாதிரியான கேள்வியை ஒவ்வொரு சமுதாயத்தவரும் கேட்பதாக வைத்துக் கொண்டு பாருங்கள்.

    ஷரியத் சட்டங்கள் இறைவனால் கொடுக்கப்பட்டவை என்று ஒரு முஸ்லிம் நம்பும்போது எப்படி இன்னொரு சட்டத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியும்?

    நீங்கள் சொன்ன மூன்று விஷயத்திலுமே பொதுக்கருத்து வருவதற்கு வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.

    இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் எவராக இருந்தாலும் அவர் ஹெல்மெட் போட்டுக் கொண்டுதான் ஓட்ட வேண்டும் என்று ஒரு சட்டம் கொண்டு வந்தால் அது சரியான பொது சிவில் சட்டமாகும். அதை எந்த மதத்தவரும் பின்பற்றுவதில் பிரச்சனை ஏதும் வரப்போவதில்லை.

    ஆனால் திருமணம் என்று வரும்போது, உதாரணமாக, ஆரம்பத்திலிருந்தே இஸ்லாமிய திருமணங்கள் ரிஜிஸ்டர் செய்யப்படுகின்றன. அதுதான் அவர்களின் திருமண முறையாக இருக்கிறது. ஆனால் ஹிந்து திருமணங்களை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்ற கருத்தே இப்போதுதான் உருவாகியுள்ளது.

    எங்கள் சட்டம்தான் எற்கனவே முன்னேறிய சட்டமாக்கும் என்று ஒரு முஸ்லிம் சொல்ல வாய்ப்பிருக்கிறது.

    ஹிந்து திருமண முறைகள்கூட இந்தியா முழுவதும் ஒரே மாதிரியானதாக இல்லை. சப்தபதி முறையை கேரளாவில் பின்பற்றுவார்களா? திகவினர் ஏற்றுக் கொள்வார்களா? தலித்துகள் திருமண முறைகளும் வேறு மாதிரியானவையே.

    இதில் யூனிஃபார்மிட்டி வருவதற்கு வாய்ப்பே இல்லை.

    பின் எப்படி இவற்றை ஒட்டிய பொதுவான சட்டம் கொண்டுவர முடியும்? அதுவும் அவரவர் சட்டங்களே அவரவர்க்கு நன்மை பயக்கப் போதுமானதாக இருக்கிறது என்று அவரவர் நினைக்கும்போது?!

    உங்கள் அக்கறை எனக்கு புரிகிறது. ஆனால் இது மிகவும் சிக்கலான 'சென்சிட்டிவான' ஒரு பிரச்சனை.

    முஸ்லிம் சட்டங்களில் ஏற்கத்தகாதவை என்று நீங்கள் நினைப்பதை முதலில் சொல்லுங்கள். அதை விவாதிக்கலாம். இதைப்போல ஒவ்வொரு மதத்திலும் இருக்கும் குறைகாணததக்க சட்டங்களை திறந்த மனதுடன் விவாதிப்போம்.

    பிறகு என்ன செய்யலாம் என்று ஒரு முடிவுக்கு வரலாம். இப்போது இருக்கும் பல கேள்விகள் அப்போது மறைந்துவிடக்கூடும்.

    அன்புடன்
    நாகூர் ரூமி

    ReplyDelete
  4. சில தகவல்களுக்காக பார்க்கவும்

    http://marchoflaw.blogspot.com/2006/05/blog-post_114693563554390293.html

    நன்றி

    பிரபு ராஜதுரை

    ReplyDelete
  5. Forget about UCC.Even changes to protect interests of Muslim women
    are opposed as unislamic by many
    muslims.muslims should change their
    attitude and support moves to make muslim laws compatible with the
    constitutional principles of equality between sexes and ending
    discrimination on the basis of gender.India is a signatory to CEDAW.We should change presonal
    laws of all faiths to reflect the
    above principles and objectives
    of CEDAW.

    ReplyDelete
  6. பத்ரி திருமண முறை பற்றி பேசவில்லை என்று சொல்லி விட்ட போதிலும் ரூமி அதைப்பற்றியே பேசுகிறார்.

    "இப்படிப் பொதுவான சட்டம் வந்தால் மக்களுக்கு அது நன்மை பயக்கும் என்று சொல்கிறீர்கள். எந்த மக்களுக்கு? அதுதான் பிரச்சனை".

    இதில் என்ன பிரச்சினை? பொது கிரிமினல் சட்டம் எந்த மக்களுக்கு நன்மை தருகிறதோ அதேபோல்தான் பொது சிவில் சட்டத்தின் நன்மையும்.

    மத நம்பிக்கைகள் வேறு, அவற்றை governance-க்கு அடிப்படையாகக்கொள்வது வேறு. ஒன்று தனிமனித விஷயம்; மற்றொன்று ஒரு சமுதாயம் சார்ந்த விஷயம்.

    மத நம்பிக்கை, காலம், இடம், குழு போன்ற காரணிகளால் வரையறுக்கப்பட்டது; அவற்றை விமர்சிப்பதோ மாற்றுவதோ எளிதில் இயலாத விஷயம். இப்படிப்பட்ட சூழலில், மாற்றங்களையே அடித்தளமாகக் கொண்ட வளரும் சமுதாயத்தினை மாற்றங்களை எதிர்க்கும் மதச்சட்டங்களைக் கொண்டு நிர்வகிக்க முயல்வது எவ்வாறு சரியான அணுகுமுறையாகும்?

    "ஒரு முஸ்லிமுக்கு இஸ்லாமிய ஷரியத் அல்லாத ஒரு சட்டத்தின் அடிப்படையில் சொத்துரிமை வழங்கப்படுவது அவருக்கு நன்மை என்று அவர் நினைப்பார் என்று கருதுகிறீர்களா? "
    ஷரியா அல்லாத குற்றவியல் சட்டங்கள் மட்டும் அவருக்கு நன்மை என்று நினைக்கிறாரா? பொது குற்றவியல் சட்டங்கள் இஸ்லாமியர்களால் ஒப்புக்கொள்ளப்படவில்லையா என்ன?

    "இதே மாதிரியான கேள்வியை ஒவ்வொரு சமுதாயத்தவரும் கேட்பதாக வைத்துக் கொண்டு பாருங்கள்".
    எல்லா சமுதாயத்திற்கும் இதே பதில்தான். சட்டம் இந்தியர் அனைவருக்கும் ஒருபோலத்தான் இருக்க வேண்டும். மதத்திற்கொரு சட்டம் என்பது சமுதாயத் தேக்கத்திற்கும், பிளவிற்கும், இவற்றை வைத்து அரசியல் செய்வதற்குமே உதவும்.

    "ஷரியத் சட்டங்கள் இறைவனால் கொடுக்கப்பட்டவை என்று ஒரு முஸ்லிம் நம்பும்போது எப்படி இன்னொரு சட்டத்தை அவரால் ஏற்றுக்கொள்ள முடியும்?"
    ஷரியத் அல்லாத குற்றவியல் சட்டங்களை ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் மார்க்க நம்பிக்கையில் பழுதுள்ளவர்கள் என்றா அர்த்தம் கொள்ளுவீர்கள்? மத நம்பிக்கை என்பது தனி மனித சம்பத்தப்பட்டது (மட்டுமே). பல்வேறு தரப்பின்ர் பங்கெடுக்கும் சமூக நிர்வாகத்திற்கு மத நம்பிக்கையை அடிப்படையாகக்கொள்வது சமுதாய முன்னேற்றத்திற்கு ஒரு தடைக்கல்லாகவே அமையும்.

    "நீங்கள் சொன்ன மூன்று விஷயத்திலுமே பொதுக்கருத்து வருவதற்கு வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்".
    பலதாரத்திருமணத்தடைச்சட்டம், பால்ய விவாகம் ஆகியவற்றிற்கெதிரான சட்டங்கள் கடைசி இந்துவின் மனமாற்றம் வரை காத்திருந்து பிறகு சட்டமாக்கப்படவில்லை. பொதுக்கருத்து வரும் சூழலை மத நம்பிக்கையாளரிடயே உள்ள முற்போக்கு சிந்தனையாளர் உருவாக்க வேண்டும். இதைப்பற்றிய விவாதங்களோ எதிர்ப்புக்குரல்களோ மதத்துவேஷம் என்ற அடிப்படையில் இனம் பிரித்து தாக்கப்பட்டு நசுக்கப்படுவதே அங்கே நடந்துவருகிறது. இடது சாரி சிந்தனையாளர் கூட இதைப்பற்றி வெளிப்படையாகப்பேச பயப்படுகின்றனர், அல்லது அதிகார மகுடியில் மயங்கி வசதியாக மறந்து விடுகின்றனர், எங்கே ஹிந்துத்துவா பட்டம் கிடைத்து விடுமோ என்ற வாக்கு வங்கி சார்ந்த பயம் வேறு.

    சாதாரணமாக நடைமுறையில் இருக்க வேண்டிய ஒரு சட்டம், சென்சிடிவ்வான விஷயமாக்கப்பட்டு விட்டது துரதிர்ஷ்டவசமாக உண்மையே. குறைந்த பட்சம் ராஜதுரை சொல்வது போல ஒரு சில முக்கிய ("achilles heel") விஷயங்களிலாவது சட்டத்திருத்தங்கள் கொண்டு வருவது இந்த விஷயத்தில் நல்லதொரு முதல் படியாக அமையும்.

    ReplyDelete