Saturday, April 22, 2006

லேடஸ்ட் பில்லியன் டாலர் வருமான ஐடி கம்பெனி

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ஆண்டு வருமானம் ஒரு பில்லியன் டாலரைத் தாண்டி உள்ளது.

டாடா கன்சல்டன்சீஸ் வருமானம் மூன்று பில்லியன் டாலருக்குமேல். இன்ஃபோசிஸ் இரண்டைத் தாண்டி மூன்று பில்லியனை நோக்கிச் செல்கிறது. விப்ரோவும் அப்படியே. HCL மொத்த வருமானம் பில்லியனுக்கு சற்று மேல். இப்பொழுது இவர்களுடன் சேர்ந்திருக்கிறது சத்யம் கம்ப்யூட்டர்ஸும்.

Friday, April 21, 2006

அராஜக ஆட்சியை அகற்றுவோம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிப் பிரமுகரும் சில புத்தகங்களை எழுதியுள்ளவருமான ஏ.கோபண்ணா "அராஜக ஆட்சியை அகற்றுவோம்" என்ற தலைப்பில் ஒரு தேர்தல் பிரசார புத்தகத்தை உருவாக்கியுள்ளார். ரூ. 30 (96 பக்கங்கள்; டெமி 1/4) விலை வைத்திருக்கும் இந்தப் புத்தகத்தை யார் காசு கொடுத்து வாங்குவார்கள் என்று தெரியவில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சிக்காரர்களும் தோழமைக் கட்சிக்காரர்களும் பிரசாரத்துக்காக இந்தப் புத்தகத்தை நிறைய வாங்கி பிறருக்கு விநியோகிப்பார்கள் என்று நினைக்கிறேன்.

தேர்தல் நேரத்தில் நடக்கும் பல பிரசார உத்திகளில் இந்தப் புத்தகம் மிகவும் வித்தியாசமானது. பொதுவாகவே தேர்தல் அறிக்கைகள் மிக மோசமாக உருவாக்கப்படுகின்றன. உள்ளே எழுதியிருப்பதைச் சொல்லவில்லை; புத்தக வடிவமைப்பு, லே-அவுட், எழுத்துரு, எழுத்தின் தரம் ஆகியவற்றைச் சொல்கிறேன்.

அதற்கு மாற்றாக கோபண்ணாவின் புத்தகம் நல்ல தரத்தில் உள்ளது. நல்ல தாள், தரமான அட்டை, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட உள்பக்கங்கள் என்று கவனமாகச் செய்திருக்கிறார்.

முன்னட்டையில் கருணாநிதியும் சோனியா காந்தியும் கையசைக்கிறார்கள். பின்னட்டையில் ஜெயலலிதா ஆட்சியில் நடந்த துயர சம்பவங்களின் படங்கள் 'கொலாஜ்' ஆகவும் அதற்கு நடுவில் ஜெயலலிதாவின் முகமும் உள்ளது. உள்புற அட்டையில் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வேண்டுகோள்கள்.

27 அத்தியாயங்களாக ஜெயலலிதா ஆட்சியின் பிரச்னைகளும் கடைசியில் "மீண்டும் மலரட்டும் கலைஞர் ஆட்சி" என்ற அத்தியாயமும் உள்ளன. முன்னுரையில் கோபண்ணா இவ்வாறு கூறுகிறார்:

"ஜெயலலிதா இன்று தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் சதுக்கப் பூதம்; ஊழலின் அடைபடா ஊற்று; தமிழக அரசியலில் ஏற்பட்டுவிட்ட தொற்றுநோய்; அந்தத் தொற்றுநோய் தீர்க்கப்படாத மேகநோயாக வளரும் அபாயம் உருவாகி வருகிறது."

"ஜெயலலிதா விதைத்த கிருமிகளிலிருந்து உருவான எல்லா அரசியல் நோய்களிலிருந்தும் தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும்."

பொதுவாக எதிர்க்கட்சிகள் ஜெயலலிதா ஆட்சியின்மீது சொல்லும் அத்தனை குறைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. புத்தகம் முழுவதிலும் நிறைய கார்ட்டூன் படங்கள், சிறு சிறு பெட்டிச் செய்திகள், அரசியல்வாதிகளின் மேற்கோள்கள், பத்திரிகைச் செய்திகள் என்று பல விஷயங்கள் உள்ளன. ஒருசில இடங்களில் இலக்கணப் பிழைகள் தென்படுகின்றன, மற்றபடி பொதுவான அரசியல் பிரசுரத்தில் இருக்கும் பிழைகளைவிட மிகக்குறைவுதான்.

புத்தகம் கிடைக்குமிடம்:

சூர்யா பப்ளிகேஷன்ஸ்
'காமராஜ் பவன்'
573 அண்ணா சாலை
தேனாம்பேட்டை
சென்னை 600 006
போன்: 2434 9565, 2483 5959

Tuesday, April 18, 2006

அரிசி மான்யம் redux

ஜெயலலிதா நேற்று ஆண்டிப்பட்டியில் "Buy 10 kg for Rs. 3.50 per kg, Get 10 kg free" என்று சூப்பர் மார்க்கெட் புரோமோஷனல் விளம்பர பாணியில் தூள் கிளப்பியுள்ளார். அதுவும் 1.88 கோடி ரேஷன் கார்டுகளுக்கும் பொதுவாக. வறுமைக்கோட்டுக்குக் கீழே, மேலே என்றெல்லாம் எந்தப் பிரிவினையும் இல்லை.

ஆக, கருணாநிதி கிலோ அரிசி ரூ. 2க்கு என்றால் அம்மையார் கிலோ அரிசி ரூ. 1.75க்கு என்கிறார். விஜயகாந்தோ "No conditions! 15 கிலோ அரிசி இலவசம்" என்கிறார். ஆனால் ஏழைகளுக்கு என்கிறார். வறுமைக் கோட்டுக்குக் கீழே என்று நாமாக முடிவு செய்துகொள்வோம்.

கருணாநிதியாவது ஏதோ கணக்கு காட்டுகிறார் - செலவு இவ்வளவு, அவ்வளவு ஆகும் என்று. ஜெயலலிதாவுக்கோ விஜயகாந்துக்கோ அந்தக் கவலைகூட இல்லை. சும்மா, வாய் வார்த்தை போதும்.

விஜயகாந்தின் அரிசி வாக்குறுதியை நிறைவேற்ற ஆகும் மான்யச் செலவு (வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் மாதம் 15 கிலோ அரிசி இலவசம்): ரூ. 500 கோடி.
வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பவர்களுக்கு இப்பொழுது இருக்கும் மான்யம் (அதாவது மாதம் 20 கிலோ, ரூ. 3.50 கிலோவுக்கு) தொடருமானால் அதற்காகும் அதிகச் செலவு: ரூ. 1,800 கோடி.
இப்பொழுது பட்ஜெட்டில் ஏற்கெனவே உள்ளது: ரூ. 1,500 கோடி.
மேற்கொண்டு தேவை: ரூ. 800 கோடி

கருணாநிதியின் வாக்குறுதியை நிறைவேற்றத் தேவையாகும் பணம்: ரூ. 2,800 கோடி
இப்பொழுது பட்ஜெட்டில் உள்ள ரூ. 1,500 கோடியை விட அதிகம் தேவை: ரூ. 1,300 கோடி

ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்றத் தேவையாகும் பணம்: ரூ. 2,900 கோடி
பட்ஜெட்டில் உள்ளதை விட அதிகம் தேவை: ரூ. 1,400 கோடி

Monday, April 17, 2006

Capital Account Convertibility - 2

இதன் மீதான எனது சென்ற பதிவில் இதற்கான தமிழ்ப்பெயர்களைப் பயன்படுத்தக் கூடாதா என்று ஒருவர் கேட்டிருந்தார்.

Current Account என்பதை 'நடப்புக் கணக்கு' என்கிறார்கள். Capital Account என்பதை 'முதலீட்டுக் கணக்கு' எனலாம் என்று நினைக்கிறேன்.

ஏற்றுமதி, இறக்குமதி, கடனுக்கான வட்டி, பங்குகளிலிருந்து கிடைக்கும் ஈவுத்தொகை, சம்பளங்கள், செலவினங்கள் போன்றவை நடப்புக் கணக்கில் வரும். நிறுவனங்களில் முதலீடு செய்தல், கடன் கொடுத்தல், வாங்குதல், கடன் பத்திரங்கள், அரசாங்க நிதிக் கருவிகளில் முதலீடு போன்றவை முதலீட்டுக் கணக்கில் வரும்.

அன்னியச் செலாவணி எப்படி நம் நாட்டுக்குள் வருகிறது என்பது பற்றி முன்னர் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.

வருடா வருடம் பெட்ரோல் முதற்கொண்டு பல இறக்குமதிகளுக்காக நாம் அமெரிக்க டாலர்களை செலவழிக்கிறோம். அதேபோல தகவல் தொழில்நுட்பச் சேவைகள் முதற்கொண்டு பல சேவைகளையும் பொருள்களையும் ஏற்றுமதி செய்து டாலர்களைப் பெறுகிறோம். வெகு நாள்களாகவே நமது ஏற்றுமதிகளைவிட இறக்குமதிகள் அதிகமாக உள்ளன. அதாவது வர்த்தக ஏற்ற இறக்கங்களைச் சரி செய்ய நமக்கு அதிக அன்னியச் செலாவணி தேவைப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்னதாக Invisible receipts எனப்படும் என்.ஆர்.ஐக்கள் இந்தியாவுக்கு அனுப்பும் பணம் - அவர்கள் பெறும் சம்பளத்திலிருந்து ஒரு பகுதி - இந்த வர்த்தகத் துண்டுவிழுதலைவிட அதிகமாக இருந்தது. இதனால் நடப்புக் கணக்கில் நமக்குக் கையில் அதிக டாலர்களே இருந்து வந்தன. (current account surplus)

ஆனால் கடந்த சில காலாண்டுகளில் பெட்ரோல் விலை அதிகமாக இருப்பதாலும் இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் வெகுவாகத் தளர்த்தப்பட்டதாலும் இறக்குமதியின் அளவு வெகுவாக அதிகரித்துள்ளது. ஏற்றுமதி அதிகரித்தாலும் இறக்குமதியின் அளவுக்குச் செல்லவில்லை. அதெ நேரம் வெளிநாடுவாழ் இந்தியர்களிடமிருந்து இந்தியாவுக்கு வரும் பணத்தின் அளவு அதிகரிக்கவில்லை; சில காலாண்டுகளில் குறைந்துள்ளது. இதனால் தற்போது நடப்புக் கணக்கில் பற்றாக்குறை உள்ளது. (current account deficit)

இதனால் நாம் பயப்படவேண்டியதில்லை. ஏனெனில் முதலீட்டுக் கணக்கில் நிறைய வெளிநாட்டுப் பணம் உள்ளே வருகிறது. அன்னிய நேரடி முதலீடு (FDI) மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பணத்தை நேரடியாக முதலீடு செய்கின்றன. அதேபோல அன்னிய முதலீட்டு நிதி நிறுவனங்கள் (FII) இந்தியாவில் பங்குச்சந்தையிலும் பிற நிறுவனங்களிலும் முதலீடு செய்கின்றன. பல துறைகளிலும் ஏற்கெனவே இருந்த தடைகள் நீக்கப்பட்டு முதலீடு செய்ய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பல இந்திய நிறுவனங்களும் இப்பொழுது நேரடியாக வெளிநாடுகளிலிருந்து அன்னியச் செலாவணியில் கடன் பெறுகிறார்கள் (External commercial borrowing). இதன்மூலம் இந்தியாவுக்குள் நிறைய அன்னியச் செலாவணி வருகிறது.

ஆனால் இந்திய நிறுவனங்களோ தனியாரோ வெளிநாடுகளில் முதலீடு செய்வது அவ்வளவு எளிதல்ல. தனியாரால் அதிகபட்சம் $25,000 முதலீடு செய்யமுடியும். நிறுவனங்களால் $200 மில்லியன் அளவுக்கு அனுமதி இல்லாமல் முதலீடு செய்யமுடியும். ஆனால் உண்மையில் ரிசர்வ் வங்கி அனுமதியுடன் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழித்து முதலீடு செய்யமுடியும். டாடா குழுமம் சிங்கப்பூரில் உள்ள இரும்புத் தொழிற்சாலையை வாங்கியுள்ளது. கொரியாவில் தேவூ மோட்டார் நிறுவனத்தை வாங்கியது. டெலிகுளோப் என்னும் டெலிகாம் நிறுவனத்தை வாங்கியது. ரிலையன்ஸ் ஜெர்மனியில் பாலியெஸ்டர் நிறுவனத்தை வாங்கியது. ஃபிளாக் டெலிகாம் நிறுவனத்தை வாங்கியது. இதைப்போல பல இந்திய நிறுவனங்கள் சீனா முதல் பல நாடுகளில் தொடர்ச்சியாக முதலீடுகளைச் செய்துவருகின்றன. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களுக்கு $1 பில்லியன் அளவுக்கு வெளிநாட்டுப் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அப்படியிருந்தும் இந்தியாவை விட்டு வெளியே செல்லும் முதலீடுகளைவிட உள்ளே வரும் முதலீடுகள் அதிகம். இதனால்தான் நடப்புக் கணக்கு பற்றாக்குறையில் இருந்தாலும் முதலீட்டுக் கணக்கில் அதிகம் அன்னியச் செலாவணி வந்து வாராவாரம் இந்தியாவின் அன்னியச் செலாவணிக் கையிருப்பை அதிகமாக்கிக்கொண்டே போகிறது. இந்தப் பாதை தொடரும். அதாவது இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையிலேயே செல்லவேண்டியிருக்கும் - இன்னமும் சில வருடங்களுக்கு. இந்தியாவின் பொருள் ஏற்றுமதி அதிகமாக அதிகமாக; சேவைகள் ஏற்றுமதி வெகுவாக அதிகமாக ஓரளவுக்கு இந்த நிலை மாறலாம். அதற்கு பெட்ரோல் விலை கட்டுக்குள் இருப்பதும் முக்கியம். ஆனால் இந்தப் பற்றாக்குறையை மிக எளிதாக உள்ளேவரும் முதலீடுகளால் சரிக்கட்ட முடியும். இந்த நிலையும் வரும் வருடங்களில் மாற வாய்ப்புகள் குறைவு.

சரி. இருக்கட்டும். இப்பொழுது இதைப்பற்றி என்ன பேச்சு? எல்லாம் மன்மோகன் சிங்கால் ஆரம்பம். இந்தியா தென்கிழக்கு ஆசியாவின் நிதிமையமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் மன்மோகன். அதற்கு ஒரு முக்கியமான தேவை யாராலும் இந்திய ரூபாயை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் பிற கரன்சிகளுக்கு மாற்றக்கூடிய அனுமதி இருக்கவேண்டும். (அமெரிக்க டாலரையோ ஐரோப்பிய யூரோவையோ இப்படிச் செய்யலாம்.) அதாவது இந்தியாவின் நடப்புக் கணக்கிலும் மூலதனக் கணக்கிலும் உள்ள பணங்களை ரூபாயிலிருந்து வேறெந்த கரன்சிக்கும் வேறெந்த கரன்சியிலிருந்தும் ரூபாய்க்கும் தன்னிச்சையாக மாற்றக்க்கூடிய நிலைமை வரவேண்டும்.

அதாவது full current account convertibility & full capital account convertibility.

இந்தியாவும் லண்டன், ஜூரிக், நியூ யார்க், சிங்கப்பூர் போல உலகின் முக்கியமான நிதி மையமாக இருப்பது நல்லதுதானே என்று கேட்கிறீர்களா? விஷயம் அவ்வளவு எளிதானதல்ல.

ஏற்கெனவே இந்தியா கிட்டத்தட்ட full current account convertibility நிலையில்தான் உள்ளது. முன்னெல்லாம் போல் இல்லாமல் கிரெடிட் கார்டு மூலமாக பிற நாடுகளிலிருந்து பொருள்களையும் சேவைகளையும் யாரிடமும் முன் அனுமதி பெறாமல் மக்களால் வாங்க முடிகிறது. (டொமைன் நேம் ரெஜிஸ்டிரேஷன், அமேசான்.காம் தளத்தில் பொருள்கள் வாங்குவது, இணையத்தள வழ்ங்கி சேவையைப் பெறுவது முதல் பல விஷயங்களை இப்பொழுது நம் கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யலாம்.) பிற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும்போது அங்குள்ள ஏ.டி.எம் கருவிகளில் நமது கிரெடிட் கார்டையோ டெபிட் கார்டையோ திணித்து அந்த நாட்டுப் பணத்தை வேண்டிய அளவுக்குப் பெறுகிறோம். அங்குள்ள கடைகளில் வேண்டிய பொருள்களை வாங்கிக்கொள்கிறோம். ரிசர்வ் வங்கியிடம் இதற்காக நாம் எந்தக் கணக்கையும் கொடுக்க வேண்டியதில்லை.

அதேபோல நிறுவனங்களும் பல பொருள்களையும் வேண்டிய அளவு இறக்குமதி செய்யமுடிகிறது. சில நேரங்களில் இறக்குமதிக்கு என்று தனியாக சுங்கவரி கட்ட வேண்டுமே ஒழிய கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்படுவதில்லை. அச்சிடும் தாள் முதல் கணினி வரை எதற்கும் கட்டுப்பாடு இல்லை. ஆக full current account convertibility என்னும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

ஆனால் இப்பொழுது full capital account convertibility என்ற நிலையை அடைய மன்மோகன் சிங், சிதம்பரம் இருவரும் ஆசைப்படுகிறார்கள். அதன் பக்க விளைவுகள் எப்படி இருக்கும்?

முதலில் full capital account convertibility என்ற நிலை ஏற்பட்டால் நாம் யார் வேண்டுமானாலும் - தனியாரோ அல்லது நிறுவனமோ - நமக்குத் தேவையான கடன்களையும் பங்கு மூலதனத்தையும் வெளிநாடுகளிலிருந்து பெறுவதற்கே முயற்சி செய்வோம். ஏன்? டாலர் - ரூபாய் மாற்று விகிதம் ஓரளவுக்கு நிலையாகவே உள்ளது. கண்டபடி மாறப்போவதில்லை என்று தோன்றுகிறது. ஆனால் வெளிநாடுகளில் கிடைக்கும் கடனுக்கான வட்டிவிகிதம் இந்தியாவை விடக் குறைவு.

இதனால் முதலில் மறைமுகமாகவும் பின்னர் அரசு நினைத்தால் நேரடியாகவும் வீட்டுக்கடன் முதல் பெர்சனல் லோன் வரை வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் இந்தியர்களுக்குக் கடன் கொடுக்க ஆரம்பிக்கும். இந்தப் போட்டியைச் சமாளிக்க இந்திய வங்கிகளும் தங்கள் கடன் வட்டி விகிதத்தைக் குறைக்கவேண்டும். இதனால் வங்கிகளில் பணத்தைப் போடுபவர்களுக்கு வருமானம் குறையும். போஸ்ட் ஆஃபீசில் போட்டால் 8%, ப்ராவிடெண்ட ஃபண்டில் 9% என்பதையெல்லாம் மறந்துவிடலாம்.

அல்லது இந்தியர்கள் பணத்தை வங்கியில் வைப்பதைவிட மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை ஆகியவற்றுக்குப் போகவேண்டியிருக்கும். இதில் பெரிய தவறு எதும் இல்லை. ஆனால் இவை இரண்டுமே முதலுக்கு முழுதாக உத்தரவாதத்தைக் கொடுக்கமுடியாதவை. முதலீடுகள் மேலே போகலாம், ஆனால் கீழே இறங்கவும் செய்யலாம். மேலும் இந்தியாவில் பங்குச்சந்தையும் சரி, மியூச்சுவல் ஃபண்ட்களும் சரி, இன்னமும் முதிர்ச்சி அடையவில்லை. அதற்குப் பலவருடங்கள் ஆகலாம்.

இதுநாள்வரையில் போஸ்ட் ஆஃபீஸ், பிராவிடெண்ட் ஃபண்ட் ஆகியவற்றுக்கு தமது பணத்தை பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இப்பொழுதுதான் போஸ்ட் ஆஃபீசுக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது. அதேபோல இந்தியாவின் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தமது நிதில் 25% மட்டும்தான் பங்குச்சந்தையில் போடலாம். இந்திய வங்கிகளும் அதைவிடக் குறைந்த அளவே பணத்தை பங்குச்சந்தையில் போடலாம். ஒரேயடியாக இவை பணத்தை பங்குச்சந்தையில் போட்டால் அதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பங்குச்சந்தை உடனடியாக விரிவடைய முடியாது. இதன் விளைவு பங்குச்சந்தை தேவையின்றி சூடாகி உப்பிப் பெரிதாவதுதான். அது உடைந்தால் இந்திய வங்கிகள், இந்திய நிதி நிறுவனங்கள் ஆகியவை நொறுங்கிப்போகும். அதனால் பல லட்சக்கணக்கான வங்கி வாடிக்கையாளர்கள் வாழ்க்கையே பாழாகிவிடும்.

இந்திய நிதி நிறுவனங்களும் பங்குச்சந்தையும் சரியான அளவு வளர்ச்சி அடையாத நிலையில் இந்தியாவின் வட்டி விகிதம் குறைவது சரியாக இருக்காது.

மேலும் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் கையில் இருக்கும் வட்டி விகிதம், CRR போன்றவற்றை அவரால் தன்னிச்சையாக மாற்ற முடியாது. உலக நிலைமை என்ன, அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வட்டி விகிதங்கள் எப்படி உள்ளன ஆகியவற்றையும் அவர் கவனிக்க வேண்டி வரும். பல நேரங்களில் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் என்ன செய்யவேண்டும் என்று நமக்கு அறிவுரை கூறுவார்கள். தேவையின்றி அழுத்தம் தருவார்கள். இந்தியாவின் fiscal deficit எப்படி இருக்க வேண்டும், இந்தியாவின் வட்டி விகிதம் எப்படி இருக்கவேண்டும் என்று நேரடியாகவும் IMF, உலக வங்கி மூலமும் இந்தியாவை மிரட்டுவார்கள். Full capital account convertibility இல்லாவிட்டால் இந்தியா கடுமையான டிரேட் சர்ப்ளஸ் வைத்திருந்தால் வேறுவிதமாக மிரட்டுவார்கள். இப்பொழுது சீனாவிடம் அமெரிக்காவும் ஐரோப்பாவும் ரென்மின்பியின் மதிப்பை அதிகமாக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்களே - அதைப்போல.

ஆனால் இப்பொழுது அது மாதிரியான இடையூறுகள் இல்லை. இந்தியா போன்ற வளரும் நாட்டில் இப்பொழுது இருக்கும் வட்டி விகிதம் மோசமானதே அல்ல.

ஆனால் முழு கன்வெர்டிபிலிட்டி வந்துவிட்டால் நம்மிஷ்டத்துக்கு நம் நாட்டுக்கு ஏற்ற முறையில் இதையெல்லாம் செய்துகொள்ள முடியாது. ஏனெனில் ஆர்பிட்ராஜை வைத்தே பணத்தைக் கொள்ளையடித்துவிடுவார்கள் சிலர். உதாரணத்துக்கு இந்தியாவில் வங்கியில் பணத்தை வைக்க 7% வட்டி கொடுக்கிறார்கள்; கடன் பெற 9% வட்டி கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அமெரிக்காவில் வங்கியில் பணத்தை வைக்க 4% வட்டி கொடுக்கிறார்கள்; கடன் பெற 6% வட்டி கேட்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர்கள் கடன் பெற்று அந்தப் பணத்தை இந்தியாவில் வங்கியில் போட்டால் 1% தாராளமாக தூங்கிக்கொண்டே சம்பாதிக்கலாம். இது ஓர் உதாரணமே. முழு கன்வெர்டிபிலிடி இருந்தால் இந்த spread குறைந்துகொண்டே வரும். வித்தியாசங்கள் இருக்காது.

ஆனால் வாழ்க்கை முறைகள் வேறுபடும். இந்தியர்கள் அதிகப்பணத்தைச் சேமிக்க விரும்புவார்கள்; அமெரிக்கர்கள் அதிகப் பணத்தைச் செலவழிக்க விரும்புவார்கள் என்று (ஓர் உதாரணத்துக்கு) வைத்துக்கொள்வோம். இதனால் இரு நாட்டு ரிசர்வ் வங்கிகளும் வெவ்வேறு விதமான monetary கொள்கைகளை எடுக்க முடிவு செய்யலாம். அமெரிக்கா பணச்சேமிப்பை அதிகரிக்கவும் கடன் வாங்கிச் செலவழிப்பதைக் குறைக்கவும் வட்டி விகிதத்தை அதிகரிக்கும். இந்தியா சேமிப்பைக் குறைத்து செலவழிப்பை அதிகரிக்க (அப்பொழுதுதான் நாட்டின் பொருளாதாரம் விரிவடையும்) வட்டி விகிதத்தைக் குறைக்கும்; கடன் வாங்கிச் செலவழிப்பதை அதிகரிக்க விரும்பும். இதனை இடைத்தரகர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் (மேலே கூறிய முறைப்படி).

இதுபோன்ற விஷயங்களிலும் இந்திய ரிசர்வ் வங்கி தன் மூளையைச் செலவழிக்க வேண்டியிருக்கும். இதனால் வேலைதான் அதிகமாகும்.

உலக அளவிலான போட்டியாலும் வீழ்ச்சியடையும் வட்டி விகிதத்தாலும் வங்கிகளின் வருமானம் குறையும். பல சிறு இந்திய வங்கிகள் திவாலானாலும் ஆகும். ஏனெனில் இந்தியாவின் பல்வேறு கடன் வாய்ப்புகளை நோக்கி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியும் பேங்க் ஆஃப் அமெரிக்காவும் போட்டிபோடுகின்றன என்று வைத்துக்கொள்வோம். யார் ஜெயிப்பார்கள்? இதனால் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தனது வருமானத்தைத் தக்கவைத்துக்கொள்ள சற்றே ரிஸ்க் அதிகமான வர்த்தகத்தில் ஈடுபடலாம் - டெரிவேடிவ்ஸ் இது அது என்று. அது கையை ஒரேயடியாகச் சுட்டு வைக்கலாம். இதெல்லாம் இல்லாமலேயே இந்தியாவின் கூட்டுறவு வங்கிகள் நாசமாகப் போகின்றன. ஊழல் காரணங்களால் இந்தியன் வங்கி போன்றவையே அழிந்து போக வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

சர்வதேச வங்கிகளுடன் போட்டிபோடக்கூடிய திறத்தில் இந்தியாவில் ஒரு வங்கிகூடக் கிடையாது என்று நினைக்கிறேன். ஐசிஐசிஐ, பாரத ஸ்டேட் வங்கி இரண்டுமேகூடத் திண்டாடவேண்டும்.

மேலும் பல பிரச்னைகளும் உண்டு. இந்தியர்களுக்கு தமது ரூபாய்களை இஷ்டத்துக்கு பிற கரன்சிகளுக்கு மாற்ற உரிமை கொடுக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் ரூபாய்களை அமெரிக்க டாலர்களாக மாற்றி அமெரிக்கப் பங்குச் சந்தையில் போடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். நாளை சீனா தான் அமெரிக்க டிரெஷரி செக்யூரிட்டிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்தை எடுத்து அதை வேறு செலவுகளுக்குப் பயன்படுத்துகிறது (நாலைந்து மாபெரும் ஐரோப்பிய பெட்ரோலிய நிறுவனங்களை வாங்குகிறார்கள்) என்று வைத்துக்கொள்வோம். இதனால் திடீரென அமெரிக்க டாலர்களின் மதிப்பு சரியத் தொடங்கும். விளைவு: இந்தியர்களின் முதலீட்டு மதிப்பு சரியும். அதாவது எங்கோ தென்னை மரத்தில் தேள் கொட்டினால் நமக்கு நெறி கட்டும்!

மற்றொரு பிரச்னை மேலே சொன்னதன் நேரெதிர். இந்தியர்கள் தம்மிஷ்டத்துக்கு அமெரிக்க வங்கிகளிடமிருந்து டாலர்களாகக் கடன் வாங்கி விடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் இந்திய ரூபாயும் டாலரும் கிட்டத்தட்ட மாறாத விகிதத்தில் உள்ளன. திடீரென்று பாகிஸ்தானில் புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் ராணுவத் தளபதி இந்தியா காஷ்மீரைத் தர மறுத்தால் இந்தியாமீது அணு குண்டை வீசுவேன் என்று மிரட்டுகிறார். இதனால் பயந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது பணத்தையெல்லாம் இந்தியாவிலிருந்து எடுத்துவிடுகிறார்கள். பங்குச்சந்தை கவிழ்கிறது. இதனால் ஹெட்ஜ் ஃபண்ட் ஆசாமிகள் புகுந்து விளையாடி (மே 2004 நாடாளுமன்றத் தேர்தல் ஞாபகம் வருகிறதா?) பணம் பண்ண, பங்குச்சந்தை அதலபாதாளத்தில் வீழ்கிறது. இதனால் பணம் நாட்டைவிட்டு வெளியேற டாலர்கள் மதிப்பு ஏற ரூபாய் மதிப்பு சரேலெனக் கீழே விழுகிறது. இப்பொழுது அமெரிக்க வங்கிகளில் கடன் வாங்கியவர்கள் நிலை கோவிந்தா. தற்கொலைதான் ஒரே வழி.

சர்வதேச பணச் சந்தையைப் பற்றிய மிகக் குறைவான புரிதல்கள் இருக்கும்போது நாமா full capital account convertibility வேண்டும் என்று மன்மோகன் சிங்கைக் கேட்டோம்? அவராகத்தானே இப்பொழுது பேச்சைக் கொண்டுவந்துள்ளார்? சிதம்பரத்துக்கு 1997 முதலே முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிட்டி மீது ஒரு காதல். "வந்ததுடா சான்ஸ்" என்று இப்பொழுது குதிக்கிறார்.

என் கருத்து: இப்பொழுது நமக்கு முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடி தேவையில்லை. எங்கெல்லாம் கட்டுப்பாடுகள் உள்ளனவோ, அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்துவோம். ஒருவருக்கு $25,000 முதலீடு என்பதை விரிவாக்கி $50,000, $100,000 என்று கொண்டு செல்வோம். எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி எந்த நாட்டுப் பங்குச்சந்தையிலும் எந்தப் பங்கிலும் முதலீடு செய்யலாம் என்று அனுமதி தருவோம் (இப்பொழுது அப்படி இல்லை). இந்திய நிறுவனங்கள் வெளி நாட்டு நிறுவனங்களை 10 பில்லியன் டாலர் மதிப்பு வரையிலும் வாங்கலாம் என்று விதிகளைத் தளர்த்துவோம். அதற்கு மேலும் வேண்டுமென்றாலும் கேட்டால் அனுமதி உடனே என்ற நிலைக்குக் கொண்டுவருவோம். இப்பொழுதைக்கு - அடுத்த பத்தாண்டுகளுக்கு - அது போதும். அதேபோல வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் நேரடியாக முதலீடு செய்யலாம் என்று கொண்டுவருவோம். பின் பிற நாட்டவரும் நேரடியாக இந்தியப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்று கொண்டுவருவோம்.

மற்றபடி நம் நேரத்தை இந்தியாவின் ஏழை மக்களை முன்னுக்குக் கொண்டுவருவதில் செலவழிப்போமே?

கிழக்காசிய நாடுகள் 1997 முதல் எப்படி முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிட்டியால் கஷ்டப்பட்டார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள - East Asian financial crisis.

நர்மதா பச்சாவோ ஆந்தோலன்

நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்படும் சர்தார் சரோவர் அணையின் உயரத்தை அதிகப்படுத்த பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களின் முதல்வர்கள் விரும்புகிறார்கள். குஜராத் மாநிலத்தில் கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் அம்மாநில மக்களும் இதனை விரும்புகின்றனர்.

நர்மதா அணை கட்டப்படுவதால் பல மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வேண்டிய நிவாரணங்களை அளித்துவிட்டதாகவும் மிச்சம் மீதி உள்ள சிலருக்கும் விரைவிலேயே அளித்துவிடுவதாகவும் மாநில அரசுகளின் சார்பில் கூறப்படுகிறது.

ஆனால் இன்று தி ஹிந்துவில் வெளியான செய்தியில் நிவாரணம் சரியான முறையில் செயல்படுத்தப்படவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் மேதா பட்கர் மற்றும் பிறர் நடத்தும் போராட்டத்தை நான் முற்றிலுமாக ஆதரிக்கிறேன். நிவாரணம் முழுமையாக நடக்காதவரையில் கட்டுமாணப் பணிகள் நடைபெறக்கூடாது, அது நியாயமற்றது என்றே நினைக்கிறேன். அணையின் உயரத்தை அதிகரிப்பதால் பல கோடி மக்கள் குஜராத்தில் பயன்பெறலாம். ஆனால் நிவாரணம் முழுவதுமாக வழங்கப்படாதவரையில் இந்தப் பயனைத் தள்ளிப்போடுவதில் தவறில்லை.

ஆனால் இன்று உச்சநீதிமன்றம் கட்டுமானப் பணிகள் தொடரலாம் என்று கூறியுள்ளது. இது மிகவும் வருத்தம் தரக்கூடிய தீர்ப்பு. ஆகஸ்ட் 2006க்குள் இடம் பெயரும் அனைவருக்கும் நிவாரணம் கட்டாயம் அளிக்கப்படும் என்கிறார் அரசு வக்கீல். ஆனால் உடனேயே "அப்படி நிரந்தர நிவாரணத்தை ஆகஸ்ட் 2006க்குள் அளிக்க முடியாவிட்டால் தாற்காலிக நிவாரணமாவது வழங்கப்படும்" என்கிறார் வக்கீல். இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆகஸ்ட் 2006க்குள் முழு நிரந்தர நிவாரணம் அளிப்பது சாத்தியமல்ல என்பதுதான். இதையேதான் அருந்ததி ராய் போன்றவர்களும் சொல்கிறார்கள். ஆனால் சர்தார் சரோவர் திட்டத்தின் தலைவர் முதல் பிற அரசு அதிகாரிகள், முதல்வர்கள் ஆகியோர் பதிலாகச் சொல்வது பொய் கலந்த திட்டல்கள் மட்டுமே.

CNN-IBN-ல் நடைபெற்ற விவாதத்தில் சர்தார் சரோவர் நர்மதா நிகம் லிமிடெட் தலைவர் PL லாஹிரி, அருந்ததி ராய் பொய் சொல்கிறார் என்றே கடுமையாகக் குற்றம் சாட்டினார். ஆனால் பொய் சொல்வது அரசு அதிகாரிகள்தான் என்று நிரூபணமாகியுள்ளது.

தி ஹிந்துவில் முன்னாள் மைய நீர் வளத்துறைச் செயலர் ராமஸ்வாமி ஐயர் எழுதியுள்ள இரண்டு கட்டுரைகளும் இந்த விவாதத்தின் பல்வேறு கோணங்களை அலசுகின்றன. அவசியம் படிக்கவேண்டியவை. ஒன்று | இரண்டு

Thursday, April 13, 2006

மும்பை பார் நடனம் மீதான தடை விலக்கல்

மும்பை நடன விடுதிகளில் பெண்கள் நடனமாடுவதைத் தடுக்க மஹாராஷ்டிரா அரசு ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது. ஆளுனர் அதில் கையெழுத்திடவில்லை. பின் மஹாராஷ்டிரா அரசு சட்டசபையில் ஒரு மசோதாவைக் கொண்டுவந்து அதனைச் சட்டமாக்கியது.

இதை எதிர்த்து நடன விடுதிகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பெண்களைச் சுரண்டுவதைத் தடுப்பதாகச் சொல்லிச் சட்டம் இயற்றிய அமைச்சர், பல்லாயிரக்கணக்கான பெண்கள் வேலையின்றித் திண்டாடப்போவதைக் கருத்தில் கொள்ளவில்லை.

வழக்கில் நேற்று வெளியான தீர்ப்பில் இந்தச் சட்டம் செல்லாது; அதிலும் முக்கியமாக சில இடங்களுக்கு மட்டும் விலக்கு அளித்து இயற்றப்பட்டுள்ள இந்தச் சட்டம் சரியல்ல என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதை எதிர்த்து மஹாராஷ்டிரா அரசு மேல்முறையீடு செய்யலாம்.

முந்தைய பதிவு:
மும்பை பார் நடனம் மீதான தடை


Tuesday, April 11, 2006

சிவசங்கரன் சஹாரா ஒன் நிறுவனத்தில் முதலீடு

தமிழகத்தில் இயங்கும் ஏர்செல் மொபைல் நிறுவனத்தை உருவாக்கி சமீபத்தில் அதனை மலேசிய தொலப்பேசி நிறுவனமான மேக்சிஸ், அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்தை நடத்தும் பிரதாப் ரெட்டி குடும்பத்தினருக்கு விற்ற சிவசங்கரன், இப்பொழுது தொலைக்காட்சி மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனமான சஹாரா ஒன் மீடியா அண்ட் எண்டெர்டெயின்மெண்ட் என்னும் நிறுவனத்தில் 14.98% பங்குகளை ரூ. 120 கோடிக்கு வாங்கியுள்ளார். (இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் ஆட்டங்களை கேபிள் மூலம் ஒளிபரப்பு செய்யும் உரிமையைப் பெற்றுள்ளது சஹாரா ஒன்.)

சிவசங்கரன் சிங்கப்பூரில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர். இவரது முதலீடுகள் கவனிக்கத் தகுந்தவை. பல்வேறு காலகட்டங்களில் இவர் செய்துள்ள முதலீடுகள் இவருக்கு நிறைய வருவாயை ஈட்டியுள்ளது. ஆனால் இவர் எந்தெந்தத் தொழில்களிலெல்லாம் ஈடுபட்டுள்ளார், என்னென்ன செய்கிறார் என்று முழுமையான தகவல்கள் வெளியே தெரிவதில்லை. தெரிந்த சில கீழே:

ஸ்டெர்லிங் கம்ப்யூட்டர்ஸ் என்ற நிறுவனம்மூலம் சிவா பிசி என்ற கணினிகளை இந்தியாவில் விற்றார். ஆரம்பித்த நேரத்தில் - 1980களின் கடைசியில் - இந்த நிறுவனம் இந்தியாவில் ஒரு புரட்சியை உண்டாக்கியது. மற்ற கணினிகள் எல்லாமெ அப்பொழுது ரூ. 50,000க்கும் மேல்!ஆனால் சிவா பிசி முதலில் ரூ. 33,000 என்றும், பின்னர் ரூ. 30,000க்கும் குறைவாகவும் விற்றது.

1990களின் ஆரம்பத்தில் மத்திய அரசு மொபைல் சேவை உரிமங்களை தனியாருக்குத் தர முன்வந்தது. அப்பொழுது சிவசங்கரன் பல தொலைப்பேசி வட்டங்களுக்கான உரிமங்களைப் பெற்றார். ஆனால் எல்லா இடங்களிலும் மொபைல் பேசிச் சேவையைத் தரக்கூடிய முதல் அவரிடம் இல்லை. அதனால் தனது உரிமங்களை - முக்கியமாக புது தில்லி உரிமத்தை - விற்றார். புது தில்லி உரிமத்தை வாங்கியது எஸ்ஸார் நிறுவனத்தின் ருய்யா குடும்பம். இந்தக் குடும்பம் இந்த உரிமத்துக்குப் பதிலாக பணமும் அவர்களிடமிருந்த தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி (அல்லது "நாடார்கள்" வங்கி) பங்குகளையும் கொடுத்தனர்.

மெர்க்கண்டைல் வங்கி விவகாரம் ஒரு தனிக்கதை. அதற்குள் நாம் போகவேண்டாம். சிவசங்கரனுக்கு மெர்க்கண்டைல் வங்கியின் பங்குகளை மீண்டும் நாடார்களுக்கு விற்றதில் நல்ல லாபம்.

தமிழகத்தின் செல்பேசி உரிமத்தை வைத்து உருவாக்கியதுதான் ஏர்செல் மொபைல் நிறுவனம். நாடெங்கும் மொபைல் கட்டணம் நிமிடத்துக்கு ரூ. 30, 40 என்று பயமுறுத்தியபோது கம்பித் தொலைப்பேசிக் கட்டணத்திலேயே கம்பியில்லாத் தொலைப்பேசிக் கட்டணத்தையும் கொண்டுவந்த பெருமை சிவசங்கரனுக்குத்தான். அதன்பிறகே பிற செல்பேசி நிறுவனங்களும் குறைந்த கட்டணத்திலேயே தரமான சேவையைக் கொடுத்து லாபத்தையும் ஈட்டமுடியும் என்ற எண்ணத்துக்கு வந்தனர்.

ஆர்.பி.ஜி குழுமத்தின் சென்னை வட்ட நிறுவனத்தையும் விலைக்கு வாங்கி (முதலில் வோடாஃபோனிடமிருந்து கொஞ்சம், பின்னர் ஆர்.பி.ஜியிடமிருந்து மீதம்) அதனை மேக்சிஸ், அப்போலோ குழுமங்களுக்கு கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக விற்றதில் சிவசங்கரனுக்குக் கொள்ளை லாபம்!

இதற்கிடையில் டிஷ்நெட் டி.எஸ்.எல் என்ற நிறுவனத்தை உருவாக்கினார் சிவசங்கரன். இந்த நிறுவனம் வீடுகளுக்கு டி.எஸ்.எல் முறையில் இணைய வசதியைச் செய்து தந்தது. இந்தச் சேவை உருவான காலகட்டம் மிகவும் மோசமானது. தொலைப்பேசிச் சேவை தனியார்மயமாக்கப்படாத நேரம் அது. அதையடுத்து வந்த காலகட்டத்திலும் உரிமக் கட்டணம் எக்கச்சக்கமாக இருந்தது. வெறும் இணையச் சேவைக்காக வீடுகளுக்கு தொலைப்பேசிக் கம்பிகளை தலைக்கு மேலே இழுத்து வந்து டி.எஸ்.எல் சேவையைத் தந்தார்கள்! சில வருடங்களுக்கு இந்தியாவில் கம்பி வழியாக டி.எஸ்.எல் சேவையைத் தந்த ஒரே நிறுவனம் டிஷ்நெட் டி.எஸ்.எல்லாக மட்டுமே இருந்தது. பின்னர் இந்த நிறுவனத்தை டாடாவின் வி.எஸ்.என்.எல் விலைக்கு வாங்கியது. அதிலும் சிவசங்கரனுக்கு லாபம்தான். சென்ற மாதம் சிவசங்கரன் டாடா டெலிசர்விசஸ் நிறுவனத்தில் 8% பங்குகளை சுமார் ரூ. 1,200 கோடிக்கு வாங்கினார்.

ஆக, கணினி, இணையம், செல்பேசி ஆகிய துறைகளில் கால் பதித்து, புதுமையான சேவையைக் கொடுத்து, அதே சமயம் லாபத்தையும் பெற்று தனது நிறுவனங்களை நல்ல வருவாய்க்குப் பிறரிடம் விற்று சாதனையாளராகத் திகழ்கிறார் சிவசங்கரன்.

இவர் எந்தத் துறையிலும் எந்த நிறுவனத்திலும் நுழைந்தாலும் அந்த நிறுவனத்தைக் கவனமாகப் பார்ப்பது நமக்கு அவசியம்.

5th June 2003: Sivasankaran acquires 20.76% in RPG Cellular, Chennai for approximately USD 7 million.
19 December 2003: Sivasankaran acquires 79.24% in RPG Cellular from RPG Group for Rs. 210 crore
19 March 2004: VSNL takes over Dishnet's ISP division for Rs. 270 crore
April 2004: Sterling acquires 65.69% stake in Barista from Turner Morrison for Rs. 30 crore
December 2004: Sterling acquires the remaining 34.31% stake from Tata Coffee for an undisclosed sum
30 December 2005: Sivasankaran sells Aircel (TN + Chennai) to Maxis and Reddy family for Rs. 4,800 crore+ app
9 March 2006: Sivasankaran gets 8 pc equity in Tata Tele for Rs. 1,200 crore
Sivasankaran has recently bought a small stake in Idea Cellular (1.9%) held by AIG and is selling it off to an investment firm for about Rs. 150 crore.
10 April 2006: Sivasankaran acquires 14.98% in Sahara One Media & Entertainment for Rs. 120 crore

Monday, April 10, 2006

சன் டிவி IPOவில் கிடைத்தது ரூ. 600 கோடி

ராய்ட்டர் செய்தி

சன் டிவியின் IPOவில் 45 மடங்கு அதிகமாகப் பங்குகள் கோரப்பட்டதால் ஒவ்வொரு பங்கும் ரூ. 875க்கே கொடுக்கப்படும் என்று தெரிய வருகிறது. இதனால் சன் டிவி குழுமத்துக்கு ரூ. 600 கோடி முதலீடு கிடைக்கும்.

முந்தைய பதிவுகள்:
சன் டிவி ஐ.பி.ஓ
சினிமா தயாரிப்பாளர் சங்கத்தின் அழுகை, புலம்பல்
சன் டிவி IPO
சன் டிவி குழுமத்தின் மதிப்பு என்ன?
Sun TV plans listing and public offer

Saturday, April 08, 2006

அரிசி மான்யம் (Rice subsidy)

கலைஞர் கருணாநிதி ரூ. 2க்கு கிலோ அரிசி கொடுப்போம் என்கிறார். கேப்டன் விஜயகாந்த் "ஏழைகளுக்கு" மாதம் 15 கிலோ அரிசி இலவசமாகக் கொடுப்போம் என்கிறார்.

தற்போது தமிழகத்தில் நடப்பது என்ன என்று தெரிந்துகொள்ள எனக்கு ஆசை வந்தது. அதனால் கொஞ்சம் நேரம் செலவு செய்து பார்த்ததில் எனக்குக் கிடைத்த தகவல்கள் இவை.

தமிழகத்தில் தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் ரேஷன் கார்டுகள் மொத்தம் 1.88 கோடி. இதில் சென்ற வருடம் 1.76 கோடி குடும்பங்கள் மட்டுமே ரேஷனில் அரிசி வாங்கியுள்ளனர்.

இந்த 1.88 கோடி குடும்பங்களில் மத்திய அரசு கிட்டத்தட்ட 50 லட்சம் குடும்பங்களை மட்டுமே வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்கள் என்று அறிவிக்கிறது. (ஆண்டு வருமானம் ரூ. 24,000க்குக் கீழே). மத்திய அரசே மாநில அரசுகளுக்கு மான்ய விலையில் அரிசியை விற்கிறது. வறுமைக்கோட்டுக்குக்கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் மத்திய அரசு கிலோ ரூ. 5.65 என்ற கணக்கில் மாநில அரசுக்கு அரிசி விற்கிறது. வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ள மக்களுக்கு அரிசி வழங்க வேண்டுமானால், மத்திய அரசிடமிருந்து இந்த அரிசியை வாங்க வேண்டுமானால் அதற்கு ஆகும் செலவு கிலோவுக்கு தற்போது ரூ. 9.15 !

வறுமைக்கோட்டுக்குக் கீழே:
மொத்தக் குடும்பங்கள் = 50 லட்சம்
ஒவ்வொரு குடும்பத்துக்கும் வருடத்துக்கு வேண்டிய அரிசி = 240 கிலோ
ஒரு கிலோவுக்கு ஆகும் செலவு = ரூ. 5.65
அதை ரூ. 2.00க்கு விற்பதால் ஏற்படும் நஷ்டம் = 50 லட்சம் * 240 * (5.65 - 2.00) = 438 கோடி

வறுமைக்கோட்டுக்கு மேலே:
மொத்தக் குடும்பங்கள் = 1.88 கோடி - 50 லட்சம் = 1.38 கோடி
ஒவ்வொரு குடும்பத்துக்கும் வருடத்துக்கு வேண்டிய அரிசி = 240 கிலோ
ஒரு கிலோவுக்கு ஆகும் செலவு = ரூ. 9.15
அதை ரூ. 2.00க்கு விற்பதால் ஏற்படும் நஷ்டம் = 1.38 கோடி * 240 * (9.15 - 2.00) = 2,368 கோடி

மொத்த நஷ்டம் = ரூ. 2,806 கோடி

இதுதான் மான்யத் தொகையாகக் காண்பிக்கப்படும்.

நடக்கும் நிதியாண்டு 2006-07-ல் தமிழக அரசு இந்த மான்யத்துக்காக ஒதுக்கி வைத்த தொகை ரூ. 1,500 கோடி. (அதாவது அரிசி ரூ. 3.50 என்று இருந்தால்). சென்ற ஆண்டுகளில் மக்கள் எந்த அளவுக்கு அரிசி வாங்குகிறார்கள் என்பதை கணக்கிட்டு அதற்கேற்றவாறு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது இந்த மான்யம். இப்பொழுது கருணாநிதியின் கணக்கின்படி வெறும் ரூ. 540 கோடிதான் அதிகம் தேவைப்படும் என்று அவர் சொல்கிறார். ஆனால் உண்மையில் மான்யம் இன்னமும் ரூ. 1,300 கோடி அதிகம் தேவைப்படும். ரூ. 2 க்கு ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் அரிசி கிடைத்தால் அதிக அளவில் வாங்குவார்கள். அதனால் முழு மான்யமாக ரூ. 2,800 கோடி தேவைப்படும். எனவே பட்ஜெட் எஸ்டிமேட்டைவிட நிச்சயம் ரூ. 1,000-1,300 கோடி அதிகம் தேவைப்படும்.

முதலில் ஏன் அனைத்து மக்களுக்கும் - அதாவது வறுமைக்கோட்டுக்கு மேலே இருப்பவர்களுக்கும் - சுமார் 1.38 கோடி குடும்பங்களுக்கு - மிக அதிக அளவில் மான்யம் வழங்கப்படுகிறது என்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு, அதாவது சுமார் 50 லட்சம் குடும்பங்களுக்கு மட்டும் மான்யம் என்றால் அதனால் ஆகும் செலவு குறைவுதான். பிறருக்கு மான்யமே இல்லாது கிலோ ரூ. 10 என்ற அளவில் அரிசியை விற்கவேண்டும்.

எந்த மான்யமாக இருந்தாலும் ஏன் அதைக் கொடுக்கிறோம், யாரிடமிருந்து பணத்தை எடுத்து குறிப்பிட்ட வகுப்பினருக்குக் கொடுக்கிறோம் என்று கவனிக்கவேண்டும். அதை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

குறைந்த விலை அரிசி அல்லது கலர் டிவி இலவசம் என்பது தேவையா, அதற்குபதில் வேறெதாவது செய்வது நல்லதா என்று கவனிக்கவேண்டும். அடிப்படை உணவு, அடிப்படை மருத்துவம், அடிப்படைக் கல்வி, மேற்படிப்பு, கல்விக்குத் தேவையான பிற (சைக்கிள், பஸ் பாஸ், புத்தகங்கள்) ஆகியவை தவிர்த்து வேறெதற்கும் மான்யங்கள் தருவதை மிகுந்த யோசனையுடனே செயல்படுத்தவேண்டும்.

விவசாயத்துக்கான மான்யம் (மின்சாரம், உரம், தண்ணீர், குறைந்த வட்டிக் கடன்) ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியது. வீட்டுக்கான மின்சாரம் ஏற்றுக்கொள்ள முடியாதது - வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள வீடுகளுக்கும்கூட! ஆனால் இன்னமும் தொடர்கிறது.

திமுக எப்படியாவது இந்தத் தேர்தலை வெல்லவேண்டும் என்பதற்காக இஷ்டத்துக்கு வாரிவிடும் தேர்தல் வாக்குறுதிகள் அவர்களை கேலிக்குள்ளாக்கும்.

இதற்கிடையில் புதிதாகக் கட்சியைத் தொடங்கியுள்ள விஜயகாந்த் இதைவிட கேலிக்கூத்தான மான்யங்களையும் இலவசங்களையும் பேசுகிறார். ஏழைகளுக்கு 15 கிலோ அரிசி மாதத்துக்கு இலவசம் என்பதை மட்டும் சில மாறுதல்களுடன் ஏற்றுக்கொள்வேன். வறுமைக்கோட்டுக்குக்கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம் 15 கிலோ அரிசி இலவசம் என்பது முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளக்கூடியது. உணவு அடிப்படை என்ற வகையில். அதற்குமேல் அவர் ஏகப்பட்டவற்றை வாரி வழங்குகிறார். அவருக்கு தான் ஜெயிக்கவே போவதில்லை என்று தெரிந்துள்ளது. ஏனெனில் ஜெயித்தால் நிச்சயமாக அவரால் இந்த வாக்குறுதியில் ஒன்றைக்கூட நிறைவேற்ற முடியாது.

நிகர்நிலை status update

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விடுத்த அறிக்கை சென்னை உயர்நீதிமன்றத்தைத் திருப்திப்படுத்தவில்லை. [தி ஹிந்து செய்தி]

* வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது இந்த அறிக்கை ஏன் இப்பொழுது வெளியானது - என்று SFI வழக்கறிஞர் வைகை கேட்டார். அதற்கு பதிலாக இந்த அறிக்கையை வெளியிட ஜனவரி 2006-இலிருந்தே வேலை ஆரம்பித்துவிட்டது; UGC, AICTE இருவருடனும் ஆலோசனை செய்தே மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது என்றார் UGC வழக்கறிஞர் சந்துரு.

* மத்திய அரசின் அறிக்கை முழுமையானதல்ல என்று நீதிபதிகள் கருத்து கூறினர். மேலும் AICTE ஓர் ஆலோசனை மன்றமாக இல்லாது கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தும் ஆணையமாக இருக்கவேண்டும் என்றும் தாங்கள் கருதுவதாகச் சொன்னார்கள். ("As the highest body having necessary expertise, the AICTE must have a mandatory and not advisory role.")

* மாணவர்களுக்கான வழக்கறிஞர்கள் வைகை, நளினி சிதம்பரம் இருவரும் மத்திய அரசின் அறிக்கை ஏற்புடையதல்ல என்றும் அதனை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாகவும் தெரிவித்தார்கள். அதைப்போலவே SRM நிகர்நிலை சார்பில் ஆஜரான ராஜீவ் தவானும் தாமும் இந்த அறிக்கையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதாக அறிவித்துள்ளார்.

ஆக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இந்த அறிக்கையின்மூலம் யாரையுமே சந்தோஷப்படுத்தவில்லை. பிரச்னையை மேலும் குழப்பியுள்ளார்கள். இதனால் நிச்சயமாக இந்தப் பிரச்னை உச்சநீதிமன்றம் வரை செல்லப்போகிறது.

இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் 17 வரை தள்ளிப்போடப்பட்டுள்ளது.

Friday, April 07, 2006

AICTE விவகாரத்தில் அர்ஜுன் சிங் அமைச்சரகம்

AICTE, பல்கலைக்கழக மான்யக் குழு (UGC) என்ற இரண்டும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரகத்தின்கீழ் வருகிறது. இரண்டும் நாட்டின் பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுடன் அடிதடி சண்டையில் இறங்கியுள்ளன. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.

இந்த விஷயம் வழக்குவரையில் செல்லாமல் அர்ஜுன் சிங்கோ அல்லது வேறு ஜூனியர் அமைச்சரோ அல்லது ஒரு செயலரோகூட இதைத் தீர்த்திருக்கலாம். சம்பந்தப்பட்ட நிகர்நிலை வேந்தர்கள், UGC, AICTE தலைவர்கள் அனைவரையும் அழைத்து இப்படித்தான் செயல்முறைகள் நடக்கவேண்டும் என்று விளக்கமாகச் சொல்லியிருக்கலாம். பிரச்னை அத்துடன் முடிந்திருக்கும்.

ஆனால்... அதையெல்லாம் விட்டார்கள். இப்பொழுது பிரச்னை சென்னை உயர்நீதிமன்றத்தி. இந்த சமயத்தில் மனிதவள மேம்பாட்டு அமைச்சு ஒரு சுற்றறிக்கை விடுகிறது.

அந்தச் சுற்றறிக்கை என்ன சொல்கிறது?
  • நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஒரு புதுப் படிப்பை ஆரம்பிக்க AICTE-இடம் எந்த அனுமதியும் பெறவேண்டியதில்லை.
  • ஆனால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் AICTE கொடுத்திருக்கும் குறைந்தபட்ச வரைமுறைகளைக் கட்டாயம் பின்பற்றவேண்டும்.
  • UGC, AICTE இரண்டுமே எந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகத்துக்குள்ளும் நுழைந்து ஆய்வு செய்யலாம். ஆனால் AICTE ஆய்வு, நிர்வாகவியல், பொறியியல் பட்டப்படிப்புகளின் தரம் எப்படி இருக்கிறது என்பதில் மட்டுமே இருக்கும். UGC ஆய்வு நிகர்நிலையின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்தும் இருக்கும்.
  • AICTE ஏதாவது குற்றம் குறைகளைக் கண்டுபிடித்தால் அதனைச் சரி செய்யுமாறு நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களைக் கட்டாயப்படுத்த முடியாது. தான் கண்டுபிடித்தவற்றை UGCயிடம் சொல்லவேண்டும்.
  • UGCதான் AICTEயின் ஆய்வறிக்கையைக் கையில் வைத்துக்கொண்டு நிகர்நிலைகள் என்ன செய்யவேண்டும் என்று அவற்றை நிர்பந்திக்க முடியும்.
  • நிகர்நிலைகள் UGCயின் கட்டளைகளை ஏற்காவிட்டால் அவற்றின் நிகர்நிலை அந்தஸ்து போக நேரிடலாம்.
மொத்தத்தில் இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன.
As for the AICTE, it "may cause an inspection of the relevant departments of the institution declared as `Deemed-to-be-University' offering courses that come under the jurisdiction of the AICTE Act 1987, in order to ensure the maintenance of standards."
அதாவது சத்யபாமா, விநாயகா மிஷன், SRM ஆகியவை AICTE தங்களை எந்தக் கேள்வியும் கேட்கக்கூடாது என்று இப்பொழுது நீதிமன்றம் சென்றுள்ளது தவறு. ஏனெனில் மனிதவள அமைச்சகத்தின் அறிக்கையின்படி AICTEக்கு அந்த அதிகாரம் உண்டு. (ஏன் இதை உடனடியாகச் சொல்லாமல் இந்த விஷயம் கோர்ட் செல்லும்வரை தாமதித்தார்கள்?)

இரண்டாவது: AICTE ஒரு பல் பிடுங்கபட்ட பாம்பு. எந்த நிகர்நிலையாவது தப்பு செய்துள்ளது என்று கண்டறிவது மட்டுமே அதன் வேலை. அதன் அறிக்கையை UGCயிடம் சமர்ப்பித்துவிட்டு சும்மா உட்கார்ந்திருக்கவேண்டியதுதான். அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது UGCயின் வேலை.

சென்னை உயர்நீதிமன்றம் இந்த அறிக்கையின்மீது என்ன கருத்து சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

முந்தைய பதிவு:
நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் வழக்கு

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு

104வது அரசியல் அமைப்புச் சட்டத் திருத்த மசோதா சென்ற ஆண்டு டிசம்பர் 21, டிசம்பர் 22 தேதிகளில் நாடாளுமன்றத்தின் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் நிறைவேறியது.

இந்தச் சட்டத் திருத்தத்தின்படி மத்திய மாநில அரசுகள் தங்களிடம் நிதியுதவி பெறும் கல்விக்கூடங்களிலும் தங்களால் கட்டுப்படுத்தப்படும் சிறுபான்மையினர் அல்லாத பிற தனியார் கல்விக்கூடங்களிலும் ஷெட்யூல்ட் மற்றும் பழங்குடி இனத்தவர் தவிர்த்த பிற பிறபடுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு செய்யலாம். ஆனால் அனைத்து இட ஒதுக்கீடுகளும் ஒன்று சேர்ந்து 50%த் தாண்ட முடியாது. [தமிழகத்தில் ஏற்கெனவே 69% இட ஒதுக்கீடு நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.]

இதையடுத்து நேற்று மத்திய மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங், மத்திய அரசின் கீழான கல்விக்கூடங்களில் ஏற்கெனவே இருக்கும் ஷெட்யூல்ட், பழங்குடியினருக்கான 22.5% இட ஒதுக்கீட்டுக்கு மேலாக பிற்படுத்தப்பட்டோருக்காக என்று 27% இட ஒதுக்கீடு செய்ய ஒரு திட்டம் உள்ளது என்று தெரிவித்தார். இதனை இவரது அமைச்சரகம் மத்திய கேபினெட்டுக்குப் பரிந்துரை செய்திருக்கிறது. இதனை கேபினெட் ஏற்றுக்கொண்டால் ஐஐடி, ஐஐஎம், ஜிப்மர், AIIMS தொடங்கி பல்வேறு கல்விக்கூடங்களில் மொத்தமாக 49.5% வரை இட ஒதுக்கீடு அமலில் வரும்.

இதனை முன்னதாகச் செயல்படுத்த முனைந்தவர் முந்நாள் பிரதமர் வி.பி.சிங். அதையடுத்து நிகழ்ந்ததுதான் அத்வானியின் ரத யாத்திரை; பாபர் மசூதி இடிப்பு, பாஜக ஆட்சிக்கு வருகை etc.

நேற்றோ, அத்வானியின் ரத யாத்திரை தொடங்கியது; மற்றொரு புறம் அர்ஜுன் சிங்கின் அறிவிப்பு.

முந்தைய பதிவுகள்:
இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது
சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு
இட ஒதுக்கீடு - மறு பரிசீலனை மனு தள்ளுபடி
இட ஒதுக்கீடுகள் பற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு

தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு மே 18, 19

மே 13, 14 தேதிகளில் நடக்க இருந்த தமிழ்நாடு தொழிற்கல்வி நுழைவுத் தேர்வு மே 18, 19 தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.

மே 8 அன்று தமிழகத்தில் தேர்தல் நடப்பதாலும் அடுத்த சில தினங்களில் வாக்கு இயந்திரங்களைச் சேர்த்து வைப்பது, எண்ணிக்கையை அறிவிப்பது போன்ற காரணங்களுக்காக கல்வி நிலையங்கள் தேவைப்படுவதாலும் அதே இடங்களிலேயேதாம் நுழைவுத் தேர்வும் நடக்க இருப்பதால் இந்த அறிவிப்பு.

இதனை ஏன் முன்னமேயே யோசிக்கவில்லை என்ற கேள்வி எழலாம்!

Thursday, April 06, 2006

நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் வழக்கு

தொடரும் இந்த வழக்கில் நேற்றும் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி AP ஷா இவ்வாறு சொல்லியுள்ளார்.
We are not impressed with the arguments that some deemed universities have better infrastructure than other technical institutions, and hence, they need not subject themselves to inspection [from AICTE].
மேலும் நீதிபதிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்து பெற்றாலும் அந்தக் கல்வி நிறுவனம் AICTE விதிமுறைகளுக்குக் கட்டுப்படவேண்டும் என்று சொல்லியுள்ளனர்.

முழுச்செய்தி

பல்கலைக்கழக மான்யக் குழு (UGC) வழக்கறிஞர் வேறு தனி வாத்தியம் வாசிக்கிறார். யார் பக்கம் இவர் வழக்காடுகிறார் என்று புரியவில்லை.
Mr. Chandru [counsel for UGC], however, said that by trying to exclude the UGC's jurisdiction over deemed universities, the AICTE was attempting to arrogate to itself more powers.
AICTE இப்படி ஏதும் சொன்னதாகத் தெரியவில்லை. AICTE தமக்கு உள்ள உரிமையைப் பற்றி மட்டும்தான் வாதாடுகிறதே தவிர UGC-யின் வேலைகளைத் தாங்கள் எடுத்துக்கொள்வதாக எங்குமே சொல்லவில்லை.

இதற்கிடையில் All-India Medical and Engineering Colleges Association என்ற அமைப்பின் தலைவர் TD நாயுடு தம் அமைப்பையும் இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று வாதாடுகிறார்! இவரது பின்னணி என்ன? இவர், இவரது அமைப்பின் வண்டவாளங்களை தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் அம்பலம் செய்ததை என் பதிவில் ஏற்கெனவே எழுதியுள்ளேன். அதுமட்டுமின்றி கடந்த சில தினங்களாக தமிழகத்தின் இரண்டு பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் தங்களை வேறு கல்லுரிகளுக்கு மாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த இரண்டு கல்லுரிகளுள் ஒன்று திருவள்ளூரில் உள்ள தீனதயாள் பொறியியல் கல்லூரி. அதனை யார் நடத்துகிறார் தெரியுமா? திருவாளர் TD நாயுடு!

தனது தகிடுதத்தங்கள் ஒருபுறம் இருக்க, நாயுடு, நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் எவ்வாறு மாணவர்களை ஏமாற்றுகின்றன என்று சொல்ல வந்திருக்கிறார்!
The deemed universities did not comply with the mandatory regulation such as the 15:1 student-teacher ratio, he said. The UGC did not have monitoring agencies all over India to inspect the deemed universities, and the function was entrusted with the AICTE, he said.
தனது அனுமதியில்லாமல் நாயுடுவின் கல்லூரி மாணவர்களைப் பிற கல்லூரிகளுக்கு மாற்றக்கூடாது என்று தமிழக அரசை AICTE தடுத்துள்ளது. (Source: Sun TV)

When the executives fail us completely, and the legislatures do not care, our only hope is judiciary. Sadly.

முந்தைய பதிவு
நிகர்நிலைகள் AICTEக்குக் கட்டுப்பட்டவை

Tuesday, April 04, 2006

Capital Account Convertibility

சமீபத்தில் மன்மோகன் சிங், சிதம்பரம் இருவருமே கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடி பற்றி அதிகமாகப் பேசத் தொடங்கியுள்ளனர். "இதோ வந்துவிட்டது", "நாம் ஏற்கெனவே ரெடியாக இருக்கிறோம்" என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டனர்.

முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடி என்றால் என்ன என்று கேட்பவர்களுக்காக எளிதான ஒரு விளக்கம். இப்பொழுதைக்கு இந்திய ரூபாயை வேறு எந்த - அதாவது அமெரிக்க டாலர், பிரிட்டன் பவுண்ட், ஐரோப்பிய யூரோ, ஜப்பானிய யென் என்ற எந்த - நாணயத்துக்கும் யார் வேண்டுமானாலும் இஷ்டத்துக்கு மாற்ற முடியாது. எந்த மாற்றமும் கடைசியாக இந்திய ரிசர்வ் வங்கி வழியாகவோ அவர்கள் அனுமதித்திருக்கும் சில பணமாற்று நிறுவனங்கள் வழியாகவோதான் முடியும். அதைப்போலவே பிற நாட்டு கரன்சிகளை இந்திய ரூபாயாக மாற்றுவது. முழு மாற்றுதல் இப்பொழுது முடியாது. ஆனால் ஓரளவுக்கு முடியும். நாம் கிரெடிட் கார்ட் கொண்டு வெளிநாட்டு இணைய வர்த்தகத் தளத்தில் பொருள்/சேவை வாங்கலாம். பிற நாடுகளுக்கு சுற்றுலா செல்லும்போது அங்கு கிரெடிட் கார்டுகள்மூலம் பொருள்களை/சேவைகளைப் பெறலாம். அனுமதிக்கப்பட்ட பிற செலவுகளை - மருத்துவச் செலவுகள், படிப்புச் செலவுகள், முதலீடுகள் ஆகியவை - செய்யலாம், அதுவும் அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் இருக்க வேண்டும்.

ஆனால் அமெரிக்க டாலரை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த நாட்டு மக்களுக்கு எந்த சட்ட திட்டங்களும் கிடையாது. அவர்கள் தமது டாலரை எந்த நாட்டு கரன்சியாகவும் மாற்றிக்கொள்ளலாம்; யாரிடமும் அனுமதி கேட்க வேண்டியதில்லை. அதை எந்த நாட்டிலும் எப்படியும் செலவழிக்கலாம்.

முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடி வந்துவிட்டால் இந்தியார்களும் இந்திய ரூபாயை இப்படிச் செய்யலாம். பல கட்டுப்பாடுகள் நீங்கிவிடும்.

அப்படியானால் செய்யவேண்டியதுதானே என்று நீங்கள் கேட்கலாம். பல பிரச்னைகளும் உண்டு. லத்தீன் அமெரிக்க நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகள் பல இதைச் செய்து ரொம்பவே திண்டாடிப் போய் விட்டன ஒரு காலத்தில். பல இன்னமும்கூட மீண்டு வரவில்லை.

எனவே இந்தியாவில் இப்பொழுது தேவை இதைப்பற்றிய பொது விவாதம். இப்பொழுதைய சட்ட விதிமுறைகளுக்குள் கேபினெட் விரும்பினால் ரிசர்வ் வங்கி உதவியுடன் இதனை நிறைவேற்றலாம்; நாடாளுமன்றத்தில் சட்டங்கள் ஏதும் இயற்றவேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

அடுத்த சில தினங்களின் சென்னையில் இரண்டு கூட்டங்கள் நடைபெற உள்ளன.

1. Observer Research Foundation - சென்னை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள அவர்களது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருக்கும் பேச்சு. 8 ஏப்ரல் 2006, 11.00 - 13.00 மணி. கே.சுப்ரமணியம், முன்னாள் இணைச் செயலர், மத்திய நிதி அமைச்சகம் இதைப்பற்றிப் பேசுகிறார்.

2. சுதேசி விழிப்புணர்வு இயக்கம் (Swadeshi Jagran Manch) ஏற்பாடு செய்திருக்கும் கருத்தரங்கம் - சென்னை விவேகானந்தா கல்லூரி, ஓபுல் ரெட்டி அரங்கில் 16 ஏப்ரல் 2006, மாலை 6.00 மணி அளவில். SJM தேசிய ஒருங்கிணைப்பாளர் முரளிதர் ராவ், ஓய்வு பெற்ற IAS அதிகாரி பி.எஸ்.ராகவன் (இவர் மத்திய அளவில் பல துறைகளில் செயலராகவும், மாநில தலைமைச் செயலராகவும் பணியாற்றியுள்ளார்) ஆகியோர் பேசுகிறார்கள்.

====

இரண்டுக்கும் போக முயற்சி செய்வேன். என் கணிப்பில் இப்பொழுது முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிட்டிக்கு இந்தியா போகவேண்டிய தேவையில்லை என்றே நினைக்கிறேன். இன்னமும் ஐந்து-பத்து வருடங்கள் பொறுத்திருக்கலாம்.

காலவரிசை:

மார்ச் 18: கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடி இந்தியாவுக்கு நல்லது என்கிறார் மன்மோகன் சிங்.

மார்ச் 20: கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடி சீக்கிரமே என்கிறார் சிதம்பரம்.

மார்ச் 20: ரிசர்வ் வங்கி, தனது முன்னாள் துணை ஆளுனர் தாராபூர் தலைமையில் ஒரு கமிட்டியை நியமித்து, முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடிக்கு எவ்வாறு செல்வது என்று வழிகாட்டச் சொல்கிறது. இவர்களது அறிக்கை ஜூலை 31க்குள் கிடைக்கும் என்று தெரிகிறது.

மார்ச் 21: பிரதமரை பத்திரிகைகள் தவறாக மேற்கோள் காட்டியுள்ளன. இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை. பிரதமர் கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடி பற்றிய தெளிவான பாதை வேண்டும் என்றுதான் சொன்னார் என்கிறார் சிதம்பரம் மாநிலங்கள் அவையில்.

மார்ச் 22: தாராபூர் கமிட்டியை இழுத்து மூடு! முழு கேபிடல் அக்கவுண்ட் கன்வெர்டிபிலிடி தேவையில்லை என்கிறது கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்).

மார்ச் 23: ரிசர்வ் வங்கி ஊழியர்கள் சங்கம் முழு கேபிடல் கன்வெர்டிபிலிடியை எதிர்த்து அறிக்கை விடுகிறது.

மார்ச் 24: கன்வெர்டிபிலிடிக்கு வெகு அருகில் இருக்கிறோம் என்கிறார் சிதம்பரம். அதே நேரம் ரிசர்வ் வங்கி ஊழியர்களின் எதிர்ப்பைக் குறை சொல்கிறார் சிதம்பரம். ("They should examine the idea and contribute to the debate if they so wish. But an idea should not be opposed merely because one is not familiar with it," he said")

சன் டிவி ஐ.பி.ஓ

சன் டிவி நிறுவனம் பங்குச்சந்தையில் தன் பங்குகளை வெளியிட உள்ளது. அதுபற்றி எனக்குக் கிடைக்கும் செய்திகளை அவ்வப்போது இங்கு பகிர்ந்துகொள்கிறேன்.

Moneycontrol.com (TV18) தளத்திலிருந்து: Sun TV IPO good for long-term investors: Mehta

நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு பங்கு ஒன்று ரூ. 875 என்னும் விலை ஓகே என்கிறார் தீபன் மேஹ்தா.

* சன் டிவி (தமிழ் தொலைக்காட்சி சானல்) சீக்கிரமே கட்டண சானலாக மாறப்போகிறதாம். மாதத்துக்கு ரூ. 15-20 வசூலிக்க இருக்கிறார்களாம். இதனால் நிறுவனத்துக்கு 2006-07-ல் ரூ. 70 கோடியும், 2007-08-ல் ரூ. 90 கோடியும் அதிக லாபம் கிடைக்கலாம் என்று கணிக்கிறார்கள்.

* சன் டிவி நிறுவனத்தின் பிரிமியம் (அதாவது பங்கின் முகப்பு விலைக்கு மேல் எவ்வளவு அதிகமாக வைத்து ஐ.பி.ஓவின்போது வெளியிடுகிறார்கள் என்பது) சற்று அதிகமாக இருப்பதாகவே தோன்றுகிறது. இதனால் மக்கள் போட்டிபோட்டுக்கொண்டு வாங்குவார்களா என்பது தெரியவில்லை.

பங்குச்சந்தை இப்பொழுது அதி உச்சத்தில் இருக்கிறது. சென்செக்ஸ் 11,500 என்பதெல்லாம் இன்றைய நிலையில் தேவையில்லாமல் அதிகம். அதனால் கிட்டத்தட்ட எல்லாப் பங்குகளுமே சரியப்போகின்றன. அந்த நேரத்தில் சன் டிவி பங்கும் சரியும். வாங்க விரும்புபவர்கள் அந்த நேரத்தில் வேண்டுமானால் வாங்கிக்கொள்ளலாம். சன் டிவி பங்குகளை லிஸ்ட் செய்தவுடன் சடசடவென மேலே போகும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது.

Monday, April 03, 2006

கிழக்கு அலுவலகம் இடமாற்றம்

ஏப்ரல் 2006 முதலாக கிழக்கு பதிப்பகம் புது இடத்துக்கு மாறியுள்ளது. புது முகவரி:

கிழக்கு பதிப்பகம்
New Horizon Media Private Limited
இரண்டாம் மாடி, 33/15 எல்டாம்ஸ் சாலை
ஆழ்வார்பேட்டை
சென்னை 600 018

Ph: (044) 4200-9601/03/04; Fax: (044) 4300-9701

இடம் மாறுவதால், தொலைபேசி எண்கள் ஓரிரு நாள்கள் சரியாக வேலை செய்யா.