Wednesday, July 05, 2006

கேரளா பட்ஜெட்: நல்லதா, கெட்டதா?

தமிழக பட்ஜெட் ஜூலை 22-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. கேரளா பட்ஜெட் ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இந்த பட்ஜெட்டை ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார் R. Ramakumar, Assistant Professor, Tata Institute of Social Sciences, Mumbai.

ஆனால் அவர் எழுதியதைப் படித்தால் பட்ஜெட், வளர்ச்சிப் பாதைக்கு எதிரான வரிசையில் செல்வதாகத் தோன்றுகிறது. மேற்கு வங்க கம்யூனிஸ்ட் கட்சி இந்தமாதிரியான பட்ஜெட்டைக் கொண்டுவராது.

* ஆடம்பரப் பொருள்கள்மீது அதிகமாக வரி வசூலித்துதான் ஏழைகளைக் காப்பாற்றவேண்டும் என்பதில்லை. இந்தியா போன்ற வளரும் நாட்டில் ஆடம்பரப் பொருள்கள் என்று கேரள கம்யூனிஸ்டுகள் எதையெல்லாம் வகை செய்கிறார்கள் என்பது திகிலூட்டக்கூடியதாக உள்ளது. பழைய சோற்றைத் தவிர மீது எல்லாவற்றையுமே இவர்கள் ஆடம்பரப் பொருள்கள் என்று நினைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

* கல்யாணமண்டபமும் இவர்களுக்கு ஆடம்பர வரிக்குள் அடங்குமாம். இனி கேரளாவில் கல்யாணம் செய்வதற்கான செலவு அதிகமாகும்.

* கேபிள் இணைப்புக்கு 5% ஆடம்பர வரி. நல்லவேளை - இதுமட்டும் தமிழகத்தில் நடக்காது, மாறன்களின் தயவில். தமிழகத்தில் ஏழைகளுக்கு இலவச டிவி. கேரளத்தில் கேபிள் இணைப்புக்கு ஆடம்பர வரி. நன்றாக உள்ளது.

* முந்தைய அரசு Kerala Fiscal Responsibility Act 2003 என்ற சட்டத்தை இயற்றி இருந்தது. பற்றாக்குறையைக் குறைத்தாகவேண்டும் என்ற சட்டம். முந்தைய அரசு Revenue Deficit Rs. 4,731 கோடி என்று தீர்மானித்திருக்க, கம்யூனிஸ்ட் அரசு இதெல்லாம் சரிப்படாது, இதை Rs. 5,415 கோடியாக்கி அதிகமாக செலவுகள் செய்வதாகச் சொல்லியுள்ளது. கம்யூனிஸ்டுகள் பலருமே பற்றாக்குறை அதிகமாக இருப்பதில் தவறில்லை என்று சொல்லிவருகின்றனர். எதிர்ப்பவர்கள் neo-liberal என்று முத்திரை குத்தப்பட்டு புஷ், செனி கூட்டத்தோடு சேர்த்து கல்லடி படுகிறார்கள். ஆனால் எப்படி பற்றாக்குறையைத் தொடர்ச்சியாக அதிகரிப்பதன்மூலம் நாட்டை நடத்தமுடியும் என்று சொல்வதில்லை.

* இன்று நாட்டில் VAT (மதிப்புக்கூட்டு வரி) நடைமுறையில் இல்லாத இரண்டு மாநிலங்கள் தமிழகம், உத்தர பிரதேசம். கேரளாவின் காங்கிரஸ் அரசு ம.கூ.வரியைக் கொண்டுவந்துவிட்டது. ஆனால் அதில் கையை வைத்து உழப்ப முயற்சி செய்கிறது கம்யூனிஸ்ட் அரசு. VAT-ஆல் மாநிலங்களுக்கு நன்மை, நியாயமான, ஏமாற்றாத தொழில்களுக்கும் நன்மை என்றுதான் அதை அனைவரும் வரவேற்கின்றனர். மாநிலங்கள் பலவும் தமது வருமானம் அதிகரித்துள்ளது என்று சொல்கின்றன. ஆனால் ராமகுமார் VAT மூலம் கேரளா ரூ. 700 கோடி இழக்க நேரிடும் என்கிறார். (தமிழகத்தில் சில்லறை வியாபாரிகள் VAT-ஐ எதிர்ப்பதற்குக் காரணம் வரி கட்டுவதிலிருந்து தப்பி ஓடவே. அவர்களது லாபி பலமானது. அதனால் திமுக, அஇஅதிமுக என்று யாருமே VAT-ஐ நடைமுறைப்படுத்த விரும்புவதில்லை. VAT வந்தால் தமிழக அரசின் வரி வருமானம் அதிகமாகும். குறையாது.)

* அனைத்து மக்களுக்கும் கிலோ அரிசி ரூ. 3க்குக் கொடுத்து வந்துள்ளனர். ஆனால் இதைத் தொடரமுடியாது என்றும் செப்டெம்பர் வரை தொடர மட்டும் ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொல்கிறார்கள். அதன் பிறகு? கருணாநிதியிடம் அச்சுதானந்தன் கொஞ்சம் யோசனை கேட்கலாம்.

2 comments:

  1. நல்ல பதிவு.

    நன்றி.

    ReplyDelete
  2. //கருணாநிதியிடம் அச்சுதானந்தன் கொஞ்சம் யோசனை கேட்கலாம்.//

    வஞ்சிப்புகழ்சியா?

    ReplyDelete