Friday, July 21, 2006

சிறுவர்கள் எடுத்த படம்

இன்று இரவு (வெள்ளி, 21 ஜூன்ஜூலை 2006) சென்னை ஹாரிசன் ஹோட்டலில் (சேத்துப்பட்டு) 7.00 - 9.00 மணி அளவில் நாலந்தாவே & யூனிசெஃப் இணைந்து வழங்கும் நிகழ்ச்சியில் சிறுவர்கள் எடுத்த சில படங்கள் காண்பிக்கப்பட்டன.

1. கல்வெட்டு - 8 வயது குழந்தைத் தொழிலாளியின் சோகக் கதை (6 நிமிடம்)
2. மெழுகுவர்த்தீ - விடலைப் பையன்கள் செய்யும் கேலியை தைரியமாக எதிர்கொள்ளும் பெண் (2 நிமிடம்)
3. 'மக்-அப்' மங்கம்மா - பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மீது ஊடகங்கள் ஏற்படுத்தும் தாக்கம் (15 நிமிடம்)

முதல் படம் சோகமான கதை என்றாலும் மனத்துக்கு ஏற்பில்லாத கடைசி காட்சியும் வசனமும் உறுத்தின. தந்தையின் கையில் மாட்டி நிறைய கஷ்டங்களை அனுபவித்த சிறுவன் கடைசியில் தான் காவல்துறை அதிகாரியாக மாறி தன் தந்தையைக் கொல்ல விரும்புகிறான். அதை symbolic-ஆக ஒரு சிறு மண்கட்டியை பெரிய கல் ஒன்றைத் தூக்கிப்போட்டு நசுக்குவதாகக் காட்டுகிறது காட்சியமைப்பு.

இரண்டாவது படம் அழுத்தமான கதை.

மூன்றாவது படம் - பள்ளிச் சிறுவர்கள் சினிமா போன்றவற்றில் ஆர்வம் செலுத்தி அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு பாடங்களைப் புரிந்துகொள்வதில்லை என்று விளக்குவது. "சினிமா பிடிக்குது, அதனால புரியுது" என்று ஒரு சிறுவன் சொல்லும்போது கிராமப் பள்ளிக்கூடங்கள் மீதான விமரிசனம் அற்புதமாக வெளிவருகிறது. நியூட்டனின் மூன்றாவது விதியை, புரிந்துகொள்ளாமல் (ஆங்கிலத்தில்) மனப்பாடம் செய்யும் சிறுமி, பக்கத்தில் இருக்கும் மற்றொருத்தி நெல்லிக்காய்களைக் கொண்டு விளக்கும்போது எளிதாகப் புரிந்துகொள்கிறாள். அதன்மூலம் எத்தகைய கல்வி தங்களுக்குத் தேவை என்று சிறுவர்களே தங்கள் பிரச்னைகளுக்கான தீர்வை முன்வைக்கின்றனர்.

நாலந்தா-வழி... நிறுவனம் பற்றிய முழுமையான தகவல் என்னிடம் இல்லை. அடுத்த வாரம் ஸ்ரீராம் ஐயருடன் பேசுவேன். அப்பொழுது அவர்களைப் பற்றித் தெரிந்துகொண்டதை வைத்து மற்றொரு பதிவை எழுதுகிறேன்.

படங்களுக்கான கதை கிருஷ்ணகிரி மாவட்டச் சிறுவர்களிடமிருந்து வந்துள்ளது. அந்தக் கதைகளைத் திரைவடிவம் கொடுத்து அதே சிறுவர்களை வைத்துப் படமாக்கியிருந்தனர் நாலந்தே-வே குழுவினர்.

படம் திரையிடல் நேரத்தில் சிறு அறை முழுவதும் ஏகப்பட்ட பேர் நிரம்பியிருந்தனர். ஊடகங்களிலிருந்து நிறைய பேர் வந்திருந்ததாலும் பலரும் வீடியோ கேமராக்களைக் கொண்டு அரங்கை நிறைத்ததாலும் பலரால் படங்களைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை.

சிறப்பு விருந்தினர்கள் யூனிசெஃப்பின் இந்தியப் பிரதிநிதி செசிலியோ அடோர்னா, தி ஹிந்து முதன்மை ஆசிரியர் என்.ராம் ஆகியோர்.

[22 ஜூலை 2006-ல் சேர்த்தது: தி ஹிந்து செய்தி]

2 comments:

  1. முதல் படம் நெருடல்...

    இரண்டாம் படம் இயற்கையாக இருந்தது.. அதுவும் கிராமத்துப் பின்னணியில் இந்தக் கருத்தை சொல்லியிருப்பது...

    ReplyDelete
  2. // 21 ஜூன் 2006

    21st July ???

    Thanks for the links :)-

    ReplyDelete