Thursday, August 31, 2006

69% இட ஒதுக்கீடு

உச்சநீதிமன்றம் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய பெஞ்சை அமைத்து தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் 69% ஒட ஒதுக்கீடு செல்லுமா செல்லாதா என்பதை விசாரிக்க உள்ளது.

சிறு வரலாறு:

1. தமிழகத்தில் பல ஆண்டுகளாக பல தரப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்துள்ளது.

2. மண்டல் கமிஷன் பரிந்துரைகளின் பேரில் மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு கொண்டுவர முற்பட்டதை அடுத்து அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்திரா சாஹ்னி v. இந்திய அரசு வழக்கின் தீர்ப்பில் (16 நவம்பர் 1992) உச்சநீதிமன்றம், மத்திய, மாநில அரசுகளுக்கு சாதிகள் அடிப்படையில் வேலையிலோ, படிப்புக்கான நுழைவிலோ இட ஒதுக்கீடு வழங்கும் உரிமை உண்டு என்று கூறியது. ஆனால் அதே தீர்ப்பிலேயே இவ்வாறு வழங்கப்படும் இட ஒதுக்கீடு மொத்தத்தில் 50%-ஐத் தாண்டக்கூடாது என்றும், கிரீமி லேயர் எனப்படுவோரை வரையறை செய்து இட ஒதுக்கீட்டின் பலன் அவர்களுக்குப் போகாமல் இருக்குமாறு செய்யவும் ஆணையிடப்பட்டது.

3. ஆனால் தமிழகத்தில் பல வருடங்களாகவே 69% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வந்தது. இந்திரா சாஹ்னி வழக்கை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 1993-94-ம் கல்வி ஆண்டுக்கான நுழைவில் 69% இட ஒதுக்கீடு இருக்கலாம் என்றும் ஆனால் அடுத்த ஆண்டுகளிலிருந்து இது 50% ஆகக் குறைக்கப்படவேண்டும் என்றும் தீர்ப்பானது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது தமிழக அரசு. ஆனால் அங்கு எதிரான தீர்ப்பே கிடைத்தது. அதாவது 50%-க்கு மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று.

4. தமிழக அரசு 1993-ல் Tamil Nadu Backward Classes, Scheduled Castes and Scheduled Tribes (Reservation of Seats in Educational Institution and of appointments or posts in the Services under the State) Bill, 1993 என்ற சட்டத்தின்மூலம் 69% இட ஒதுக்கீட்டை சட்டபூர்வமாக்கி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதா 1994-ல் சட்டமானது.

5. உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் இருப்பதால் இந்தச் சட்டத்தைச் செயல்படுத்த அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரவேண்டும். எனவே மத்திய அரசு 1994-ல் 76-வது சட்டத்திருத்தத்தின்மூலம் மேற்குறிப்பிட்ட தமிழக சட்டம் (1994)-ஐ, அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது ஷரத்தின்கீழ் கொண்டுவந்தது.

ஒன்பதாவது ஷரத்தின்கீழ் இருக்கும் சட்டங்கள்மீது மேல்முறையீடு செய்ய நீதிமன்றத்துக்குப் போகமுடியாது.

6. இவ்வாறு ஒன்பதாவது ஷரத்தின்கீழ் 69% இட ஒதுக்கீடு தமிழக அரசின் சட்டம் கொண்டுவரப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் 76 செல்லாது, அது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று. அதை விசாரிக்க 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தேவை. ஆனால் 1999 முதற்கொண்டே இது உருவாக்கப்படவில்லை.

இப்பொழுது 9 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஒன்றை உருவாக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
The grounds on which the matter was referred to nine judges were: "Judicial review is a basic feature of the Constitution; to insert in the Ninth Schedule an Act which, or part of which, has been struck down as unconstitutional in exercise of the power of judicial review is to destroy the basic structure of the Constitution. To insert into the Ninth Schedule after April 24, 1973 an Act, which, or part of which, has been struck down as being violative of the fundamental rights conferred under the Constitution is to destroy or damage its basic structure."

தமிழ் பதிப்புலகத்துக்கு இது பொற்காலம்

கண்ணதாசன் பதிப்பகத்தின் காந்தி கண்ணதாசனுடன் ஒரு நேர்முகம், தி ஹிந்துவில். தமிழ் புத்தகங்களின் விற்பனை தற்போது கிட்டத்தட்ட ரூ. 75 கோடியாக உள்ளது என்றும், 2010-ல் ரூ. 100-150 கோடியை எட்டும் என்றும் சொல்கிறார்.
"Today self-improvement books are a big hit. I get 90 per cent of my revenue from that genre. Earlier these books were only translations of self-improvement celebrities in the West, but today we have Hindu Sadhus jumping on the bandwagon, and that has helped us." On book design and layout boosting sales, he has no second opinion. "Today's Tamil books are on a par with international books. The front cover, page design, font and package - all have undergone a sea change, thanks to the advent of computers," he says.

Monday, August 28, 2006

அண்ணா & திமுக

அண்ணா திமுக அல்ல; அண்ணாவும் திமுகவும்.

சமீபத்தில் வெளியான இரண்டு புத்தகங்களை கடந்த சில நாள்களில் படித்து முடித்தேன். இரண்டையும் எழுதியது அருணன், வசந்தம் வெளியீட்டகம் வாயிலாக.

1. திமுக பிறந்தது எப்படி? (பக். 136, விலை 60)
2. அண்ணா ஆட்சியைப் பிடித்தது எப்படி? (பக். 174, ரூ. 80)

அண்ணாதுரை மற்றும் பிறர் ஏன் பெரியாரின் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பைத் தோற்றுவிக்கின்றனர்? பெரியார் - மணியம்மை திருமணம் மட்டும்தான் காரணமா? வேறு என்னென்ன காரணங்கள் இருந்திருக்க முடியும்? திமுக எனும் கட்சி உருவான பிறகு அண்ணாதுரை எவ்வாறு கட்சியை வழிநடத்திச் சென்று ஆட்சியைப் பிடித்தார்? அவர் எவ்வாறு அரசியல் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தினார்? திமுக எந்த வெற்றிடத்தை நிரப்பியது?

திமுக தொடங்கியபின்னர் பெரியார் - அண்ணாதுரை உறவு எப்படி இருந்தது? காமராஜர் - பெரியார் உறவு எப்படி இருந்தது? அகில இந்திய காங்கிரஸ் எங்கெல்லாம் தவறுகள் செய்தது?

மேற்கண்ட கேள்விகளுக்கான பதில்கள், மொழிப்போராட்டம் பற்றிய விளக்கங்கள், திராவிட நாடு தொடர்பான அண்ணாதுரையின் கருத்துகள் எவ்வாறு மாற்றம் பெற்றன, திமுக எவ்வாறு திரையுலகக் கலைஞர்களுடன் நட்பாக இருப்பதன்மூலம் மக்களிடையே கருத்துக்களைக் கொண்டுசென்றது, எளிமையான முறையில் பல விஷயங்களை அண்ணாதுரையால் எவ்வாறு மக்களிடம் கொண்டுசெல்ல முடிந்தது போன்ற பல விஷயங்கள் இந்த நூலில் காணக்கிடைக்கின்றன.

ஆசிரியர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். பல இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி தேவையின்றி எழுதுகிறார். கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு மட்டுமான தனிப்புத்தகம் என்றால் பரவாயில்லை.

காங்கிரஸுக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல இடத்தை விட்டுக்கொடுக்க திமுக அந்த இடத்தைப் பறித்துக்கொண்டதைப் பற்றி எழுதும்போது ஆசிரியரின் ஆதங்கம் புரிகிறது.

ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் கம்யூனிஸ்டுகளும் திமுகவுடன் ஒரே கூட்டணியில் இருந்ததைப் பற்றிப் பேசும்போது மிகக் கவனமாக கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி திமுகவுடன் மட்டும்தான், பிற்போக்கு சக்தியான சுதந்திரா கட்சியுடன் அல்ல என்கிறார். இதுபோன்ற கம்யூனிஸ்ட் 'சப்பைக்கட்டு'களைத் தவிர்த்துப் பார்த்தால் மிக நல்ல ஆவணம். புத்தகம் முழுவதிலும் மேற்கோள்களையும் புத்தகத்தின் கடைசியில் மேற்கோள்களுக்கான ஆதாரங்களையும் தருவதன்மூலம் மேற்கொண்டு ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கிறார். ஆனால் பின்குறிப்புகளில் மேற்கோள்கள் எங்கிருந்து வந்தன என்ற தகவலை வெறும் புத்தகம்/அறிக்கை பெயர்களுடன் நிறுத்திவிடுகிறாரே தவிர பக்க எண் போன்றவற்றைத் தருவதில்லை. மேலும் மேற்கோள்களுக்கு அடிக்குறிப்பு எண்கள் கிடையாது.

புத்தகங்கள் படிப்பதற்கு எளிதான மொழியில் நன்றாக, விறுவிறுப்பாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் புத்தகங்கள் முழுவதிலும் நிறைய இலக்கணப் பிழைகள்.

இதுபோன்ற குறைகளை அடுத்துவரும் பதிப்பில் சரிசெய்தால் உபயோகமாக இருக்கும்.

தமிழக வரலாற்றைத் தெரிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்கள் இவை.

பி.கு: அண்ணாதுரை எழுதிய சிறு பிரசுரம் ஒன்று காங்கிரஸ் அரசால் தடைசெய்யப்பட்டது. அதன் விளைவாக அண்ணாதுரை கைது செய்யப்பட்டார். பின் அண்ணாதுரையே முதலமைச்சர் ஆனபிறகும்கூட அந்தப் புத்தகத்தின் மீதான தடையை நீக்கவில்லை. பின்னர் எம்.ஜி.ராமச்சந்திரன் காலத்தில்தான் அந்தப் புத்தகத்தின்மீதான தடை நீக்கப்பட்டது. அது என்ன புத்தகம்?

செம்மொழி கன்னடம்

நீங்கள் கர்நாடக மாநிலத்தில் இல்லையென்றால் இது உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம்.

தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டது அல்லவா? இப்பொழுது கன்னடத்தையும் செம்மொழி என்று அறிவிக்க வேண்டும் என்று கன்னட அறிஞர்கள் சிலர் மைசூரில் உள்ள இந்திய மொழி ஆராய்ச்சி மையமான Central Institute of Indian Languages முன் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த மையத்தின் இயக்குனர் போராட்டக்காரர்களுக்கு எழுதிய கடிதம் ஆங்கிலத்தில் இருந்தது, கன்னடத்தில் இல்லை என்பதால் அந்தக் கடிதத்தைக் கிழித்துள்ளனர்.

இந்த மையத்தின் இயக்குனர் உதய நாராயண் சிங் - பேரைப் பார்த்தால் உத்தர பிரதேசத்தவர் போலத் தெரிகிறது. பாவம்!

தி ஹிந்து செய்தி

தமிழ் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டதால் உருப்படியாக இந்த மொழிக்கு எதுவும் - இதுவரை - நடந்துவிடவில்லை, அதனால் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று போராடும் கன்னட நண்பர்களிடம் யாராவது சொன்னால் தேவலை.

Sunday, August 27, 2006

புத்தக விமரிசனம்

புத்தகங்கள் தொடர்பான இரண்டு சுட்டிகள், இன்றைய தி ஹிந்து மேகஸினிலிருந்து:

1. The decline of the book review, நிலஞ்சனா ராய்: புத்தக விமரிசனங்களின் இழிநிலை பற்றி. தமிழை எடுத்துக்கொண்டால் நிலைமை இன்னமுமே மோசம். விகடன், குமுதம், குங்குமம் போன்ற இதழ்கள் புத்தக விமரிசனம் பற்றி கவலைப்படுவதேயில்லை. செய்தித்தாள்களை எடுத்துக்கொண்டால் தினமலர், தினத்தந்தி இரண்டும் 200-300 சொற்களில் விமரிசனம் செய்ய முற்படுகின்றன. தினமணி மோசம். இரண்டு வரிக்கு மேல் கிடையாது.

இந்தியா டுடே தமிழ் மட்டும்தான் முழுப்பக்கம், இரண்டு பக்கங்கள் என்று விமரிசனம் செய்கிறது. இது ஒன்றுதான் புத்தக விமரிசனத்தைப் பொருத்தவரை நம்பிக்கை தரும் இதழ். சிற்றிதழ்கள், தீவிர இலக்கிய இதழ்கள் ஆகியவை பொதுவாக புத்தக விமரிசனம் என்றில்லாமல் தங்களுக்குத் தேவையான ஒரு சில புத்தகங்களை மட்டுமே ஆராய்ந்து பல பக்கங்களுக்கு எழுத முற்படுகின்றன.

தமிழில் வெளியாகும் அனைத்து புத்தகங்களையும் விமரிசித்து முடிந்தவரை முழுமையாகக் கொண்டுவர இணையமும் தன்னார்வலர்களும் இணைந்தால்தான் முடியும் என்று தோன்றுகிறது. (புத்தகவாசம் போல) ஆனால் இணைய ஆர்வலர்கள் எழுதும் விமரிசனம் என்றால் விமரிசனங்களின் தரம் பற்றி சில கேள்விகள் எழலாம். தேர்ந்த புத்தக விமரிசகர்கள் இணையத்தை இப்பொழுதைக்குச் சரியாகப் பயன்படுத்துவதில்லை.

அச்சு இதழ் நிறுவனங்களுக்கு பதிப்பாளர்கள் விமரிசனப் பிரதிகள் என்று இலவசமாக அளிப்பார்கள். ஆனால் இணைய ஆர்வலர்கள் தம் செலவிலேயே புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டியிருக்கும். ஆர்வலர்கள் தமிழகத்துக்கு வெளியே இருந்தால் புதிதாக வெளியாகும் புத்தகங்கள் அவர்களுக்குக் கிடைப்பது கடினமாக இருக்கும்.

2. Songs from 'home', ரஞ்சினி ராவ்: மீரா மாசி என்ற பெயரில், அமெரிக்காவில், ஷீதல், சோனாலி என்ற சகோதரிகள் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழிகளில் பாடல்கள், கதைகளை உருவாக்குகின்றனராம். இப்பொழுது டிவிடிக்களுடன், இனி வரும் நாள்களில் புத்தகங்கள், சிடிக்கள் ஆகியவற்றையும், பஞ்சாபி, குஜராத்தி மொழிகளிலும் உள்ளடக்கத்தை உருவாக்க உள்ளனராம்.

மீரா மாசி

ஸ்டியார்ன் - அளவற்ற, முடிவற்ற ஆற்றல்?

அயர்லாந்து, டப்லின் நகரில் இருக்கும் ஸ்டியார்ன் (Steorn) என்னும் நிறுவனம் காந்தங்களை வைத்து புதுக் கருவி ஒன்றைத் தயாரித்துள்ளதாகவும் அதன்மூலம் கொஞ்சம் ஆற்றலை உள்ளே செலுத்தினால், செலுத்தியதற்கும் மேலான ஆற்றல் வெளியே வருவதாகவும் அறிவித்துள்ளனர்.

இயல்பியல் படிப்பில், ஆற்றல் என்பது சும்மா கிடைப்பதல்ல என்று நாம் படித்திருக்கிறோம். ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஒரு வடிவிலிருந்து மற்ற வடிவுக்கு மாற்ற மட்டுமே முடியும் என்று படித்துள்ளோம். மேலும் இவ்வாறு மாற்றும்போது இயல்பாற்றல் (எண்டிரோபி - Entropy) காரணங்களால் உள்ளே செலுத்திய ஆற்றலின் அளவை விட வெளியே வரும் வேறு வகை ஆற்றலின் அளவு குறைவாகவே இருக்கும். (மீதி ஆற்றல் வெளியே விரயமாகிப் போகும்.)

மின்சாரம் தயாரிக்கிறோம். அதனை சில பொருள்களை எரிப்பதன்மூலம் தயாரிக்கிறோம். வெப்ப ஆற்றல் மின் ஆற்றலாக மாறுகிறது. ஆற்றலை ஜூல் என்னும் அலகு கொண்டு அளக்கிறோம். ஒரு ஜூல் அளவுள்ள வெப்ப ஆற்றலை ஒரு மின்சார ஜெனரேட்டரில் உள்செலுத்தினால் வெளியே கிடைக்கும் மின்சார ஆற்றலின் அளவு ஒரு ஜூலை விடக் குறைவாகத்தான் இருக்கும் என்று வெப்ப இயக்கவியல் (Thermodynamics) நமக்குச் சொல்கிறது. எந்த அளவுக்கு இந்த ஆற்றல் மாற்றம் உள்ளது என்பதை வெளியே கிடைக்கும் ஆற்றலுக்கும் உள்ளே செலுத்தப்பட்ட ஆற்றலுக்குமான விகிதமாகக் கூறுகிறோம். அதுதான் இந்த இயந்திரத்தின் செயல்திறன் - efficiency.

ஆனால் இந்த ஆற்றல் மாற்றங்களின்போது நமது அமைவின் (System) நிறை மாறுவதில்லை. தொடக்கத்திலும் முடிவிலும் ஒரே எடைதான்.

பொருளையே ஆற்றலாக மாற்றமுடியும் - அணுக்கரு பிளத்தல் அல்லது இணைதல் மூலம் - என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கும். இதேபோல ஆற்றலையும் பொருளாக மாற்றமுடியும் என்றும் அறிவீர்கள். ஐன்ஸ்டைனின் பெருமைவாய்ந்த E = m c^2 என்னும் சமன்பாடு இன்று டிஷர்ட்களில் எல்லாம் காணக்கிடைக்கிறது.

இதுதான் காலம் காலமாக அறிவியல் நமக்குச் சொல்லிவந்தது. இன்றும், இதுவரையில் இதில் மாற்றமில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்னால் பல கிறுக்கு கண்டுபிடிப்பாளர்கள் 'நிரந்தர இயக்கக் கருவிகள்' (Perpetual Motion Machines) சிலவற்றைக் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்லிவந்தனர். இந்தக் கருவிகளில் கொஞ்சம் ஆற்றலை உள்ளே செலுத்தினால் விளைவாக அதிகமான அளவு ஆற்றலை உருவாக்குமாம்; அதில் ஒரு பகுதியை மீண்டும் இதே கருவியில் உள்ளே செலுத்தினால் அது மேலும் மேலும் அதிகமான அளவு ஆற்றலை உருவாக்கும்.

சுருக்கமாகச் சொல்வதானால் 'ஆற்றல் அட்சய பாத்திரம்'.

வெப்ப இயக்கவியல் விதிகளின்படி இது நடைமுறையில் சாத்தியமானதல்ல என்றே விஞ்ஞானிகள் கருதிவந்துள்ளனர்.

இப்பொழுது ஸ்டியார்ன் நிறுவனமோ இந்த விதிகளுக்கெல்லாம் மாற்றாக, தாம் ஒரு கருவியைக் கண்டுபிடித்திருப்பதாகச் சொல்கிறது. உள்ளே ஒரு ஜூல் ஆற்றலைச் செலுத்தினால் வெளியே வருவது 2.85 ஜூல்கள். அதாவது 285% செயல்திறனுடன் இயங்கும் கருவி. நிலையான காந்தங்கள் சிலவற்றைக் குறிப்பிட்ட இடங்களில் வைத்து, நகரும் காந்தங்களைக் குறிப்பிட்ட வகையில் இயக்குவதன்மூலம் இப்படியான ஆற்றல் வெளியாகிறது என்கிறார்கள்.

கடந்த சில வருடங்களாக இதை யாரும் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளாததால் 75,000 பவுண்டுகள் (கிட்டத்தட்ட 60 லட்சம் ரூபாய்கள்) செலவு செய்து தி எகானமிஸ்ட் இதழில் ஒரு விளம்பரம் எடுத்துள்ளனர். அந்த விளம்பரத்தில், 12 சிறந்த அறிவியல் அறிஞர்களை நீதிபதிகளாக வைத்து தங்கள் இயந்திரத்தை சோதனை செய்ய அழைப்பதாக அறைகூவல் விடுத்துள்ளனர்.

இதுவும் பிசுபிசுத்துப் போகுமா அல்லது பெட்ரோல் நிறுவனங்களின் வயிற்றில் புளியைக் கரைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!

தி கார்டியன் செய்தி

Friday, August 25, 2006

Mozart Meets India

இன்று மியூசிக் அகாடெமியில் 'Mozart Meets India' குறுந்தட்டு வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன்.

Awesome. முதல் இரண்டு குறுந்தட்டுகளை விலைக்கு வாங்கியது நான்தான்:-)

தமிழ் மையம் (அருட்தந்தை ஜெகத் காஸ்பர் ராஜ்) - இளையராஜாவின் சிம்பனிக் ஆரடோரியோவுக்குப் பிறகு கொண்டுவந்திருக்கும் கர்நாடக, மேற்கத்திய இசைவிசை வடிவம்.

விழாவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் அம்பிகா சோனி, தயாநிதி மாறன் ஆகியோர் வந்திருந்தனர்.

விளக்கமான செய்திகளும் படங்களும் நாளை எல்லா செய்தித்தாள்களிலும் வரும். சன் மியூசிக் சானலில் இந்த விழாவின் ஒளிபரப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். பல கேமராக்களுடன் படம் பிடித்துக்கொண்டிருந்தார்கள்.

இசைத்தட்டில் இருந்து ஆறு பாடல்களில் மூன்றை அரங்கில் பாடிக்காட்டினர். அத்துடன் மேலும் இரண்டு பாடல்கள் + ஒரு நாட்டியம் மிக அற்புதமாக இருந்தது.

ரூ. 199/- குறுந்தட்டின் விலை. இசைவிரும்பிகள் அவசியம் வாங்க வேண்டியது.

இசை கிடக்கட்டும். ஜெகத் காஸ்பர் ராஜ் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளுத்துக் கட்டினார்.

இசையமைப்பு நெல்லைக்கு அருகில் உள்ள சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஜேசுராஜ் என்பவராம்.

I am happy to note that carnatic music is being de-religionised and de-languagised and hence being made more universal.

மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மஹாராஜாவே!

நேபாளில் ஏப்ரல் 2006-ல் மக்கள் புரட்சி வெடித்தது. ஆயுதம் ஏந்திய புரட்சி அல்ல. ஆனாலும் ஆவேசமான புரட்சி. மக்கள் - 50 லட்சத்துக்கும் மேல் என்று சொல்கிறார்கள் - கூட்டம் கூட்டமாகத் தெருவுக்கு வந்தனர். மன்னர் ஞானேந்திராவின் கீழ் உள்ள ராணுவம் செய்வதறியாது திகைத்தது.

எங்களுக்கு மக்களாட்சிதான் வேண்டும், மன்னராட்சி அல்ல என்றனர் மக்கள். அடக்குமுறை தாங்காமல் கொதித்தெழுந்த மக்கள். மன்னருக்கெதிராகவும் ராணுவத்துக்கு எதிராகவும் சண்டைபோடும் மாவோயிஸ்ட் குழுவும் தன் ஆயுதங்களை விடுத்து அரசியல் கட்சியாகி மக்களாட்சி முறையில் போராடவேண்டும் என்று விரும்பினர் மக்கள். ராணுவத்தால் மட்டுமல்ல, மாவோயிஸ்டுகளாலும் ஏகப்பட்ட தொல்லைகள் மக்களுக்கு.

மாவோயிஸ்டுகள் முடிவாக, நேபாளில் உள்ள ஏழு அரசியல் கட்சிகளோடு கூட்டுசேர முடிவு செய்தனர். ரகசிய ஒப்பந்தம் இந்திய மண்ணில் கையெழுத்தானது. இது மக்களுக்குத் தெரிந்ததும் தன்னெழுச்சியில் ஏற்பட்டதுதான் ஏப்ரல் கலவரம். மே மாதத்தில் அரசியல் கட்சிகளுக்கு அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு பல்பிடுங்கிய பாம்பானார் மன்னர்.

இந்த சுதந்தர இயக்கத்துக்குத் தலைமை தாங்கியவர்கள் என்று யாருமில்லை. ஒரு காந்தியோ, ஒரு மண்டேலாவோ நேபாள மக்களுக்குத் தேவையிருக்கவில்லை.

அருகில் நின்று அனைத்தையும் பார்த்தவர்களுல் ஒருவர் கனக் மணி தீக்ஷித். ஹிமால் என்னும் பத்திரிகையின் நிறுவனர், ஆசிரியர்.

நேற்று Indian School of Social Sciences ஆதரவில் சென்னை Asian College of Journalism கட்டடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார் கனக் மணி. கனக்கை கூட்டத்துக்கு அறிமுகப்படுத்தினார் பன்னீர் செல்வம் (முன்னாள் அவுட்லுக், சன் நியூஸ்). அந்தப் பேச்சைத் தொடர்ந்து சில கேள்விகளுக்கு கனக் பதிலளித்தார்.

அந்த ஆங்கிலப் பேச்சின் podcast கீழே (1.09 மணிநேரம்), embedded flash player வழியாக (நன்றி பரி).



If the embedded flash player is mucking up, click here to download/play the mp3 file.

நேபாள் பற்றிய என் முந்தைய பதிவையும் அதில் மயூரனின் பின்னூட்டையும் மயூரன் தன் பதிவிலே எழுதியிருக்கும் கருத்துகளையும் (ஒன்று | இரண்டு) தமிழரங்கம் எனுமிடத்தில் வெளியான பதிவையும் படித்துவிடுங்கள்.

சொக்கன் எழுதி, கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியான புத்தகம்

Monday, August 21, 2006

ஈரோடு புத்தகக் கண்காட்சி 2006

ஆகஸ்ட் 5-15 தேதிகளில் ஈரோடு வ.உ.சி பூங்காவில் ஈரோடு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இது இரண்டாம் வருடம். சென்ற வருடம், முதல்முறையாக, மக்கள் சிந்தனைப் பேரவை என்னும் அமைப்பு ஈரோடு ராணா திருமண மண்டபத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்தியது.

ஆனால் இம்முறை சென்னை கண்காட்சி அளவுக்கு பிரம்மாண்டமாக நடத்தவேண்டும் என்று முன்னதாகவே தீர்மானித்திருந்தனர்.

சென்னையில் பல ஆண்டுகளாக நடந்துவரும் புத்தகக் கண்காட்சிக்கு இணையாக தமிழகத்தில் வேறு ஒரு இடத்தில் நடத்தவேண்டுமானால் அதற்கு நிறைய உழைப்பு தேவை. ம.சி.பேரவையிடம் தன்னார்வலர்கள், ஆலோசகர்கள், உழைப்பு ஆகியவை நிறையவே இருந்தன.

ஒவ்வொரு பள்ளிக்கும் பேரவையினர் சென்று நடக்க இருக்கும் புத்தகக் கண்காட்சியினைப் பற்றி தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்களிடம் பேசி, அவர்கள் மூலமாக மாணவர்களிடம் விளக்கியுள்ளனர். இந்தக் கண்காட்சியினை ஈரோடு மாவட்டத்துக்கு மட்டும் என்றில்லாமல் ஈரோட்டைச் சுற்றியுள்ள ஆறு மாவட்டங்கள் (கொங்கு மண்டலம்) அனைத்துக்குமாக என்று எடுத்துக்கொண்டு பக்கத்து மாவட்டங்களில் தகவலைப் பரப்பியுள்ளனர்.

நகரில் ஓடும் அத்தனை ஆட்டோக்களிலும் பின்னால் புத்தகக் கண்காட்சி தொடர்பான விளம்பரம் இருந்தது. தெருவெங்கும் சுவரொட்டிகள். வீடு வீடாகச் சென்று துண்டுக் காகிதத்தில் கண்காட்சி பற்றிய தகவல்களை தன்னார்வலர்கள் விட்டுச் சென்றிருந்தனர். மூன்று உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள். உள்ளூர் வானொலி நிலையம் அந்தப் பத்து நாள்களில் மூன்று முறை அரை மணிநேரப் பாடல் நிகழ்ச்சியை கண்காட்சி வளாகத்திலிருந்து நடத்தியது. செய்தித்தாள்கள் அனைத்திலும் தினம் தினம் கண்காட்சி பற்றிய விளக்கமான செய்திகள்.

மொத்தத்தில் புத்தகங்கள் தொடர்பாக ஏதோ ஒன்று வ.உ.சி பூங்காவில் நடைபெறுகிறது என்பதை மக்கள் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது.

அடுத்ததாக கண்காட்சி வளாகம். கீழே உள்ள இரண்டு படங்களையும் பாருங்கள். நல்ல பெரிய திடலை எடுத்துக்கொண்டு அழகான முறையில் வடிவமைத்திருந்தார்கள். சென்னை புத்தகக் கண்காட்சி அரங்குகளை விட சிறப்பான முறையில் இருந்தது.



வெற்றுத் திடலில் அரையடிக்கு மேல் மரத்தாலான பிளாட்ஃபார்ம். அடியில், மழை பெய்தால் தண்ணீர் வெளியே ஓடுவதற்கு சாக்கடை வசதிகள். மேலே பிளாஸ்டிக்கால் ஆன கூரை. நான்கு பக்கமும் சுற்றி நல்ல மறைப்பு. உள்ளே நடக்கும் இடங்களில் கார்ப்பெட். கடைகளுக்கு உள்ளாக வேறுவிதமான கார்ப்பெட். விளக்கு, காற்றாடி வசதிகள். கடைகள் சுற்றுவர இருக்க நடுவில் கிட்டத்தட்ட 3,000 - 4,000 பேர் உட்கார வசதி. பேச்சாளர்கள் தங்கிப் பேச பெரிய மேடை.



தினம் தினம் மாலையில் யாராவது ஒரு பெரிய பேச்சாளர். ஜெயகாந்தன், நடிகர் சிவக்குமார், குன்றக்குடி அடிகளார், தா.பாண்டியன் என்று நாளுக்கு ஒருவர்.

கண்காட்சியைத் தொடங்கி வைக்க ஈரோட்டின் அரசியல், நிர்வாகப் பிரமுகர்கள் அனைவரும் கட்சி வித்தியாசமின்றி வந்திருந்தனர். மத்திய அமைச்சர்கள் இருவர், மாநில அமைச்சர்கள் இருவர், மாவட்ட ஆட்சியர், நகரமன்றத் தலைவர், காவல்துறை ஆணையர், கல்வித்துறைத் தலைவர் என்று ஒருவர் பாக்கியில்லை.

மாலையில் நடக்கும் பேச்சுக்கு குறைந்தது 2,000 பேருக்கு மேல், சில நாள்கள் 4,000க்கும் அதிகம் என்று மக்கள் கூட்டம் இருந்தது.

கண்காட்சிக்கு மக்கள் நுழைவுச்சீட்டு ஏதும் வாங்கவேண்டியதில்லை. ஸ்டால்களுக்கான வாடகைக் கட்டணமும் குறைவு. நிச்சயமாக ம.சி.பேரவை இந்த நிகழ்ச்சியை நட்டத்தில்தான் இயக்கியிருக்கும். ஏனெனில் செலவுகள் அதிகம்.

வரும் வருடங்களில் கையைக் கடிக்காமல் இருக்க நுழைவுச்சீட்டுக்கு ஆளுக்கு ஒரு ரூபாயாவது வசூலிக்கலாம். மாணவர்களுக்கு இலவசம் என்று வைக்கலாம். அடுத்து ஸ்டால் வாடகையை சற்றே அதிகரிக்கலாம். இம்முறை புத்தகம் / அறிவு தொடர்பானவை தவிர யாருக்கும் ஸ்டால்கள் கிடையாது என்று கறாராகச் சொல்லியிருந்தனர். அடுத்தமுறை சற்றே தளர்த்தி அதிக வாடகை கொடுக்கக்கூடிய பிற அமைப்புகளுக்கு (கல்வி நிறுவனங்கள் போன்றவை) கொஞ்சம் ஸ்டால்கள் ஒதுக்கலாம். விளம்பரங்களுக்கும் பிற FMCG பொருள்கள் விற்பவர்களுக்கு என்று தட்டிகள் ஒதுக்கலாம்.

இவையெல்லாம் ஏன் தேவை? பொதுவாகவே பல பதிப்பகங்கள் செலவு செய்ய அஞ்சுபவை. எனவே பேரவை எதிர்பார்த்த அளவுக்கு விளம்பரத் தட்டிகள் வைக்க புத்தகப் பதிப்பாளர்கள் வரவில்லை. இதனால் பேரவை எதிர்பார்த்த விளம்பர வருமானம் கிடைக்கவில்லை. நிலைமை இப்படித்தான் இருக்கும் என்று முன்னமேயே கணித்து அடுத்த வருடத்துக்காவது கிடைக்கும் விளம்பரங்களைப் பெறுவதன்மூலம் நட்டத்தைத் தவிர்க்கலாம்.

இது ஒருபக்கம் இருக்கட்டும். ஈரோட்டில் சென்ற வருடமே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து நிறைய புத்தகங்களை வாங்கினர். இந்த வருடம் இன்னமும் அதிக முன்னேற்றம். சென்னைக்கு அடுத்த அளவில் - சென்னையில் கிழக்கு பதிப்பகத்தின் விற்பனையில் பாதிக்கும் மேலாக - ஈரோட்டில் விற்பனை இருந்தது. இது ஒரு பதிப்பாளர் என்ற முறையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.

மிகக் குறுகிய காலத்துக்குள்ளே - இரண்டே வருடங்களில் - சென்னைக்கு அடுத்து மிக முக்கியமான புத்தகக் கண்காட்சி ஈரோடு என்ற நிலையை (குறைந்தது கிழக்கு பதிப்பகத்தைப் பொருத்தமட்டிலாவது!) எட்டியுள்ளது ஆச்சரியமானதுதான். இத்தனைக்கும் காரணம் ஒரு சமூக சிந்தனை அமைப்பும் அவர்களது கடினமான உழைப்பும். அடுத்த வருடத்துக்கான புத்தகக் கண்காட்சிக்காக (அதுவும் ஆகஸ்ட் மாதம் சுதந்தர தினத்தை ஒட்டி இருக்கும்) இப்பொழுதே வேலையை ஆரம்பித்து விட்டார்கள். இந்த முறை வந்ததைவிட மூன்று மடங்கு அதிகக் கூட்டத்தைக் கூட்டுவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

நிச்சயம் செய்வார்கள்.

இதுபோல் தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் நடத்தினால் போதும்! அதிகமான புத்தகங்கள் விற்பனை ஆவது மாவட்டத்தின் மனிதவள மேம்பாட்டில் நன்றாகத் தெரியவரும்!

Wednesday, August 16, 2006

'அனைவரும் அர்ச்சகர் ஆகலாம்' சட்டம்

தமிழக அரசு கொண்டுவந்த Tamil Nadu Hindu Religious and Charitable Endowments (Amendment) Ordinance, 2006 எனப்படும் அவசரச்சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

உடனே, 'சமூகநீதி செத்துவிட்டது', 'நீதிபதிகள் பார்ப்பனர்கள்', etc. etc. என்று பலரும் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

இப்பொழுது வந்துள்ளது 'இடைக்காலத் தடை'. சில முக்கியமான கேள்விகளுக்கு விடைகள் தேவை என்று உச்சநீதிமன்றம் கருதியுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் சட்டத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லர். ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உதவியுடன்தான் சட்டங்கள் இயற்றப்படுகின்றன. ஆனால் சமீப காலங்களில் ஓட்டைகள் இல்லாமல் திடமாக இருக்கக்கூடிய சட்டங்கள் இயற்றப்படுவது குறைந்துள்ளது.

தமிழக அரசின் இணையத்தளத்தில் புது அரசால் இயற்றப்பட்ட வேறு சில அவசரச் சட்டங்கள் இருந்தனவே ஒழிய மேற்படி அவசரச்சட்டத்தின் வடிவம் கிடைக்கவில்லை. அதனால் சட்ட வடிவத்தில் என்ன பிரச்னை என்று தெரியவில்லை.

நீதிமன்றங்களைக் குறைகூறும் முன்னர், உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள இரண்டு முக்கியமான தீர்ப்புகளை கவனித்துவிடுவது நல்லது.

1. Seshammal & Others vs State of Tamil Nadu [1972]

The Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act (Tamil Nadu 12 of 1959) என்னும் சட்டத்தில் 1970-ல் சில மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன. அதில் முக்கியமானது பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்களை நியமிப்பதை மாற்றுவது.

பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்களை நியமிப்பது என்றாலே பார்ப்பனர்களைத் தவிர பிறருக்கு அர்ச்சகர்கள் ஆகும் தகுதி ஒட்டுமொத்தமாக மறுக்கப்படுகிறது என்பதுதான். ஆனால் 1970 சட்டத் திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அர்ச்சகர்கள் பரம்பரை பரம்பரையாக நியமிக்கப்படவேண்டியதில்லை என்றும் தகுதி படைத்த யாரும் அர்ச்சகராக்கப்படலாம் என்றும் தீர்ப்பு கூறியது.

அந்தத் தீர்ப்பிலிருந்து சில மேற்கோள்கள்:
Thus the appointment of an Archaka is a secular act and the fact that in some temples the hereditary principle was followed in making the appointment would not make the successive appointments anything but secular. It would only mean that in making the appointment the trustee is limited in respect of the sources of recruitment. Instead of casting his net wide for selecting a proper candidate, he appoints the next heir of the last holder of the office. That, after his appointment the Archaka performs worship is no ground for holding that the appointment is either a religious practice or a matter of religion. In view of sub-section (2) of section 55, as it now stands amended, the choice of the trustee in the matter of appointment of an Archaka is no longer limited by the operation of the rule of next-in-line of succession in temples where the usage was to appoint the Archaka on the hereditary principle. The trustee is not bound to make the appointment on the sole ground that the candidate is the next-in-line of succession to the last holder of Office. To that extent, and to that extent alone, the trustee is released from the obligation imposed on him by section 28 of the Principal Act to administer the affairs in accordance with that part of the usage of a temple which enjoined hereditary appointments. The legislation in this respect, as we have shown, does not interfere with any religious practice or matter of religion and, therefore, is not invalid.
இந்த வழக்கின் வாதத்தின்போது, வாதியின் தரப்பிலிருந்து மாநில அரசு வேண்டுமென்றே 'தகுதி' இல்லாதவர்களை அர்ச்சகர்களாக்கும் என்று கூறப்பட்டது. அதாவது ஆகமங்களுக்கு எதிராக ஒரு சைவக் கோயிலுக்கு வைணவரையோ, வைணவக்கோயிலுக்கு சைவரையோ அர்ச்சகராக்கும் உரிமை மேற்படி சட்டத்திருத்தத்தின்மூலம் அரசுக்குக் கிடைத்துவிடுகிறது என்று வாதம் எழுந்தது. மேலும் தகுதி படைத்த யாரையும் அர்ச்சகராக்கலாம் எனும்போது நாளை அரசு 'தகுதி' என்று எதுவுமே வேண்டியதில்லை என்று முடிவு செய்யலாம், பின் யாரை வேண்டுமானாலும் தகுதிகள் எதும் இன்றியே அர்ச்சகராக்கலாம் என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர்.

நீதிபதிகள் இந்த வாதங்களை ஏற்கவில்லை.
But the petitioners apprehend that it is open to the Government to substitute any other rule for rule 12 and prescribe qualifications which were in conflict with Agamic injunction. For example at present the Ulthurai servant whose duty it is to perform pujas and recite vedic mantras etc. has to obtain the fitness certificate for his Office from the head of institutions which impart instructions in Agamas and ritualistic matters. The Government, however, it is submitted, may hereafter change its mind, and prescribe qualifications which take no note of Agamas and Agamic rituals and direct that the Archaka candidate should produce a fitness certificate from an institution which does not specialize in teaching Agamas and rituals. It is submitted that the Act does not provide guidelines to the Government in the matter of prescribing qualifications with regard to the fitness of an Archaka for performing the rituals and ceremonies in these temples and it will be open to the Government to prescribe a simple standardized curriculum for pujas in the several temples ignoring the traditional pujas and rituals followed in those temples. In our opinion the apprehensions of the petitioners are unfounded; Rule 12 referred to above still holds the field and there is no good reason to think that the State Government wants to revolutionise temple worship by introducing methods of worship not current in the several temples. The rule making power conferred on the Government by section 116, is only intended with a view to carry out the purposes of the Act which are essentially secular. The Act nowhere gives the indication that one of the purposes of the Act is to effect change in the rituals and ceremonies followed in the terms. On the other hand, section 107 of the Principal Act emphasizes that nothing contained in the Act would be deemed to confer any power or impose any duty in contravention of the rights conferred on any religious denomination or any section there of by Article 26 of the Constitution.

....

In our opinion, therefore, the apprehensions now expressed by the petitioners are groundless and premature. In the result, these Petitions fail but in the circumstances of the case there shall be no order as to costs.
இந்தத் தீர்ப்புக்குப் பின் பரம்பரை அர்ச்சகர் பிரச்னை முடிவுக்கு வந்தது. அடுத்த முக்கியமான வழக்கு

2. N. Adithayan Vs The Travancore Devaswom Board & Others [2002]

கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில் ஒன்றில் பார்ப்பனரல்லாத ஒருவரை அர்ச்சகராக ஆக்கியதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு கடைசியாக உச்சநீதிமன்றம் வந்தது. இந்த வழக்கில் கேரளா உயர்நீதிமன்றத்தில் முழு பெஞ்ச், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியிருந்தது. உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பை முழுமையாக உறுதிசெய்தது. அந்தத் தீர்ப்பிலிருந்து மேற்கோள்:
In the present case, it is on record and to which we have also made specific reference to the details of facts showing that an Institution has been started to impart training to students joining the Institution in all relevant Vedic texts, rites, religious observances and modes of worship by engaging reputed scholars and Thanthris and the students, who ultimately pass through the tests, are being initiated by performing the investiture of sacred thread and gayatri. That apart, even among such qualified persons, selections based upon merit are made by the Committee, which includes among other scholars a reputed Thanthri also and the quality of candidate as well as the eligibility to perform the rites, religious observances and modes of worship are once again tested before appointment. While that be the position, to insist that the person concerned should be a member of a particular caste born of particular parents of his caste can neither be said to be an insistence upon an essential religious practice, rite, ritual, observance or mode of worship nor any proper or sufficient basis for asserting such a claim has been made out either on facts or in law, in the case before us, also.

...

Any custom or usage irrespective of even any proof of their existence in pre-constitutional days cannot be countenanced as a source of law to claim any rights when it is found to violate human rights, dignity, social equality and the specific mandate of the Constitution and law made by Parliament.

...
இவ்வாறு சொல்லி, பார்ப்பனரல்லாதவர்களுக்கும் ஆகம முறைப்படியான தகுதிகள் இருந்தால் அர்ச்சகர்கள் ஆகும் உரிமை உள்ளது என்று உச்சநீதிமன்றம் ஆணித்தரமாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தி ஹிந்து செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பது:
Appearing for the petitioners, senior counsel, K. Parasaran said that since the amendment provided for appointment of archakas irrespective of caste or creed or race, even those who followed Buddhism or Sikhism could be appointed as these two religions were said to be the offshoot of Hinduism.

He said such a provision offended Articles 25 and 26 of the Constitution (right to freedom of religion) and violated the Agama sastras, custom and usage. He pleaded for stay of the impugned provision, as it would disturb the three-decade-old practice.
ஆகமங்களில், முக்கியமாக வைகானச ஆகமத்தில், சைவர்கள் விஷ்ணு கோவிலில் அர்ச்சகராவதும் வைஷ்ணவர்கள் சைவக்கோவிலில் அர்ச்சகராவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விவாதம் சேஷம்மாள் வழக்கிலும் எடுத்துக்காட்டப்பட்டது. ஆனால் மாநில அரசு அதுமாதிரி வழக்கில் இல்லாத ஒன்றைச் செய்யப்போவதில்லை என்று உச்சநீதிமன்றம் அந்த விவாதத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. இப்பொழுது வாதிகள் தரப்பிலிருந்து புத்த, சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகர் கல்லூரியில் சான்றிதழ் வாங்கிவிட்டால் அவர்கள்கூட சைவ, வைஷ்ணவக் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம் என்ற தங்களது சந்தேகத்தை நீதிமன்றம் முன் வைக்கிறார்கள். நீதிமன்றம் தமிழக அரசின் அவசரச்சட்ட நகலைப் பார்த்து அரசின் வாதங்களைக் கேட்டு தமது தீர்ப்பை வழங்கவேண்டும்.

இந்த அடிப்படை இதற்கு முந்தைய வழக்குகளிலும் காணப்பட்டதுதான்.

சமூகநீதிக்கான போராட்டம் எளிதானதல்ல. கொள்கை முடிவுகள் சட்டவரைவுகளாகும்போது சரியாக அமையவேண்டும். எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் கொள்கைகள் நியாயமாக இருக்கும்போது, சட்ட வரைவுகள் சரியாக இருக்கும்போது, எதிர்ப்புகள் நிச்சயம் பலனற்றுப் போகும்.

தொடர்புள்ள சில பதிவுகள்:

இடைக்காலத் தடை - ரவி ஸ்ரீநிவாஸ்
சீக்கியரும் அர்ச்சகர் ஆகலாமா? - பிரபு ராஜதுரை
அர்ச்சகர் பிரச்னையின் பயணம்... - பிரபு ராஜதுரை

Monday, August 14, 2006

வாசித்ததில் நேசித்தது - முகமது யூனுஸ்

வணக்கம் நேயர்களே,

நான் ரெண்டு புத்தகங்களைப் பத்தி இப்ப பேசப்போறேன். ரெண்டுமே ஒரே ஆளைப் பத்தினதுதான். அவரு பேரு முகமது யூனுஸ். பங்களாதேச நாட்டைச் சேர்ந்தவரு.

இவர் என்ன செஞ்சாரு? என் இவரைப் பத்தி நாம தெரிஞ்சுக்கணும்? கடந்த 2,000-2,500 வருடங்கள்ள, மிக அதிகமான எண்ணிக்கைல மனுஷங்களோட வாழ்க்கையை மாத்தின ஆட்கள்னு பாத்தீங்கன்னா ரெண்டு மூணு பேரைச் சொல்லலாம் - யேசு, புத்தர், காந்தின்னு. அந்த வரிசைல முகமது யூனுஸ் பேரைச் சேக்கலாம்னு எனக்குத் தோணுது.

இதுல யேசு, புத்தர் ரெண்டு பேரும் spiritual - அதாவது ஆன்மிகத் துறைல சாதிச்சாங்க. காந்தி அரசியல் துறைல - நம்ம நாட்டுக்கு விடுதலை வாங்கித் தந்தாரு. முகமது யூனுஸ் பொருளாதாரத் துறைல நிறைய சாதிச்சிருக்காரு.

நாம ஏழ்மையைப் பத்தி நிறையப் பேசறோம். சுதந்தரம் வாங்கி 60 வருஷமாகப் போவது, ஆனாலும் நம்ம நாட்டுல நிறைய ஏழைங்க. ஆனா பங்களாதேசத்தை எடுத்துக்குங்க. நம்ம நாட்டைவிட மோசம். அவ்வளவு ஏழைங்க. உலகிலேயே மிக அதிகமான ஏழை நாடுகள்ள பங்களாதேசம் ஒண்ணு. பஞ்சம், பட்டினி, இயற்கைச் சீற்றம்னு அழிக்கப்பட்ட பகுதி. இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு மேற்கு பாகிஸ்தானால் நசுக்கப்பட்ட பகுதி.

விடுதலை கிடைச்சு கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேசம்னு பேர் மாறினாலும் கடந்த 36 வருஷத்துல அந்த நாடு அதிகம் முன்னேறலை. பட்டினி, படிப்பின்மை இப்படி பல பிரச்னைகள். ஆனா அரசியல்வாதிங்களால எதுவும் செய்யமுடியலை.

அப்ப முகமது யூனுஸ் ஒரு எகனாமிக்ஸ் புரொஃபசர். சிட்டகாங் பல்கலைக்கழகத்துல வேலை செய்யறார். அவருக்கு தன்னோட படிப்பு மேலயே ரொம்ப கோபம். ஏட்டுச் சுரைக்கா படிப்பால ஏழை மக்களுக்கு என்ன லாபம்ன்னு கோபம்.

சரி, நாம களத்துல எறங்கி போராடணும்னு யோசிக்கறாரு. ஏழை மக்கள் ஏழைங்களாவே இருக்க என்ன காரணம்? அவங்க முன்னேத்தத்துக்குத் தடையா இருக்கறது என்னன்னு யோசிக்கறாரு. அவங்களுக்குத் தேவையான கடன் வசதிகள் அவங்களுக்குக் கிடைக்காம இருக்கறதுதான்னு புரிஞ்சுக்கிறாரு. ஏன்னா, ஏழைகளுக்கு வங்கிகள் எந்த உதவியும் செய்யறதில்லே. கடன் தரணும்னா நிலம் இருக்கான்னு கேக்கறாங்க. படிக்காத ஏழைக்கு வங்கிகளப் பாத்தாலே பயமா இருக்கு.

இவங்களை முன்னேத்தணும்னா வங்கிகள் மக்கள்ட்ட போகணும்னு நினைக்கிறாரு. ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு வங்கியை ஒப்புத்துக்க வெச்சு கடன்கள் வாங்கிக் கொடுக்கறாரு. சில நூறு பேர்களுக்கு கடன்கள் கிடைக்குது. அதனால அந்த ஏழைகள் வாழ்வுல கொஞ்சம் முன்னேற்றம்.

ஆனா வங்கிகளுக்கு இது புரியறதில்ல. யூனுஸோட செயல்பாட்டுக்கு நிறைய கஷ்டங்களைக் கொடுக்கிறாங்க. சரி, இதெல்லாம் சரிப்படாது, நாமே ஒரு வங்கியை ஆரம்பிச்சுடலாம்ங்கற நிலைக்கு தள்ளப்படறாரு. அப்படி ஆரம்பிச்சதுதான் கிராமீன் வங்கி.

ஏழைகளுக்கு மட்டுமே கடன் கொடுப்போம்ங்கற எண்ணத்தோட ஆரம்பிக்கப்பட்டது இந்த வங்கி. நிச்சயமா, இந்த வங்கி கடன் கொடுத்து கொடுத்தே அழிஞ்சிடும், உருப்படாதுன்னு நினைக்கிறாங்க பிற வங்கிகளோட நிர்வாகிகள். ஆனா நடக்கறதே வேற.

இந்த கிராமீன் வங்கி உருவாக்கினதுதான் மகளிர் சுய உதவிக்குழுக்கள்ங்கற கருத்து. இப்ப நம்ம நாட்டுலயும் நிறைய பரவி இருக்கு. ஆனா கிராமீன் வங்கி அளவுக்கு இதோட செயல்பாடுகள் இல்ல.

ஐஞ்சு பேர் கொண்ட குழு. எல்லாமே பெண்கள். இவங்க சேர்ந்து கிராமீன் வங்கிகிட்டேருந்து கடன் வாங்கறாங்க. அதை வச்சு வருமானம் பெருகற மாதிரி தொழில் செய்றாங்க. கோழி வளக்கறது, ஆடு வளக்கறது, மளிகைக் கடை நடத்தறது, பொருள்களை வாங்கி விக்கறது, கூடை முடையறதுன்னு யாரால என்ன முடியுமோ அந்த வேலைங்க.

இதுல கிடைக்கற பணத்தை வெச்சு அந்தக் குடும்பத்துல எல்லாரும் நாளுக்கு மூணு வேளை சாப்பிட முடியுது.

இப்ப பங்களாதேசத்துல 50 லட்சத்துக்கும் மேற்பட்டவங்க - அதுல 90% மேல பெண்கள், கிராமீன் வங்கில உறுப்பினரா கடன்கள் வாங்கியிருக்காங்க. இதுக்கு பேரு மைக்ரோ கிரெடிட் - அதாவது குறுங்கடன். கடன்கள் பொதுவா ரூ. 2,000 - 3,000 இந்த மாதிரி ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா மேல போகும்.

இதனால கிராமத்துல அநியாய வட்டிக்குக் கடன் கொடுத்து வியாபாரம் செஞ்சிகிட்டுருந்தவங்களோட அட்டூழியம் கொறஞ்சிருக்கு.

இப்படி பல மக்களோட வாழ்க்கைல ஒளி ஏத்தியிருக்கற கிராமீன் வங்கிய எப்படி உருவாக்கினேன்னு முகமது யூனுஸ் ஒரு புத்தகம் எழுதியிருக்காரு. அவரோட சுயசரிதை. Alan Jolis-ங்கற பத்திரிகையாளரோட சேர்ந்து எழுதியிருக்காரு. Banker to the Poor அப்பிடிங்கறது புத்தகத்தோட பேரு. The University Press Ltd., Bangladesh பிரசுரிச்சுருக்காங்க.

ஒர்த்தர் தன்னோட வாழ்க்கை வரலாறை எழுதறப்போ சில விஷயங்களை சொல்லாம விட்டுடலாம். அதனால எப்பவுமே சுயசரிதை படிச்சா கூடவே அதே விஷயத்தைப் பத்தி எழுதியிருக்கற இன்னொரு புத்தகத்தையும் படிச்சுடறது நல்லது. கிராமீன் வங்கியோட கதையைப் பத்தி David Bornstein-ங்கற பத்திரிகையாளர் ஒரு புத்தகமா எழுதியிருக்காரு. The Price of a Dream - The Story of the Grameen Bank-ங்கறது புத்தகத்தோட பேரு. Oxford University Press பதிப்பிச்சிருக்காங்க.

இந்த ரெண்டு புத்தகத்தையும் நீங்க அவசியம் படிக்கணும்னு நான் பரிந்துரை செய்றேன்.

கிராமீன் வங்கி போல நம்ம நாட்டுலயும் சில அமைப்புகள் உருவாகணும்னு வேண்டிப்போம்.

நன்றி நேயர்களே.

[ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையத்தில் 'வாசித்ததில் நேசித்தது' என்ற நிகழ்ச்சிக்காக நான் ஒலிப்பதிவு செய்த நிகழ்ச்சியின் transcript - சுமார் 10 நிமிடங்கள். 13.71/15.77/17.81 MHz அலைவரிசையில் எப்பொழுதாவது வரும். AIR ஒலிபரப்பு முடிந்ததும் பதிவு செய்திருக்கும் ஒலித்துண்டை சேர்க்கிறேன்.]

Friday, August 11, 2006

39வது ஞானபீட விருது விந்தா கராண்டிகருக்கு

நேற்று 39வது ஞானபீட விருது மராத்தி கவிஞர் (கோ)விந்தா கராண்டிகருக்கு வழங்கப்பட்டது. (ஜனவரியிலேயே வெளியிடப்பட்ட தகவல்தான்.) விருதை அளித்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கராண்டிகரின் கவிதையை வாசித்ததைக் கேட்டவுடன் தனக்கும் மராட்டி மொழி கற்றுக்கொள்ள ஆசை ஏற்பட்டதாகச் சொல்கிறார்.

கராண்டிகர் பற்றி எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி ஜனவரி 2006 இதழில் வந்த விரிவான கட்டுரை அவரது இலக்கிய, சமுதாயப் பார்வைகளைப் புரிந்துகொள்ள உதவும்.

சென்ற ஆண்டுக்கான ஞானபீட விருது தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தனுக்குக் கிடைத்தது என்பது உங்களில் பலருக்கு நினைவில் இருக்கலாம்.

கோக், பெப்சி - அடுத்து என்ன?

சென்றமுறை Centre for Science and Environment அமெரிக்க கோலா பானங்களில் நச்சுப்பொருள் அளவு அதிகமாக இருந்ததாகச் சொன்னபோது பெரிய எதிர்வினை ஏதும் இருக்கவில்லை. ஆனால் இந்தமுறை மாநிலங்கள் அளவில் வெவ்வேறு வடிவில் எதிர்வினைகள் வந்துள்ளன.

கேரளா அரசு கோக், பெப்சி விற்பனையை முற்றிலுமாகத் தடைசெய்வதாகவும் மேற்கொண்டு இந்த பானங்களைத் தயார் செய்வதையும் தடைசெய்யப்போவதாகவும் சொல்லியுள்ளது. பிற மாநில அரசுகள் கல்விக்கூடங்களில் விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளன.

1. கேரளா அரசின் தடை நிச்சயமாக நீதிமன்றங்களுக்குச் செல்லும். கேரளா சரியான முகாந்திரம் இல்லாமல் மாநிலம் முழுதும் தடை செய்துள்ளது என்று தோன்றுகிறது. தடை செய்ய விரும்பியிருந்தால் தானே சில பாட்டில்களைப் பறிமுதல் செய்து அரசு சோதனைக்கூடங்களில் பரிசோதனை செய்து அந்தத் தகவலின்பேரில் தடை செய்திருக்கலாம். மேலும் அத்துடன் நச்சுப் பொருளை உணவு என்று சொல்லி விற்றதாக பெப்சி, கோக் இருவர்மீதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் வாயிலாக வழக்கு தொடுத்திருக்கலாம்.

இப்பொழுது அவசரப்பட்டதனால் நீதிமன்றங்களில் தேவையின்றி காலம் கழிக்க நேரிடும்.

2. பிற மாநிலங்கள் சில கல்விக்கூடங்களுக்கு அருகில் விற்பனையைத் தடைசெய்துள்ளன. இந்தத் தடையை பெப்சி, கோக் போன்றவற்றால் எளிதாக எதிர்க்க முடியாது. ஆனால் இந்த மாநிலங்கள் நிஜமாகவே கோக், பெப்சி ஆகியவற்றின் தரத்தில் சந்தேகம் வைத்திருந்தால் உடனடியாக மாதிரிகளைப் பரிசோதனை செய்ய அனுப்பியிருக்கவேண்டும்.

3. நிலத்தடி நீர் பாதிப்பு: கோக், பெப்சியின் ரசாயன அளவுக்கும் நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படுவதற்கும் நேரடி சம்பந்தம் உண்டு. இந்தியா போன்ற நாட்டில் கடைக்கோடி மக்களுக்கு பாதுகாப்பான, சுகாதாரமான தண்ணீர் கிடைப்பதில்லை; ஆனால் தொழிற்சாலைகள் மிகக்குறைந்த விலையில் அல்லது காசு ஏதும் கொடுக்காமலேயே தண்ணீரை உறிஞ்சி வளங்களைப் பாழடிக்கின்றன. இதில் கோக், பெப்சி போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமல்ல; உள்ளூர் தோல் தொழிற்சாலைகள், துணி தொழிற்சாலைகள் போன்ற பலவும் உண்டு.

கோக், பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்கள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தக்கூடாது என்றும் தண்ணீர் தேவைப்பட்டால் கடல்நீரைச் சுத்திகரிப்பதன்மூலம் கிடைக்கும் தண்ணீரை மட்டுமே வைத்துக்கொண்டு அவை பிழைப்பை நடத்தவேண்டும் என்றும் சொல்லலாம் என்று முன்னர் என் வலைப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

அதேபோல சூழல் மாசுபடுத்தும் பிற தொழிற்சாலைகளுக்கும் 'சுத்திகரிப்பு வரி' என்று கடுமையான வரி விதித்தலை நான் வரவேற்கிறேன்.

4. மத்திய அரசின் பங்கு: மத்திய அரசு இந்த விவகாரத்தை இன்னமும் சரியான முறையில் அணுகவில்லை. சென்றமுறை பாஜக ஆட்சியில் கோக், பெப்சி ஆகிய இரண்டுக்கும் 'clean chit' வழங்கப்பட்டது. இம்முறையும் பூசி மெழுகிவிடாமல் தீவிரமாக ஆராய்ந்து தவறு செய்துள்ளனர் என்று தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுப்பதிலிருந்து மத்திய அரசு வழுவக்கூடாது.

5. அந்நிய முதலீடு: FICCI, CII போன்றவையும் அத்தனை பிசினஸ் செய்தித்தாள்களும் அந்நிய முதலீடு பாதிக்கப்படும் என்று அபத்தமான கோஷங்கள் எழுப்புகின்றன. அந்நிய முதலீடு வேண்டும் என்பதற்காக விஷத்தை விற்பதை அனுமதிக்க வேண்டியதில்லை. அதேநேரம் கோக், பெப்சி ஆகியவைமீது சரியான சாட்சியம் இல்லாமல் தண்டனை கொடுக்கக்கூடாது.

அந்தவகையில் CSE கொடுத்திருக்கும் சாட்சியங்களை கவனமாக ஆராய்ந்து அரசும் தன் கணக்குக்கு நியாயமான வகையில் சில பரிசோதனைகளைச் செய்யவேண்டும். மத்திய அரசு மட்டுமின்றி மாநில அரசுகளும் தங்களுக்குத் தேவையான பரிசோதனைகளை உடனடியாகச் செய்துவிடவேண்டும். இல்லாவிட்டால் இப்பொழுது கடைகளில் இருக்கும் சரக்கு காணாமால் போய்விடலாம்.

6. கேரளாவை மேற்கு வங்கம் பின்பற்றுமா? பாஜக ஆட்சி நடத்தும் மாநிலங்களும் களத்தில் இறங்கிவிட்டன. காங்கிரஸ், திமுக?

அன்புமணி ராமதாஸ் விரைவில் 'junk food' பற்றி அறிக்கை சமர்ப்பிப்பதாகச் சொல்லியிருக்கிறார். பார்ப்போம்.

Thursday, August 10, 2006

IT நில ஊழல்

Rediff News

தமிழக அரசின் எல்காட் நிறுவனத்துக்குச் சொந்தமான, காஞ்சிபுரத்தில் உள்ள 123 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு ஐந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விற்க முயற்சி செய்ததாக கடந்த அஇஅதிமுக ஆட்சியின்மீது புகார் வந்துள்ளது.

ஏக்கருக்கு ரூ. 3 கோடிக்குமேல் செல்லும் இந்த நிலங்களை ரூ. 48 லட்சத்துக்கு விற்பனை செய்ய முந்தைய அரசு முடிவெடுத்திருந்ததாம்.

காக்னைசண்ட் டெக்னாலஜிஸ் - 20 ஏக்கர்
மெகாசாஃப்ட் - 25 ஏக்கர்
புரோட்டான் வெப் - 3 ஏக்கர்
பெஞ்ச்மார்க் - 25 ஏக்கர்
அட்வான்ஸ்ட் சாஃப்ட்வேர் - 50 ஏக்கர்

என்று மேற்படி ஐந்து நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட இருந்ததாம்.

பின் தேர்தலுக்கு வெகு அருகில் முடிவு செய்யப்பட்டது என்பதால் இந்த ஆணை செயல்படுத்தப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது. இந்த விற்பனையைத் தடைசெய்யச் சொல்லியும் சிபிஐ விசாரணை கோரியும் பொதுநலவழக்கு ஒன்று நீதிமன்றத்தில் இருப்பதாலும் இந்த ஆணையில் முறைகேடுகள் இருந்ததாலும் சென்ற மாதமே மாநில கேபினெட் இந்த விற்பனையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது.

இதைப்பற்றி நேற்றும் இன்றும் சட்டப் பேரவையில் விவாதம் நடந்துவருகிறது.

வசந்தா கந்தசாமிக்கு கல்பனா சாவ்லா விருது

ஆண்டுதோறும் தமிழக அரசால் வழங்கப்படும் கல்பனா சாவ்லா விருது இந்த ஆண்டு ஐ.ஐ.டி சென்னை துணைப்பேராசிரியர் திருமதி வசந்தா கந்தசாமிக்கு வழங்கப்பட உள்ளது.

தி ஹிந்து செய்தியிலிருந்து:
Dr. Vasantha is a scholar and researcher in mathematics. She has been in the Mathematics Department for 17 years.

She has written 14 books published in the United States and also written two books on AIDS awareness.

It is noteworthy that among the 480 teachers working at the institute she was the only one who demanded that the administration appoint teachers on the basis of social justice.

The award comprising Rs. 5 lakh and a medal will be presented on the Independence Day.
தினமணி செய்தி

Wednesday, August 09, 2006

தொழிற்கல்விக்கு நுழைவுத்தேர்வு தேவையா?

அஇஅதிமுக அரசு சென்ற ஆட்சியில் நுழைவுத்தேர்வை ரத்து செய்து கொண்டுவந்த அரசாணை, அவசரச் சட்டம், பின் சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் ஆகியவை சென்னை உயர்நீதிமன்றத்தால் தடைசெய்யப்பட்டன. இவற்றை எதிர்த்து ஜெயலலிதா அரசு உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றமும் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணையைத் தடைசெய்ய மறுத்துவிட்டது.

ஆட்சிமாற்றத்துக்குப் பிறகு திமுக அரசு மு. ஆனந்தகிருஷ்ணன் தலைமையில் ஒரு குழுவை நியமித்து நுழைவுத் தேர்வு தேவையா இல்லையா என்பது பற்றி மக்களிடம் கருத்து கேட்கச் சொல்லியுள்ளது.

இதைப்பற்றிய தி ஹிந்து செய்தி

நேரில் வந்து கருத்து சொல்லமுடியாதவர்கள் மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம் - ஆகஸ்ட் 20ம் தேதிக்குள். அனுப்பவேண்டிய முகவரி: lo@tndte.gov.in

===

பழைய பதிவுகள் சில:

1. நுழைவுத் தேர்வு ரத்து சட்டத்தை எதிர்த்து வழக்கு
2. நுழைவுத் தேர்வு ரத்துச் சட்டம் - வழக்கு
3. நுழைவுத் தேர்வுச் சட்டம் ரத்து

Monday, August 07, 2006

ஏழைமையைக் குறைத்தல் Vs செல்வம் பெருக்குதல்

குத்தம்பாக்கம் பஞ்சாயத்துத் தலைவர் இளங்கோ தான் கடந்து வந்திருக்கும் பாதையைப் பற்றியும் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தான் மேற்கொண்டுள்ள முயற்சிகள் பற்றியும் நேற்று பேசினார். (அதன் ஒலித்துண்டு என்னிடம் உள்ளது. அதனை 'சுத்திகரித்து' பின் வலையேற்றுகிறேன்.)

இளங்கோவின் பேச்சு (23 MB)

இளங்கோவைப் பற்றி நீங்கள் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கலாம். அண்ணா பல்கலைக்கழகத்தில் வேதிப்பொறியியலில் பி.டெக் பட்டம் பெற்றவர். CSIR-இல் வேலை செய்து வந்தவர். தன் வேலையை உதறிவிட்டு கிராம முன்னேற்றத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள முன்வந்த social entrepreneur. 1996-ல் தமிழகத்தில் பஞ்சாயத்துத் தேர்தல் நடந்தபோது சென்னைக்கு அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் குத்தம்பாக்கம் பஞ்சாயத்துக்கான தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பின் மீண்டும் அடுத்தமுறையும் வென்று இப்பொழுது கிட்டத்தட்ட பத்தாண்டுகாலம் அந்தப் பஞ்சாயத்தின் தலைவராக இருந்துள்ளார்.

தான் கடந்து வந்த பாதையைப் பற்றியும் தன் பரிசோதனைகளைப் பற்றியும் நேற்று பேசினார். முதலில் கிராம நலத்திட்டங்கள் பலவற்றைச் செய்ய முற்பட்டுள்ளார். சாலைகள் அமைப்பது, கழிவுநீர் அகற்ற சாக்கடைகள் அமைப்பது, உள்ளூர் பள்ளிக்கூடத்தைச் சீரமைப்பது, வீடுகளுக்கு குழாய்மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அளிப்பது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் வசிக்க, கண்ணியமான நல்ல வீடுகள் கட்டிக்கொள்ள உதவுவது - இப்படியாகத்தான் அவரது முதன்மைகள் (priorities) இருந்தன.

ஆனால் இவை போதா என்பதை சீக்கிரமே அவர் உணர்ந்தார். கிராம மக்கள் பிரிட்டன் ஆட்சிக் காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக தமது சிந்திக்கும், செயலாற்றும் திறன்களை இழந்து 'எல்லாவற்றையும் அரசு செய்யும்' என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் கவனித்தார். விவசாயம் ஒரு வளம் கொழிக்கும் தொழிலாக இல்லாமல் போயிருப்பதையும் கவனித்தார். கிராம மக்களிடையே தொழில்முனையும் திறன் (entrepreneurial ability) இல்லாதிருப்பதைக் கண்டார். எந்தவித மதிப்புக்கூட்டுதலையும் செய்யாது விளைபொருளை நகரங்களுக்கு விற்று பின் மீண்டும் மதிப்புக்கூட்டிய பொருள்களை நகரங்களிலிருந்து வாங்குவதால் கிராமங்களிலிருந்து 'மூலதனம்' நகரங்களுக்குச் செல்வதை அறிந்துகொண்டார்.

கிராம மக்கள் ஏழைகளாகவே, அன்றாடங்காய்ச்சிகளாகவே இருந்தனர். என்னதான் நலத்திட்டங்கள் செய்தாலும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே அதிமுக்கியத் தேவை மக்களுக்கு நிலையான வருமானம் என்பதை அறிந்துகொண்டார். அதாவது 'ஏழைமையைக் குறை' என்று சொல்வதைவிட 'செல்வத்தைப் பெருக்கு', 'வருமானத்தை அதிகரி' என்பதுதான் தாரக மந்திரம் என்று புரிந்துகொண்டார்.

'கிராமப் பொருளாதரப் பின்னல்' ஒன்றை உருவாக்குவதன்மூலமும் கிராமங்களில் மதிப்புக்கூட்டும் தொழில்களை உருவாக்குவதன்மூலமும் கிராமக் கூட்டங்களுக்குத் தேவையான 80% பொருள்களை அந்தப் பின்னலிலிருந்தே பெறமுடியும் என்றும் மிகுதிக்கும் தொழில்நுட்பங்களுக்கும் மட்டும் நகரங்களைச் சார்ந்திருக்கலாம் என்றும் கணித்து அதைச் செயல்படுத்தத் தொடங்கினார். அதே நேரம் கிராம மக்களுக்கு அதிக வருமானமும் கிடைக்கும், வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கும்.

குத்தம்பாக்கத்தைச் சுற்றியுள்ள 20 கிராமங்களை இணைத்து வலைப்பின்னல் ஒன்றை உருவாக்கினார். இந்த 20 கிராமங்கள் இணைந்த கூட்டமைப்பில் சுமார் 50,000 முதல் 60,000 மக்கள் வசிக்கின்றனர். இந்தக் கூட்டமைப்பின் மாதப் பொருளாதாரம் கிட்டத்தட்ட ரூ. 5.5 - 6.0 கோடி ஆகும். அதாவது ஒரு மாதத்துக்கு அந்த அளவுக்கு இந்த மக்கள் பொருள்களை வாங்குகின்றனர். பொருள்கள் என்றால் அரிசி, பருப்பு, எண்ணெய், மாவு, பால், பால் பொருள்கள், உப்பு, சோப்பு, ஷாம்பூ, பற்பசை, செங்கற்கள், ஓடுகள், பிளாஸ்டிக் பொருள்கள், பெயிண்ட், தைத்த துணிகள், ஊதுபத்தி, மெழுகுவத்தி, நோட்டுப்புத்தகங்கள், இத்யாதி. பின் சேவைகள்.

எப்படி புதுப் பொருளாதாரத்தை இந்தப் பின்னலில் உருவாக்குவது? 'Priming the pump' என்று சொல்வார்கள். நிலத்தடி நீரை அடிகுழாய் மூலம் எடுக்க முதலில் தண்ணீர் கொஞ்சத்தை மேலே ஊற்றவேண்டும். அதன்பிறகு தொடர்ந்து அடிக்கும்போது நிலத்தடிநீர் மேலே வரத்தொடங்கும். எனவே முதலில் கொஞ்சம் மூலதனம் தேவை. அந்த மூலதனம் மான்யங்கள் மூலம் அவருக்குக் கிடைத்துள்ளது - அரசு மான்யம், தனியார் தொண்டு நிறுவனங்கள் தரும் grant.

இந்தப் பணத்தை வைத்து அரிசி மில் ஒன்றைக் கொண்டுவந்தார். நெல்லை அப்படியே விற்பதற்குபதில் அரிசியாக்கி விற்பனை செய். அதையும் வெளிச்சந்தைக்கு விற்பதற்குமுன் உள்சந்தையில் - வலைப்பின்னலுக்கு உள்ளே - விற்பனை செய். மீதி இருப்பதை வெளியே கொண்டுபோ. கடலையை ஆட்டி நெய் ஆக்கு. சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெயைத் தயாரி. உள்ளூரிலேயே சோப்பு உருவாக்கு. துவரம்பருப்பை உடைத்து சுத்திகரித்து உள்ளூரிலேயே விற்பனை செய்.

நெல்லை அரிசியாக்கும்போது கிடைக்கும் உமியை எரித்து அதன்மூலம் மின்சாரம் தயாரித்து அதிலிருந்து ஊர் விளக்குகளை எரியவைத்தல், சுட்ட செங்கற்களுக்கு பதில் அழுத்தி உருவாக்கிய களிமண் கட்டிகளைத் தயாரித்தல், ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறை - உள்ளூரிலேயே தயாரான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பேசினால் ஆனது.

ஒரு கிராமக்கூட்டத்தில் 35% விவசாயம், 15% கைத்தொழில் வினைஞர்கள், மீதி 50% எந்தத் திறனும் இல்லாத - unskilled தொழிலாளர்கள் என்ற நிலை போய், இந்த 50% மக்களை - 35% உள்ளூர் உற்பத்தியாளர்களாகவும் 15% திறனுள்ள தொழிலாளர்களாகவும் மாற்றியுள்ளார்.

இது ஓர் உடோபிய கனவா? இல்லை. இன்று குத்தம்பாக்கம் சென்று நேரிலேயே பார்க்கலாம். உலக வங்கியிலிருந்து வந்து பார்த்துவிட்டுப் போகிறார்கள். ரிசர்வ் வங்கி கவர்னர் வந்து பார்த்துவிட்டுப் போகிறார்.

இதனால் பிற கிராமங்களுக்கு ஏதேனும் நன்மையா? இதை ஒரு தனிமனிதன் ஏதோ மான்யத்தின்மூலம் உருவாக்கியிருக்கிறான், பெருமளவில் இதனைச் செய்ய சாத்தியப்படுமா என்று பலர் சந்தேகிக்கலாம்.

இல்லை, நிச்சயம் சாத்தியம் என்கிறார். ஒரு கிராமக் கூட்டமைப்பை தன்னிறைவடைந்ததாக மாற்ற ரூ. 5 கோடி pump primer தேவைப்படும் என்கிறார். அந்தப் பணம் ஒரு குறிப்பிட்ட காலத்தில் வட்டியோடு திரும்பக் கொடுத்துவிடக்கூடியதாக இருக்கும். ரிசர்வ் வங்கி கவர்னர் வந்தாராம். பார்த்தாராம். மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார். "இது, இது, இதுதான் நமக்குத் தேவை" என்றுள்ளார். ஆனால் உடனேயே "நான் அந்நியச் செலாவணி பிரச்னையில் நேரத்தை செலவழிக்கவேண்டியுள்ளது. மேலும் நான் போய் காந்தியப் பொருளாதாரம், கிராம முன்னேற்றம் என்று சொன்னால் எல்லோரும் அதிர்ச்சி அடைவார்கள். என்னால் நேரடியாக ஒன்றும் செய்ய முடியாது" என்று சொல்லிவிட்டு பேங்க் ஆஃப் இந்தியா சேர்மனை இளங்கோவுக்கு அறிமுகம் செய்துவிட்டுச் சென்றுள்ளார்.

பேங்க் ஆஃப் இந்தியா இப்பொழுது முதல் கட்டமாக ரூ. 24.5 கோடி தருவதாகச் சொல்லியிருக்கிறது. இதன்மூலம் ஐந்து கிராமக் கூட்டமைப்புகளை வலுவான பொருளாதார மையங்களாக மாற்றமுடியும். அது வெற்றிபெற்றால் மேலும் 100 கூட்டமைப்புகளை உருவாக்கத் தேவையான பணத்தைத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்களாம்.

இனி பிற வங்கிகளும் இதைப் பின்பற்றலாம்.

என்? கையில் பணம் வைத்திருக்கும் தனியார்கூட இதில் பங்குபெறலாம். வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் பங்குபெறலாம்.

ஐயோ, எல்லாம் போயிற்றே என்று புலம்பி அழாமல், சாதித்துக் காட்டியிருக்கிறார் இளங்கோ. அடுத்தமுறை பஞ்சாயத்துத் தேர்தல் முறையில் ஏற்படும் மாற்றங்களால் (சில பஞ்சாயத்துகள் பெண்களுக்கு அல்லது ஷெட்யூல்ட் சாதியினருக்கு என்று மாற்றி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. அது நடந்தால் குத்தம்பாக்கம் இப்படிப்பட்ட ஒதுக்கீட்டுக்குள் செல்லலாம்.) இளங்கோ மீண்டும் குத்தம்பாக்கத்தில் நிற்கமுடியாமல் போகலாம். அதுவும்கூட ஒருவகையில் நல்லதுதான்.

இளங்கோவின் சேவை குத்தம்பாக்கத்துக்கு வெளியேயும் தேவை.

இந்தச் செயல்பாடுகளின்போது இளங்கோவுக்கு அரசு அதிகாரிகளின் உதவி கிட்டியுள்ளதா? இல்லை என்கிறார். சொல்லப்போனால் உபத்திரவம்தான் அதிகம் என்கிறார். இவர் செய்த பலவற்றில் குற்றம் காண்பது, இவர் பணத்தைத் தவறாகச் செலவழித்தார் என்பது, இவரது சொத்துக்களை முடக்கப்பார்ப்பது என்று பிரச்னைகள்தாம். ஆனால் அதற்கெல்லாம் இவர் கவலைப்படுபவர் போலத் தெரியவில்லை. நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பதன்மூலம் பிரச்னைகளை சமாளிப்பதாகச் சொல்கிறார்.

இளங்கோ நேற்று கொண்டுவந்த powerpoint presentation-ஐ உங்களுக்காக வாங்கிவந்துள்ளேன். இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Prosperity generation and poverty reduction through Network Growth Economy, Kuthambakkam Model: Powerpoint File (6 MB) | Low resolution PDF File (698 KB)

(கூத்தம்பாக்கம் என்று எழுதியிருந்ததை குத்தம்பாக்கம் என்று மாற்றியுள்ளேன்.)

Sunday, August 06, 2006

தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர) எழுத்துகள் நாட்டுடமை?

இன்றைய தினமணியில் தி.ஜ.ரங்கநாதன் எழுத்துகள் நாட்டுடமையாக்கப்படவேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளதாக செய்தி வந்துள்ளது.

அவர் மஞ்சரி எனும் இதழின் ஆசிரியராகப் பல காலம் இருந்தவர்.

அவர் எழுதியதை நான் அதிகம் படித்ததில்லை. ஆனால் லூயி ஃபிஷரின் காந்தியின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை தி.ஜ.ர தமிழாக்கம் செய்ததைப் படித்திருக்கிறேன் (பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு).

கருணாநிதி முதல்வராக இருந்த காலங்களில்தான் அதிகபட்சமாக எழுத்துகள் நாட்டுடமை ஆக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் புலவர் குழந்தை, ம.பொ.சி ஆகியோரது எழுத்துகள் நாட்டுடமையாக்கப்பட்டு முறையே ரூ. 10 லட்சம், ரூ. 20 லட்சம் அவர்களது சந்ததிகளுக்கு வழங்கப்பட்டன.

உடனடியாக தி.ஜ.ர எழுத்துகள் நாட்டுடமையாக்கப்படுமா என்று தெரியவில்லை. ஒருவேளை அடுத்த வருடம் பரிசீலிக்கப்படலாம்.

அரசால் முடியாவிட்டால் மற்றொரு புதிய முறையையும் கொண்டுவரலாம். BAPASI போன்ற தமிழ் பதிப்பாளர்கள் சங்கம் ஒட்டுமொத்தமாக ஒரு தொகையைக் கொடுத்து ஓர் எழுத்தாளருடைய எழுத்துகளின் உரிமையை வாங்கிக்கொள்ளலாம். அதன்பின் எந்தப் பதிப்பாளரும் ஒரு குறிப்பிட்ட தொகையை BAPASI-க்குக் கொடுத்துவிட்டு non-exclusive முறையில் பதிப்பிக்கும் உரிமையைப் பெற்றுக்கொள்ளலாம்.

பரிந்துரை - Mike Marqusee on Britain's attempt at rewriting history

இன்று தி ஹிந்து செய்தித்தாள் இணைப்பு இதழில் மைக் மார்குஸீ எழுதியுள்ள Fudging history படிக்க வேண்டிய கட்டுரை.

வரலாற்றுத் திரிபுகள் எல்லா நாடுகளிலும் உண்டு. சொல்லாமல் விடுதலும் திரித்துச் சொல்வதைப் போன்றே மோசமான ஒரு விஷயம்தான். ஆனால் அதை எடுத்துச் சொல்ல சிலராவது இருக்கிறார்களே என்பது சந்தோஷம்.

இந்தியாவிலும் ஏகப்பட்ட சொல்லப்படாத விஷயங்கள், திரித்துச் சொல்லப்படும் விஷயங்கள் என்று உண்டு.

மஹாராஷ்டிரத்தில் சிவாஜிக்கு எதிராக ஒன்றும் சொல்லமுடியாது. கர்நாடகத்தில் புலிகேசிக்கு எதிராக. ஒரிஸ்ஸாவில் அசோகரைப் புகழ்ந்து சொல்ல முடியாது! தமிழகத்தில்? அந்த அளவுக்கு மோசம் இல்லை என்று நினைக்கிறேன். பழைய அரசர்கள் யாரைப் பற்றியும் அந்த அளவுக்கு பயப்பட வேண்டியதில்லை. கண்ணகி போல சில புனிதப் பசுக்கள் உண்டு; ஆனால் அவரைப் பற்றியும் விமரிசனமாக எழுதினால் ஆர்வமுடன் பிரசுரிக்கின்றன இதழ்கள்.

பழங்கால இந்தியா பற்றிய முழுமையான, பலராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுக்கு நடுநிலையான, முக்கியமான விஷயங்கள் ஏதும் விடுபட்டுப் போகாத வரலாறு ஒன்று வேண்டும்.

Friday, August 04, 2006

இட ஒதுக்கீடு பற்றி P.S.கிருஷ்ணன்

இரண்டு நாள்கள் முன்னதாக சென்னை Indian School of Social Sciences என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சியில் P.S.கிருஷ்ணன் "Social Justice and Reservation" என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் பேசினார்.

கிருஷ்ணன் ஓய்வுபெற்ற IAS. மத்திய அரசில் பல துறைகளுக்குச் செயலராக இருந்துள்ளார். National Commission for SC/ST, National Commission for Backward Classes ஆகியவற்றுக்குத் தலைவராக member-secretary ஆக இருந்துள்ளார். மண்டல் கமிஷன் அறிக்கையைத் தூசுதட்டி எடுத்து அதனைச் செயல்படுத்த வி.பி.சிங் முனைந்தபோது அந்தத் துறையின் செயலராக இருந்து அந்த வேலையைச் செய்தவர் கிருஷ்ணன்.

இட ஒதுக்கீடு பற்றி இவரிடமிருந்து தெரிந்துகொள்ள நிறைய உள்ளது. அடுத்து வரும் இரண்டு ஒலித்துண்டுகள் பற்றிய விவரம்:

1. முதல் ஒலித்துண்டில் சஷி குமார், Asian College of Journalism, கிருஷ்ணனை அறிமுகம் செய்து வைக்கிறார். தொடர்ந்து கிருஷ்ணன் பேசுகிறார்., 58.43 நிமிடம், 26.8 MB, 64kbps MP3 கோப்பு

2. இரண்டாம் ஒலித்துண்டில் கேள்வி பதில்கள். துண்டுச்சீட்டில் எழுதப்பட்ட கேள்விகளை கிருஷ்ணன் அல்லது சஷி குமார் வாசிக்க, கிருஷ்ணன் பதிலளிக்கிறார்., 42.37 நிமிடம், 19.5 MB, MP3 கோப்பு

இந்தப் பேச்சில் வரும் பல விஷயங்களை அவர் கிட்டத்தட்ட Frontline-ல் எழுதியுள்ளார்.

ஈரோடு, மதுரை புத்தகக் கண்காட்சிகள்

நாளை - சனிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2006 - முதல் ஈரோட்டில் புத்தகக் கண்காட்சி தொடங்க உள்ளது. ஆகஸ்ட் 15 வரை செல்லும்.

இந்தக் கண்காட்சி சென்னையை அடுத்து, தமிழகத்திலேயே இரண்டாவது பெரிய கண்காட்சியாக இருக்கும் என்று தகவல்கள் வந்துள்ளன. ஈரோடு வ.உ.சி பூங்காவில் 150க்கும் மேற்பட்ட கடைகளுடன் நடக்கும் இந்தக் கண்காட்சிக்கு ஈரோடு, அதைச் சுற்றியுள்ள ஐந்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் சிந்தனைப் பேரவை என்னும் இயக்கத்தால் இந்தக் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்தக் கண்காட்சி சென்ற வருடம்தான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு பதிப்பகம் இந்தக் கண்காட்சியிலும் கலந்துகொள்கிறது. அரங்கு எண்: 10, 11, 12. இங்கும் கிழக்கு பதிப்பகம் கண்காட்சி நுழைவாயிலை விளம்பரத்துக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

====

மதுரை மாவட்ட ஆட்சியர் மதுரையிலும் சென்னையைப் போன்ற பெரிய அளவில் ஒரு புத்தகக் கண்காட்சியை நடத்த ஆர்வம் கொண்டுள்ளார். இதுநாள்வரையில் மதுரையில் உருப்படியான புத்தகக் கண்காட்சி நடைபெற்றதில்லை. ஒவ்வொரு புத்தகக் கடையும் தனக்கென ஒரு கண்காட்சி நடத்தும்.

ஆனால் இம்முறை மாவட்ட ஆட்சியர் தலையிட்டதின் பேரில், BAPASI செப்டம்பரில் மதுரையில் தமுக்கம் மைதானத்தில் புத்தகக் கண்காட்சி ஒன்றை நடத்த முடிவு செய்துள்ளது. இந்தக் கண்காட்சி செப்டம்பர் 1-10 தேதிகளில் நடைபெறுகிறது. அதன்பிறகுதான் மழைக்காலம் வரக்கூடும் என்று நினைக்கிறேன்.

இந்த முறை மதுரை கண்காட்சி சிறப்பாக நடந்தால் ஈரோடும் மதுரையும் இரண்டாம் இடத்துக்குப் போட்டிபோட வேண்டியிருக்கும்.

ஒருவகையில் இதுபோன்ற ஆரோக்கியமான போட்டி சந்தோஷம் தருவதாக உள்ளது.

திருச்சி, திருநெல்வேலி, கோவை போன்ற ஊர்கள் கொஞ்சம் விழித்துக்கொள்ளவேண்டும்.

Wednesday, August 02, 2006

Podcasting - நான் எப்படிச் செய்கிறேன்?

கார்த்திக் எனது முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் "பத்ரி அண்ணே, இந்த மாதி பொட்காஸ்ட் செய்யும் முறையை பற்றி எங்களுக்கும் புரிகிறமாதி ஏதாவது எழுதி அதை பொதுவுடைமையாக்க முடியுமா?" என்று கேட்டிருந்தார்.

நான் கடந்த பல மாதங்களாகவே ஒலித்துண்டுகளை என் பதிவில் சேர்த்து வருகிறேன். ஆனால் அவற்றை podcast என்ற சிறப்பு வார்த்தையினால் குறிப்பிடவில்லை. மேலும் பலமுறை இந்த ஒலித்துண்டுகளை wma (Windows Media Audio) வடிவில் சேர்த்திருந்தேன். இப்பொழுது MP3 ஆகவும், அதற்கென தனி xml ஓடையையும் சேர்த்திருப்பதனால் தனியாகப் பதிவு போட்டேன்.

செய்வது எளிதுதான்.

1. நல்ல ஒலி ரெகார்டர் வேண்டும். முடிந்தவரையில் MP3 கோப்பாகவே சேமிக்கும் ரெகார்டர் இருப்பது நல்லது. நான் உபயோகிப்பது Dyne Digital Voice Recorder - DN 7128. தென் கொரியா தயாரிப்பு. சிங்கப்பூரில் 2005-ல் வாங்கினேன். வாங்கியபோது சுமார் 100 USD. இதைவிடச் சிறப்பான, விலை குறைந்த ரெகார்டர்கள்/பிளேயர்கள் கிடைக்கும். நல்ல, விலை குறைவான MP3 ரெகார்டர்கள் USD 40-50க்குள் இன்று கிடைக்கும்.

Dyne பிரச்னை என்னவென்றால் இது பேட்டரியில் இயங்குவது. மின்சாரத்தால் சார்ஜ் செய்யமுடியாது. எனவே பேட்டரி நிறையத் தீர்ந்துபோய் படுத்தும். செலவு அதிகமாகும்.

2. யாருடனாவது நேர்காணல், அல்லது ஏதாவது பொதுநிகழ்ச்சி என்றால் இத்துடன் ஆஜராகிவிடுவேன்.

Dyne ரெகார்டர் மூலம் சேமிக்கும் கோப்பு TCV என்ற பெயரில் வரும். இதுவும் MP3 வகையைச் சார்ந்ததே.

3. ரெகார்ட் செய்த ஒலித்துண்டை Audacity என்னும் திறந்த மூல நிரலியை வைத்து எடிட் செய்வேன். தேவையில்லாத பாகங்களை வெட்டுதல், வாக்கியங்களுக்கு இடையேயான வெற்று இடைவெளியைக் குறைத்தல், High Pass Filter, Noise Reduction ஆகியவற்றைச் செய்வேன். ஒலித்துண்டுகள் பலவற்றை ஒரே கோப்பாகச் சேர்க்கலாம்.

4. கடைசியாக MP3 கோப்பாக மாற்றுவேன். Audacity நிரலியிலேயே Lame Encoder என்பதைச் சேர்ப்பதன்மூலம் இதனைச் செய்யலாம்.

5. அதன்பிறகு எங்கு FTP செய்யவேண்டுமோ அங்கு அனுப்பிவிட்டு, XML கோப்பை மாற்றி சேமிப்பதன்மூலம் podcast செய்யவேண்டியதுதான்.

அரிசி கொள்முதல்

கிலோ ரூபாய் இரண்டு என்ற கணக்கில் ரேஷனில் அரிசி கொடுக்கும் திட்டத்தைத் தொடர்ந்து வெளிச்சந்தை அரிசி விலை குறைந்துள்ளதாம்.

நல்லவிலை கிடைக்கக்கூடும் என்று இதுவரையில் அரிசியைத் தேக்கிவைத்திருந்த சில பெரிய, நடுத்தர விவசாயிகள் இப்பொழுது சிவில் சப்ளைஸ் கார்பொரேஷனுக்கு அரிசி விற்க வந்துள்ளனர். நெல் விலை கிலோ ரூ. 5.80 - 6.00 வரையில் என்று விவசாயிகளுக்குக் கொடுக்கப்படுகிறது.

இதனால் விவசாயிகள் நிலை மேம்படப்போவதில்லை.

விவசாயப் பொருளாதாரம் மேம்படவேண்டும் என்றால்...

* அரசு நெல்லுக்கான கொள்முதல் விலையை வெகுவாக அதிகரிக்கவேண்டும்.
* நல்ல பாசன வசதி. நீர்நிலைகள் அதிகரிப்பு.
* ரேஷனில் குறைந்தவிலை அரிசி வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படவேண்டும். பிறர் அனைவருமே பொதுச்சந்தையில் அரிசியை வாங்கவேண்டும்.
* கிராமப்புறங்களில் வேண்டிய அளவு மின்சாரம். அத்துடன் குளிர்சாதனக் கிடங்கு வசதி.

இவையெல்லாம் இருந்தால் விவசாயக் கடன் ரத்து; இலவச மின்சாரம் போன்றவை தேவையில்லை.

நீதிபதி கற்பகவிநாயகம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கற்பகவிநாயகம் ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட உள்ளார்.

இதனை எழுதும்போது ஏதோ பொறி தட்டியது.

என் முந்தைய பதிவுகளைத் தேடிப் பார்த்தபோது, டிசம்பர் 4, 2005 அன்று எழுதியதிலிருந்து:

"சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி N.தினகர் ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்."