Monday, August 21, 2006

ஈரோடு புத்தகக் கண்காட்சி 2006

ஆகஸ்ட் 5-15 தேதிகளில் ஈரோடு வ.உ.சி பூங்காவில் ஈரோடு புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. இது இரண்டாம் வருடம். சென்ற வருடம், முதல்முறையாக, மக்கள் சிந்தனைப் பேரவை என்னும் அமைப்பு ஈரோடு ராணா திருமண மண்டபத்தில் புத்தகக் கண்காட்சியை நடத்தியது.

ஆனால் இம்முறை சென்னை கண்காட்சி அளவுக்கு பிரம்மாண்டமாக நடத்தவேண்டும் என்று முன்னதாகவே தீர்மானித்திருந்தனர்.

சென்னையில் பல ஆண்டுகளாக நடந்துவரும் புத்தகக் கண்காட்சிக்கு இணையாக தமிழகத்தில் வேறு ஒரு இடத்தில் நடத்தவேண்டுமானால் அதற்கு நிறைய உழைப்பு தேவை. ம.சி.பேரவையிடம் தன்னார்வலர்கள், ஆலோசகர்கள், உழைப்பு ஆகியவை நிறையவே இருந்தன.

ஒவ்வொரு பள்ளிக்கும் பேரவையினர் சென்று நடக்க இருக்கும் புத்தகக் கண்காட்சியினைப் பற்றி தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்களிடம் பேசி, அவர்கள் மூலமாக மாணவர்களிடம் விளக்கியுள்ளனர். இந்தக் கண்காட்சியினை ஈரோடு மாவட்டத்துக்கு மட்டும் என்றில்லாமல் ஈரோட்டைச் சுற்றியுள்ள ஆறு மாவட்டங்கள் (கொங்கு மண்டலம்) அனைத்துக்குமாக என்று எடுத்துக்கொண்டு பக்கத்து மாவட்டங்களில் தகவலைப் பரப்பியுள்ளனர்.

நகரில் ஓடும் அத்தனை ஆட்டோக்களிலும் பின்னால் புத்தகக் கண்காட்சி தொடர்பான விளம்பரம் இருந்தது. தெருவெங்கும் சுவரொட்டிகள். வீடு வீடாகச் சென்று துண்டுக் காகிதத்தில் கண்காட்சி பற்றிய தகவல்களை தன்னார்வலர்கள் விட்டுச் சென்றிருந்தனர். மூன்று உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள். உள்ளூர் வானொலி நிலையம் அந்தப் பத்து நாள்களில் மூன்று முறை அரை மணிநேரப் பாடல் நிகழ்ச்சியை கண்காட்சி வளாகத்திலிருந்து நடத்தியது. செய்தித்தாள்கள் அனைத்திலும் தினம் தினம் கண்காட்சி பற்றிய விளக்கமான செய்திகள்.

மொத்தத்தில் புத்தகங்கள் தொடர்பாக ஏதோ ஒன்று வ.உ.சி பூங்காவில் நடைபெறுகிறது என்பதை மக்கள் கவனிக்காமல் இருந்திருக்க முடியாது.

அடுத்ததாக கண்காட்சி வளாகம். கீழே உள்ள இரண்டு படங்களையும் பாருங்கள். நல்ல பெரிய திடலை எடுத்துக்கொண்டு அழகான முறையில் வடிவமைத்திருந்தார்கள். சென்னை புத்தகக் கண்காட்சி அரங்குகளை விட சிறப்பான முறையில் இருந்தது.



வெற்றுத் திடலில் அரையடிக்கு மேல் மரத்தாலான பிளாட்ஃபார்ம். அடியில், மழை பெய்தால் தண்ணீர் வெளியே ஓடுவதற்கு சாக்கடை வசதிகள். மேலே பிளாஸ்டிக்கால் ஆன கூரை. நான்கு பக்கமும் சுற்றி நல்ல மறைப்பு. உள்ளே நடக்கும் இடங்களில் கார்ப்பெட். கடைகளுக்கு உள்ளாக வேறுவிதமான கார்ப்பெட். விளக்கு, காற்றாடி வசதிகள். கடைகள் சுற்றுவர இருக்க நடுவில் கிட்டத்தட்ட 3,000 - 4,000 பேர் உட்கார வசதி. பேச்சாளர்கள் தங்கிப் பேச பெரிய மேடை.



தினம் தினம் மாலையில் யாராவது ஒரு பெரிய பேச்சாளர். ஜெயகாந்தன், நடிகர் சிவக்குமார், குன்றக்குடி அடிகளார், தா.பாண்டியன் என்று நாளுக்கு ஒருவர்.

கண்காட்சியைத் தொடங்கி வைக்க ஈரோட்டின் அரசியல், நிர்வாகப் பிரமுகர்கள் அனைவரும் கட்சி வித்தியாசமின்றி வந்திருந்தனர். மத்திய அமைச்சர்கள் இருவர், மாநில அமைச்சர்கள் இருவர், மாவட்ட ஆட்சியர், நகரமன்றத் தலைவர், காவல்துறை ஆணையர், கல்வித்துறைத் தலைவர் என்று ஒருவர் பாக்கியில்லை.

மாலையில் நடக்கும் பேச்சுக்கு குறைந்தது 2,000 பேருக்கு மேல், சில நாள்கள் 4,000க்கும் அதிகம் என்று மக்கள் கூட்டம் இருந்தது.

கண்காட்சிக்கு மக்கள் நுழைவுச்சீட்டு ஏதும் வாங்கவேண்டியதில்லை. ஸ்டால்களுக்கான வாடகைக் கட்டணமும் குறைவு. நிச்சயமாக ம.சி.பேரவை இந்த நிகழ்ச்சியை நட்டத்தில்தான் இயக்கியிருக்கும். ஏனெனில் செலவுகள் அதிகம்.

வரும் வருடங்களில் கையைக் கடிக்காமல் இருக்க நுழைவுச்சீட்டுக்கு ஆளுக்கு ஒரு ரூபாயாவது வசூலிக்கலாம். மாணவர்களுக்கு இலவசம் என்று வைக்கலாம். அடுத்து ஸ்டால் வாடகையை சற்றே அதிகரிக்கலாம். இம்முறை புத்தகம் / அறிவு தொடர்பானவை தவிர யாருக்கும் ஸ்டால்கள் கிடையாது என்று கறாராகச் சொல்லியிருந்தனர். அடுத்தமுறை சற்றே தளர்த்தி அதிக வாடகை கொடுக்கக்கூடிய பிற அமைப்புகளுக்கு (கல்வி நிறுவனங்கள் போன்றவை) கொஞ்சம் ஸ்டால்கள் ஒதுக்கலாம். விளம்பரங்களுக்கும் பிற FMCG பொருள்கள் விற்பவர்களுக்கு என்று தட்டிகள் ஒதுக்கலாம்.

இவையெல்லாம் ஏன் தேவை? பொதுவாகவே பல பதிப்பகங்கள் செலவு செய்ய அஞ்சுபவை. எனவே பேரவை எதிர்பார்த்த அளவுக்கு விளம்பரத் தட்டிகள் வைக்க புத்தகப் பதிப்பாளர்கள் வரவில்லை. இதனால் பேரவை எதிர்பார்த்த விளம்பர வருமானம் கிடைக்கவில்லை. நிலைமை இப்படித்தான் இருக்கும் என்று முன்னமேயே கணித்து அடுத்த வருடத்துக்காவது கிடைக்கும் விளம்பரங்களைப் பெறுவதன்மூலம் நட்டத்தைத் தவிர்க்கலாம்.

இது ஒருபக்கம் இருக்கட்டும். ஈரோட்டில் சென்ற வருடமே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து நிறைய புத்தகங்களை வாங்கினர். இந்த வருடம் இன்னமும் அதிக முன்னேற்றம். சென்னைக்கு அடுத்த அளவில் - சென்னையில் கிழக்கு பதிப்பகத்தின் விற்பனையில் பாதிக்கும் மேலாக - ஈரோட்டில் விற்பனை இருந்தது. இது ஒரு பதிப்பாளர் என்ற முறையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.

மிகக் குறுகிய காலத்துக்குள்ளே - இரண்டே வருடங்களில் - சென்னைக்கு அடுத்து மிக முக்கியமான புத்தகக் கண்காட்சி ஈரோடு என்ற நிலையை (குறைந்தது கிழக்கு பதிப்பகத்தைப் பொருத்தமட்டிலாவது!) எட்டியுள்ளது ஆச்சரியமானதுதான். இத்தனைக்கும் காரணம் ஒரு சமூக சிந்தனை அமைப்பும் அவர்களது கடினமான உழைப்பும். அடுத்த வருடத்துக்கான புத்தகக் கண்காட்சிக்காக (அதுவும் ஆகஸ்ட் மாதம் சுதந்தர தினத்தை ஒட்டி இருக்கும்) இப்பொழுதே வேலையை ஆரம்பித்து விட்டார்கள். இந்த முறை வந்ததைவிட மூன்று மடங்கு அதிகக் கூட்டத்தைக் கூட்டுவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

நிச்சயம் செய்வார்கள்.

இதுபோல் தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் நடத்தினால் போதும்! அதிகமான புத்தகங்கள் விற்பனை ஆவது மாவட்டத்தின் மனிதவள மேம்பாட்டில் நன்றாகத் தெரியவரும்!

10 comments:

  1. மதுரைக்கு வருவீர்களா? வரும் நண்பர்கள் தொடர்பு கொள்ள 9344130698
    அர்ச்சகர் நியமன பிரச்னையின் எனது மேலும் ஒரு பதிவு
    http://marchoflaw.blogspot.com/2006/08/blog-post_21.html

    ReplyDelete
  2. மதுரைக்கு 9-10 செப்டெம்பர் 2006 தேதிகளில் (சனி, ஞாயிறு) வருகிறேன். முன்னதாகவே உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  3. மகிழ்ச்சியாக இருக்கிறது. (காரணம் சொல்ல வேண்டியதில்லையே :-) )

    மக்கள் சிந்தனைப் பேரவைக்கு வந்தனங்கள்.

    ReplyDelete
  4. விரிவான பகிர்வுக்கு நன்றி பத்ரி

    ReplyDelete
  5. Unrelated:
    Free PodCast Player:
    http://www.podcastpickle.com/app/player/free.php
    All you have to do is give the .mp3 file name in URI.

    ReplyDelete
  6. Hello Badri,

    I am from Erode and got a chance to visit the book fair for the past two years. This time I also got a chance to visit kizhaku's stall and bought some stuff. These type of book fairs are very vital for non-urban population and the way they marketed this fair is really amazing.

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றி பத்ரி. உள்ளம் பூரித்துப் போயிருக்கிறது. காரணம் செல்வராஜ் சொன்னதேதான்.

    ம.சி.பேரவைக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அதில் இருப்பவர்களைப் பற்றியும் சொல்லியிருக்கலாம். சமுதாய சிந்தனை கொண்ட நல்ல உள்ளங்களை மக்கள் அறிய வாய்ப்பாகும். அவர்களுக்கும் அங்கீகாரம் கிடைத்ததாக இருக்கும்.

    நன்றி.
    கமல்
    www.varalaaru.com

    ReplyDelete
  8. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது....செல்வா சொல்வது போல் அதே தான்...முடிந்தால் ம.சி பேரவை பற்றி இன்னும் சிறிது எழுதுங்கள்... நன்றி..

    ReplyDelete
  9. பத்ரி,
    (சற்றே தாமதமான மறுமொழி) விரிவான பதிவிற்கு நன்றி! ஈரோடு புத்தகக் கண்காட்சியை மிகச் சிறப்பாக நடத்தியிருக்கும் மக்கள் சிந்தனைப் பேரவையினர் மிகவும் பாராட்டுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள். இனி வரும் வருடங்களில் மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தும் கண்காட்சிகள் அவர்களுக்கு நட்டத்தை ஏற்படுத்தாது என நிச்சயம் நம்பலாம். கண்காட்சி மைதானத்தின் அமைப்பு சிறப்பாக உள்ளது. இந்தக் கண்காட்சியில் நிகழ்ந்த நல்ல விஷயங்களை எல்லா புத்தகக் கண்காட்சிகளிலும் (குறிப்பாக சென்னைப் புத்தகக் கண்காட்சியில்), கண்காட்சியை ஏற்பாடு செய்பவர்கள் நடைமுறைப் படுத்த வேண்டும்.

    ReplyDelete
  10. Badri

    Great writeup about Erode book fair.

    Thanks
    Krish

    ReplyDelete