Saturday, May 05, 2007

அடுத்த குடியரசுத் தலைவர் யார்?

இன்று 'தி ஹிந்து' நடுப்பக்கக் கட்டுரையில், ஹரீஷ் கரே குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி அலசியிருக்கிறார். ஹரீஷ் கரே காங்கிரஸ் மற்றும் சோனியா அபிமானி. அப்துல் கலாமை அவருக்கு அவ்வளவாகப் பிடிக்காது. (ஏனோ?) கீழ்க்கண்ட வாசகத்தைப் பாருங்கள்:
... NDA seems to have lost its enthusiasm for its proposal [of a second term for Kalam] but the friends of President Kalam have stepped up the campaign in his favour. Political parties are sullenly watching a Kalam second-term bid, which they think is being choreographed from Rashtrapati Bhavan.
கலாமே தான் இரண்டாவது முறை பதவிக்கு வரவேண்டும் என்பதற்காகத் தன் நண்பர்களை வைத்து ஊடகங்களில் புகுந்து விளையாடுகிறார் என்பது கரேயின் குற்றச்சாட்டு. ஆனால் அழகாக, அந்தப் பழியைப் பிற கட்சிகளின்மீது போட்டுவிடுகிறார்.

ராதாகிருஷ்ணன் முதற்கொண்டு கலாம் வரையில் ஒவ்வொரு குடியரசுத் தலைவரும் எப்படியாவது இரண்டாவது முறையும் பதவியில் இருந்துவிடுவது என்ற ஆசையில்தான் இருந்துள்ளனர் என்கிறார். இது எந்தவகையில் நியாயமான கருத்து என்று புரியவில்லை. பதவி ஆசை என்பது அரசியல்வாதிகள் அனைவருக்கும் இருக்கும். ஆனால் சில குடியரசுத் தலைவர்கள் - ராதாகிருஷ்ணன், ஜாகிர் ஹுசேன், கே.ஆர்.நாராயணன், அப்துல் கலாம் - கட்சிகள், அரசியல் ஆகியவற்றுக்கு வெளியிலிருந்து வந்தவர்கள்.

கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுதப்படாத விதிமுறை (convention) எந்த நபருக்கும் இரண்டாம் முறை குடியரசுத் தலைவர் பதவியைக் கொடுக்கக்கூடாது என்பதே - என்கிறார் கரே. ஆனால் அவரது கட்டுரையிலேயே, இது விதிமுறை அல்ல, நிகழ்வுகள் அப்படியான ஒரு நிலையைக் கொண்டுவந்துவிட்டது என்று அறிகிறோம். இப்பொழுதைய நிலையை எடுத்துக்கொள்வோம். கலாம் வேண்டாம் என்று மறுத்தால் ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் கலாம் போட்டியில் நிற்க விரும்புவதாகச் சொன்னால் போதும். வெளிப்படையாக எதிர்ப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே. ஆனால் அவர்கள் சென்ற தேர்தலின்போதும்தான் இவரை எதிர்த்து கேப்டன் லட்சுமி சேகாலை நிறுத்தினார்கள். எனவே இவர்களது எதிர்ப்பு மட்டும் போதாது. காங்கிரஸும் எதிர்க்கும் என்றே வைத்துக்கொள்வோம்.

ஆனால் காங்கிரஸ், இடதுசாரியினருக்கு பெரும்பான்மையைவிடக் குறைவாகவே வாக்குகள் உள்ளன. UPA கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்தாலும் பெரும்பான்மையைவிடக் குறைவான வாக்குகளே உள்ளன.

மொத்த வாக்குகள்: 1,098,882
UPA வாக்குகள்: 390,000
இடதுசாரி வாக்குகள்: 110,000
NDA வாக்குகள்: 335,000
உத்தரப் பிரதேச வாக்குகள்: 83,824 (மே 11 அன்று யாருக்கு எவ்வளவு என்று தீர்வாகும்)
பிற: 180,058

உத்தரப் பிரதேசத்தில் முதல் மூன்று கட்சிகளாக பஹுஜன் சமாஜ் கட்சி, பாஜக, சமாஜ்வாதி கட்சி ஆகியவையே (இதே வரிசையில் அல்ல) வரப்போகின்றன என்று அனைத்து கருத்துக்கணிப்புகளும் சொல்கின்றன. காங்கிரஸுக்கு அதிகபட்சமாக 10% இடங்கள் - சுமார் 40 - மட்டுமே கிடைக்கும். காங்கிரஸுடன் மட்டும் கூட்டு சேர்ந்து யாரும் ஆட்சி அமைக்க முடியாது. முலாயம் சிங்கும் மாயாவதியும் ஒருவரோடு ஒருவர் வெட்டுப்பழி/குத்துப்பழி. எனவே இவர்கள் இருவரில் யாரோ ஒருவர் பாஜக துணையுடன் ஆட்சி அமைக்கப்போகிறார். அப்படிப்பட்ட நிலையிலும்கூட எதிர்க்கட்சியாக இருக்கும் மூன்றாவது கட்சி (சமாஜ்வாதி அல்லது பஹுஜன் சமாஜ்) காங்கிரஸ்-இடதுசாரி குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு வாக்களிக்கப்போவதில்லை.

பாஜகவுக்கு தனது கட்சியின் பைரோன் சிங் ஷேகாவத்தை நிற்கவைக்கக்கூடிய பலம் கிடையாது. அவரது RSS பின்னணி, வாக்குகளை உடைத்துவிடும். பாஜக எப்படியும் இடதுசாரி/காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்காது. எனவே கலாம் போட்டியில் இருக்கும் பட்சத்தில் பாஜக + தோழமைக் கட்சிகளின் வாக்குகள் மொத்தமாக கலாமுக்கே போய்ச்சேரும். சிவசேனைகூட இதில் பின்வாங்காது.

பிற கட்சிகளில் தெலுகு தேசம், அஇஅதிமுக, மதிமுக போன்றவை அப்படியே கலாமுக்குத்தான். தமிழகத்தில் திமுக கூட கலாமுக்கு ஆதரவாகத்தான் விழும். கலாமை எதிர்த்து வாக்களிப்பது (கலைஞர் பொன்விழாவுக்கு கலாம் வராதபட்சத்திலும்) தமிழக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தும்.

எனவே பிற வாக்குகளில் பெரும்பான்மை கிட்டத்தட்ட 150,000-க்கு மேல் கலாமுக்கே போகும். உத்தரப் பிரதேச முதலிரண்டு கட்சிகளும் கலாமுக்கே என்றாலும், மூன்றாவது கட்சியின் வாக்குகள் யாருக்கு என்பது முக்கியமாகிறது. அது காங்கிரஸ் வேட்பாளருக்குப் போவதற்கு சாத்தியங்கள் குறைவு. காங்கிரஸ் உத்தரப் பிரதேசத்தில் ஒவ்வொரு கட்சியோடும் சண்டையில் இருக்கிறது.

கலாமுக்கு எதிராக யாரை காங்கிரஸ்-இடதுசாரிகள் நிறுத்துவார்கள் என்பதும் முக்கியம். கலாமுக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. (ஆனால் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை.)

காங்கிரஸ் அரசியல்வாதி யாரையாவது நிறுத்தினால் அவரால் பிற கட்சியினரின் வாக்குகளைப் பெறமுடியுமா என்பது சந்தேகமே. மன்மோகன் சிங்கையே நிறுத்தினால் ஒருவேளை நல்ல போட்டியைக் கொடுக்கமுடியும். ஆனால் அது நடக்காது என்று தோன்றுகிறது.

கலாமுடைய விருப்பம் என்னவென்று தெரியவில்லை. அவர் ஆணித்தரமாக எதையும் சொல்லவில்லை. அவர் போட்டியில் இருக்கும் பட்சத்தில் அவர் வெல்வதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஆனால் நல்ல போட்டி இருக்கும்.

1 comment:

  1. It would be nice and also in the interest of various political parties to avert a clash, to have a mutually acceptable, well known in some field- neural person as President... some one like Dr MS Swaminathan?

    ReplyDelete