Monday, July 23, 2007

பாவம் முஷரஃப்!

உலகிலேயே மிகக் கடினமான காரியம் பாகிஸ்தானை ஆள்வதுதான்! - பர்வேஸ் முஷரஃப், In the Line of Fire (தமிழில்: உடல் மண்ணுக்கு) முன்னுரையில்.

பாகிஸ்தானில் குடியாட்சி முறையும் ராணுவ ஆட்சியும் மாறி மாறி வந்துள்ளன. அதனால் குடியாட்சி முறை வலுவடையவே இல்லை. ஒவ்வொரு முறை ராணுவ ஆட்சி வரும்போதும் முதலில் பலியாவது அரசியலமைப்புச் சட்டம். எனவே அரசியலமைப்புச் சட்டத்தின்மீது மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மரியாதையே இருந்தது கிடையாது. தேவையென்றால் அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கி எறிந்துவிட்டு புதிதாக ஒன்றை உருவாக்கிக்கொள்ளலாம் என்றே ராணுவ ஆட்சியாளர்கள் நினைத்துவந்துள்ளனர்.

ராணுவ ஆட்சியைத் தொடர்ந்து வரும் குடியாட்சி அரசியல் கட்சியினரும் ஊழலில் மட்டும் கவனம் செலுத்தி, வளர்ச்சிப் பணிகளைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் இருந்துள்ளனர். இதனாலேயே குடியாட்சி முறையைத் தூக்கி எறிந்து ஒரு சர்வாதிகாரி வருவதை மக்கள் விரும்ப ஆரம்பிக்கின்றனர். அதை ஒரு ராணுவ அதிகாரி நிறைவேற்றி வைக்கிறார்.

பிற ராணுவத் தலைமை அதிகாரிகளைப் போலன்றி பர்வேஸ் முஷரஃப் குடியாட்சி முறைமீது அதிக நம்பிக்கை வைத்திருப்பதாகத் தெரிகிறது. இதை அவரது புத்தகத்திலும் பார்க்கலாம்; அவரது நடைமுறையிலும் பார்க்கலாம்.

இதனால்தான் திடீரென்று சில மாதங்களுக்கு முன்னர் முஷரஃப் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இஃப்திகார் சவுதுரியை பதவி நீக்கம் செய்தது ஆச்சரியத்தை வரவழைத்தது. ஊழல், பதவியைப் பயன்படுத்தி ஆதாயம் என்று ஜோடித்த (அல்லது சரியாக நிற்காத) குற்றச்சாட்டுகளைக் காட்டி, அவசர அவசரமாக சவுதுரி பதவிநீக்கம் செய்யப்பட்டது, காவலில் வைக்கப்பட்டது, அவரது ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டது, ஒரு ஆதரவாளர் மர்மமான முறையில் கொல்லப்பட்டது, எதிர்ப்பு வலுத்தபோது பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டது போன்றவை முஷரஃப் கஷ்டப்பட்டு உருவாக்கி வந்த பிம்பத்தைக் கலைத்தன.

ஒரு ஜியா உல்-ஹக்கோ, அயூப் கானோ இந்த விஷயத்தை வேறு விதமாகக் கையாண்டிருப்பார்கள். சொல்லப்போனால் அவர்கள் இருவரும் முற்றுமுழுதான சர்வாதிகாரிகள். முஷரஃபோ தான் சர்வாதிகாரி இல்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்று மக்களை நம்பவைக்க மிகவும் பாடுபட்டார். பாகிஸ்தான் மக்கள் சில காலம் அதை நம்பினாலும் சர்வதேச அளவில் யாரும் நம்பவில்லை.

ஜியா, அயூப் காலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதி வாயைப் பொத்திக்கொண்டு வீட்டுக்குப் போயிருப்பார். ஆனால் முஷரஃபின் குழம்பிய நிலை, இஃப்திகார் சவுதுரிக்கு சாதகமாக அமைந்தது. போராட்டத்தில் இறங்கினார். எதிர்க்கட்சித் தலைவர்களுகெல்லாம் இல்லாத தைரியமும் கிடைக்காத ஆதரவும் சவுதுரிக்குக் கிடைத்தது. இத்தனைக்கும் மேலாக இந்தப் பதவி நீக்கம் ஒரு வழக்காக உச்ச நீதிமன்றத்துக்கே சென்று அங்கு சவுதுரிக்கு ஆதரவாக தீர்ப்பும் வந்தது.

சவுதுரியைப் பாராட்டும் அதே நேரம், முஷரஃபையும் நாம் பாராட்டவேண்டும். கடந்த நான்கு மாதங்களில் எத்தனையோ முறை அவரது நலம் விரும்பும் கோர் கமாண்டர்கள் பலரும் 'ஆணையிடுங்கள், அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளிவிடுகிறோம்' என்று சொல்லியிருப்பார்கள். கஷ்டத்தில் இருக்கும் அத்தனை சர்வாதிகாரிகளும் அதனை ஏற்றுக்கொண்டிருப்பார்கள். முஷரஃப் அதனைச் செய்யவில்லை.

முந்தைய சர்வாதிகாரிகளைப் போலன்றி, முஷரஃப் நிஜமாகவே குடியாட்சி முறையை விரும்புகிறார். ஆனால் தான்தான் தலைமைப் பீடத்தில் இருக்கவேண்டும்; நாடு தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். அதுதான் பிரச்னையே. ராணுவ அதிகாரிக்கு தோல்வி என்பது மனத்தளவிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. (அதனால்தான் முஷரஃப் பாகிஸ்தானின் ராணுவத் தோல்விகளையும்கூட தன் புத்தகத்தில் வெற்றியாக மாற்றும் ரசவாதத்தைப் புரிந்துள்ளார்.) ஆனால் குடியாட்சி முறையில் தான் தோற்கவும் வாய்ப்புள்ளது என்பதை முஷரஃப் புரிந்துகொள்ளவேண்டும். தோல்வியைத் தொடர்ந்து மாபெரும் வெற்றி மீண்டும் கிட்டும் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

இதற்கு மிகவும் அவசியம் ஒரு வலுவான, மாறாத அரசியலமைப்புச் சட்டம். இன்றுவரை பாகிஸ்தானின் மேல்மட்ட அறிவிஜீவிகள் அதற்கான தேவையை புரிந்துகொள்ளவில்லை. முஷரஃபும் இதை அறியாதவராக இருக்கிறார். அதைப்பற்றிய தீவிரமான விவாதம் அந்த நாட்டில் நடப்பதே இல்லை. அரசியலமைப்புச் சட்டம்தான் நிழல்போல நின்று இந்தியாவின் குடியாட்சி முறையை வலிமையுடையதாக்கியுள்ளது. அந்த வலுவின் பின்னால்தான் இந்தியாவின் இன்றைய நிலையான அரசியல் சூழல் உருவாகியுள்ளது. அதிலிருந்து கிடைத்ததுதான் இன்றைய பொருளாதார மறுமலர்ச்சி.

அமெரிக்க அரசியலமைப்பு முறையை உருவாக்கியவர்களைப் போலவே, வலுவான இந்திய அரசியலமைப்பு முறையை உருவாக்கியவர்களும் போற்றுதலுக்குரியவர்கள்.

வலுவான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க எதிர்க்கட்சியினர், நாட்டின் பல்வேறு குழுவினர் முழு ஒப்புதல் அளிக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் ஆட்சிக்கு வரும்போது அந்தச் சட்டத்தை மதித்து நடப்பார்கள். ஒரு ராணுவ ஆட்சியாளரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்துக்கு தன்னிச்சையாகக் கீழ்ப்படிய மக்கள் விரும்பமாட்டார்கள். ராணுவ பலம்தான் மக்களைக் கீழ்ப்படிய வைக்கிறது. ராணுவ பலம் குறையும்போது மக்கள் எதிர்க்கத் தொடங்குகிறார்கள்.

எனவே முஷரஃப் உடனடியாகச் செய்யவேண்டிய காரியம் இதுதான். எந்தவிதத் தலையீடும் இன்றி அரசியலமைப்புச் சட்ட மன்றத்தை (Constituent Assembly) கூட்டவேண்டும். அதில் நவாஸ் ஷெரீஃப், பேநசீர் புட்டோ முதலான அத்தனை எதிர்க்கட்சியினரும் இடம் பெற்றிருக்கவேண்டும். ராணுவம் முற்றிலுமாக வெளியே இருக்கவேண்டும். அவ்வாறு உருவாகும் அரசியலமைப்புச் சட்டத்தை ராணுவம் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இது நடந்து, அடுத்து ஐந்து ஆறு தேர்தல்களுக்கு (30 ஆண்டுகள்) பிறகுதான் பாகிஸ்தானில் முழுமையான குடியாட்சி முறை நிலவும். அதுவரையில் பாகிஸ்தானுக்குக் கஷ்டகாலம்தான்!

அனைத்து அரசியல் குழுக்களும் ஒன்றுசேர்ந்து, ராணுவக் கலப்பு இல்லாத ஓர் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்காவிட்டால், பாகிஸ்தானுக்கு இந்த நூற்றாண்டில் விடிமோட்சம் கிடையாது.

3 comments:

  1. Dear Badri,
    Your recommendation in the last part of your post seems to take an oversimplified view of Pakistan's situation.

    Just as a start, is there any precedent at all to this? Where a country like Pakistan has successfully transformed from being either a dictatorship or a volatile pseudo-democracy, to a reasonably stable democracy?

    In fact, I would rather recommend Musharraf to go the other way and take total dictatorship if he wants to save Pakistan (in the short to medium term). I don't think Pakistan is ready for making the transition to democracy.

    ReplyDelete
  2. Swami: Take Bangladesh. It moved away from dictatorship to a well functioning democracy, but crumbled again after three elections because of needless quarrel between two ladies. Because the Constitution was weak ("caretaker" government in between elections doesn't seem to be a nifty idea), the key political leaders corrupt and egotistic, they are in a muddle now.

    'Constitution making' is in progress in Nepal. I do fervently hope the process results in a robust Constitution followed by at least 5 general elections without the army intervening.

    For Pakistan, such is the only hope. Continued dictatorship will kill that country once and for all.

    ReplyDelete
  3. உலக நாட்டைப் பத்தி எல்லாம் சொல்றீங்க..பக்கத்தில இருக்க ஈழப் பிரச்சினைக்கு உங்க பார்வைல தீர்வு என்ன?

    ReplyDelete