Monday, September 17, 2007

ரிலையன்ஸ் ஃபிரெஷ் - சில்லறை வணிகம்

சில்லறை வணிகத்தில் பெரும் நிறுவனங்கள் நுழைவதற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பைப் பற்றி என் ஆங்கிலப் பதிவில் எழுதியிருந்தேன்.

முக்கியமாக மேற்கு வங்கத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள ஃபார்வர்ட் பிளாக் கட்சியினர் பெரும் வணிகர்கள் சில்லறை வணிகத்தில் நுழைவதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். 'சட்டம் ஒழுங்கை' பற்றிக் கவலைப்படாமல் கடை புகுந்து அடித்து நொறுக்கவும் தயாராக உள்ளனர். செய்தும் காட்டிவிட்டனர். மமதா பானெர்ஜியின் திரினாமுல் காங்கிரஸும் அடிதடியில் இறங்கத் தயாராகவே உள்ளனர்.

ஆனால் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாசார்ஜீ இவ்வாறு சொல்கிறார்:
We should not and cannot stop big retailers. It is my opinion but, unfortunately, I am running a coalition government. And that is my problem.
விஷயம் என்னவென்றால் எதிர்ப்பு அனைத்தும் ரிலையன்ஸுக்குத்தான். ஸ்பென்ஸர்ஸ், பாண்டலூன் போன்றவர்கள் கொல்காதாவில் கடைகளைத் திறந்துள்ளனர். ஆனால் இதைப்பற்றி ஒன்றும் பேசாத ஃபார்வர்ட் பிளாக் போன்றவர்கள் ரிலையன்ஸ் உள்ளே வருவதை மட்டும் பெரிய விஷயமாக ஆக்குகிறார்கள்.

இதற்கிடையில் பாரதீய ஜன ஷக்தியின் உமா பாரதி இந்தோரில் ரிலையன்ஸ் ஃபிரெஷ் கடை ஒன்றில் புகுந்து ரகளை செய்து அதனைப் பூட்டியுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் லக்னோவில் ரிலையன்ஸ் கடைகள்மீதும் பிற கடைகள்மீதும் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி பன்வாரி லால் காஞ்சல் என்பவர் தலைமையில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

-*-

இதுதான் நம் குடியாட்சி முறையின் அழகு. சட்டம் ஒழுங்கு என்பதை முதலில் கேலி செய்பவர்கள் நம் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள்தாம். இன்றைக்கு என்ன செய்தால் நம் இருப்பை வெளிக்காட்டிக்கொள்ளலாமோ அதனைச் செய்யவேண்டும். அது நியாயமானதா இல்லையா என்பதைப் பற்றிய அக்கறையில்லை.

நாளைக்கு வேறு பிரச்னை.

பாவம் ரிலையன்ஸ். பாவம் பொதுமக்கள்.

No comments:

Post a Comment