Tuesday, October 30, 2007

லா.ச.ராமாமிருதம் மறைவு

91 வயதான தமிழ் எழுத்தாளர் லா.ச.ராமாமிருதம் இன்று காலை உயிர்நீத்தார். லா.ச.ரா பற்றி பா.ராகவன் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து சின்ன பிட்:

**

நேற்றிரவு, மும்பை வெடிகுண்டு வழக்கு தொடர்பான ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் அறிக்கைப் பிரதி - ஒரு கட்டுரைக்காக அவசரமாக வேண்டியிருந்தது. பதினொரு மணிக்கு அதைத் தேடத் தொடங்கி, அதைத் தவிர வேறு என்னென்னவோ அகப்பட்டன. அவற்றுள் ஒரு போஸ்ட் கார்டும் அடக்கம்.

சுமார் பதினேழு வருடங்கள் முன்பு எனக்கு ஒரு பெரியவரால் எழுதப்பட்ட போஸ்ட் கார்டு அது. பார்த்ததும் என் கண்கள் நிறைந்து ததும்பிவிட்டன. கால ஓட்டத்தில் எத்தனையோ விஷயங்கள் மனத்தின் ஞாபகத்தட்டுகளிலிருந்து விழுந்து உதிர்ந்தே போய்விடுகின்றன. திரும்ப எடுத்துக் கோக்கும்போது உள்ளம் சொல்லமுடியாத நெகிழ்ச்சியையும் வேதனை கலந்த பரவசத்தையும் அடைந்துவிடுகிறது. அந்த போஸ்ட் கார்டுக்கு அன்று நான் எழுதிய பதிலும் வரி வரியாக நேற்று நினைவுக்கு வந்தது. வாழ்நாளில் ஒருமுறையாவது நேரில் சந்திப்போமா என்று என்னை ஏக்கம் கொள்ளச் செய்த நபர் அவர். என் விருப்பத்தை அவருக்கு எழுதியபோது, அதற்கு பதிலாகத்தான் அவர் அந்த கார்டைப் போட்டிருந்தார். பதிலுக்கு பதிலாக, மறுவாரம் கிளம்பி வந்து அவரைப் பார்ப்பதாகத்தான் எழுதினேன்.

ஆயிற்று, பதினேழு வருடங்கள். இன்னும் போகப்போகிறேன்! ஏன் நான் அவரைச் சந்திக்கப் போகவில்லை என்பதைச் சொல்லுவதற்கு முன் அவரது கடித வரிகள் இங்கே:

அன்புள்ள சிரஞ்சீவி பா.ராகவன்,

உன் கடிதம் கிடைத்தது. என்னை வந்து பார்ப்பதற்கு எதற்கு இத்தனை நடுக்கமும் தயக்கமும்? நீ எப்போது வேணுமானாலும் வரலாம். அம்பத்தூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கி, ஞானமூர்த்தி நகர் எங்கே என்று கேள். குத்து மதிப்பாக வழி சொல்லுவார்கள். ஆட்டோ பிடித்தால் பத்து ரூபாய் கேட்பான். தவறியும் என் பேர் சொல்லிக் கேளாதே. யாருக்கும் இங்கே என்னைத் தெரியாது. ஸ்ரீக்காந்தின் அப்பா என்றால்தான் தெரியும். நீ, ஸ்ரீகாந்த் வீடு என்றே கேட்கலாம். இந்த ஊரளவில் என் கீர்த்தியைக் காட்டிலும் அவனுடையது பெரிது. நீ வா. நேரில் நிறையப் பேசலாம். பின்புறம் அம்பத்தூர் பஸ் நிலையத்திலிருந்து ஞானமூர்த்தி நகரை அடைவதற்கு வரைபடம் ஒன்று எழுதியிருக்கிறேன். அதன்படி கிளம்பி வந்து சேர்.

ஆசீர்வாதம்.
லா.ச. ராமாமிருதம்.

நான் ரிஷியென மதிக்கும் எழுத்தாளர் ஒருவர் எனக்கெழுதிய கடிதம் அது! காலத்தின் பேய்ப்பாய்ச்சலில் காணாமல் போகாமல் திரும்பக் கிடைத்ததில் நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை.

லா.ச.ராவை எழுத்துமூலம் எனக்கு அறிமுகப்படுத்தியவர் அமரர் நா.சீ. வரதராஜன். அவர் லாசராவின் மிக நெருங்கிய நண்பர் வட்டத்தில் ஒருவர். அவரைப் பற்றி ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அவரது ஜனனி தொகுப்பைப் படித்துவிட்டு கிறுக்குப் பிடித்து அலைந்த காலத்தில்தான் அவரைச் சந்திக்க வேண்டும் என்று எண்ணி, ஒரு போஸ்ட் கார்டு போட்டேன். அதற்கு அவர் எழுதிய பதில் தான் மேலே இருப்பது.

லாசராவின் இந்தக் கடிதம் வந்தபின், மீண்டும் அவரது தொகுப்பை எடுத்து வைத்துக்கொண்டு முழுவதுமாக ஒருமுறை படித்தேன். எத்தனை முறை படித்தாலும் ஜிவ்வென்று ஏறும் போதை எழுத்து அவருடையது. அவரது எழுத்துகளினூடாக அவரது பிம்பம் ஒன்றை என் மனத்துக்குள் நான் எப்போதோ வரைந்துவைத்திருந்தேன். எப்போதும் கண்மூடி ஏகாந்தத்தில் லயித்திருக்கும் தோற்றமாக எனக்குள் அவர் அந்தக் காலங்களில் வீற்றிருந்தார். நிஜத்திலும் அவர் அப்படித்தான் இருப்பாரா என்று நா.சீ.வவிடம் ஒரு சமயம் கேட்டிருக்கிறேன்.

"ம்ம்..சொல்லலாம். உள்முகமாவே யோசிச்சிண்டிருக்கறவர்தான். ஆனாலும் பேச ஆரமிச்சுட்டா உன் வயசுக்கு, உன் பக்குவத்துக்கே இறங்கி வந்துடுவார்"

அந்த ஆசையில்தான் கடிதம் எழுதிப் போட்டேன்.

ஆனால் அவர் வரச்சொல்லி உத்தரவு கொடுத்தபின் ஏனோ தயக்கம் பற்றிக்கொண்டது. நேரில் பார்க்காமல் நானாக உருவாக்கிக்கொண்ட என் மனத்துக்கான பிரத்தியேக லாசரா எங்கே, நேரில் பார்த்ததும் காணாமல் போய்விடுவாரோ என்கிற பயம் காரணம். ஒருவாரம் தள்ளிப்போட்டேன். அது தானாக ஒருமாதம் ஆனது. பிறகு ஆறுமாதம் ஆனது. ஆறு வருடங்கள். அப்படியே மறந்தும் விட்டேன்.

அந்த ஒரு கடிதம் எனக்குப் போதுமானதாக இருந்தது அப்போது. அன்புள்ள சிரஞ்சீவி பா.ராகவன். ஆசீர்வாதம்.

போதாது? பதினேழு வருடங்கள் கழித்து, நேற்றுக் கிடைத்தது, மீண்டும் அந்தக் கடிதம். லாசராவைப் பார்க்கவேண்டும் என்கிற எண்ணம் மீண்டும் எழுந்திருக்கிறது. இப்போதும் ஒரு கடிதம் எழுதிப்போடலாம். வரச்சொல்லி அவசியம் பதில் வரும்.

பார்க்கலாம். என்ன அவசரம்?

**

லா.ச.ராவின் 'அபிதா' ஆங்கிலத்தில் கே.எஸ்.சுப்ரமணியத்தால் மொழியாக்கம் செய்யப்பட்டு இப்பொழுது எங்களது 'Indian Writing' இம்ப்ரிண்டில் எடிடிங்கில் உள்ளது. புத்தகம் அச்சில் வருவதைப் பார்க்க லா.ச.ரா இருக்கமாட்டார் என்பது வருத்தம் தரக்கூடியது.

====

இட்லிவடை பதிவு

3 comments: