Sunday, November 04, 2007

தமிழ்ச்செல்வனின் கொலையும் ஈழத்தின் எதிர்காலமும்

இப்போது இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்கள ராணுவத்துக்கும் நடந்துகொண்டிருப்பது முழு யுத்தம். இன்னமும் போர் நிறுத்தம் அமுலில் உள்ளதாக யாருமே நினைக்கவில்லை.

தமிழ்ச்செல்வன் மற்றும் சில புலிகளின் முக்கியஸ்தர்கள்மீது இலங்கை விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் புரிந்துள்ளது. அத்துடன் வெளிப்படையாகவே மேலும் இதேபோன்று தாக்குதல் நடத்தி புலிகளின் தலைமையை அழிப்போம் என்று இலங்கை அரசு சொல்லியுள்ளது.

படைகளின் பலம், கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் போரின் வெற்றி தோல்விகள் ஆகியவை, இப்போது நடக்கும் போரில் சிங்களர் பக்கமே கை ஓங்கி உள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

இந்த நிலையில் இலங்கை அரசு சமாதானத்தை நோக்கி தனது கரத்தை நீட்டாது. சமாதானத்தை நோக்கிப் போக, விடுதலைப் புலிகளின் தன்மானமும் இடம் கொடுக்காது. கடந்த ஒவ்வொரு தடவையும் சமாதானத்தை நோக்கிச் சென்றபோது புலிகளின் கையே (மிகக் குறைவான அளவுக்கு) மேலோங்கி நின்றது. சிங்கள அரசும் ராணுவமும் மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாது குழம்பிய நிலையில் இருந்தபோதே அமைதியை நோக்கிய பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டனர்.

-*-

இரு தரப்பினருமே எதிரிகளின் தலைமையை அல்லது முக்கியஸ்தர்களைத் தாக்கி அழிப்பதில் மும்முரமாகவே இருந்துள்ளனர். விடுதலைப் புலிகள் பலமுறை இலங்கை அரசின் அமைச்சர்களை, முக்கியஸ்தர்களை தற்கொலைப் படை மூலம் அழித்துள்ளனர். பிரேமதாச, ரஞ்சன் விஜெரத்னே, லலித் அதுலத்முதலி, காமினி திஸ்ஸநாயகே, குணரத்னே, லக்ஷ்மண் கதிர்காமர் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். சந்திரிகா குமாரதுங்க மயிரிழையில் கொல்லப்பட்டிருந்திருப்பார்.

நேரடியான போரல்லாது தற்கொலைப் படையால் ஏவி அழிக்கப்பட்ட ராணுவ துணைத்தளபதி பரமி குலதுங்க. கொலையிலிருந்து தப்பியவர் தற்போது ராணுவத் தலைவராக இருக்கும் சரத் ஃபொன்சேகா.

அதேபோல இலங்கை ராணுவம் போரில் நேரடியாகக் கொல்லாமல் பல விடுதலைப் புலிகளின் தலைவர்களை நிச்சயமாகக் கொன்றிருக்கும். இதற்கான தகவல்கள் சீராகக் கிடைக்கவில்லை. விடுதலைப் புலிகளின் தரப்பில் குழப்பத்தை ஏற்படுத்த இலங்கை ராணுவம் முயன்றதில் பெற்ற வெற்றி கருணா.

இந்த நேரடி மற்றும் மறைமுகமான சண்டைகளில் எது நியாயம், எது அநியாயம் என்பது முற்றிலுமாக மறைந்துவிட்டது.

-*-

தமிழ்ச்செல்வன் கொலையை முதலில் கேள்விப்பட்டதும் எனக்கு இது அநியாயம் என்றுதான் தோன்றியது. போர்க்கோலம் பூணாத - குறைந்தபட்சம் இந்த நேரத்தில் போர்க்கோலம் பூணாத - ஒருவரை; பிற நாடுகளுடனும் அரசியல் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் ராஜதந்திரப் பிரமுகரை குறிப்பிட்டு, குறிவைத்து, விமானங்களை அனுப்பிக் கொலை செய்வது முறையா? அந்த வகையில் இலங்கை அரசு கட்டாயமாகக் கண்டிக்கப்படவேண்டும் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

மிகவும் மோசமான சண்டைகளுக்கு ஊடாகவும் சில குறைந்தபட்ச நாகரிகங்களைக் கடைப்பிடிப்பது இரு தரப்பினருக்கும் தேவையானது. ராணுவ இலக்குகள் என்று அறியப்பட்ட இலக்குகளைத் தவிர்த்து, பொதுமக்கள்மீது தாக்குதல் நடத்துவது அநாகரிகமானது என்பதை அனைவருமே ஒப்புக்கொள்வர்.

பல நேரங்களில் போர் நடக்கும் அதே நேரத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகளும் நடக்கின்றன என்பதை நாம் பார்த்திருக்கிறோம். போர் நடந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் சிங்களப் பகுதிகளிலும் சரி, தமிழ்ப் பகுதிகளிலும் சரி, சிவிலியன் நிர்வாகம் நடக்கிறது. அந்த நிர்வாகத்தின் அதிகாரிகள்மீது தாக்குதல் நடத்தப்படுவது அநாகரிகமான செயல் என்பதை இரு தரப்பும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

-*-

தமிழர்களுக்கு இனியும் ஃபெடரல் கூட்டாட்சி முறை என்பது நடைமுறை அளவில் ஒத்துவராத விஷயம். சிங்களர்களிடமிருந்து கனிவான அணுகுமுறை இனி வரப்போவதில்லை. விடுதலைப் புலிகளின் அணுகுமுறைமீது நமக்கு எவ்வளவுதான் விமரிசனங்கள் இருந்தாலும் இன்றைய தினத்தில் நமது ஆதரவு அவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தேவை.

இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், இதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்க பல முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.

முக்கிய எதிர்க்கட்சியான அஇஅதிமுக விடுதலைப் புலிகளுக்கு எதிரான நிலையை மட்டுமே எடுக்கக்கூடியது. ஆனால் மற்ற அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைக்க முடியும். தமிழக காங்கிரஸ் தனியான ஒரு கொள்கையை எடுக்கக் கூடியதல்ல. மத்திய காங்கிரஸ் என்ன சொல்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

எனவே பிற கருத்துருவாக்கங்களை முன்வைக்காமல் தனித் தமிழீழம் என்ற நிலையை இந்தியா ஏற்றுக்கொள்ளுமாறு செய்ய விடுதலைப் புலிகளும் தமிழகக் கட்சிகளும் முன்வரவேண்டும்.

இதற்கான சில வழிமுறைகள்:

1. விடுதலைப் புலிகள் offense அன்பதை விடுத்து defense என்ற நிலைக்கு மாறவேண்டும். இன்று சிங்கள அரசின் கையே ஓங்கியுள்ளது. 'சரியான பதிலடி கொடுப்போம்' என்று பேசுவது அபத்தம். நாலைந்து தற்கொலைத் தாக்குதல்களால் ஒன்றும் பெரிதாக நடந்துவிடாது. இலங்கை விமானப் படை தொடர்ந்து தமிழர் பகுதிகளில் தாக்குதல் நடத்திகொண்டே இருக்கும்.

அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று சொல்லி பேச்சுவார்த்தை மேசைக்குத் தயாராக வேண்டும். இதன்மூலமும் சர்வதேச அழுத்தம் மூலமும் தமிழர் பகுதிகளில் வான்வழித் தாக்குதல் நடைபெறாவண்ணம் செய்யவேண்டும்.

2. இன்று விடுதலைப் புலிகளுக்கான பெருமளவு ஆதரவு தமிழகத்தின் தமிழ் தேசியவாதிகளிடமிருந்தே வருகிறது. இது வருத்தம் தரத்தக்க வகையில் தனித் தமிழீழத்துக்கு எதிரானதாகவே இருக்கும். தமிழ் தேசியம் பேசுபவர்கள்தான் மத்திய அரசுக்கு கிலியூட்டக்கூடியவர்கள். தமிழகத்தைத் துண்டாக்கி, ‘அகண்ட தமிழ்நாடு' என்ற கருத்தை முன்வைப்பவர்கள் என்று அவர்களைக் காரணம் காட்டி மத்திய அரசை பயமுறுத்த சில திறமையான பத்திரிகையாளர்களும் அறிவுஜீவிகளும் முன்வருவர்.

இதை மாற்றவேண்டுமானால் விடுதலைப் புலிகள் தங்களது ஆதரவை இந்திய மைய நீரோட்டக் கட்சிகளிடமிருந்து பெற வேண்டும். இதில் சில கட்சிகள் தமிழகத்துக்கு வெளியே உள்ள பிற மாநிலக் கட்சிகளாக இருக்கலாம். உதாரணத்துக்கு தெலுகு தேசம், ஜனதா தளம் (செகுலர் மற்றும் இதர சில்லறைகள்), பிஜு ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியோருடன் புலிகள் தொடர்பு கொண்டு, தங்களது நிலையை விளக்கவேண்டும்.

3. பாரதீய ஜனதா கட்சி, கம்யூனிஸ்டுகள் ஆகியோரோடு நேரடித் தொடர்பு தேவை. இந்தக் கட்சிகள் விடுதலைப் புலிகளுக்குப் பரிந்து பேசினால்தான் இந்தியா ஒருமித்த கருத்தை நாடாளுமன்றத்தில் உருவாக்கும். இந்திய நேரடியாக யுத்த தளவாடங்களை அனுப்பி விடுதலைப் புலிகளுக்கு உதவ வேண்டும் என்பதில்லை. இந்திய நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக ஒரு சீரிய விவாதம் வந்தால் அதுவே நல்லது. இலங்கையில் தமிழர்கள் நலன் என்பது தனித் தமிழீழத்தில்தான் சாத்தியமாகும் என்பது பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் நடந்தால் அதை உலகம் கூர்ந்து கவனிக்கும்.

-*-

விடுதலைப் புலிகள் இனியும் தமது சொந்த முயற்சியால், படை பலத்தால் தனி ஈழத்தைப் பெறக்கூடும் என்று என்னால் நம்பமுடியவில்லை.

எவ்வளவு விரைவில் பிரபாகரனுக்கும் இந்த எண்ணம் தோன்றும் என்பதை வைத்தே அடுத்து என்ன நடக்கும் என்பதைச் சொல்லமுடியும்.

29 comments:

  1. இலங்கை பிரச்சனை உச்சத்தில் இருந்த போது வாஜ்பாய் முதல் பெர்ணான்டஸ் வரை தமிழகத்திற்கு வந்து தங்களின் ஆதரவை தெரிவித்து வந்தனர். So it will not be a problem for LTTE (or) Srilankan Tamils to approach them.

    ஆனால் இந்த விஷயத்தில் பிரச்சனை கிளப்புவது Narayanan போன்ற அதிகாரிகள்தான். Everyone knows that RAW & Tigers do not get along. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பின்னே நின்று பெரும் பணி ஆற்றுவது அதிகாரிகள்தான். அவர்களின் நிலை மாறும் வரை இந்தியாவின் நிலை மாறாது.

    ReplyDelete
  2. நல்லெண்ணத்துடனும், நிதானத்துடனும் எழுதப் பட்ட இடுகையாகவே தோன்றுகிறது. குறிப்பாக இந்திய அரசின் அணுகுறையை விமர்சிக்க இயலாத இந்தியர்களுக்கு இதுவே சரியான நிலைப்பாடாகவும் இருக்க முடியும். தமிழ்தேசிய ஆதரவு கட்சிகளல்லாத, குறிப்பாக பிற மாநில அரசியல்கட்சிகள் மூலமான தொடர்புகளைப் பெருக்கி இந்திய அரசியல் வட்டத்தில் தனித்தமீழத்திற்கான அவசியத்தை உணர்த்த ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற உங்கள் கருத்தில் எனக்கு முழு உடன்பாடு உண்டு.

    இந்திய இறையாண்மை, இந்திய நலன் போன்ற அடிப்படைகளை நானும் ஒரு இந்தியன் என்ற அளவில் என்னால் புரிந்து கொள்ள முடிந்தாலும், இந்திய அதிகார வர்க்கம் வேண்டுமென்றே தமிழர்களுக்கெதிராக (புலிகளுக்கெதிராக மட்டுமென்று என்னால் இதைக் குறுக்க முடியவில்லை) இலங்கை அரசுக்கு ஆதரவாகத் தொடர்ந்து நடந்து வருகின்றது என்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. அவை இந்திய நலனுக்காகச் செய்யப் பட்டதாகக் கூடத் தெரியவில்லை. அதற்கான காரணங்களை இங்கு விளக்க விரும்பவில்லை. இப்படிப்பட்ட ஒரு அதிகார வர்க்கம் இந்திய அரசை ஆட்டிப் படைக்கும் வரை இந்தியா முழுவதும் ஏகோபித்த ஆதரவில்லாமல் பலவீனப்பட்டு இருக்கும் இந்தியாவின் அனைத்துக் கட்சிகளாலும் எதுவும் உருப்படியாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை.

    அடுத்து, //இன்று விடுதலைப் புலிகளுக்கான பெருமளவு ஆதரவு தமிழகத்தின் தமிழ் தேசியவாதிகளிடமிருந்தே வருகிறது// என்ற உங்கள் கருத்தில் எனக்கு மாற்றுக் கருத்துண்டு. ஒருவேளை ஆவேசமாக அறிக்கை விடுவதை ஆதரவு என்று கருதுவீர்களானால், சரியென்று ஒத்துக்கொள்ளலாம். உண்மையிலேயே விடுதலைப் புலிகளைப் பற்றி இந்திய அதிகார வர்க்கம் பல மிரட்டல்களைச் செய்து கொண்டிருந்தாலும், விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகக் கருதும் மனநிலை பெரும்பாலான தமிழக மக்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன். அவர்களின் செயல்பாடுகளில் மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருந்தாலும், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராளிகளாகத் தான் நினைக்கின்றனர். அமெரிக்காவிலிருந்து கொண்டு இதை எப்படிச் சொல்கிறீர்கள் என்று நினைக்கலாம். ஒவ்வொரு ஆண்டும் விடுமுறையில் தமிழகத்தின் பல பகுதிகளைச் சுற்றிவர வாய்க்கும் பொழுது முன்பின் அறியாதவர்களிடமும், சகபயணிகளிடமும், செய்தித்தாள்களில் வரும் செய்திகளைக் காண்பித்துப் பேசுவதுண்டு. பல வருடங்களாக வெளிநாட்டில் இருப்பதால் இந்தப் பிரச்னை பற்றி எதுவுமே தெரியாதவன் போல் கருத்துக் கேட்கும் பொழுது நான் அறிந்த உண்மை இது. குறிப்பாக கிராமங்களில் விடுதலைப்புலிகள் பற்றி பயங்கரவாதிகள் என்ற அபிப்ராயமே இல்லை. ஏன, தமிழில் வலைப்பதிவெழுதும் இளைஞர்களின் கருத்துக்களைப் படித்தாலே இந்த உண்மை தெரியும்.இதைப் பற்றிய கருத்துக் கணிப்பை ஏன் எந்தவொரு தமிழக அமைப்பும் செய்யவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒருவேளை அதற்குக் கூட சுதந்திரம் நம் நாட்டில் இல்லையோ என்னவோ. இலங்கையில் ஈழ மக்கள் மத்தியில் கூட புலிகளுக்கு ஆதரவில்லை என்று புளுகிக் கொண்டிருக்கும் இராமும், இராமசாமிகளும் இருக்கும் நாட்டில் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?

    அரசியல் கட்சிகளை விட, வட இந்தியப் பத்திரிகையாளர்களை அணுகுவது ‘தெகெல்க்கா’ போல் இலங்கைக்குத் தனிப்பட்ட அளவில் சென்று வந்து அங்குள்ள நிலவரத்தை எழுதுவதற்குத் தூண்டலாம். அதன்மூலம் மற்ற மாநிலத்தவர் தமிழ் நாட்டு அரசியலைக் குழப்பிக் கொள்ளாமல் இருக்க உதவும்.

    எதுவென்றாலும், ஈழப்பிரச்னையில் தமிழர்களுக்கெதிராக தொடர்ந்து நடந்து வரும் அதிகார வர்க்கமும், இராம்-இராமசாமிகளும் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால், தமிழ் தேசியம் வளரவே செய்யும்.
    அதுவும், மிதவாத அரசியல் கட்சிகளான தி.மு.க வலுவிழக்கும் பொழுது தீவிரவாதம் வளர்வதற்கு வழி வகுக்கும். இந்த விசயத்தில் இராம்-இராமசாமிகள் முட்டாள்களாகத்தான் நடந்து வருகின்றனர்.

    நன்றி – சொ. சங்கரபாண்டி

    ReplyDelete
  3. //சிங்களர்களிடமிருந்து கனிவான அணுகுமுறை இனி வரப்போவதில்லை. விடுதலைப் புலிகளின் அணுகுமுறைமீது நமக்கு எவ்வளவுதான் விமரிசனங்கள் இருந்தாலும் இன்றைய தினத்தில் நமது ஆதரவு அவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தேவை.//

    வரவேற்கப்படவேண்டிய வரிகள்.

    //இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், இதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்க பல முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.//

    தமிழகத்தில் மட்டுமல்ல, நீங்கள் இதே பதிவில் கூறியதுபோல அகில இந்திய அளவில் ஒருமித்த கருத்தை உருவாக்க முயல வேண்டும். 'ஒருமித்த' கருத்து என்பது இயலாத ஒன்றாகப் போனாலும், தேசிய அளவில் கவனத்தை ஈர்க்கும் அளவில் விவாதங்கள் நடைபெறும்; ஈழத்தமிழர்படும் துயரம், இலங்கை அரசின் பாரபட்ச ஆட்சிமுறையினால் தமிழர் அடைந்த அவல நிலைகுறித்த செய்தியை உலகுக்குக் கொண்டுபோகும் கடமை இந்தியராகிய நமக்கும் உண்டல்லவா?

    'இந்திய ஏகாதிபதியம்', 'சுரண்டும் இந்தியா' என்றெல்லாம் பேசும் சிங்கள இனவாதிகளை expose செய்யவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

    ReplyDelete
  4. --//சிங்களர்களிடமிருந்து கனிவான அணுகுமுறை இனி வரப்போவதில்லை. விடுதலைப் புலிகளின் அணுகுமுறைமீது நமக்கு எவ்வளவுதான் விமரிசனங்கள் இருந்தாலும் இன்றைய தினத்தில் நமது ஆதரவு அவர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் தேவை.//

    வரவேற்கப்படவேண்டிய வரிகள்.--

    ரிப்பீட்டு

    ReplyDelete
  5. பத்ரி,

    உங்கள் கருத்துகளுக்கு நன்றி...

    இந்தியாவின் அரசியல்வாதிகளால் இந்தப் பிரச்சனையில் எந்தளவுக்கு ஆதிக்கம் செலுத்த முடியும் என்ற எண்ணம் எனக்கு உள்ளது. உண்மையிலேயே இந்திய அரசியல்வாதிகளால் இந்தப் பிரச்சனையில் எதுவுமே செய்ய முடியாது என்பது தான் உண்மை. ஏனெனில் இந்திய வெளியுறவு, பாதுகாப்பு போன்ற விடயங்கள் பெரும்பாலும் ரா அதிகாரிகளால் தான் தீர்மானிக்கப்படுகிறது. தற்போதைய பாதுகாப்பு செயலரான எம்.கே.நாராயணன் போன்றவர்களை மீறி இந்திய அரசியல்வாதிகளால் எதுவுமே செய்ய முடியாது என்பது தான் எனது கருத்து.

    எம்.கே.நாராயணன் மிகத்தீவிரமான புலிகளின் எதிர்ப்பாளர். கடந்த காலங்களில் எம்.கே.நாராயணன் நேரடியாகவே பிரபாகரன், பாலசிங்கம் போன்றவர்களுடன் பணியாற்றியிருக்கிறார். குறிப்பாக பெங்களூரில் ராஜீவ்காந்தி பிரபாகரனை கிட்டதட்ட கைது செய்து ஜெயவர்த்தனேவுடன் கையெழுதுத்து போடு என நெருக்குதல் உள்ளாக்கிய சமயத்தில் IB அதிகாரியாக இருந்தவர் எம்.கே.நாராயணன். எம்.கே.நாராயணன், பாலசிங்கம், பிரபாகரன் இடையே பல சந்திப்புகள் இந்தியாவில் நடந்துள்ளது. தற்பொழுது பாதுகாப்பு/வெளியூறவு உயர்பதவியில் இருப்பவர்கள் எல்லாருமே விடுதலைப்புலிகளுடன் நெருக்கமாக ஒரு காலத்தில் இருந்த ரா அதிகார்கள் தான்.

    ராவின் செல்லக்குழந்தையாக இருந்து இன்று அவர்கள் எதிராகவே ஒரு பெரிய சக்தியாக விடுதலைப்புலிகள் விஸ்ரூபம் எடுத்துள்ள நிலையில் அவர்களுடைய அணுகுமுறை விடுதலைப்புலிகளுக்கு எதிராகவே இருக்கும். "ராஜீவ்காந்தியின் படுகொலை மட்டுமே காரணம் அல்ல".

    மற்றபடி சில தமிழ்தேசியவாதிகள் தமிழகத்தில் தனித்தமிழ்நாடு குறித்து பேசினாலும் அதனால் எந்தப் பலனும் விளையப்போவதில்லை என்பதை கூட அறியாத முட்டாள்கள் அல்ல இந்திய அதிகாரிகள்.

    இந்திய வெளியூறவுத்துறையில் நியாயம் என்ற பேச்சிக்கே இடமில்லை என்பதை சமீபத்தில் மியான்மார் இராணுவ தலைவர்களுக்கு இந்தியா கொடி தூக்கிய பொழுதே தெளிவானது தான். இதனை கடந்த காலங்களில் கூட "Interstate Relations are not governed by the principles of Moral Phenemonen. They are and will remain an Amoral Phenemonen" என்று ஜெ.என்.தீக்ஷ்த் கூறியிருக்கிறார்.

    இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்பது புலிகளின் முழுமையான இராணுவ வெற்றியால் நடக்க கூடிய வாய்ப்பு "இல்லை". ஆனால் தற்பொழுது மிக அதிக வட்டிக்கு 500மில்லியன் டாலர் கடன் உதவியை வெளிநாட்டு நிதி நிறுவனங்களிடம் இருந்து இலங்கை வாங்கியுள்ளது. இலங்கையில் பொருளாதார நிலைகள் மீது புலிகள் தாக்குதல் தொடுக்கும் பொழுது தற்பொழுது 21% என்ற நிலையில் இருக்கும் அந் நாட்டின் பணவீக்கம் இன்னும் உயரும் பொழுது, இன்னும் அதிக அளவில் கடன் வாங்க வேண்டிய தேவை எழும் பொழுது தானாக பேச்சுவார்த்தை நோக்கி செல்லக்கூடிய சூழல் ஏற்படும். அதைத் தான் புலிகள் செய்ய முயற்சிப்பார்கள்.

    ReplyDelete
  6. //உண்மையிலேயே விடுதலைப் புலிகளைப் பற்றி இந்திய அதிகார வர்க்கம் பல மிரட்டல்களைச் செய்து
    கொண்டிருந்தாலும், விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகக் கருதும் மனநிலை பெரும்பாலான தமிழக
    மக்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன்.//

    சங்கரபாண்டி, உங்கள் அனுமானம் தவறு என்று தோன்றுகிறது. தமிழக மக்கள், விடுதலைப்புலிகளை, பயங்கரவாதிகளாக அல்ல, எதுவாகவுமே கருதுவதில்லை என்பது தான் என்னுடைய ஊகம். இந்த முடிவுக்கு வர சில காரணங்கள் இருக்கின்றன.

    டிஸ்கி : இந்தப் பின்னூட்டம் புலிகள் மீதான விமர்சனம் அல்ல. புலிகளைப் பற்றி தமிழக மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கக் கூடும் என்ற என் தனிப்பட்ட அபிப்ராயம்.

    1. ஈழப் போராட்டம் பற்றி பரவலாகத் தமிழக ஊடகங்களில் வரத்துவங்கியது 1983 க்குப் பிறகுதான். கலைஞர்
    ஈழப்போராட்டத்துக்கு ஆதரவாக கலைஞர் தன் பதவியைத் துறந்தார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான
    வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பள்ளி கல்லூரிகள் விடுமுறை அளித்தன. பிரபாகரன் household name ஆனார். ரொம்ப ஸ்மார்ட்டாக இருப்பதாக, பத்திரிக்கை கேள்வி பதில்களில் சிலாகிக்கப்பட்டார். கலைப்புலி பட நிறுவனம் தயாரித்த 'யார்' என்ற திரைப்படத்தில், இந்திய ராணுவ வீரன் பாத்திரம் ஏற்ற அர்ஜுனுக்கு ஜெகன் என்று பெயர் சூட்டப்பட்டது. 'என் அப்பா பேர் குட்டிமணி, தாத்தா பேரு தங்கதுரை' என்று வில்லன்களை விளாசுவதற்கு முன் அவர் வசனம் பேசிய போது, திரையரங்கம் அதிர்ந்தது. ராமச்சந்திர
    ஆதித்தனின் தேவி வார இதழில், பிரபாகரன் பற்றிய வரலாற்றுத் தொடர் எழுதப்பட்டது. பல அபூர்வமான புகைப்படங்கள் தாங்கி வந்த அந்தத் தொடர் பரவலான வரவேற்பைப் பெற்றது. விதிவிலக்காக, அகடாமிக்
    வருஷத்தின் நடுவிலே கூட, வினோதமாகத் தமிழ் பேசிய மாணவர்களை, மயிலையின் ப்ராமின் ஸ்கூல்களில் இணைத்து கொண்டார்கள் [அக்கா ஃப்ரான்ஸில், அண்ணன் ஆஸ்திரேலியாவில் என்று சொன்ன போது பொறாமையாகக் கூட இருந்தது.]. சிங்கள அரசின் கொடூரம் பற்றி வீட்டிலும், தெருமுக்குகளிலும்
    பேசினார்கள். ஈழப் போராட்டம் பற்றி ப.நெடுமாறன் எழுதிய குறுநூல் என்னுடைய வீட்டிலேயே படிக்கக்
    கிடைத்தது. சிங்கள அரசு, அங்கேயே பிறந்து வளர்ந்த தமிழ் மக்களை ஒழிக்கத் தலைப்படுகிறது. அதனால்,
    தங்கள் இருப்புக்காக ஆயுதம் ஏந்திப் போராடுகிறார்கள் என்பதுதான் எல்லோருக்கும் கிடைத்த செய்தி.

    இது எண்பதுகளின் இறுதி வரையிலான நிலைமை. ராஜீவ் காந்தியின் படுகொலை காரணமாக எல்டீடீஈ அமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, தமிழக ஊடகங்கள் - ஹிந்து, தினமலர், துக்ளக் வகையறா தவிர்த்து - வாயைத் திறக்கவேயில்லை. இதற்கு ராஜிவ் காந்தியின் கொலை மட்டுமே காரணமில்லை. ஊடகங்கள் ஒட்டுமொத்தமாக ஒரே குரலில் எல்லாம் பேசாது.

    காரணம் எதுவாக இருந்தாலும், கடந்த பதினைந்து வருடங்களாக தமிழக மைய நீரோட்டப் பத்திரிக்கைகளில், செய்திகளாகவோ, வாசகர் கடிதமாகவோ, துணுக்குகளாகவோ, கேள்வி பதில்களிலோ, ஈழத்தமிழர் விவகாரம் குறித்து எந்தவிதமான அபிப்ராயங்களையும் காணவே முடியாது.

    தமிழ்மணம் வழியாக சில வலைப்பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வரும் வலைப்பதிவு எழுதாத, சுமாராக நாட்டு நடப்புத் தெரிந்த நண்பன் ஒருவன், " என்னடா தமிழ்ச்செல்வன் பத்தி நிறையப் பேர் எழுதிட்டு இருக்காங்க, அவர் என்ன அவ்ளோ பெரிய கையா? " என்று ஹிந்துவில் செய்தி வருவதற்கு முன்பாக என்னைக் கேட்டான். சில சுட்டிகள் கொடுத்தேன்.

    ராஜீவ் காந்தியைக் கொலை செய்யாமல் விட்டிருந்தால், சிக்கல் பெருசாயிருக்காது, சுமுகமாக பிரச்சனையை தீர்த்திருக்கலாம் என்று பாமரத்தனமாக நம்புபவர்களில் நானும் ஒருவன். ஆனால், மையநீரோட்டப் பத்திரிக்கைகளில் கிடைக்காத தகவல்கள் இணையத்தில் கிடைத்த போது, எனக்கு ஆர்வமும் இருந்ததால், தேடிப்பிடித்து வாசித்து ஓரளவுக்குத் தெளிவு கிடைதது. இந்த வசதிகள் இல்லாமல், தொலைக்காட்சியின் சீரியல்களிலும், சிவாஜி படத்திலும், ரியாலிடி ஷோக்களிலும், நாற்பதாயிரம் ரூபாய் சம்பள வேலைக்குத் தயார்
    செய்துகொள்வதிலும் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு , ஈழப்போராட்டம் குறித்து
    என்ன அபிப்ராயம் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?

    'சதாம் ஹூசேனை தூக்கிலே போட்டாங்களாம் மச்சீ, கேள்விப்பட்டியா? "

    'ஓ அப்படியா?... சரி'

    'எல்டீடீஈ சுப.தமிழ்ச்செல்வனை போட்டுத் தள்ளிட்டாங்களாமே, தெரியுமா?'

    ' தமிழ்ச்செல்வனா? எல்டிடீயிலே பிரபாகரனுக்கு அடுத்தது பாலசிங்கம். அந்த ஆளும் போய்ட்டார்... இவர்
    யாரு? அவரை விடப் பெரியவரா?'

    இந்த நிலைக்கு யார் காரணம் என்பதை அப்புறம் பார்த்துக்கலாம். ஆனால், பிரச்சனை இதுதான்னு முதலிலே கண்டுகொள்வதுதான், தீர்வு காண்பதற்கும் கற்பிதங்களில் இருந்து வெளியே வருவதற்கும் முதல் படி.

    2. தமிழ் வலைப்பதிவுகளில் அனேகம் பேர், தமிழ்ச்செல்வனுக்கு அஞ்சலி செலுத்தியதால், விடுதலைப்புலிகளுக்கு, தமிழகம் உள்ளிட்ட பிற இடங்களில், ஆதரவு இருக்கிறது என்று பொருள் வருமாறு
    சொல்லி இருக்கிறீர்கள். இந்த கணிப்பும் தவறு என்று தான் தோன்றுகிறது. என்ன காரணத்துக்காக
    மையநீரோட்ட ஊடகங்களில் ஈழப்பிரச்சனை பற்றிப் பேசப்படுவதில்லையோ, அதே சூழ்நிலைதான் தமிழ் வலைப்பதிவு உலகிலும் நிலவுகிறது. ஆட்சியின் பொருட்டும் கூட்டணிக் கட்சியின் சுமுக உறவுக்காகவும்,
    கதறிக்கூட அழமுடியாமல், கவிதை எழுதி, அதற்கும், விளக்கம் சொல்லியாக வேண்டிய நிலைமைதான் கருணாநிதிக்கே.
    தமிழ்த்தேசியம் பேசுபவர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் தவிர, எதிலும் கலக்காமல் இருக்கும்
    பெருவாரியான பர்சனல் ப்ளாகர்கள் யாரும் - இந்த me too வலைப்பதிவாளர்கள் தவிர்த்து - வாயைத் இந்த விஷயத்தில் திறக்க யோசிப்பார்கள் என்பதுதான் நிலைமை.
    புலிகளைக் குறித்த கேள்வி எழுப்பினாலே, அவர்களை, ஜேவிபியின் உறுப்பினர்கள் போலப் பார்ப்பதுதான் வழக்கமாக இருக்கிறது. இல்லை 'பாமரத்தனமான இருக்கிறது, எலிக்குட்டி வெளியே வந்துடுச்சு' என்று கமண்ட்டுகள் தான் கிடைக்கிறது. நல்லதோ கெட்டதோ, பேசினால்தான், பேச விட்டால் தான் விவாதம் கிளம்பும், அது பரவும். குடுமிப்பிடி சண்டை நடக்கும். ஊடகங்களில் இருப்பவர்கள் வந்து வேடிக்கை பார்ப்பார்கள். கலந்து கொள்வார்கள். நியூஸ்சானலில் வரும். மக்கள் பார்வைக்குப் போகும். அபிப்ராயம் உருவாகும். சட்டமன்றத்தில் பேசுவார்கள். கனிமொழி மாதிரி ஆட்கள் மாநிலங்களவையின் உரை
    நிகழ்த்துவார். தேசிய கவனம் பெறும் என்று நினைக்கிற பாமரன் நான். [ ஆர்ட்கோர் ஈழப்பதிவர்கள் வந்து
    'முழுசா விஷயம் தெரிஞ்சுகிட்டு பேசு' என்று மென்னியைப் பிடிப்பதற்கு முன்னால், நானே என்னை பாமரன் சொல்லிக் கொள்கிறேன்.]. சண்டை சச்சரவு எல்லாம் ஓய்ந்து, தமிழர்கள், சுய அடையாளத்துடன் வாழ என்ன
    வழி இருக்கிறதோ அதைச் செய்ய வேண்டும் என்பதுதான், ஓரளவுக்காவது ஈழ விவகாரம் தெரிந்த தமிழகத் தமிழர்களின் நிலை. அப்படிப்பட்ட நிலைமை ஏற்பட, பிரபாகரன் சரண் அடையவேண்டும் என்ற நிலை வந்தால், அதை ஆதரிப்பேன், அல்லது இலங்கையின் பிக் ஷாட்டுகளைப் போட்டுத் தள்ளி, பிரபாகரன் மூலமாகத்தான் விடுதலை கிடைக்கும் என்றால் அதையும் ஆதரிப்பேன்.

    இறுதியிலே என்ன சொல்ல வருகிறேன் என்றால், பெரும்பான்மையான மெய்ன்லாண்டு மக்கள், ஈழத்தமிழர் பிரச்சனை குறித்துக் கவலை கொண்டிருக்கிறார்கள், ஆனால் ஊடகங்கள் தான் சதி செய்கிறது என்கிற கணிப்பு தவறு. அப்படி மக்கள் அக்கறை கொண்டிருந்தார்களானால், அது, எந்த ரூபத்திலாவது - சிறுகதை, நாவல்,
    குறும்படம், திரைப்படம், கட்டுரை, ஓவியம், தொலைக்காட்சிகளின் talk show, - என்று வெளியே வந்தே
    தீரும். ' இந்தாளே அமுக்கி வாசிக்கிறார் ( கலைஞர் ), அப்ப ஏதோ மேட்டர் இருக்கு... நமக்குத்தான் கெரவம் புரிஞ்சு தொலைக்க மாட்டேங்குது' என்று நினைத்து ஒதுங்குபவர்கள் - உண்மை விவரம் கிடைக்காததால் - தான் அதிகம்.

    ஈழத்தமிழருக்கும் தமிழ்நாட்டுத் தமிழருக்குமான இப்போதைய ஒரே தொடர்பு, சினிமா பாட்டு நிகழ்ச்சி
    நடத்தும் அப்துல் அமீது பேசும் தமிழ் தான் என்று சொன்னால் கேட்க கொடுமையாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.

    ReplyDelete
  7. //'சரியான பதிலடி கொடுப்போம்' என்று பேசுவது அபத்தம். நாலைந்து தற்கொலைத் தாக்குதல்களால் ஒன்றும் பெரிதாக நடந்துவிடாது. //

    உங்களின் இக் கருத்தினையொட்டி புலிகளின் புலனாய்வுத் துறைத் தலைவர் பொட்டு அம்மான் கீழ் வருமாறு கூறுகிறார்.

    சிங்கள தேசம் தமிழ்ச்செல்வனை வீழ்த்தியதற்கு பதில் என்னென்று கேட்கிறார்கள். அதற்கு சொல்லக்கூடியது ஒரு பதில் தான். ஒரு சில படையினரோ அல்லது ஓராயிரம் படையினரோ ஒரு சில அரசியல் தலைவர்களோ ஒரு சில வல்லாதிக்க சக்திகளோ தமிழ்ச்செல்வனின் உயிருக்கு ஈடாக முடியாது. தமிழீழம் என்ற உயர்ந்த கனவு தமிழீழத்திதற்காக தமது உயிர்களை ஈர்ந்த மாவீரர்களின் கனவை ஈடுசெய்ய உழைப்பதே தமிழ்ச்செல்வனின் உயிருக்கான விலை.


    ஆயினும் புலிகள் ஒரு தாக்குதல் பதிலடியை கொடுப்பார்கள் என்றே தோன்றுகிறது. அதை எதிர்பார்க்கும் சாதாரண மக்களுக்காகவாவது..

    ReplyDelete
  8. //'பாமரத்தனமான இருக்கிறது, எலிக்குட்டி வெளியே வந்துடுச்சு' என்று கமண்ட்டுகள் தான் கிடைக்கிறது. நல்லதோ கெட்டதோ, பேசினால்தான், பேச விட்டால் தான் விவாதம் கிளம்பும், அது பரவும்.//

    பிரகாஷ்,

    சுஜாதாவைப் பத்தி விமர்சனம் ஒருத்தர் செய்றாங்கன்னு வையுங்களேன் நீங்க எப்ப அவர்கிட்ட பேசலாம்னா, அவருக்கு சுஜாதான்னா ஒரு பெண் கிடையாது ஆண்ங்கிற பேஸிக் மேட்டர் தெரிஞ்சாதானே!

    இல்லை சுஜாதாங்கிறது ஏதோ பிராமண மாமின்னு நினைச்சிக்கிட்டு ஏன் அவங்க ப்ராமண மாமி இல்லைன்னு நீங்க நினைக்கிறீங்கன்னு கேட்டா பாமரத்தனமா இருக்கிறது என்ற பதில் தான் உங்களிடம் இருந்தும் வரும்னு நினைக்கிறேன்.

    அப்படியும் இல்லாமல் அவர் ஆண் என்று தெரிஞ்சும் இல்லை அவர் பெண் தான்னு சொல்றவங்க கிட்ட விவாதம் செய்யமுடியாது தல. வருத்தம் தான் படமுடியும்.

    ReplyDelete
  9. மோகன், நீங்க சொல்ற உதாரணம் தப்பு. சுஜாதா யார் என்கிற தகவல் இருநிலைத் தன்மை கொண்டது. சுஜாதா ஒரு பிராமண மாமி என்று தப்பாக நினைத்துக் கொண்டிருப்பவர்களை, சுஜாதா முன்னாலேயே கொண்டு போய் நிறுத்தினால், அசடு வழிந்து கொண்டே உண்மையைத் தெரிந்து கொள்வார்கள். ஆனால், புலிகள் செய்வது சரி அல்லது தவறு என்ற இரண்டு நிலைகளுக்குள்ளே அடங்கி விடுகிற விஷயமா? இரண்டிற்கும் நடுவிலே நின்று பேச வேண்டிய விஷயம் எதுவுமே இல்லையா? அவரவர்களுக்கு கிடைக்கிற தகவல்களின் படியும், தங்கள் கருத்தியல் படியும், எவர் குறித்தும் தங்களுக்குச் தோதான பிம்பத்தை கட்டமைத்துக் கொள்வது இயற்கைதான்.

    மேலும் , நீங்க quote செய்திருப்பதை நான் ஒரு கேஷுவல் ரிமார்க் ஆகத்தான் சொன்னேன். அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டாம். முக்கியமாகச் சொல்ல வந்தது, அந்தப் பின்னூட்டத்திலேயே இருக்கிறது.

    ReplyDelete
  10. பிரகாஷ்,

    நான் சந்தித்த மிகப்பல சாதாரண மக்களிடம் பேசியபோது வெளிப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், “விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகக் கருதும் மனநிலை பெரும்பாலான தமிழக மக்களிடம் இல்லை என்றே நினைக்கிறேன். அவர்களின் செயல்பாடுகளில் மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருந்தாலும், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராளிகளாகத் தான் நினைக்கின்றனர்.” என்று மட்டும் கூறினேன். அவர்களெல்லாம் புலிகளுக்கு ஆதரவாக குரல் எழுப்பப் போகிறார்கள் என்றோ அல்லது ஈழத்தமிழர்களுக்காக தெருவில் இறங்கி போராடப் போகிறார்கள் என்றோ நான் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஈழப் பிரச்னை மட்டுமல்ல, தங்களைப் பாதிக்காத எந்தப் பிரச்னைக்காகவும் துரும்பைக் கூட நகர்த்தப் போவதில்லை அவர்கள்.

    மேலும் என் அனுமானம் தவறாக இருக்கலாம் என்று நான் கருதுவதால் தான் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும் என்று நான் சொன்னேன். உங்களைப் போல இந்துப் பத்திரிகை மட்டுமே படிக்கும் கூட்டம் சொல்வதை திருப்பிச் சொல்லி இதுதான் தமிழ் நாட்டு மொத்த மக்களும் சொல்கிறார்கள் என்று சொல்ல வில்லை.
    //தொலைக்காட்சியின் சீரியல்களிலும், சிவாஜி படத்திலும், ரியாலிடி ஷோக்களிலும், நாற்பதாயிரம் ரூபாய் சம்பள வேலைக்குத் தயார்
    செய்துகொள்வதிலும் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு , ஈழப்போராட்டம் குறித்து என்ன அபிப்ராயம் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?// என்று சொல்லும் நீங்களே தமிழக மக்கள் மத்தியில் எந்த விவாதமும் இல்லை என்பதை புலிகளுக்கு எதிரான நிலைப்பாடாகப் புரிந்து கொள்கிறீர்கள்.

    மேலும் நீங்களே சொல்கிறீர்கள், //ஹிந்து, தினமலர், துக்ளக் வகையறா தவிர்த்து// வேறு எந்தப் பத்திரிகையும் எதுவும் எழுதுவதில்லை என்று. புலிகளுக்கும், தமிழர்களுக்கும் எதிரான கருத்துக்களைப் பரப்பும் பத்திரிகைகள் மட்டுமே மைய நிரோட்டத்தில் இயங்குகின்றன என்பதையும் கூட ஒட்டு மொத்த தமிழக மக்களின் புலிகளுக்கு எதிரான நிலைப்பாடாகப் புரிந்து கொள்கிறீர்கள். புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் ஆதரவான குரல்கள் (அவை முதலமைச்சரே ஆனாலும்) எப்படியெல்லாம் ஒடுக்கப் படுகின்றன என்பதைப் புரிந்து கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்னை இருக்கிறது என்று தெரியவில்லை. அப்படிப்பட்ட ஒடுக்குமுறைக்கு பார்ப்பனியப் பத்திரிகைகளும், அதிகார வர்க்கமும் பின்னால் இருப்பதை உங்களால் புரிந்து கொண்டாலும் ஒப்புக் கொள்ள முடியாதுதான்.

    இப்படிப்பட்ட ஒடுக்குமுறைக்கு உதவியாக இருந்த இராஜீவின் கொலையை புலிகள் செய்ததன் மூலம் தமிழகத்தில் இருந்த ஈழ ஆதரவாளர்களுக்குப் பெரும் தவறிழைத்து விட்டனர் என்பதில் எனக்கு எந்தக் கருத்து மாறுபாடும் இல்லை (இராஜீவ் அரசின் இராணுவம் ஈழத்தமிழர்களின் மேல் நடத்திய வன்முறைக்குப் பதிலடியாக அது செய்யப் பட்டாலும் கூட). பார்ப்பனிய அடக்குமுறையிடம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் எத்தனைத் தொல்லைகளை இன்னமும் தமிழகத்தின் ஈழ ஆதரவாளர்கள் அனுபவித்து வருகின்றனர். இங்கு வைக்கோவையோ, நெடுமாறனையோ நினைத்துச் சொல்லவில்லை. எந்தவித அமைப்பு/பண பலமும் இல்லாத எத்தனையோ பேர்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்கியிருக்கிறது ஈழத்தை எதிரியாகக் கருதும் பார்ப்பனிய அடக்குமுறை.

    // தமிழ் வலைப்பதிவுகளில் அனேகம் பேர், தமிழ்ச்செல்வனுக்கு அஞ்சலி செலுத்தியதால், விடுதலைப்புலிகளுக்கு, தமிழகம் உள்ளிட்ட பிற இடங்களில், ஆதரவு இருக்கிறது என்று பொருள் வருமாறு சொல்லி இருக்கிறீர்கள்//

    பிரகாஷ், நான் சொன்னதைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள். தமிழில் எழுதும் ஆர்வம் மிகுதியால் வலைப்பதிவுகளில் எழுத முன்வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் பெரும்பாலோர் (தமிழ்ச் செல்வன் மரணத்தை முன்னிட்டு மட்டுமல்ல, அதற்கு முன்பாகவும்) ஈழப்போராட்டத்தை ஆதரித்துக் குரல் கொடுத்திருக்கின்றனர். மற்ற ஊடகங்கள் அனைத்தும் ஈழப்பிரச்னை பற்றிய வாசகர்களின் கருத்துக்களை வேண்டுமென்றே வெளியிடுவதில்லை என்பதற்கு இது ஒன்றே சாட்சி. அப்படியிருக்க தமிழ்நாட்டு மக்கள் உண்மையிலேயே என்ன நினைக்கிறார்கள் என்பதை எப்படி கணித்து வெளியிடப் போகிறார்கள் என்று கூறுகிறேன். No news என்பதை புலிகளுக்கு எதிரான மனநிலை என்று உங்களுக்கு வசதியாக நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். No news என்பதை denied news என்று நான் எனக்கு வசதியாகப் புரிந்து கொள்கிறேன். என்னுடைய புரிதலுக்கு அடிப்படை blogs give a different news என்பதே.

    //பாமரத்தனமான இருக்கிறது, எலிக்குட்டி வெளியே வந்துடுச்சு' என்று கமண்ட்டுகள் தான் கிடைக்கிறது//

    உங்களுடைய அறச்சீற்றத்துக்குக் காரணமே இதுதானோ :-)

    பாமரத்தனமாக என்று வேறு யாரும் சொன்னார்களோ தெரியாது. நான் பாபாவின் ஒரு கேள்வியை அப்பாவித்தனமான கேள்வி என்று குறிப்பிட்டதுதான் உங்களை பாதித்திருக்கிருக்கிறது என நினைக்கிறேன். உணர்ச்சிவசப்படாமல், மீண்டும் ஒருமுறை அவரது பதிவையும், பின்னூட்டங்களையும் போய்ப் படித்து வாருங்கள்.
    // நல்லதோ கெட்டதோ, பேசினால்தான், பேச விட்டால் தான் விவாதம் கிளம்பும், அது பரவும்// என்று நீங்கள் சொல்வது போல் அவரை விவாதிக்கக் கூடாது என்றோ, மாற்றுக் கருத்தைச் சொல்லக் கூடாது என்றோ நானோ மற்றவர்களோ சொல்லியிருக்கிறீர்களா? இந்தியாவின் மேல் ஏறபடவிருக்கும் வான் புலித்தாக்குதல்களைப் பற்றியெல்லாம் வான் புலிகள் ஆரம்பிக்கப் படும் முன்பே அலசி ஆராய்ந்த பாபா போன்றவர்கள் “ஈழப் போரில் இறந்த மற்ற போராளிகளை விட தமிழ்ச்செல்வனுக்கு ஏனிந்த முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்” என்று அப்பாவித்தனமாகக் கேட்பது உங்களுக்குப் படவில்லை. ஆனால் அந்தக் கேள்வி அப்பாவித்தனமாக இருக்கிறது என்று நான் சொல்வது உங்கள் கோபத்தை வரவழைக்கிறது. நல்லதுதான், இந்தப் பின்னூட்டத்தோடு விவாதிப்பதை நிறுத்தி விடுகிறேன்!

    // ஈழம் கிடைக்காமல் இருப்பதுதான் பிரபாகரனுக்கு லாபகரமானது. தனித்தலைவராக கொலு வீற்றிருக்கலாம். உலகச் சந்தையில் பேரம் பேசலாம். இவ்வளவு ஏன்... இலங்கைத் தலைவருக்கும் அவருக்கும் collusion கூட நடந்து கொண்டிருக்கலாம்.//

    இப்படியெல்லாம் பாபா எழுதினால் உங்களுக்கு எந்தக் கேள்வியுமில்லை, மாற்றுச் சிந்தனை கிடைக்கிறது. ஆனால் நான் அப்பாவித்தனம் என்று சொல்வது எரிச்சலையூட்டுகிறது. ஏன் நானும் இதே போல் ஒரு ஒரு மாற்றுச் சிந்தனையை வைக்கிறேன் எப்படியிருக்குன்னு சொல்லுங்க – “தமிழகத்தில் ஈழ ஆதரவாளர்களை ஒடுக்குவதற்காகவே சிலர் இராஜீவ் கொலையை பண்ணிவிட்டு புலிகளின் மேல் பழியைப் போட்டு விட்டார்கள்”

    // மக்கள் அக்கறை கொண்டிருந்தார்களானால், அது, எந்த ரூபத்திலாவது - சிறுகதை, நாவல், குறும்படம், திரைப்படம், கட்டுரை, ஓவியம், தொலைக்காட்சிகளின் talk show, - என்று வெளியே வந்தே தீரும். '//

    எப்படி, கறுப்புப்பணப் பிரச்னையை தீர்க்க வந்த சிவாஜி மாதிரியா :-)

    நன்றி – சொ. சங்கரபாண்டி

    ReplyDelete
  11. //மோகன், நீங்க சொல்ற உதாரணம் தப்பு. சுஜாதா யார் என்கிற தகவல் இருநிலைத் தன்மை கொண்டது.//

    இல்லை நான் மூன்றாவது நிலையைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அதாவது அவர் ஆண் என்று தெரிந்தும் பெண் என்று வாதாடுவது!

    பாபாவை நான் அந்தக் categoryல் தான் வைப்பேன். புஷ் ஈரான் மீது படையெடுப்பதற்கும் பிரபாகரனும் ஈழத்தமிழர்களும் சிங்களர்களுக்கு எதிராக போராடுவதற்கான வேறுபாடு பாபாவிற்குத் தெரியும் என்றே இன்னமும் நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. கில்லி பிரகாஷ் சார்!

    //தமிழக மக்கள், விடுதலைப்புலிகளை, பயங்கரவாதிகளாக அல்ல, எதுவாகவுமே கருதுவதில்லை என்பது தான் என்னுடைய ஊகம்.//

    உங்கள் ஊகம் வெறும் ஊகம் மட்டுமே. இணையத்தை மேயும் அளவுக்கு மக்களின் மனங்களை மேயத் தவறி விட்டீர்கள் :-)


    //ஆதித்தனின் தேவி வார இதழில், பிரபாகரன் பற்றிய வரலாற்றுத் தொடர் எழுதப்பட்டது. etc., etc.,//

    அந்நேரத்தில் கலைஞரின் "வீரன் வேலுத்தம்பி" வந்ததை மறந்துவிட வேண்டாம். "சுருளைமீசைக்காரனடி வேலுத்தம்பி! வேல்லுத்தம்பீய்!!!" பாட்டு ஞாபகம் இருக்கா? :-)


    //தமிழக மைய நீரோட்டப் பத்திரிக்கைகளில், செய்திகளாகவோ, வாசகர் கடிதமாகவோ, துணுக்குகளாகவோ, கேள்வி பதில்களிலோ, ஈழத்தமிழர் விவகாரம் குறித்து எந்தவிதமான அபிப்ராயங்களையும் காணவே முடியாது.//

    அய்யா தினத்தந்தி, தினத்தந்தின்னு ஒரு தினப்பத்திரிகை வருதே தெரியுமா? மாலைமுரசு, மாலைமலர்னு மாலைப் பத்திரிகைகள் வருதே தெரியுமா? இதுபோன்ற பல பத்திரிகைகள் துன்பியல் சம்பவத்துக்குப் பின்பும் கூட தொடர்ந்து ஈழம் தொடர்பான செய்திகளை முக்கியச் செய்திகளாக முதல் பக்கத்தில் வெளியிடும் பத்திரிகைகள் அவைகள். ஒரு வேளை உங்கள் மைய நீரோட்டப் பத்திரிகைகளில் அவை இல்லையோ என்னவோ? தினமலர், ஹிந்து படிக்கும் வாசகர்களை காட்டிலும் மிக அதிகமாக வாசிக்கப்படுபவை (ஆதாரம் : NRS, IRS லொட்டு, லொசுக்கு)அப்பத்திரிகைகள். நேரம் கிடைத்தால் சலூன் கடையிலோ, தேநீர்க்கடையிலோ அமர்ந்து அந்தப் பத்திரிகைகளையும் ஒருதரம் வாசியுங்கள்.


    //தமிழ்மணம் வழியாக சில வலைப்பதிவுகளைத் தொடர்ந்து வாசித்து வரும் வலைப்பதிவு எழுதாத, சுமாராக நாட்டு நடப்புத் தெரிந்த நண்பன் ஒருவன், " என்னடா தமிழ்ச்செல்வன் பத்தி நிறையப் பேர் எழுதிட்டு இருக்காங்க, அவர் என்ன அவ்ளோ பெரிய கையா? " என்று ஹிந்துவில் செய்தி வருவதற்கு முன்பாக என்னைக் கேட்டான்.//

    என்னத்தை சொல்ல தமிழ்மணம் வழியாக தான் உலகநடப்புகளை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நிலையில் தமிழன் இருக்கிறான் போலிருக்கிறது. காட்டுநாயக்கா தாக்குதல், அனுராதபுர தாக்குதல் போன்ற புலிகளின் வெற்றிகளை நான் குறிப்பிட்ட செய்தித்தாள்களில் வாசித்து மகிழ்ச்சியடைந்த நூற்றுக்கணக்கான தமிழர்களை நாள்தோறும் பார்க்கிறேன். சாலையில் கட்டை வண்டி ஓட்டிச்செல்லும் உழைப்பாளி எவனிடமாவது கேளுங்கள். உனக்கு பிரபாகரன் புடிக்குமா? மன்மோகன்சிங் புடிக்குமா? என்று. உண்மை விளங்கலாம்.


    //தொலைக்காட்சியின் சீரியல்களிலும், சிவாஜி படத்திலும், ரியாலிடி ஷோக்களிலும், நாற்பதாயிரம் ரூபாய் சம்பள வேலைக்குத் தயார்
    செய்துகொள்வதிலும் வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு , ஈழப்போராட்டம் குறித்து
    என்ன அபிப்ராயம் இருக்க முடியும் //

    ராமர்பாலம் குறித்தும், தெஹல்கா அபிப்பிராயம் இருக்கிறதில்லையா? அதுபோலவே இயல்பாக ஈழம் குறித்தும் ஏதோ ஒரு அபிப்பிராயம் குத்துமதிப்பாக இருக்கிறது!


    //இல்லை 'பாமரத்தனமான இருக்கிறது, எலிக்குட்டி வெளியே வந்துடுச்சு' என்று கமண்ட்டுகள் தான் கிடைக்கிறது.//

    நட்பு வலியது :-))))))))))



    //அது, எந்த ரூபத்திலாவது - சிறுகதை, நாவல்,
    குறும்படம், திரைப்படம், கட்டுரை, ஓவியம், தொலைக்காட்சிகளின் talk show, - என்று வெளியே வந்தே
    தீரும்.//

    என்ன கொடுமை சாமி இது? ரெண்டு மூணு வருஷம் முன்னாடி கூட 'பொடா' சட்டத்துலே சில பேரை உள்ளேத்தள்ளி தமிழ்நாடு முழுக்க கொந்தளிச்சுதே? அவங்கள்லாம் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை ஆதரித்து பொடாவில் உள்ளே போனார்களா? இதனால் பொடா சட்டத்துக்கெதிராக நாடுதழுவிய அளவில் எதிர்ப்பும், விவாதமும் எழுந்ததே? ஒருவேளை மையநீரோட்ட பத்திரிகைகளில் அவையெல்லாம் வரவில்லையா?

    //ஈழத்தமிழருக்கும் தமிழ்நாட்டுத் தமிழருக்குமான இப்போதைய ஒரே தொடர்பு, சினிமா பாட்டு நிகழ்ச்சி
    நடத்தும் அப்துல் அமீது பேசும் தமிழ் தான் என்று சொன்னால் கேட்க கொடுமையாகத்தான் இருக்கும். ஆனால் அதுதான் உண்மை.//

    அக்மார்க் தினமலர் Writeup ஸ்டைல்!


    ஓக்கே, பின்னூட்டத்தை முடிப்பதற்கு முன்பாக ஒரு லாங் ஸ்மைலி!

    :-))))))))))))))))))))))))))

    ReplyDelete
  13. //சங்கரபாண்டி, உங்கள் அனுமானம் தவறு என்று தோன்றுகிறது. தமிழக மக்கள், விடுதலைப்புலிகளை, பயங்கரவாதிகளாக அல்ல, எதுவாகவுமே கருதுவதில்லை என்பது தான் என்னுடைய ஊகம்.//
    பிரகாஷ். மைய நீரோட்டமான ஊடகங்களில் ஈழப்பிரச்சனைகள் குறித்து எதுவும் வரவேயில்லை, ஆகையால் மக்கள் அவர்களை எதுவுமாகவே கருதுவதில்லை என்று என்று சொல்கிறீர்கள். அது பொய்யென்று பழைய காலத்திலே தமிழக மக்கள் நிருபித்திருக்கிறார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் போது ஒட்டு மொத்தமாக 26 பேருக்கு சிறப்பு நீதிமன்றத்தால் தூக்குதண்டனை விதிக்கப்பட்டத்து. அதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு 23 பேர் தண்டனை குறைக்கப்பட்டது. செய்யப்பட்டார்கள். அந்த வழக்கு செலவுகளுக்கான நிதி பொதுமக்களிடம் இருந்து தான் பெறப்பட்டது. ஊர் ஊராக கூட்டங்கள் நடைபெற்றன. நிதி திரட்டப்பட்டது. அன்று நிதி கொடுத்தவர்கள் பெரும்பாலானோர் செல்வ சீமாந்தர்களோ, அரசு உயர் பதவியில் வீற்றிருந்தவர்களோ அல்ல. சாமன்யன். ஓட்டுப்போடுவதோடு அரசு அமைப்பில் தன்னை நிறுத்திக்கொள்ளும் சாதரண மனிதர்கள்தான்.

    //சிறுகதை, நாவல்,
    குறும்படம், திரைப்படம், கட்டுரை, ஓவியம், தொலைக்காட்சிகளின் talk show, - என்று வெளியே வந்தே
    தீரும். ' இந்தாளே அமுக்கி வாசிக்கிறார் //

    காற்றுக்கென்னெ வேலி என்ற படம் வெளிவர பட்ட பாடு தெரியலையா பிரகாஷ். இங்கே கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. காற்றுக்கென்ன வேலி போன்ற படங்களுக்குதான் பிரச்சனை.

    *
    இந்திய அரசாங்கம் தமிழ்நாடு மக்களிடம் வெளிப்பாடையாக ஈழப் போராட்டம் பற்றி கருத்து கணிப்பு (அ) பொதுவான வாக்கெடுப்பு நடத்தினால் ஆதரவு இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துவிடும்.

    சென்னையைத் தாண்டியும் தமிழகம் இருக்கிறது. மத்திய தரவர்க்கத்தை தாண்டியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

    ReplyDelete
  14. //சென்னையைத் தாண்டியும் தமிழகம் இருக்கிறது. மத்திய தரவர்க்கத்தை தாண்டியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.//

    இரு வாசகமும் திருவாசகம்!

    (இதாவது பிரசுரமாகுமா, பத்ரி?)

    ReplyDelete
  15. பத்ரி,

    நல்ல கவனிப்புடன், நேர்மையான பதிவிற்கு நன்றி!

    மக்களைப் பொறுத்தவரையில் அன்றும் இன்றும் ஈழப்பிரச்சனை ஆதரவு உணர்விலிருந்து குறையவில்லை. சட்டரீதியான ஒடுக்குமுறைகள் இருந்த போதும் புலிகளுக்கும், ஈழத்திற்கும் ஆதரவான கூட்டங்கள் வெளிப்படையாகவே நடந்தன. கூட்டங்களில் நேரடியாகவே சாதாரண மக்கள் (எந்த கொள்கை கோட்பாடுகளும் அறியாதவர்கள்) உணர்வோடு கலந்துகொண்டதை பார்த்திருக்கிறேன்.

    000

    1991ற்கு பின்னரும் யாழ்ப்பாணத்தில் புலிகள் சண்டையிட்டபோது அவர்களது வெற்றிக்காக மகிழ்ச்சியும், தோல்விக்காக வருத்தமும் கொண்டவர்கள் பலர் எந்த அமைப்பையோ, கருத்தியலையோ சாராத கிராமத்து தமிழர்கள். கட்டுநாயகா விமானதளத்தை புலிகள் தகர்த்தபோதும் இந்த உணர்வு இருந்ததாக அறிகிறேன்.

    000

    ஜெயலலிதா கம்பெனியும், சில உளவுத்துறை அதிகாரிகளும் அரசு மற்றும் ஊடகம் வழியாக தங்களது கருத்தை பெரும்பான்மை மக்களின் கருத்து போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கின்றனர். தடா, பொடா போன்ற சட்டங்களின் மிரட்டலும் இப்படி ஒரு தோற்றத்தை உருவாக்கியது. ஜெயலலிதாவிற்கு மத்திய அரசையும், மாநில அரசையும் தனது பிடியில் வைத்திருக்க ஈழப்பிரச்சனை ஒரு ஆயுதம்.

    தி.மு.க அரசியல் காடணங்களுக்காக ஈழப்பிரச்சனையை பற்றி பேசாமல் இதுவரை இருந்தது. தி.மு.கவின் இதுவரையிலான இந்த நிலைபாட்டிற்கும் மக்கள் கருத்திற்கும் சம்பந்தமில்லை.

    ஈழப்பிரச்சனையில் உள்ளிருந்த உணர்வு நெருப்பு மக்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து தமிழ்ச்செல்வன் மரண நினைவு கூட்டங்களாக வடிவெடுத்திருக்கிறது. மக்களின் மனநிலை உணர்ந்ததன் விளைவு தான் கலைஞர் கவிதை, கனிமொழியின் தொடர்ந்த பேச்சுக்கள்...

    ஈழப்பிரச்சனையில் வேறுப்பட்ட கொள்கைகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த அடிப்படையில் தமிழ்ச்செல்வன் கொலைக்கு கண்டனம் தெரிவித்தது. அதோடு "தமிழர்கள் பாதிக்கப்படு வதைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து இலங்கை அர சுக்கு எதிராக பெரும் இயக்கம் நடத்தப்படும்." என தெரிவித்துள்ளது.

    000

    சென்னை வந்த காங்கிரஸ் மேலிட தலைவர் வீரப்பமொய்லி அளித்த பேட்டியில் முதல்வர் எழுதிய கவிதைக்கு ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தது பற்றி கேட்ட போது:
    "நமது நாடு ஜனநாயக நாடு. ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்து சுதந்திரம் உள்ளது. அந்த அடிப்படையில் கலைஞர் கவிதை எழுதியிருக்கிறார்.
    கலைஞர் எதைச் செய்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசுவது ஜெயலலிதாவின் வழக்கம், திமுக, அதிமுக இடையேயான இப்பிரச்சினையில் நான் தலையிட விரும்ப வில்லை. முதல்வர் கலைஞர் கவிதை எழுதி உள்ளது அவரது தனிப்பட்ட கருத்து. அதற்கும் காங்கிரசுக்கும் சம்பந்தம் இல்லை." என்றார். வீரப்பமொய்லி எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை.

    000

    தமிழகத்தின் உணர்வுகளை அறிந்து அவசரமாக பிரதமர், பிரணாப்முகர்ஜி கலந்தாலோசனை செய்திருப்பதாக செய்தி வந்திருக்கின்றன.

    தமிழக மக்கள் உணர்வுகளை ஒன்றுசேர்த்தால் புதுடில்லியின் கொள்கையும் மாறும் (பாதுகாப்புத்துறையிலுள்ள சில அதிகாரிகளது போக்கு சரியல்ல. கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை இலங்கை இராணுவம் கடத்திய விடயத்தில் இந்த அதிகாரிகளது செயல் வெளிப்படையாக தெரிந்தது). முதல்வர் கருணாநிதிக்கும் இந்த மாற்றத்தை உருவாக்குவதில் முக்கிய கடமையுண்டு.

    தமிழக அளவில் பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தினால் புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தில் மக்களிடம் ஆதரவில்லையென்ற மாயத்தோற்றம் மறையும்.

    ReplyDelete
  16. //தி.மு.க அரசியல் காடணங்களுக்காக// என்றிருப்பதை "தி.மு.க அரசியல் காரணங்களுக்காக" என படிக்கவும்.

    இந்த பதிவை படிக்கும் முன்னர் எழுதிய ஈழம் பற்றிய பதிவு http://aalamaram.blogspot.com/2007/11/blog-post_06.html

    ReplyDelete
  17. சங்கரபாண்டி :

    பாலாஜிக்கு வந்த கமண்ட்டை தொட்டுச் செல்வதால், என்னுடைய முழுபின்னூட்டமுமே, அவருக்கு நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்து எழுதப்பட்டது போலத் தோன்றிவிட்டது என் துரதிருஷ்டம். புலிகள் மீது விமர்சனம் வைத்தால், என்ன விதமான எதிர்வினைகள் கிடைக்கலாம் என்பதற்கு எனக்குக் கிடைத்த உடனடி சாம்பிள். இதை பெரிதாகக் எடுத்துக் கொள்ளவேண்டாம் என்றும் பின்னால், மோகன் தாஸ் எழுதியதற்கு பதில் சொல்லி இருக்கிறேன்.

    இதுக்குதான் நான் முதலிலேயே, டிஸ்கி போட்டேன். இது புலிகள் பற்றிய விமர்சனம் அல்லன்னு.

    நான் புலிகளை எதிர்க்கிறேனா அல்லது ஆதரிக்கிறேனா என்பதல்ல பிரச்சனை. நிசத்தைச் சொன்னாலும் யாரும் ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்பது வேறு விஷயம் :-) ஆனால்,எதிர்ப்பதற்கோ ஆதரவளிப்பதற்கோ தேவையான ஈழப்போராட்டம் குறித்த புரிதல் தமிழகத்தில் இருக்கிறதா என்பதுதான் நான் வைத்த கேள்வி.

    இருக்குன்னு நீங்க சொல்றீங்க. இல்லைன்னு நான் சொல்றேன். அவ்வளவு எதுக்கு? தமிழ்மண முகப்பிலே ஒரு ஆன்லைன் சர்வேக்கு ஏற்பாடு செய்யுங்க. தமிழ்மணம் சேவையை உபயோகிப்பவர்கள் எல்லாம் கலந்து கொள்ளணும் வேண்டுகோள் வைங்க...முடிவிலே நான் தான் விவரம் தெரியாமப் பேசுகிறேன் என்று தெரிய வந்தால், வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறேன்.

    நீங்கள் உங்கள் மறுமொழியில் தொடர்ந்து வலியுறுத்துவதைப் போல, தமிழகத்தில் நிலவும் மௌனம், புலிகளுக்கு எதிரான மனநிலை என்று நான் சொல்லவில்லை. என்ன என்று புரியாததாலே அமைதியாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வந்தேன்.

    இப்படிப் பேசுவதால், இது புலிகளுக்கு எதிரான பிரச்சாரம் போலத் தோன்ற வாய்ப்பு இருக்கிறது எழுதும் போதே தோன்றியது. ஆனால், ஊழ்வினை ன்னு ஒண்ணு இருக்கே அது சும்மா இருக்குமா? :-)

    அது சரி, இந்துப்பத்திரிக்கை மட்டுமே படிக்கும் கும்பலைச் சேர்ந்தவன் என்று எப்படி கண்டுபுடிச்சீங்க?

    //எப்படி, கறுப்புப்பணப் பிரச்னையை தீர்க்க வந்த சிவாஜி மாதிரியா :-)

    அடிச்சு நவுத்துங்க... உங்களுக்கு இல்லாத உரிமையா? :-). ஆனால், நான் அதைக் குறிப்பிட்டது, ஈழப்பிரச்சனை பற்றி எல்லாரும் கதையும் நாவலும் எழுதிக் குவிக்க வேண்டும், படம் எடுத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. கதைக் களன், கரு, சூழ்நிலை, பெயர்கள், ஈழத்தமிழ் டயலக்ட், என்று புனைவுகளின் எந்த அம்சத்திலும் தமிழகத் தமிழனுக்கு ஈழத்தைப் பற்றி நினைவே வருவதில்லையே என்கிற உளவியலின் பின்னணியை யோசிக்க முயன்றேன். தன் மகனுக்குப் விஜய பிரபாகரன் என்று விஜயகாந்த் பெயர் சூட்டிய போது அது எழுப்பிய உணர்வலைகளை, அதிர்வுகளை, இந்த காலகட்டத்திலே தமிழகத்தில் ஏற்படுத்த முடியாது. இது புலிகளுக்கு எதிரான மனோநிலை என்று நீங்களோ , அல்லது படிக்கிற வேறு யாருமோ எடுத்துக் கொள்வதில் எனக்குப் பிரச்சனை இல்லை.

    நீங்க தெரிஞ்சவர் என்பதால் உங்க கிட்டே உரிமையோடு கேட்டேன். மத்தபடிக்கு மூச்சைப் பிடிச்சுகிட்டு களத்திலே குதிச்சுப் போராடற அளவுக்கு எல்லாம் நான் இல்லை.

    இருபத்து அஞ்சு வருஷமாகச் சென்னையிலே இருக்கிறேன். நிறையப் பேரைச் சந்திக்கிறேன் பேசுகிறேன், பெரிய, சிறிய இதழ்களை வாசிக்கிறேன், தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்க்கிறேன் என்ற அடிப்படையில் சொன்ன கருத்து, ஏதாவது முக்கியமான காரணியை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் சொன்னதாகக் கூட இருக்கலாம்.

    ReplyDelete
  18. லக்கிலுக் :

    //உங்கள் ஊகம் வெறும் ஊகம் மட்டுமே. இணையத்தை மேயும் அளவுக்கு மக்களின் மனங்களை மேயத் தவறி விட்டீர்கள் :-)//

    மக்களின் மனங்களை மேயும் அளவுக்கு எல்லாம் என்கிட்டே பவர் அல்ல. மக்கள் எந்த எந்த இடத்தில் எல்லாம் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்களோ, அதை ஓரளவுக்குக் கவனித்ததால் தான் அப்படிப்பட்ட அபிப்ராயத்துக்கு வர முடிந்தது. இது குறைபட்ட பார்வையாக இருக்கலாம் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.

    //அந்நேரத்தில் கலைஞரின் "வீரன் வேலுத்தம்பி" வந்ததை மறந்துவிட வேண்டாம். "சுருளைமீசைக்காரனடி வேலுத்தம்பி! வேல்லுத்தம்பீய்!!!" பாட்டு ஞாபகம் இருக்கா? :-)//

    ஆமாம். அது 87 இலே வந்தது. 97 இலேயோ, 2007 இலேயோ அந்த மாதிரி எல்லாம் எடுக்க முடியாது. முத்துவால இப்ப நடிக்க முடியாதுங்கறதை மட்டும் சொல்லலை :-)

    //அய்யா தினத்தந்தி, தினத்தந்தின்னு ஒரு தினப்பத்திரிகை வருதே தெரியுமா? மாலைமுரசு, மாலைமலர்னு மாலைப் பத்திரிகைகள் வருதே தெரியுமா? இதுபோன்ற பல பத்திரிகைகள் துன்பியல் சம்பவத்துக்குப் பின்பும் கூட தொடர்ந்து ஈழம் தொடர்பான செய்திகளை முக்கியச் செய்திகளாக முதல் பக்கத்தில் வெளியிடும் பத்திரிகைகள் அவைகள். //

    செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை, வாசிக்கிற மக்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தின என்ற குழப்பத்தைத்தான் முன் வைத்தேன்.

    //என்னத்தை சொல்ல தமிழ்மணம் வழியாக தான் உலகநடப்புகளை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நிலையில் தமிழன் இருக்கிறான் போலிருக்கிறது//

    தமிழ்மணம் வழியாக என்னுடைய உலகத்தை அமைத்துக் கொள்கிறேன் என்றால், நான் இப்படி எல்லாம் 'பொதுக்கருத்துக்கு' குந்தகம் விளைவிக்கிற மாதிரி பேசுவேனா? :-)

    //நூற்றுக்கணக்கான தமிழர்களை நாள்தோறும் பார்க்கிறேன். சாலையில் கட்டை வண்டி ஓட்டிச்செல்லும் உழைப்பாளி எவனிடமாவது கேளுங்கள். உனக்கு பிரபாகரன் புடிக்குமா? மன்மோகன்சிங் புடிக்குமா? என்று. உண்மை விளங்கலாம்//

    உண்மை என்னன்னா நான் அது போல இது வரை கேட்டுப் பார்த்ததில்லை.

    // அவங்கள்லாம் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை ஆதரித்து பொடாவில் உள்ளே போனார்களா? இதனால் பொடா சட்டத்துக்கெதிராக நாடுதழுவிய அளவில் எதிர்ப்பும், விவாதமும் எழுந்ததே? ஒருவேளை மையநீரோட்ட பத்திரிகைகளில் அவையெல்லாம் வரவில்லையா//

    அப்ப, கைதாகி உள்ளே போகக் கூடிய தெம்பு இருக்கிறவன் தான் ஈழப்பிரச்சனை பற்றிப் பேச முடியும், சோப்ளாங்கிங்க எல்லாம் சும்மா இருக்கணும் அர்த்தம் வருதே, பரவாயில்லையா? :-).

    //அக்மார்க் தினமலர் Writeup ஸ்டைல்!//

    நன்றி :-)

    //ஓக்கே, பின்னூட்டத்தை முடிப்பதற்கு முன்பாக ஒரு லாங் ஸ்மைலி!//

    இதுக்கும் ஒரு நன்றி.

    ReplyDelete
  19. முத்துக்குமரன், நன்றி.

    //காற்றுக்கென்னெ வேலி என்ற படம் வெளிவர பட்ட பாடு தெரியலையா பிரகாஷ். இங்கே கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. காற்றுக்கென்ன வேலி போன்ற படங்களுக்குதான் பிரச்சனை.//

    நான் ஈழப்பிரச்சனை பற்றிய பிரச்சாரப்படம் எடுக்க வேணும் என்று சொல்லவில்லை. சங்கரபாண்டிக்கு, சற்றுமுன் அளித்த பின்னூட்டத்தில் நான் என்ன சொல்ல முயற்சி செய்கிறேன் என்று எழுதியிருக்கிறேன்.

    //இந்திய அரசாங்கம் தமிழ்நாடு மக்களிடம் வெளிப்பாடையாக ஈழப் போராட்டம் பற்றி கருத்து கணிப்பு (அ) பொதுவான வாக்கெடுப்பு நடத்தினால் ஆதரவு இருக்கிறதா இல்லையா என்று தெரிந்துவிடும்//

    முற்றிலும் உண்மை.

    -பிரகாஷ்

    ReplyDelete
  20. //தமிழ்மண முகப்பிலே ஒரு ஆன்லைன் சர்வேக்கு ஏற்பாடு செய்யுங்க. தமிழ்மணம் சேவையை உபயோகிப்பவர்கள் எல்லாம் கலந்து கொள்ளணும் வேண்டுகோள் வைங்க..//

    பிரகாஷ்,

    இணைத்தளங்களில் நடத்தப்படும் கருத்துக்கணிப்புகளுக்கும் களநிலைக்கும் பெரிய வேறுபாடு உண்டு. இதை உணர்வீர்களென நினைக்கிறேன்.

    எந்த விசயத்தையும் முன்வைத்து வலைப்பூக்களில் வரும் வலைப்பூக்களின் கருத்துக்கணிப்பிலும் தமிழகத்தின் உண்மை நிலை பிரதிபலிப்பதில்லை.

    உங்களது பிற கருத்துக்களுக்கு விவாதம் செய்ய நேரமில்லை.

    ReplyDelete
  21. பத்ரி ஈழப்பிரச்சினையில் இந்தியா எவ்வாறானான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும் என்று நீங்கள் எழுதுவது வாசிப்பதற்கு நன்றாகத் தான் இருக்கிறது ஆனால் நிஜத்தில் ராஜீவ் காலத்து அணுகு முறையிலிருந்து றோவும் இந்திய வெளியுறவு/பாதுகாப்பு அதிகாரிகளும் இன்றுவரை மாறவேயில்லை

    பலவருடங்களாக தூங்கிக் கிடந்த றோவும் பாதுகாப்பு அமைச்சின் அலுவலர்களும் விடுதலைப்புலிகள் ஆனையிறவையும் கைப்பற்றி யாழ் நகரையும் சூழ்ந்து கொண்ட போது அவசர அவசரமாக துயில் எழும்பி இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவாக யாழிலிருந்து படையினரை வெளியேற்ற இந்திய அரசு உதவும் என அறிவிக்கிறார்கள்

    அதன் பின்னர் இந்திய இலங்கை எல்லைக் கடலோரத்தில் கூட்டு ரோந்து ஒன்றுக்கு பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன அந்த உடன்படிக்கை எட்டப்படாமலேயே விடுதலைப்புலிகளின் நடமாட்டங்கள் பற்றிய தகவல்களை இலங்கைக் கடற்படைக்கு வழங்கி உதவுகிறது இந்திய பாதுகாப்பு அமைச்சு.அண்மையில் தொடர்ச்சியாக விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்கள் அழிக்கப்பட்டது வரை பின்னணியில் இந்தியாவின் தகவல்கள் இருக்கின்றன

    போதாதற்கு சில மாதங்களின் முன்னர் நடிக்கப்பட்ட மீனவர் கடத்தல் நாடகங்கள் போன்றவற்றையும் உதாரணம் காட்டலாம்

    கருணா பிளவின் பின்னால் இந்திய அரசின் கை பற்றி பல்வேறு அலசல்கள் இணையத்திலேயே கிடைக்கின்றன.
    கருணா பிரிந்ததும் ஈ.என்.டி.எல்.எப் என்ற காலாவதியான இயக்கத்திற்கு உயிர் கொடுத்து அதன் முன்னைநாள் உறுப்பினர்களோடு பணம் கொடுத்துத் திரட்டப்பட்ட இளைஞர்களுமாக பலர் தனி விமனம் ஒன்றில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப் படுகிறார்கள்.கிழக்கை கருணாவுடன் இணைந்து தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது அதன் நோக்கம்(கடைசியில் கருணா அவர்களுக்கும் பெப்பே காட்டி கொன்றொழிக்க எஞ்சியிருந்த ஈ.என்.டி.எல்.எப்பினரும் இந்தியாவிற்குத் தப்பியோடியதுதான் உண்மையில் நடந்தது)

    இந்தியா இல்லாமல் இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு இல்லை என்று உலக நாடுகளில் பிரச்சாரம் செய்ய அனுப்பப்பட்ட ஆனந்தசங்கரியும் இந்தியாவிடம் கிளிப்பிள்ளைப் பாடம் கேட்டவர்தாம் கடைசியில் கோடிகளைக் காட்டி இலங்கை அரசாங்கம் அவரைத் தனது கிளிப்பிள்ளை ஆக்கிக் கொண்டுவிட்டது

    ஈரோஸ் என்றொரு இயக்கம்.அதில் பாதியளவு உறுப்பினர்கள்(பாலகுமாரன்,கருணாகரன்)போன்றோர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து விட மீதிப் பேர் இயக்கத்தைக் கலைத்து விட்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்ததை அறிந்திருப்பீர்கள் அதன் இராணுவத் தளபதியாக இருந்த சங்கர் ராஜியின் மகனை இந்தியா புதிதாகக் கண்டுபிடிப்புச் செய்திருக்கிறது.பிரான்ஸிற்கும் இந்தியாவிற்கும் இடையில் பல பறப்புகளை மேற்கொண்ட பின்னர் அவர் தன்னைத் தானே ஈரோஸின் வாரிசாக அறிவித்ததோடு இந்தியாவின் உதவியுடன் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு என்ற கோசத்துடன் பிரான்சில் களமிறங்கியிருக்கிறார்(ஏனோ தெரியவில்லை எல்லாக் கோதாரிகளுக்கும் பிரான்ஸ் தான் புகலிடம்)

    இப்படியாக தன் முயற்சியில் சற்றும் மனம் தளாராத விக்கிரமாதித்யன் மாதிரி இந்திய அரசு(ஒரு சில பாதுகாப்பு/உளவு அதிகாரிகள்) முயன்று கொண்டேயிருக்கிறார்கள்

    அவர்கள் நோக்கம் வேறொன்றுமில்லை தங்கள் திட்டங்களுக்கு மசிந்து கொடுக்காத பிரபாகரனையும் புலிகள் இயக்கத்தையும் அகற்றிவிட்டு தங்கள் சொல் கேட்கும் ஒருவரையோ அல்லது ஒரு பொம்மை ஆட்சியையோ(இன்னுமொரு வரதராஜப் பெருமாள்)வடக்கு கிழக்கில் ஆட்சியில் இருத்துவது)அது நிறைவேறும் வரைக்கும் இந்தியா முயன்று கொண்டுதான் இருக்கும்.விடுதலைப்புலிகளின் வாழிடங்கள் நடமாட்டங்கள் அடங்கிய செய்மதித் தகவல்களிலிருந்து பதுங்கு குழிகளில் பதுங்கியிருக்கும் தலைவர்களை கொல்ல பங்கர் பஸ்டர் வரைக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவிடமிருந்து கிடைத்துக் கொண்டே இருக்கும்

    ReplyDelete
  22. 1984 வாக்கில் எங்கள் ஊரான கரூரில் பலரும் இலங்கை போராளிகளுக்கு பல உதவிகள் புரிந்தனர். கரூர் அருகே ஒரு பயிற்சி முகாம் இருந்தது. அரசாங்கமும் மறைமுக ஆதரவு அளித்தது. மேலும் பல தகவல்களை இங்கு கூற முடியாது...

    விடுதலை புலிகள் தங்கள் போராட்டத்திற்கு நிதி திரட்டுவதற்காக போதை பொருள் (கெரோயின்) கடத்த வேண்டியிருந்ததாக அறிந்தேன்.....

    இன்று சில கேள்விகள் :

    1. தனி நாடு (ஈழம்) தேவையில்லை, பெடர்ல் அமைப்பே போதும் என்று சில ஆண்டுகளுக்கு முன் புலிகளின் வானொலி அறிவித்து. நிலைபாடு என்ன ?

    2.ஈழம் அமைந்தாலும், அங்கு அடிப்படை ஜனநாயகம் வருமா ? எதிர்கட்சிளை புலிகள் அனுமதிப்பார்களா ?

    4. தோட்ட தொழிலாளி தமிழர்கள், கொழும்பு தமிழர்கள்,
    முஸ்லிம்கள், இவர்களின் நிலை என்னவாகும் ?

    5. 25 வருடங்களுக்கு முன் இருந்த சிங்கள இனவெறி இன்றும் அதே அளவில் உள்ளதா ? யாழ் நகர் சிங்கள ஆட்சியில் தான் 1995இல் இருந்து உள்ளது. அமைதியின் போது மனித உரிமை மீரல்கள் எந்த அளவு இருந்தன ? முழு அமைதி
    திரும்பி, சமாதான்ம ஏற்பட்டால் (ஈழம் அமையாமல்), புலிகள் போரட்டத்தை
    கைவிட்டால் என்ன நடக்கும் ? சிங்கள அரசு தமிழர்களை எப்படி நடத்தும் ?

    6. 1983 கலவரம் போல் மீண்டும் வர வாய்ப்பில்லை. அமைதி
    தொடர்ந்திருந்தால் ?

    7.கருணா பிரிந்த போது கிழக்கில் இருந்தா மொத்த புலிகளும் ஏன் அவருடன் சேர்ந்தனர் ? புலி தலைமை மீது அவர்களின் குற்றச்சாட்டுகள் ஆதரமற்றதா ? பல
    ஆண்டுகள் இயக்க்தில் இருந்து போரடியவர்கள்
    ஏன் பிரிந்தனர் ? அனைவருமே துரோகிகளா ?

    8. பெரும்பான்மையான தமிழர்கள் போர் நிறுத்ததை விரும்புவாதாகவே
    தோன்றுகிறது.

    மேலும்...

    ReplyDelete
  23. //நான் ஈழப்பிரச்சனை பற்றிய பிரச்சாரப்படம் எடுக்க வேணும் என்று சொல்லவில்லை. சங்கரபாண்டிக்கு, சற்றுமுன் அளித்த பின்னூட்டத்தில் நான் என்ன சொல்ல முயற்சி செய்கிறேன் என்று எழுதியிருக்கிறேன்.//

    உங்கள் பின்னூட்டம் படித்தேன் பிரகாஷ். உணர்விருந்தால் எதன் வாயிலாகவாவது வெளிப்பட்டு விடுமே என்று நீங்கள் சொன்னதற்கு பதிலாகத்தான் காற்றுக்கென்ன வேலி உதாரணத்தை சொல்லியிருந்தேன். ஈழம் தொடர்பாக எண்ணங்களை வெளிப்படையாக சொல்வதற்க்கு பல்வேறு சிரமங்களை தாண்ட வேண்டியிருக்கிறது இந்திய ஜனநாயக நாட்டில். இங்கு வெளிப்படுத்தபடும் உணர்வுகளை தேசபக்தியோடு முடிச்சுபோடுவதுதான் சிக்கல்.

    ReplyDelete
  24. //. கதைக் களன், கரு, சூழ்நிலை, பெயர்கள், ஈழத்தமிழ் டயலக்ட், என்று புனைவுகளின் எந்த அம்சத்திலும் தமிழகத் தமிழனுக்கு ஈழத்தைப் பற்றி நினைவே வருவதில்லையே என்கிற உளவியலின் பின்னணியை யோசிக்க முயன்றேன். //

    Cinema - Kannathil Muthamittal. Following Rajiv Gandhi Assasination, I was someone who regarded LTTE as Terrorist. But the movie and especially the song "vidai jodu engal thaayae" was a slap in the cheek for us. I find that many of the readers regard Kannathil muthamittal as "far from truth" [ I have not seen Kaatrukena Veli :-( or Kutrapathrikai !!! ].. but for middle class, college going, unruffled guys like us, Kannathil Muthamittal was an eye opener.

    Cinema - Thenali

    Novel - One novel I remember came in Ananda Vikatan [the same magazine in which Gnani writes :)]
    in 2003 - it was about a srilankan tamil woman working as a house maid who commits suicide - It was a touching story. Also at the same time(starting in March 2003) , Vikatan had another series by Kaviko Abdul Rahman, which proved with facts (and not just emotions) the Tamil Problem. One of the fact was the stamp issued by Srilankan Government which potrayed a Tamil Women Welcoming the Srilankan King. While the Srilanka govt wanted to potray Singalese and Kings and tamilians as servants, it was pointed out that the stamp proves that Tamilians (who were there first) welcomed Singalese (who came later). The stamp was quitely withdrawm
    Abdul Rahman also gave proves telling the origin of the word singalese etc

    Why did not Vikatan make that series a book form is for every one to guess
    ----
    Prakash is right and wrong
    Right : I do agree that we (middle class) hardly discuss Eelam affairs as frequent as Iraq or Tehelka.
    Wrong : But it does not mean that we do not have an opinion on that......

    The reason why many do not talk in open about this issue is for the simple reason that you can be called as a terrorist and put in jail and you do not have any one to bail you out. Bitter, but true.

    I was in a residential training on the day after the first LTTE air strike earlier this year. On the previous days, we discussed a lot of affairs - from nameetha to natwar singh, but not eelam. But when the news or airstrike was told on TV, the first comment I heard அடிச்சோம்ல meaning we have hit(not அடிச்சான்ல - they have hit). I could feel the mood over the next few hours. The next two hours.

    While Prakash may be right in telling that we do not discuss Eelam as often as we do, he is wrong in telling that Tamilians do not have an opinion.

    The silence is not due to indifference, but due to fear.

    Anony fearing POTA and TADA !!!

    ReplyDelete
  25. அன்பான இந்திய மக்களே. ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். இராசீவ் காந்தியை கொலை செய்த பின்னர் தான் புலிகளுக்கு தமிழகத்தில் ஆதரவு குறைந்தது என்று கூவிவரும் ராம் ராமசாமிகளின் கூச்சலில் யாரும் ஒன்றை கேக்க மறந்து விட்டிர்கள். ஏன் இராசீவ் காந்தியை கொல்லவேண்டி வந்தது என்று. இந்திய இராணுவம் யாழ் நகரில் ஒரு பெண்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின் இராணுவ டாங் கீழ் போட்டு நசித்துக் கொன்றது. இதை நான் பார்த்த சாட்சி. இதை விட சல்லி கற்களை வாயில் போட்டு இரண்டு கன்னத்திலும் அடிவாங்கிய இளைஞன் கற்களோடு பற்களையும் எங்கள் பைப் தன்னியில் கழுவியதும் கால் பெரு விரலில் நைலோன் கயிற்றால் கட்டி தலைகீழாக தொங்க விட்டு அடித்து சித்திரவதை செய்ததும் ( 2 அடியில் நைலோன் கயிறு சதையை வெட்டி பெருவிரல் எலும்பில் இறுக்கிய படி தொங்கும்.) இவை அங்கு நடந்த 1000க் கணக்கான கொடுமைகளில் 11 வயதில் நான் கண்ட காட்சி. (இந்திய ராணுவ கப்டன் சர்மா பொறுப்பாக இருந்த ஆலடி 3 மாடி இராணுவ முகாம். யாழ் பல்கலைக்கு அருகில். ) இதை ஒரு போதும் ரோ உணராது. ஆனால் தமிழன் உணருவான். எங்கள் அப்பா சகோரர்களுக்கு பாட்டா இட்ட பெயர் எல்லாம் இந்திய விடுதலை போராட்ட வீரர்களின் பெயர்) ஆனால் இந்திய இராணுவத்தின் முலம் இராசீவ் நடத்தியது கொடுரம். இராசீவ்வை கொண்டதை மட்டும் கூவிக்கொண்டு திரியும் ராம் போன்றவர்கள் இதை பற்றி வாய் திறக்க மாட்டார்கள். அதைவிட அதை பற்றி தமிழக தமிழர்களுக்கு நினைப்பை கூட அழித்து விட்டார்கள். அவ்வளவு அவர்களின் ஊடக பலம். ஆனால் அவர்களால்் தமிழர்களின் ஆழ் மனதில் ஓடும் தமிழ் உணர்வை அழிக்க முடியாது என்பதை தமிழக தமிழர்கள் உணர்தத்தி வருகிறார்கள்.

    ReplyDelete
  26. பிரகாஷ்,

    இன்னும் பல விளக்கங்களைச் சொல்ல விருப்பம். நாளை வெளியூர் பயணிக்க வேண்டியிருப்பதால் நேரமின்மையால் தவிர்க்கிறேன். ஒன்றே ஒன்றை மட்டும் விளக்கிச் குறிப்பிட விரும்புகிறேன். நான் கேட்டிருந்த சில கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், உங்களைப் புலி எதிர்ப்பாளர் என்று முத்திரை குத்(துகிறார்/திடுவார்)களே என்ற ஒரு அங்கலாய்ப்பையே மீண்டும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.

    நீங்கள் புலி ஆதரவாளன் அல்ல, அதே நேரத்தில் புலி எதிர்ப்பாளனும் அல்ல, புலிகளைப் பற்றிய உங்கள் கேள்விகள் ஈழப்பிரச்னையைப் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தவே என்று சொல்கிறீர்கள் என நினைக்கிறேன். நீங்கள் புலி எதிர்ப்பாளர் என்ற சட்டகத்தில் உங்களை அடைப்பதெல்லாம் என் நோக்கமல்ல. நீங்கள் புலி எதிர்ப்பாளராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நண்பராகவே இருக்கலாம். அடுத்த முறையும் சென்னை வரும்போது சந்தித்துப் பேசலாம். பாஸ்டன் போனால் பாபாவையும் சந்தித்துப் பேசலாம். அதுவல்ல எனக்குப் பிரச்னை.

    நீங்கள் சொல்வதில் சில நியாயங்கள் இருக்கிறது என்றால் அமைதியாகப் படித்து விட்டுச் சென்று விடுவேன். அந்த நியாயங்களின் தாக்கம் என்னுள் இருந்து கொண்டிருக்கும். அதன் மூலம் புலிகளைப் பற்றிய சந்தேகமும் இருந்து கொண்டே இருக்கும். பதிவுலகில் உள்ள புலி ஆதரவாளர்கள் புலிகளை குறை சொல்ல அனுமதிப்பதில்லை என்று மாலன் ஒரு மாதத்துக்கு முன்பு எழுதியது போலவே நீங்களும் சொல்கிறீர்கள். அவருக்குச் சொன்ன பதிலையே உங்களுக்கும் சொல்கிறேன். புலிகளைக் கடுமையாக விமர்சித்தும் தொடர்ந்து சில பதிவுகளில் எழுதப்பட்டு வருகின்றன. இரயாகரனின் பதிவுகளில் கடுமையான விமர்சனம் வைக்கப் படுகின்றது. மயூரனின் பதிவுகளில் புலிகள் செய்யும் பிழைகளை சுட்டிக் காட்டி எழுதிவந்திருக்கிறார். புலிகள் மீது அவர்கள் வைக்கும் விமர்சனத்தை நான் தவறாமல் படித்து வருகிறேன். வேறு பலரும் கூட படித்து வரலாம். ஏன்? அவர்களின் விமர்சனம் புலிகள் மேல் மட்டுமல்ல. அவர்கள் இலங்கை - இந்திய அரசுகளை விமர்சித்திருக்கின்றனர். துரோக இயக்கங்களையும் விமர்சித்து வருகின்றனர். அவர்கள் ஈழத்தில் களத்தில் இருந்து வரும் உண்மையான பல தகவல்களை வைத்து எழுதுகிறார்கள். பாபாவும், நீங்களும், இன்னும் வேறு சிலரும் போல் எடுத்தவுடனே புலிகள் தான் எல்லாப் பிரச்னைக்கும் ஆரம்பம், அதனால் ஈழப்பிரச்னையைப் பற்றிய புரிதலை அங்கிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்று எழுதுவதில்லை. இந்தியாவில் அரசிலிருந்து பத்திரிகைகள் வரை ஈழப்பிரச்னையில் செய்து வரும் குற்றங்களெல்லாம் உங்களுக்குத் தெரியவே வராது. ஏன் ஈழப்பிரச்னை பற்றிய புரிதல் உங்களுக்கு அங்கிருந்து ஆரம்பிக்க மறுக்கிறது?

    உங்களைப் புலி எதிர்ப்பாளர் என்று முத்திரை குத்துவதை நினைத்து இவ்வளவு சங்கடப்படுகிறீர்களே. புலிகள் இயக்கத்தை ஆதரித்து அல்ல, வெறுமனே ஈழத்தமிழர்களின் துக்க நிகழ்வுகளில் பங்கு கொள்வதைக் கூட பயங்கரவாதம் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையில் தள்ளப் படுபவர்களைப் பற்றி கொஞ்சம் நினைத்ததுண்டா? வலைப்பதிவுகளில் கருத்து விவாதம் செய்வதற்கே என் போன்றவர்களை சிறையில் தள்ள வேண்டும், களி தின்ன வைக்க வேண்டும் என்றெல்லாம் பதிவுகளும் , பின்னூட்டங்களும் போட்டு வரும் அனானிகளையும், அடையாளங்களையும் நினைத்து நாங்கள் எப்படியெல்லாம் வருத்தப் படவேண்டும்?

    அவ்வளவு ஏன், கடந்த ஜூலை மாதம், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை மாநாட்டில் ஒரு பட்டி மன்றம் நடை பெற்றது. அதன் பொருள் – “ புலம் பெயர்ந்த தமிழர்கள் அனுபவிப்பது இன்பமா அல்லது இன்னலா” என்பது. நடுவர் உள்ளிட்ட ஏழு பேரில் ஒருவர் கடைசி நாள் அன்று வராததால் கனடாவிலிருந்து வந்திருந்த ஈழத்தமிழ் மாணவி ஒருவர் பேச முன் வந்தார். அவர் ஒருவரைத்தவிர மற்ற அனைவரும் தமிழ்நாட்டுத்தமிழர்கள், அவர்களெல்லாரும் பொதுவான பிரச்னைகளை ஒப்பிட்டுப் பேசினார்கள். அவர்களில் ஒரிருவர் பட்டிமன்றத்தை நகைச்சுவையாக இட்டுச் செல்ல நினைத்து அங்கு விடுதிகளில் சாம்பாருடன் சட்னியும் உண்டு, இங்கு நல்ல சட்னி கிடைக்காது என்ற அளவில் பேசிக் கொண்டிருந்தார்கள். ஈழத்தமிழ் மாணவி மட்டும் தன்னுடைய மற்ற பள்ளித்தோழிகள் ஈழத்தில் என்னவெல்லாம் இன்னல்களை அனுபவிக்கிறார்கள். அவர்களைக் காட்டிலும் தான் இங்கு இன்பமாகவே இருக்கிறேன் என்று பேசினார். ஒரு இடத்தில் கூட இயக்கங்கள் பற்றியோ, தங்கள் விடுதலை பற்றியோ கூடப் பேசவில்லை. தமிழ்நாட்டிலிருந்து தூது அனுப்பப்பட்ட ஒரு பத்திரிகையாளர் இதைக் கண்டு பொறுக்காமல் மாநாட்டுக்கு வந்திருந்த தமிழகத் தமிழர்களிடம் பின்விளைவுகள் என்னவென்று பயங்காட்டிச் சென்றிருக்கிறார். வைக்கோவை திமுகவிலிருந்து வெளியேற்றும் தறுவாயில் அவரையும், கலைஞரையும் பேட்டி கண்டு சிண்டு முடிந்த இரண்டு பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர்.

    கடந்த வாரம் சனிக்கிழமையன்று நியூஜெர்ஸி தமிழ்ச் சங்க நிகழ்ச்சி ஒன்றில் போரில் மடிந்த ஈழத்தமிழர்களுக்காக இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்த மறுக்கப் பட்டிருக்கிறார்கள். முதலில் சம்மதித்த ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் பின்னால் சில மிரட்டல்களுக்குப் பயந்து நமக்கேன் வம்பென்று இருந்து விட்டார் என்று கேள்விப்பட்டேன்.

    ஐம்பது ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான உயிர்களை பல்வித வன்முறைகளில் இழந்து, சிதறு தேங்காயாக உலகெங்கும் தெறித்து விழுந்து, எஞ்சியிருக்கும் தம் வலுவை மட்டுமே நம்பி, எந்த அரசின் தயவுமில்லாமல் தங்கள் விடுதலையை மீட்டத் துடிக்கும் ஒரு இனத்துக்கு நாம் அளிக்கும் மனிதாபிமான (சக தமிழனென்று சொல்லவே வேண்டாம்) உதவி இதுதான். இன்னும் நமக்கு பிரச்னையின் ஆரம்பமே புரியவேயில்லையே )-:

    நன்றி – சொ. சங்கரபாண்டி

    ReplyDelete
  27. கில்லி சார்!

    //மக்களின் மனங்களை மேயும் அளவுக்கு எல்லாம் என்கிட்டே பவர் அல்ல. மக்கள் எந்த எந்த இடத்தில் எல்லாம் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்களோ, அதை ஓரளவுக்குக் கவனித்ததால் தான் அப்படிப்பட்ட அபிப்ராயத்துக்கு வர முடிந்தது. இது குறைபட்ட பார்வையாக இருக்கலாம் என்பதை உணர்ந்தே இருக்கிறேன்.//

    இந்த தொனி முந்தைய பின்னூட்டத்தில் இருந்திருந்தால் பிரச்சினை இல்லை. நான் பாட்டுக்கு என் வழியை பார்த்துக் கொண்டு போயிருந்திருப்பேன் :-)

    //ஆமாம். அது 87 இலே வந்தது. 97 இலேயோ, 2007 இலேயோ அந்த மாதிரி எல்லாம் எடுக்க முடியாது. முத்துவால இப்ப நடிக்க முடியாதுங்கறதை மட்டும் சொல்லலை :-)//

    உண்மையே, படம் வெளிவந்திருக்காது. ஆனாலும் கண்ணம்மா, கண்ணம்மான்னு ஒரு படம் வந்தது. அந்தப் படம் குறித்து தேர்தல் நேரத்தில் ஜெயா டிவியில் ஏதோ பத்து நாளைக்கு தொடர்ந்து "கலைஞரின் கைங்கர்யம்"னு ஆவணப்படம் ஒளிபரப்பப் பட்டது. சாதாரண கண்ணம்மா எடுத்ததுக்கே இந்த நிலைன்னா, மறுபடியும் வீரன்வேலுத்தம்பி எடுத்தா கலைஞருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தாலும் கிடைக்கும்! :-))))

    //செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை, வாசிக்கிற மக்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தின என்ற குழப்பத்தைத்தான் முன் வைத்தேன்.//

    குழப்பமெல்லாம் இல்லை. தெளிவாகத் தான் பெரும்பான்மையான தமிழர்கள் (கவனிக்க தமிழர்கள், இந்தியர்கள் அல்ல) இருக்கிறார்கள்.

    //தமிழ்மணம் வழியாக என்னுடைய உலகத்தை அமைத்துக் கொள்கிறேன் என்றால், நான் இப்படி எல்லாம் 'பொதுக்கருத்துக்கு' குந்தகம் விளைவிக்கிற மாதிரி பேசுவேனா? :-)//

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 'பொதுக்கருத்து' தமிழ்மணத்திலும் வேறுமாதிரியாக இருந்ததால் தான் என்னைப் போன்ற அல்லக்கைகளும், அடியாள்களும் அடிச்சி ஆட வேண்டியதாக இருக்கிறது. இப்போது வேறு மாதிரியான பொதுக்கருத்தை உருவாக்கியிருக்கிறோம் என்று கருதுவீர்களேயானால் மிக்க மகிழ்ச்சி!!!

    //உண்மை என்னன்னா நான் அது போல இது வரை கேட்டுப் பார்த்ததில்லை.//

    ஒரு வாட்டி கேட்டுப் பாருங்களேன். இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்.


    //அப்ப, கைதாகி உள்ளே போகக் கூடிய தெம்பு இருக்கிறவன் தான் ஈழப்பிரச்சனை பற்றிப் பேச முடியும், சோப்ளாங்கிங்க எல்லாம் சும்மா இருக்கணும் அர்த்தம் வருதே, பரவாயில்லையா? :-).//

    உண்மையே. நானும் கூட சோப்ளாங்கி லிஸ்டிலேயே வருவேன்.

    //நன்றி :-)//

    நன்றிக்கு நன்றி!

    ReplyDelete
  28. வெண்காட்டான்,

    Rajiv was assinated by LTTE who (wrongly) feared that if he becames PM agian in 1991, he will send back the IPKF again to Sri Lanka. IPKF (and there was too much atrocities commited by it)
    was recalled by V.P.Singh regime in 1990.

    Rajiv was naive and fell for the machinations of Jayawardane, whereas Indira Gandhi was much more smarter and would have never fallen for such cunningness.(with or without RAW adivce). IPKF was bidden to do the dirty work of Sri Lankan Army and India paid a bitter price for Rajiv's blunder.

    It was argued at that time that if instead of Tamils, if Malyalees or other n.indina lingual group was in Eelam instead of Tamils / or if there was a sizeble brahmin population in Jaffna with a presence in LTTE, then the attitude and approach of Indian establishment would be very different....

    ReplyDelete
  29. //7.கருணா பிரிந்த போது கிழக்கில் இருந்தா மொத்த புலிகளும் ஏன் அவருடன் சேர்ந்தனர் ? புலி தலைமை மீது அவர்களின் குற்றச்சாட்டுகள் ஆதரமற்றதா ? //

    அதியமான்,
    இப்படியான பகிடிகளை எங்கிருந்து அறிந்தீர்கள்?
    என்னோடு ஐயாயிரம் பேர் இருக்கிறார்கள் என ஓடித்தப்ப முன்பு கருணா அறிக்கை விட்டதை வைத்தா? கருணாவுக்குப்பின்னால்தான் அனைவரும் நிற்கிறார்கள் என இந்திய - உலக பத்திரிகைகளும் ஊடகங்களும் கதையெழுதியதை வைத்தா?

    ஐயாயிரமென்ன? ஐநூறு புலிகள் கருணாவை ஆதரித்திருந்தாலே அந்நேரத்தில் கிழக்கு மாகாணத்தை விடுதலைப்புலிகளால் சுலபமாக மீட்டிருக்க முடியாது. வெறும் அறுவரின் மரணத்துடன் தான் கருணா கிழக்கைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார். அவரும் அவரது நாற்படையும் தப்பிச்செல்லத் தேவைப்பட்டது வெறுமனே இரண்டு பஜிரோ வாகனங்கள்தாம்.

    ReplyDelete