Saturday, January 19, 2008

அப்துல் கலாம் ஆவணப்படம், விழுதுகள் 99

21 ஜனவரி 2008, திங்கள் கிழமையன்று சென்னை நாரத கான சபாவில் நடக்கும் ஒரு விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்துகொள்கிறார். இது தொடர்பாக ஒரு செய்தி வெளியீடு (குறைந்தபட்சம் நான் படித்த ஒரு செய்தித்தாளில்) வெளியாகியிருந்தது. ஆனால் பலர் பார்வைக்கு வந்திருக்குமா என்று தெரியவில்லை.

சிறகு அமைப்பு (SIRAKU - Skills and Income for Rural Aspirants and Knowledge Unlimited - Foundation) என்ற அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் முப்பத்தைந்து வயதுக்கு உட்பட்ட 99 சமூக முனைவர்கள் (Social Entrepreneurs) சமூக சேவைக்காக உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். இந்த 99 பேருக்கும் சிறகு அமைப்பு, மாதம் ரூ. 5,000 வீதம் இரண்டு வருடங்களுக்கு உதவித்தொகை கொடுக்கும். இது ஒருவிதமான ஃபெலோஷிப் போல. இதனால் தங்களது வாழ்க்கையைப் பற்றி அவ்வளவாகக் கவலைப்படாமல், சமூக சேவையில் ஈடுபட அவர்களுக்கு நல்ல வாய்ப்பை அளிக்கிறது இந்தத் திட்டம்.

இந்த சமூக சேவகர்களின் சேவையால் என்ன மாற்றம் வருகிறது என்பதைக் கண்காணிப்பது, தேவைப்பட்டால், அவர்களுக்கு வழிகாட்டுவது போன்றவற்றை CIOSA என்ற நிறுவனம் செய்யும்.

இது தொடர்பான செய்தி வெளியீடு.

21 ஜனவரி 2008 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 99 பேரும் அப்துல் கலாம் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொள்கின்றனர். இந்த விழாவின்போது 'மின்வெளி' உருவாக்கிய அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு ஆவணப்படம் ஒன்றும் வெளியாகிறது. இது ஆங்கிலத்தில் உள்ளது. அடுத்த 10-15 நாள்களுக்குள்ளாக தமிழிலும் இந்த ஆவணப்பட சிடி வெளியாகும். (இந்த ஆவணப்பட சிடிக்களை விற்பனை செய்யும் உரிமையை நியூ ஹொரைசன் மீடியா நிறுவனம் பெற்றுள்ளது.)

அதையடுத்து அப்துல் கலாம் சுமார் 1200 பள்ளிக் குழந்தைகளுடன் பேசுவார்.

நிகழ்ச்சி மதியம் 2.00 மணி முதல் 4.00 மணிவரை நடைபெறுகிறது.

இடப்பற்றாக்குறை காரணமாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, 'அழைப்பிதழ்' உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

No comments:

Post a Comment