Sunday, March 30, 2008

தொழில்முனைவர்கள் 101

©The Hindu


வெள்ளியன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில் தமிழகத்தின் தொழில்முனைவர்கள் 101 பேரைப் பற்றிய காஃபி டேபிள் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது. (புத்தகத்தை மேலே உள்ள படத்தில் காணலாம்.) Confederation of Indian Industry (CII) தமிழகத்தில் கடந்த பல வருடங்களில் முதல் தலைமுறை தொழில்முனைவர்கள் எப்படி உருவானார்கள் என்ற வரலாற்றை ஒரு புத்தகமாகக் கொண்டுவர விரும்பியது. அதற்கென சி.ஐ.ஐ ஒரு குழுவை உருவாக்கி, தமிழகம் முழுவதிலுமாக சில தொழில்முனைவர்களைத் தேர்ந்தெடுத்தது.

இந்தப் புத்தகத்தை உருவாக்கும் பொறுப்பு நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்திடம் கொடுக்கப்பட்டது. சி.ஐ.ஐ குறிப்பிட்டிருந்த 101 பேரையும் நேர்முகம் செய்து, அவர்கள் கொடுத்துள்ள தகவல்களின் அடிப்படையில் அவர்களைப் பற்றி சுமார் 850-1000 வார்த்தைகளுக்குள் எழுதி, அவர்களது வண்ணப்படங்களைச் சேர்த்து, அவற்றைக் கோர்த்து, ஒரு மழமழ தாள் (ஆங்கிலப்) புத்தகமாக மாற்றவேண்டும். இதனை ரெகார்ட் நேரத்தில் செய்துமுடித்தோம். தொழில்முனைவர்கள் அனைவருமே மிகவும் பிசியான ஆசாமிகள். பெரும் நிறுவனங்களின் தலைவர்கள். இவர்களில் ஒரு பகுதியினரைத்தான் நேரில் பார்த்துப் பேச முடிந்தது. பிறருடன் தொலைபேசியில் அல்லது மின்னஞ்சலில் மட்டுமே தொடர்புகொள்ள முடிந்தது.

நேர நெருக்கடிதான் பிரதானம். புத்தகத்தை அச்சிட்டு உருவாக்குவதற்கு குறிப்பிட்ட நாள்களாவது தேவைப்படும். ஹார்ட்பவுண்ட் புத்தகம். அனைத்துப் பக்கங்களும் கலர். இவற்றை பிரிண்ட் செய்து, பைண்டிங் செய்ய நேரம் பிடிக்கும் செயல். வேறு பல நெருக்கடிகளும் இருந்தன. இருந்தும் குறித்த நேரத்துக்குள் முடிக்க முடிந்தது.

இந்த 101 பேர்களின் வாழ்க்கையுமே சுவாரசியம்தான். என்றாலும் இதில் சிலர் தனித்துத் தெரிகிறார்கள். நான் சற்றும் அறிந்திராத பல தொழில்முனைவர்கள் இதில் தென்பட்டார்கள். தொழில்முனைவர்கள் என்றாலே அம்பானி, நாராயண மூர்த்தி, லக்ஷ்மி மிட்டல், ஜே.ஆர்.டி.டாடா என்றுதான் இருக்கவேண்டும் என்றில்லை. சொல்லப்போனால் எந்தப் பின்னணியும் இல்லாமல் உழைப்பு ஒன்றைமட்டுமே பிரதானமாகக் கொண்டு, ரூ. 5 லட்சத்துக்குள்ளாக மட்டுமே முதலைக் கையில் கொண்டு, இன்று ரூ. 50 கோடிமுதல் ரூ. 2000 கோடிவரை பல தமிழக தொழில்முனைவர்களது தொழில் வளர்ந்துள்ளது.

இந்தப் புத்தகம் கடைகளில் விற்பனைக்குக் கிடைக்கப்போவதில்லை. சி.ஐ.ஐ தன்னுடைய உறுப்பினர்கள், ஸ்பான்சர்கள், இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் ஆகியோருக்கு மட்டுமே வழங்க குறைவான பிரதிகளே உருவாக்கியுள்ளது. தமிழக முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருக்குக் கொடுக்க என்று கடைசி நேரத்தில் சில பிரதிகளை தமிழில் செய்து கொடுத்திருந்தோம். எனவே அதுவும் வெளியாகப் போவதில்லை.

ஆனால் இதில் பலருடைய கதைகள் மிகவும் சுவாரசியமானவை. இதிலிருந்து சிலவற்றை எனது வலைப்பதிவில் கொடுக்க முயற்சி செய்கிறேன். இதிருந்து சில பகுதிகளையாவது ஒன்றுசேர்த்து, ஒரு பேப்பர்பேக் புத்தகத்தை வெளியிட அனுமதி கிடைக்குமா என்று பார்க்கிறேன்.

1 comment:

  1. //இதில் பலருடைய கதைகள் மிகவும் சுவாரசியமானவை. இதிலிருந்து சிலவற்றை எனது வலைப்பதிவில் கொடுக்க முயற்சி செய்கிறேன்.//

    ReplyDelete