Monday, March 03, 2008

கிரிக்கெட்: இந்தியா - ஆஸ்திரேலியா விவகாரங்கள்

இப்போது நடக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஆட்டங்களின்போது ஏற்பட்டுவரும் விவாதங்கள், பிரச்னைகள் அனைத்துமே ஓரளவுக்குப் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களுக்கு இடையே இதற்குமுன் இருந்த மின் அதிர்வுகள் இப்போது இல்லை. அதேபோல இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆட்டங்களிலும் இப்போது கடும் போட்டி இருப்பதில்லை. இடையில் சில காலம் மட்டுமே இருந்த ஆஸ்திரேலியா - நியூசிலாந்து ஆட்டங்களின் சுவாரசியமும் இப்போது இல்லை.

ஆனால் இப்போது இந்தியா - ஆஸ்திரேலியா ஆட்டங்களில் மட்டுமே கடுமையான போட்டி நிலவுகிறது. தங்களை சாம்பியன் என்று கருதிவரும் ஆஸ்திரேலிய மீடியா, விசிறிகள், விளையாட்டு வீரர்கள் அனைவருமே இதனை எதிர்பார்க்காததால் தங்களது கோபத்தை எதிரணியின்மீது திருப்புகிறார்கள். இந்திய அணி வீரர்களுக்கு சொஃபிஸ்டிகேஷன் பத்தாது. ஆனால் போட்டி மனப்பான்மை (காம்பெடிடிவ் ஸ்பிரிட்) ஜாஸ்தி. கங்குலி காலத்திலிருந்து தொடர்வது இது.

அதன் விளைவாகவே இன்று நாம் பார்க்கும் பிரச்னைகள், விவாதங்கள் அனைத்துமே வருகின்றன.

நேற்று நடந்த போட்டியில் இந்தியா அபாரமாக விளையாடியது. அதனை அடுத்து, ஹர்பஜன் சிங்மீது மற்றுமொரு குற்றச்சாட்டு. ஏற்கெனவே ஹர்பஜன் சிங், இஷாந்த் ஷர்மா ஆகியோர்மீது ஆட்ட நடுவர் தண்டனை விதித்துள்ளார். இதில் ஹர்பஜன்மீது இனவெறி என்ற குற்றச்சாட்டு அபத்தமானது. ஆஸ்திரேலிய வீரர்கள் - ஹெய்டன், கிளார்க், பாண்டிங், சிமான்ஸ் ஆகியோர் இந்திய வீரர்களிடம் மோசமாக நடந்துகொண்டுள்ளனர். வாய்க்கு வந்தபடி பேசியுள்ளனர். இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இவற்றை இனவெறி என்ற கட்டத்துக்குள் இந்தியா அடைக்கவில்லை. ஆஸ்திரேலிய மீடியா இந்த அபத்தத்துக்குள் மாட்டிக்கொள்ளக்கூடாது.

ஆஸ்திரேலிய அணியில் ஒரேயொரு கறுப்பினத்தவர் விளையாடுகிறார். அவரும் இங்கிலாந்தில் வளர்ந்தவர். ஆஸ்திரேலியப் பழங்குடியினர் சமூகத்தவர், பிற நாடுகளிலிருந்து வந்து ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றவர் என்று ஒருவர்கூட சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியதில்லை. சில வருடங்களுக்குமுன் ரிச்சர்ட் சீ-க்வீ என்ற சீன (ஹாங் காங்?) வம்சாவளியினர் ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அவ்வளவுதான். இதுதான் ஆஸ்திரேலியாவின் சமதர்ம, சமத்துவ, இன அமைதிக் கொள்கை.

அதைப்பற்றியெல்லாம் கேள்வி கேட்காத ஆஸ்திரேலிய மீடியா, கிடைத்த ஒரே வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்று சிமான்ஸுக்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது. கறுப்போ/வெள்ளையோ, சிமான்ஸ், சர்வதேச கிரிக்கெட் ஆட்டத்தில் சதா வாயால் பேசி எதிரணி வீரர்களைத் தாக்கும் ஒரு பேர்வழி. ஹெய்டன், நேற்றைக்கு விளையாட வந்துள்ள மைக்கேல் கிளார்க், அணித்தலைவர் பாண்டிங் என்று ஒருவர்கூட 'வாய்வார்த்தை' விஷயத்தில் நேர்மையான ஆட்டக்காரரில்லை. இதில் இவர்கள் அடுத்த அணி ஆட்டக்காரர்களைப் பற்றிக் குறைசொல்வது மகா அபத்தம்.

***

இந்தியா அடுத்த ஆட்டத்திலும் வெற்றிபெற்று, காமன்வெல்த் கோப்பையைக் கைப்பற்றுவதுதான் ஆஸ்திரேலிய மீடியாவுக்குக் கொடுக்கும் சரியான பதிலடியாக இருக்கும்.

No comments:

Post a Comment