Saturday, May 31, 2008

குஜ்ஜார் இட ஒதுக்கீட்டுப் போராட்டம்

இன்று தி ஹிந்துவில் நீனா வியாஸ், குஜ்ஜார்களது போராட்டம் பற்றி ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலிருந்து பழங்குடியினர் பட்டியலுக்குச் செல்வதால் குஜ்ஜார்களுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்று விளக்கியுள்ளார்.

ராஜஸ்தானில் குஜ்ஜார்கள் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்தனர். ஜாட்கள் அந்தப் பட்டியலில் இல்லை; பொதுப்பட்டியலில் இருந்தனர். அரசியல் ஆதாயங்களுக்காக, பாரதீய ஜனதா கட்சி, ஜாட்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. அதனால் குஜ்ஜார்கள் தங்களுக்கான இடங்கள் குறைந்துவிடும் என்று நினைத்தனர். நீனா வியாஸின் கட்டுரையைப் படித்தால், அதில் பிற்படுத்தப்போருக்கான இட ஒதுக்கீடு முற்றிலுமாக நிரப்பப்படவில்லை, நிறைய இடங்கள் பாக்கியுள்ளன என்கிறார்.
As for the 27 per cent OBC quota, on average only 4-5 per cent of the slot was filled. This means there is a very large unused OBC quota, which the Gujjars could use to their advantage as they are already in this category.
ஆனால், குஜ்ஜார்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக வசுந்தரா ராஜே சிந்தியா (பாஜக) வாக்குறுதி அளித்தார். மீண்டும் வியாஸ்:
The figures collected by the Ministry of Personnel, Public Grievances and Pensions are revealing. As on January 1, 2005, the STs filled 4.3 per cent of a 7.5 per cent quota of jobs in the ‘A’ category’ that includes civil service officers and superintendents of police. The OBCs managed only 4.7 per cent of the 27 per cent quota, clearly establishing that there were many more vacancies here if suitable candidates presented themselves.
ஆனால் புள்ளிவிவரம் எப்படி இருந்தாலும், குஜ்ஜார்கள் பழங்குடியினர் அந்தஸ்து பெறுவதிலேயே ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால் அங்கே ஏற்கெனவே இருக்கும் 'மீனாக்கள்' இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகச் சொல்கின்றனர்.

மொத்தத்தில் இட ஒதுக்கீட்டைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல், அதிலிருந்து பலன்களை எப்படிப் பெறுவது என்பதை அறிந்துகொள்ளாமல் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனைச் சரியாகக் கையாளாத பாரதீய ஜனதா கட்சி, இந்த நிலைக்கான முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும்.

இதற்கிடையில் குஜ்ஜார் போராட்டம், வன்னியர் போராட்டத்தைப் போன்றே அமைந்துள்ளது வருத்தம் தரத்தக்கது. பிற்படுத்தப்பட்டோருக்கான 50% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்டு வன்னியர்கள் தமிழகத்தில் போராடியது இன்று பலருக்கு மறந்துபோயிருக்கலாம். மரங்களை வெட்டி நடுச்சாலையில் போடுதல், பேருந்துகளைக் கொளுத்துதல், சாலைகளுக்கு நடுவில் குழிதோண்டுதல், பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற அசிங்கமான முறைகளில் அந்தப் போராட்டம் அமைந்தது. அதனை ஏற்காத அன்றைய தமிழக அரசு, காவல்துறை அடக்குமுறையை ஏவிவிட்டது. ஆனால் கடுமையான போராட்டத்துக்குப் பிறகு, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு ஏற்படுத்தப்பட்டு, அதற்கு 20%-ம் உள் ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது.

இன்று குஜ்ஜார்கள் ரயில் தண்டவாளங்களைப் பெயர்த்தெடுக்கிறார்கள். சாலைப் போக்குவரத்தை பாதிக்கிறார்கள். பொதுச்சொத்து பற்றி கவலைப்படுவதில்லை. தாங்கள் எதற்காகப் போராடுகிறோம் என்பதைப் பிற மக்களைப் புரிந்துகொள்ளவைக்கவும் முயற்சி செய்வதில்லை. ‘எனக்கு வேண்டும்; அதனால் தா' அல்லது ‘எனக்குத் தருகிறேன் என்று சொல்லி வாக்கு கொடுத்துவிட்டாய்; எனவே தா' என்றே பேசுகிறார்கள். வன்னியர்களது போராட்டமும் இப்படித்தான் இருந்தது.

இது ஆரோக்கியமான முறை அன்று. முதலில் குஜ்ஜார்கள் தங்களுக்கான தேவை பழங்குடியினர் என்ற அங்கீகாரமா அல்லது வேறு ஏதேனுமா என்று பார்க்கவேண்டும். பழங்குடியினர் என்பதுதான் என்றால் அதனை குடியாட்சி முறைப்படி பெறுவதில் கவனம் செலுத்தவேண்டும். ஆளுக்காள் தண்டவாளத்தைப் பெயர்த்தால் அந்தப் பகுதி வளர்ச்சி பெறாத காட்டுப்பகுதியாகத்தான் இருக்கும்.

இட ஒதுக்கீட்டின் ஆதரவாளர்களுக்கு இப்போது நடக்கும் போராட்டம் வருத்தம் தரவைக்கும் ஒன்று.

புது செல்பேசி

கேட்ஜெட் விஷயங்களில் நான் அவ்வளவாக நேரம், பணம் செலவு செய்வதில்லை. ஆனால் சில தேவைகள் கருதி நேற்று ஒரு முதலீட்டைச் செய்தேன்.

நோக்கியா E51 என்ற மாடலை வாங்கினேன். இந்திய விலைப்படி, சுபிக்‌ஷாவில் ரூ. 11,256 ஆனது. இந்த செல்பேசியில் GPRS, Bluetooth தவிர Wifi இணைப்பு உள்ளது. அலுவலகம், வீடு போன்ற இடங்களில் வயர்லெஸ் ரவுட்டர் இருந்தால், இந்த செல்பேசியால் அத்துடன் உரையாடமுடியும். இதனால் நல்ல வேகத்திலான இணைய இணைப்பு கிடைக்கும். இன்றைய இந்திய GPRS இணைப்புகள் வேகமற்றவையே.

வலைப்பதிவுகள் என்பவை வெறும் எழுத்துக்களால் ஆனவை மட்டுமல்ல. நிறுத்தி நிதானித்து எழுதுபவை; அங்கும் இங்கும் பார்க்கும் விஷயங்களைப் பற்றி ஓரிரு வாக்கியங்கள்; ஒரு படம், ஒரு ஒலித்துண்டு, ஒரு அசைபடத்துண்டு.

ஒரு நிகழ்ச்சிக்குப் போகிறீர்கள். அங்கே யார் யார் வந்திருக்கிறார்கள் என்று சொல்ல விரும்புகிறீகள். Twitter-ஐப் பயன்படுத்தலாம். ட்விட்டரில் எழுத SMS, உலாவி வழியாக இணையத்தளம், கூகிள்டாக் போன்ற இடைமுகங்களைப் பயன்படுத்தலாம். இந்தியாவில் வோடாஃபோன், ஏர்டெல் இரண்டிலும் SMS வழியாக இயக்கமுடிவதில்லை. எனவே GPRS வழியாக http://m.twitter.com/ சென்று எழுதலாம்.

ட்விட்டரில் இணையம் அல்லது கூகிள்டாக் வழியாகத் தமிழிலும் எழுதலாம். ஆனால் அப்படி எழுதுவதை தமிழ் படிக்க வசதியில்லாத செல்பேசிகளில் படிக்கமுடியாது. கட்டம் கட்டமாக இருக்கும். எனவே இப்போதைக்கு நான் ஆங்கிலத்தில் மட்டுமே எழுதப்போகிறேன்.

அடுத்து, படங்கள். எங்கோ சாலையில் நடக்கும் ஓர் விபத்தைப் பார்க்கிறீர்கள். அல்லது தெருவோரக் கூட்டத்தில் பேசும் அரசியல்வாதியைப் பார்க்கிறீர்கள். சுவரொட்டியைப் பார்க்கிறீர்கள். உடனடியாக அதனைப் படம் பிடிக்கிறீர்கள். GPRS இணைப்பு உள்ள செல்பேசி வழியாக இந்தப் படத்தை flickr தளத்துக்கு அனுப்பமுடியும். இதனையும் http://m.flickr.com/ என்ற முகவரி வழியாகச் செய்யலாம். செல்பேசிக்கு என்றே ஆப்டிமைஸ் செய்யப்பட்ட தளம்.

ட்விட்டர் குறுஞ்செய்திகள், ஃப்ளிக்கர் படங்கள் ஆகியவற்றை உடனடியாக உங்களது வலைப்பதிவில் காணுமாறு செய்யமுடியும். இந்தத் தளங்களிலேயே இதற்கான உதவிகள் உள்ளன. எனது வலைப்பதிவின் வலது பக்கத்தில் இதைத்தான் நான் செய்திருக்கிறேன்.

அடுத்து ஒலித்துண்டு, அசைபடத்துண்டு. பொதுவாக, இவற்றைப் பிடித்தவுடன் உடனடியாக அனுப்பமுடியுமா என்பது ஒரு கேள்வி. உடனடியாக அனுப்பவேண்டுமா என்பது வேறொரு கேள்வி. இவை அதிக இடம் பிடிப்பவை. நல்ல இணைப்பு இல்லாமல் இவற்றை அனுப்புவது கடினம். மேலும் இவற்றை சற்றே எடிட் செய்யவேண்டியிருக்கலாம். நோக்கியா E51-ல் ஒரு மணி நேரத் துண்டுகளாக ஒலியையும், அசைபடங்களையும் சேமிக்கமுடிகிறது. ஒலிப்பதிவு நன்றாகவே உள்ளது. Wav கோப்பாக சேமிக்கமுடிகிறது. ஆனால் ஒரு நிமிடம் என்பது 1 MB. இந்த ஃபோனில் 512 MB சேமிப்பு அட்டை உள்ளதால், இது பெரிய பிரச்னை இல்லை.

நீண்ட அசைபடப் பதிவு தேவையா என்றும் பார்க்கவேண்டும். செல்பேசி கேமராவில் அசைபடப் பதிவு சுமாராகத்தான் வரும். மிக உயர்ந்த ரக செல்பேசி, ஜூம் கேமரா இருந்தால்தான் நன்றாக இருக்கும். சில முக்கியமான காட்சிகளைப் பிடித்து, அத்துடன் வெறும் படம், ஒலித்துண்டு ஆகியவற்றோடு சேர்த்து ஒரு பதிவுக்குள் கொண்டுவரலாம்.

ஒலி சேமிப்புக்கென பெரு நிறுவனங்கள் நல்ல சேவை எதையும் கொடுப்பதில்லை. நான் archive.org என்ற தளத்தில்தான் எனது நீண்ட ஆடியோ துண்டுகளைச் சேர்க்கிறேன். Wav கோப்புகளை audacity என்ற மென்பொருள் கொண்டு, வேண்டிய மாற்றங்களைச் செய்து, mp3 கோப்புகளாக மாற்றி, ourmedia.org என்ற தளத்தின் வாயிலாக, archive.org-ல் சேர்க்கிறேன். Ourmedia தளத்தில் SpinXpress என்ற மென்பொருள் கிடைக்கும். இதைக்கொண்டு டெஸ்க்டாப்பிலிருந்து நேரடியாக ஒலிப்பதிவுகளை archive.org தளத்துக்கு அனுப்பமுடியும்.

அசைபடங்களைப் பொருத்தமட்டில் Youtube.com எளிதாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு தளம். http://m.youtube.com/ வழியாக செல்பேசிமூலமும் இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். அது பேண்ட்விட்த்தைப் பொருத்தது.

***

தனியாக, பவர்பாயிண்ட் பிரசெண்டேஷன்களை இணையத்தில் கொண்டுவருவதுபற்றி முன்னரே எழுதியிருக்கிறேன். இவற்றையும் சேர்த்துப் பார்த்தால் வலைப்பதிவுகளில் என்னவெல்லாம் செய்யமுடியும் என்று நீங்கள் யூகிக்கலாம்.

***

நோக்கியா E51-ல் (பிற செல்பேசிகளிலும்கூட) fring என்ற சேவையைச் சேர்த்துக்கொள்ளலாம். இதன்மூலம் பல மெசஞ்சர் சேவைகளை இயக்கலாம். ஆனால் இதற்கு நான் பயன்படுத்தியவரை wifi இணைப்பு தேவையாக உள்ளது.

***

இந்தச் சேவைகளை வெறும் விளையாட்டாகப் பயன்படுத்தாமல் உபயோகமாக நிறையச் செய்யமுடியும்.

இதில் எதைப்பற்றியேனும் விரிவாக விளக்கினால் நன்றாக இருக்கும் என்று தோன்றினால், கேளுங்கள். எழுதுகிறேன்.

Wednesday, May 21, 2008

இரு புத்தகங்கள்: சென்னை + இலங்கை

Oxygen Books என்னும் பதிப்பு வாயிலாக இந்த வாரம் நாங்கள் வெளியிட்டிருக்கும் நான்கு புத்தகங்களில் இரண்டு பற்றி இங்கே:

1. Madras: Tracing the Growth of the City since 1639 by KRA Narasiah

சென்னை என்று இன்று நாம் அழைக்கும் நகரத்தின் கடந்த சில நூற்றாண்டு வரலாறு இந்தப் புத்தகத்தில் உள்ளது. நரசய்யா தமிழில் எழுதி பழனியப்பா பிரதர்ஸ் வாயிலாக 2006-ல் வெளியான புத்தகம் 'மதராசபட்டினம்'. இதனை ஆங்கில மொழியாக்கமாக இல்லாமல், நரசய்யாவே மீண்டும் ஆங்கிலத்தில் புதிதாக எழுதியிருக்கிறார். நிறைய திருத்தங்கள், மாற்றங்களுடன் செறிவாக எழுதப்பட்டுள்ளது.

2. Heroes or Villains: Sri Lanka circa 2007 by N Sathiya Moorthy

2006, 2007-ம் வருடங்களில் சென்னை அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் சத்திய மூர்த்தி, இலங்கை அரசு, ராணுவம், விடுதலைப் புலிகள், இந்திய அரசு, தமிழக அரசு, தமிழகக் கட்சிகள், இலங்கைக் கட்சிகள், புலி எதிர்ப்பாளர்கள், மனித உரிமை போன்ற பலவற்றைப் பற்றி கொழும்புவிலிருந்து வெளியாகும் The Daily Mirror பத்திரிகையில் எழுதிய கருத்துப் பத்திகளில் தொகுப்பு.

Saturday, May 17, 2008

90% சாமியார்கள் பொறுக்கிகளே - கேரள அமைச்சர்

கடந்த சில நாள்களாக கேரளத்தில் இருக்கிறேன். இங்கே சந்தோஷ் மாதவன் என்கிற சுவாமி அம்ருதானந்த சைதன்யா என்கிற ‘சாமியார்' வேடம் போட்ட பரதேசி, பணம் திருட்டு, ஏமாற்று, சிறு பெண்களை நாசம் செய்தது, அவர்களை வைத்து ‘பலான படங்கள்' தயாரித்தது ஆகியவற்றில் மாட்டி, இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். இன்று காலை செய்தியின்படி, நெஞ்சுவலி என்று சொல்லி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

கேரள தேவஸ்வம் போர்ட் அமைச்சர் சுதாகரன், 90% சாமியார்கள் (Godmen) பொறுக்கிகள் என்று சொல்லப்போக, உடனே ஒரு பிரச்னை எழுந்துள்ளது. சபரிமலை அர்ச்சகர்கள் பிரதிநிதி ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

90% என்பது சரியான புள்ளிவிவரமாக இல்லாமல் இருக்கலாம். அது 80% ஆகவும் இருக்கலாம்; 99% ஆகவும் இருக்கலாம். ஆனால் கடவுளின் பெயரைச் சொல்லிக்கொண்டு பொறுக்கித்தனம் செய்பவர்களின் எண்ணிக்கை எக்கச்சக்கம் என்பதை தமிழகத்தில் இருக்கும் அனைவரும் அறிவர். கொலை, திருட்டு, நிலம் அபகரிப்பு, பாலியல் வன்முறைகள், அரசியல் விளையாட்டுகள் என்று கடவுளின் அடியார்கள் ஈடுபடுவது எதனால் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

கடவுளின் தீவிர அடியார்களாக, பிரதிநிதிகளாக, பீடாதிபதிகளாக இயங்குபவர்கள்தான் வெகு சீக்கிரமாக கடவுள் நம்பிக்கை இழக்கிறார்கள். சாதாரணனைவிட சங்கராச்சாரிகள்தான் கடவுள் அவநம்பிக்கை அதிகம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள்தான் ‘தீய செயல்கள்' செய்தாலும் தமக்கு ஒன்றுமே ஆவதில்லை என்பதை முதலில் தெரிந்துகொள்பவர்கள். இப்பிறவியில் செய்யும் பாவங்களுக்கு மறுபிறவியில் தண்டனை கிடைக்கும் என்னும் கருத்தாக்கத்தை சீக்கிரமாகத் தூக்கி எறிபவர்களும் அவர்களே. உடனே இப்பிறவியின் சந்தோஷங்களுக்காக வாழ ஆரம்பிக்கிறார்கள். இறைவனடியார் வேடம் சாதாரணர்களை ஏமாற்றத் தோதாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அதற்குப் பிறகு என்ன? சித்து விளையாடல்களில் இறங்கவேண்டியதுதான்.

Saturday, May 10, 2008

NHM Converter Online

ஒரு தமிழ் எழுத்துக் குறியீட்டிலிருந்து இன்னொன்றுக்கு மாற்ற, இணையம் வழியாக இயங்கும் ஒரு சேவையை New Horizon Media நிறுவனம் இன்று அறிமுகம் செய்கிறது. இனி இணையம் வழியாகவே இலவசமாகவே இந்தச் சேவையைப் பயன்படுத்தலாம். வேண்டுமென்றால், இந்த வேலையைச் செய்யும் மென்பொருளைத் தரவிறக்கி, உங்களது கணினியிலிருந்தும் செய்துகொள்ளலாம். அந்த மென்பொருளை முன்பே, New Horizon Media அறிமுகம் செய்திருந்தது.

இந்தச் சேவையைப் பயன்படுத்த நீங்கள் செல்லவேண்டிய முகவரி software.nhm.in என்பது. இந்தத் தளத்தில் Services->NHM Converter என்ற மெனுவைத் தேர்ந்தெடுங்கள்.

நேரடியாக NHM Converter இணையச் சேவையைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் இந்தச் சுட்டியை அழுத்தவேண்டும். இந்த மென்பொருள் சேவையைப் பற்றிய ஒரு பிரசண்டேஷன் இதோ.



இந்தப் புதிய தள டிசைனில், வலைப்பதிவு சேவை சேர்க்கப்பட்டுள்ளது. புது மென்பொருள்கள், சேவைகள் ஆகியவை பற்றிய தகவல்களை நாங்கள் இங்கே அளித்துக்கொண்டே இருப்போம். உங்களது கருத்துகளை இப்பொதைக்கு வலைப்பதிவின் பின்னூட்டங்கள் வாயிலாக நீங்கள் கொடுக்கலாம். விரைவில் Forum ஒன்றும் சேர்க்கப்படும்.

Wednesday, May 07, 2008

Wrist tendonitis

கணினி உபயோகிப்பதில் பல நன்மைகள் இருந்தாலும் சில பிரச்னைகள் இல்லாமல் இல்லை.

எனது இடது மணிக்கட்டில் கடந்த மூன்று நாள்களாக வலி. நான் ஐ.பி.எம்/லெனோவா மடிக்கணினியை (Thinkpad R60) பயன்படுத்துகிறேன். டைப் அடிக்க, இரண்டு கைகளையும் பயன்படுத்துகிறேன். இதில் இடது கை, மடிக்கணினியின் இடது மூலையின்மீது அழுந்துவதுபோல் இதுநாள்வரை கைகளை வைத்திருந்திருக்கேன். இதனால் இடது மணிக்கட்டு எலும்பை தசைகளுடன் சேர்க்கும் திசுக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்பட்டு, திடீரென்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்துவிட்டன. வலி. இது wrist tendonitis என்ற வகையில் சேருமாம்.

பிசியோதெரபிஸ்ட் ஒருவரைப் பார்த்ததில், ஐஸ் ஒத்தடம் கொடுக்கச் சொன்னார். அதில் நல்ல பலன் இருந்தது. கூடவே, அல்ட்ரா சவுண்ட் கதிர்கள்மூலம் tendon வீக்கத்தைக் குறைக்க முயற்சி. அதே நேரம் மணிக்கட்டு ஆடாமல் இருக்க, முதலில் crepe bandage போட்டுக்கொண்டேன். அது மடிசார் புடைவைபோல் பலமுறை கையில் சுற்றிச்சுற்றி குண்டாக இருக்க, பார்ப்போரெல்லாம் என்னவோ கை உடைந்துவிட்டதா என்பதுபோல விசாரிக்கத் தொடங்கினர். இப்போது மெலிதான, அழகான ஸ்டிராப் ஒன்று போட்டிருக்கிறேன்.

கையை நகர்த்தி வைத்து அடித்தால் தப்பு தப்பான எழுத்துகள் வருகின்றன. எழுதும் வேகம் குறைகிறது.

வேறு எர்கோனாமிக் டிசைன் உள்ள லாப்டாப்பைத் தேடவேண்டும்.

Tuesday, May 06, 2008

நியூ ஹொரைசன் மீடியா முதலீடு - அறிவிப்பு

இந்திய மொழிப் பதிப்பகம் நியூ ஹொரைசன் மீடியா, இரண்டாவது முறையாக மூலதனத்தைத் திரட்டியுள்ளது
மேலும் பல புதிய புத்தகங்களை வெளியிடவும், பல இந்திய மொழிகளுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளது

சென்னை, இந்தியா, மே 06, 2008

சென்னையைச் சேர்ந்த பல மொழி, பல வடிவப் புத்தகப் பதிப்பகமான நியூ ஹொரைசன் மீடியா, பீக்கன் இந்தியா பிரைவேட் ஈக்விட்டி ஃபண்டிடமிருந்து சிறுபான்மை முதலீட்டைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்த நிறுவனம் பெறும் இரண்டாவது முதலீட்டுச் சுற்றாகும். இந்தச் சுற்றில் நிறுவனத்தின் ஆரம்பப் பங்குதாரர்களும், முதல் சுற்றில் முதலீடு செய்த எமெர்ஜிக் வென்ச்சர் கேபிடல் நிறுவனமும் மேற்கொண்டு முதலீடு செய்துள்ளன. எமெர்ஜிக் வென்ச்சர் கேபிடல், 2006-ல் நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தில் முதல் சுற்றில் முதலீடு செய்திருந்தது.

நியூ ஹொரைசன் மீடியா, பல துறைகளிலும் அச்சுப் புத்தகங்களையும் ஒலிப் புத்தகங்களையும், தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் பதிப்பிக்கிறது. வரும் காலங்களில், இந்தியாவின் பிற மொழிகளில் பதிப்பிப்பதை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழில் கிழக்கு பதிப்பகம், வரம் வெளியீடு, நலம் வெளியீடு, ப்ராடிஜி புக்ஸ் ஆகிய நான்கு பதிப்புகளுடனும்,ஆங்கிலத்தில் இண்டியன் ரைட்டிங், ஆக்சிஜன் புக்ஸ், ப்ராடிஜி புக்ஸ் ஆகிய மூன்று பதிப்புகளுடனும், மலையாளத்தில் புலரி ப்ரசித்தீகரணம், ப்ராடிஜி புக்ஸ் ஆகிய இரண்டு பதிப்புகளுடனும் நியூ ஹொரைசன் மீடியா புத்தகங்களை வெளியிடுகிறது. ஒவ்வோர் ஆண்டும் வெளியிடும் புதுப் புத்தகங்களின் எண்ணிக்கையிலும்சரி, விற்பனையிலும்சரி, தமிழில் நியூ ஹொரைசன் மீடியா முதன்மை புத்தக வெளியீட்டு நிறுவனமாக விளங்குகிறது.

‘எங்களது அதிவேக வளர்ச்சிக்குக் காரணங்களாக, எங்களது நூதனமான வெளியிடுகள், உயர்தர எடிடிங் மற்றும் புத்தக உற்பத்தி, சகாய விலை மற்றும் திறன்வாய்ந்த விநியோகம் ஆகியவற்றைச் சொல்லமுடியும். எங்களது புத்தகங்கள் வாசகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதைக் காணமுடிகிறது. விரைவிலேயே இந்தியாவின் பல மொழிகளுக்கும் விரிவடைய விரும்புகிறோம்’ என்கிறார் பத்ரி சேஷாத்ரி, நிர்வாக இயக்குநர்.

இந்தச் சுற்று மூலதனத்தைக் கொண்டு நியூ ஹொரைசன் மீடியா, தமிழ், மலையாளம், ஆங்கிலத்தில் மேலும் பல புது நூல்களை வெளியிடும். தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்தும். இந்தியா முழுமைக்குமாக ஆங்கிலப் புத்தகங்களை விநியோகிக்கும் நெட்வொர்க்கை உருவாக்கும்.

‘இப்போது பீக்கன் இந்தியா பிரைவேட் ஈக்விட்டி ஃபண்ட் செய்திருக்கும் முதலீடானது, இந்தியப் புத்தகப் பதிப்புத்துறையிலேயே ஏற்பட்டிருக்கும் முதல் வென்ச்சர் கேபிடல் முதலீடாகும். இப்போது நடந்துள்ள முதலீடு, இந்தியப் புத்தகப் பதிப்புத் துறைக்குப் பிரகாசமான வளர்ச்சி உள்ளது என்பதைக் காட்டுகிறது’ என்கிறார் நியூ ஹொரைசன் மீடியாவின் இயக்குநர், கே.சத்யநாராயண்.

‘இந்திய மொழிகளிலான உள்ளடக்கத்துக்கு உள்ள வாய்ப்பும், நியூ ஹொரைசன் மீடியாவை வழிநடத்திச் செல்வோரின் தொலைநோக்கும், பெரும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இந்த நிறுவனம், மிகக் குறுகிய காலத்துக்குள்ளாக வாசகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் புதுமையான புத்தகங்கள் பலவற்றை வெளியிட்டு, விற்பனையையும் மார்க்கெட்டிங்கையும் வெகுவாக முன்னெடுத்துச் சென்றுள்ளது’ என்கிறார் பீக்கன் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் தீபக் ஷஹ்தாத்புரி. இவர் நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் இயக்குனராகச் சேர்கிறார்.

நியூ ஹொரைசன் மீடியா பற்றி

சென்னையைச் சேர்ந்த பதிப்பகமான நியூ ஹொரைசன் மீடியா, 2004-ம் ஆண்டு, பத்ரி சேஷாத்ரி, கே.சத்யநாராயண், ஆர்.அனந்த்குமார் ஆகியோரால் தொடங்கப்பட்டது. நியூ ஹொரைசன் மீடியா, பல மொழிகளிலும் பல வடிவங்களிலும் புதினம், அ-புதினம் ஆகியவற்றை அச்சுப் புத்தகங்கள், ஒலிப் புத்தகங்கள், டிவிடிக்கள், இணையம், மொபைல் ஆகியவை வழியாக வெளியிட விரும்புகிறது. தற்போது, நியூ ஹொரைசன் மீடியா, தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் பதிப்பிக்கிறது. நியூ ஹொரைசன் மீடியா சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. சென்னையிலும் திருவனந்தபுரத்திலும் எடிட்டோரியல் அலுவலகங்கள் உள்ளன.

பத்ரி சேஷாத்ரியும் கே.சத்யநாராயணும் ஐஐடி மெட்ராஸிலும் அமெரிக்காவின் கார்னல் பல்கலைக்கழகத்திலும் படித்தவர்கள். இருவரும், கிரிக்கின்ஃபோ.காம் என்ற கிரிக்கெட் இணையத்தளத்தினை உருவாக்கி நடத்திய குழுவில் இருந்தவர்கள். இந்தத் தளம் 2003-ல் விஸ்டன் குழுமத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆர்.அனந்த்குமார் டெக்சாஸ், அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக உள்ளார்.

நியூ ஹொரைசன் மீடியாவின் பதிப்புகள் (மேலதிகத் தகவல்களுக்கு www.nhm.in என்ற தளத்துக்குச் செல்லவும்)



பீக்கன் இந்தியா பிரைவேட் ஈக்விட்டி ஃபண்ட் பற்றி

பீக்கன் இந்தியா பிரைவேட் ஈக்விட்டி ஃபண்ட், பேயர் கேபிடல் பார்ட்னர்ஸ் ஆதரவுடன் தொடங்கப்பட்ட அமெரிக்க டாலர் 200 மில்லியன் பிரைவேட் ஈக்விட்டி நிதியாகும். பல துறைகளிலும் இருக்கும் வேகமாக வளரும் நிறுவனங்களில், முக்கியமாக நுகர்வோர் துறை, கட்டுமானம், இந்தியாவின் போட்டிபோடும் திறனால் லாபமடையும் நிறுவனங்களிலும், பீக்கன் முதலீடு செய்கிறது. இது பீக்கனின் ஐந்தாவது முதலீடாகும். இதற்கு முன்பாக, கலை ஏலங்களைச் செய்யும் சாஃப்ரன் ஆர்ட், ரியல் எஸ்டேட் நிறுவனமான வாடிக்கா லிமிடெட், மின் கட்டுமானத் துறை நிறுவனமான A2Z மெயிண்டனென்ஸ் அண்ட் எஞ்சினியரிங், உணவுத் துறை நிறுவனமான இம்ப்ரெசாரியோ ஹோல்டிங்ஸ் ஆகியவற்றில் பீக்கன் முதலீடு செய்துள்ளது.

மேற்கொண்டு விவரங்களுக்கு, எங்களது இணையத்தளத்துக்கு (www.nhm.in) செல்லவும் அல்லது கீழ்க்கண்ட நபரைத் தொடர்புகொள்ளவும்:

பத்ரி சேஷாத்ரி
நியூ ஹொரைசன் மீடியா,
33/15, எல்டாம்ஸ் ரோட், ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018, இந்தியா
தொலைபேசி: +91--44-4200-9601/03/04 மொபைல்: +91-98840-66566
ஃபேக்ஸ்: +91-44-4300-9701
மின்னஞ்சல்: badri@nhm.in

பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு இருக்கவேண்டும் என்பது தொடர்பான மசோதா, மாநிலங்கள் அவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.

ஏற்கெனவே தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்காக மக்களவையில் சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது அரசியல் அமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தொகுதிகள் தனித்தொகுதிகள் அல்லது சிறப்புத் தொகுதிகள் (Reserved Constituencies) எனப்படும்.

பெண்களுக்கென இட ஒதுக்கீட்டைக் கொண்டுவரும் மசோதாவைப் பல கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. முக்கியமாக ராஷ்டிரீய ஜனதா தளம், சமாஜவாதிக் கட்சி ஆகியவை. காங்கிரஸ், பாஜக இரண்டும் பெரும் முயற்சி எடுத்து இந்த மசோதாவை முன்வைக்கவில்லை. இப்போது கடுமையான விலைவாசி ஏற்றத்தால் ஆளும் கட்சிக்குப் பிரச்னை இருப்பதாலும், தேர்தல்கள் சீக்கிரமே வரவிருப்பதாலும் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா முன்னுக்கு வந்துள்ளது.

சில கட்சிகள், பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் என்று கோருகின்றன. இது தேவையில்லை என்பது என் கருத்து. இதற்கு இரண்டு காரணங்கள்.

(1) இப்போதுள்ள தனித்தொகுதி அல்லாத இடங்களில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. பெண்களுக்கான தொகுதிகளுக்கு மட்டும் ஏன் இந்த இட ஒதுக்கீடு தேவை?

(2) ஓர் இடத்தில் நிற்பதற்கு கல்வித் தகுதி முதல் வேறு எந்தத் தகுதியும் எதிர்பார்க்கப்படுவதில்லை. யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். அனைத்து கட்சிகளுமே சமூக நீதியில் ஆர்வம் செலுத்தும் கட்சிகளாகவே உள்ளன. ஒரு தொகுதியில் முஸ்லிம் ஒருவரைத் தேர்தலுக்கு நிற்கவைக்க ஒரு கட்சி விரும்பினால் அதே தொகுதியில் முஸ்லிம் பெண் ஒருவரை நிற்கவைப்பதில் அவர்களுக்குப் பிரச்னை ஏதும் இருக்கப்போவதில்லை.

எனவே இந்த ஒதுக்கீட்டுக்குள் உள் ஒதுக்கீடு என்பது சட்ட வரைவைக் குழுப்படி செய்து, சட்டத்தை இயற்றவிடாமல் செய்யும் ஒரு செயல் என்றே எனக்குத் தோன்றுகிறது.

இப்போதிருக்கும் தனித் தொகுதிகளில் மட்டும் மூன்றில் ஒரு பங்கை தனி+பெண் (தனித்தனி) தொகுதிகள் என்று வரையறுத்தால் போதுமானது. அரசியல் சட்டம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமே நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் இட ஒதுக்கீட்டை அளித்துள்ளது. பிற வகுப்பினருக்கு கட்சி அரசியல், பொதுமக்கள் ஆதரவு ஆகியவற்றால் தானாகவே இடங்கள் கிடைத்துவிடும் என்றே அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் உணர்ந்திருந்தனர். இன்றைய நிலையும் அதுதான். எந்த மாநில சட்டமன்றங்களையும் நாடாளுமன்றத்தையும் எடுத்துக்கொண்டு பார்த்தாலும் பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என அனைவருமே தேர்தலில் நிற்கவைக்கப்படுகிறார்கள், ஜெயிக்கிறாகள்.

***

நாடாளுமன்ற மாநிலங்கள் அவைத் தேர்தலில் 33% இட ஒதுக்கீட்டை எந்த அடிப்படையில் செய்யப்போகிறார்கள் என்பது குழப்பமானது!

தேர்தல் ஆணையம், கட்சிகள் 33% இடங்களில் பெண்களை நிறுத்திவைக்கவேண்டும் என்பதைக் கட்டாயமாக்கலாம் என்று யோசனை சொல்லியுள்ளதாம். இது சரியானதாகத் தோன்றவில்லை. இப்படி இருந்தாலும், ஒரு பெண்கூட ஜெயிக்காமல் போக வாய்ப்புள்ளது. ஒரு கட்சி பெண் வேட்பாளரை நிறுத்தும் இடத்திலெல்லாம் அடுத்த கட்சி, ஆண் வேட்பாளரை நிறுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஏதோ சில காரணங்களால் எல்லா இடங்களிலும் ஆண்களே ஜெயிக்கும் நிலை ஏற்படலாம்.

எனவே நோக்கம், குறைந்தது 33% பெண்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பவேண்டும் என்றால், 33% தொகுதிகளை பெண்களுக்கு மட்டும் என்றாக்குவதே.

***

நாடாளுமன்ற இடங்களை அப்படியே வைத்திருப்பதா அல்லது அதிகமாக்குவதா? அதிகமாக்குவதால் பெரும் நன்மை ஏதும் இருக்காது என்றே நினைக்கிறேன். கல்விக்கூடங்களில் இடம் அதிகமாக்குவதற்கும் இதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. அனைவரும் படிக்கவேண்டும் என்று விரும்புவது இயற்கை. சொல்லப்போனால் 100% கல்லூரிப் படிப்பு என்ற நிலையை இந்தியா அடையவேண்டும் என்று கனவு காண்பதுகூட ஏற்கத்தக்கது. ஆனால் அனைவரும் ஒருமுறையாவது நாடாளுமன்ற உறுப்பினராகவேண்டும் என்பது நினைக்கவே அபத்தமாக உள்ளது. அதனால் மேலும் பல இடங்களை அதிகப்படுத்தி எப்படியாவது ஆண்களுக்கு ‘காம்பன்சேஷன்' தரவேண்டும் என்று நாம் நினைக்கவேண்டியதில்லை.

***

அடுத்தவர்களை பாதிக்கும் விஷயத்தில் சர்வசாதாரணமாக முடிவுகளை எடுக்கும் நமது பிரதிநிதிகள், தங்களை ஒன்று பாதிக்கப்போகிறது என்றால் எந்த அளவுக்குப் பதறுகிறார்கள் என்று பாருங்கள்! 33% இட ஒதுக்கீடு ஏற்பட்டால், பல ஆண் உறுப்பினர்களது தொகுதிகள் பெண் தொகுதிகளாக மாறும். பாதுகாப்பான தொகுதி (அதாவது எளிதாக வென்றுவிடலாம் என்ற தொகுதி) கிடைக்காமல் பல கிழங்கள் தடுமாறும். அதனால்தான் இந்த அளவு எதிர்ப்பு இந்த மசோதாவுக்கு உள்ளது.

மன்மோகன் சிங் அரசு இந்த மசோதாவைச் சட்டமாக்க எடுத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு அனைவரும் ஆதரவு தரவேண்டும். எனது தார்மீக ஆதரவு இதற்குக் கட்டாயம் உண்டு.