Monday, July 28, 2008

சுப்ரமண்யபுரம்

எந்தக் கதையாக இருந்தாலும் முதலில் தவறுகள் ஏதும் இல்லாமல் இருக்கவேண்டும். பிற படங்கள் குப்பை என்பதால் மட்டுமே சுப்ரமண்யபுரத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடக்கூடாது.

தொழில்நுட்ப ரீதியில் எனக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனால் பல இடங்களில் கேமரா கிரெய்னியாக வருகிறது. (முரட்டுக்காளை படக் காட்சிகளைச் சொல்லவில்லை.)

கதைக்கு வருவோம்.

பொதுவாக ரிமாண்டில் (judicial custody) இருக்கும்போது “கைதிகள்” அவர்கள் கொண்டுவந்த உடையை அணியலாம். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட கைதிகள் ஜெயில் உடையை மட்டும்தான் அணியவேண்டும். இது சினிமாவில் சரியாக வந்துள்ளது. பல படங்களில் இதை சொதப்பிவிடுவார்கள். ஆனால் பெயில் விஷயம் ஆரம்பிக்கும்போது சொதப்புகிறார் இயக்குனர்.

எந்தக் குற்றங்களுக்கெல்லாம் பெயில் கொடுக்கலாம்? எதற்கு பெயில் கொடுக்கமாட்டார்கள்? கொலைக்குற்றம், அதுவும் திட்டமிட்டுக் கொலை செய்தது (murder, not involuntary manslaughter) என்பது பிணை கொடுக்கக்கூடாத ஒரு குற்றம். இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனை மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை என்னும் பட்சத்தில் செஷன்ஸ் கோர்ட் பொதுவாக பெயில் வழங்காது. ஒரு உயர் நீதிமன்றம்தான் பிணை வழங்கும். செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு மேஜிஸ்டிரேட் முன்னால் ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்துள்ளனர் குற்றவாளிகள். எனவே நிச்சயமாக இதற்கு மதுரையில் பெயில் கொடுத்திருக்கமாட்டார்கள். (1980களில் மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை கிடையாது என்பதை நினைவில் வைக்கவும்.)

ஆனால் அழகுவும் பரமனும் பெயிலில் வருகிறார்கள்.

அடுத்து பெயில் கொடுக்கும்போதும் ஒரு காவல் நிலையக் கட்டுப்பாட்டுக்குள் வந்து தினசரியோ அல்லது வாராவாரமோ அல்லது மாதாமதமோ கையெழுத்திடவேண்டும். இவர்கள் செய்த குற்றத்துக்கு உயர் நீதிமன்றமே பெயில் கொடுத்தாலும், ஒரு காவல் நிலையத்துக்கு தினசரி வந்து கையெழுத்திட்டுச் செல்லுமாறு சொல்லியிருக்கும். ஆனால் அப்படி ஏதும் படத்தில் நடப்பதில்லை. பெயிலின் கட்டுப்பாடுகளை மீறினால், பெயிலை கேன்சல் செய்து, உடனே உள்ளே தள்ளி, மேற்கொண்டு பெயில் தராமல் செய்துவிடுவார்கள்.

ஆனால் இங்கே குற்றவாளிகள் சர்வசாதாரணமாகத் தெருவில் உலாவுகிறார்கள். முனி என்பவனைப் போட்டுத் தள்ளுகிறார்கள். முனியின் ஆட்கள் அழகுவையும் காசியையும் துரத்தி பயமுறுத்துகிறார்கள் ஆனால் போலீஸுக்கு அழகு, பரமன் எங்கே என்று தெரியவில்லை. தொடர்ந்து அழகு, பரமன், காசி மூவரும் சேர்ந்து முனியின் ஆட்கள் மூன்று பேரைப் போட்டுத் தள்ளுகிறார்கள். இங்கு செத்த பிணங்களைப் பார்க்க போலீஸ் வருகிறது. ஆனால் கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்காமல் திகைக்கிறது போலீஸ்.

அரசியல்வாதி வீடுபுகுந்து ரகளை செய்துவிட்டுப் போனபின்னரும், யார் செய்திருப்பார்கள் என்று தெரிந்தபோதிலும் தன் வீட்டுக்கு மட்டும் காபந்து கேட்கிறார் அரசியல்வாதி (சேது?). ஆனால் அவரது தம்பியும் (உயிர் ஆபததில் இருப்பவர்) அண்ணனும் எந்தக் கவலையும் இன்றி உலாவுகின்றனர்.

பழனிச்சாமி கொலையில் அழகுவும் பரமனும் மட்டும்தான் ஈடுபட்டுள்ளனர் என்று அலிபை தயாரித்து காவல்துறையை நம்பவைக்கலாம். ஆனால் பழனிச்சாமியின் குடும்பம், அடிப்பொடிகள் ஆகியோர் நம்புவார்களா? கட்சி மேலிடம் அதை நம்பி, அடுத்து நேராக சேதுவை கட்சித் தலைவராக்குமா?

அந்த ஊரில் மருந்துக்கும்கூட எதிர்க்கட்சியே காணோமே? அறிக்கைகள் விடமாட்டார்களா? கொலைகள் நடக்கும்போது பொதுமக்கள் மிரளமாட்டார்களா? அவர்கள் பாட்டுக்கு நகர்ந்து வழிவிட்டு அடுத்தவேளை ஆட்டுக் குழம்பு வைக்கப் போய்விடுகிறார்கள்.

எல்லாக் கொலைகளுக்கும் சேர்த்து, கடைசியாக காசு வாங்கிய காசிக்கு சிறை தண்டனை கிடைக்கிறது. ஆனால் அவன் சிறையை விட்டு வெளியே வரும்போது யார் அவனை போட்டுத் தள்ள முயற்சி செய்கிறார்கள்? கால் நொண்டி கடைசியாக மூச்சுமுட்டவைத்துக் கொலை செய்கிறான். ஆனால் முக்கியமான போலீஸ் விசாரணைக்கு காசி தேவை என்ற நிலையில் ஒரு காவலர்கூடவா வாசலில் இருக்கமாட்டார்?

1980களில் சென்னைக்கு வெளியே ஆட்டோக்கள் இருந்து நான் பார்த்ததில்லை. சுப்ரமண்யபுர கொலைகார ஆட்டோ சற்றே உறுத்துகிறது. இஷ்டத்துக்கு மூன்று பெயர் தெரியாத, முகம் தெரியாத ஆட்கள் முனியைக் கொலைசெய்ய சவ ஊர்வலத்துக்கு நடுவில் வருவதைக் கண்டுகொள்ளாத கூட்டம் உறுத்துகிறது. காலேஜ் பெண் “infatuation” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது உறுத்துகிறது. கதாநாயகி “gift” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது உறுத்துகிறது.

படம் கடைசியில் ரொம்பவே இழுத்துக்கொண்டு சென்றதோ என்றும் தோன்றுகிறது.

இருந்தாலும், படம் தேறிவிட்டது. மிகக் குறைந்த செலவில் எடுக்கப்பட்டாலும் சத்யம், ஐநாக்ஸ் தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருப்பது படத்துக்கு அனைத்துவித மக்களிடமும் உள்ள ஆதரவைக் காண்பிக்கிறது. பல தியேட்டர்களில் தசாவதாரத்தை எடுத்துவிட்டு இந்தப் படத்தைப் போட்டிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன.

அரசியல்வாதியின் வஞ்சகத்துக்கு பலியாகும் இளைஞர்கள்; ஏன் என்றே தெரியாமல் வன்முறையில் இறங்கி வாழ்க்கையைத் தொலைக்கும் இளைஞர்கள்; வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றிக்கொண்டு, “நாம சந்தோஷமாத்தானடா இருந்தோம்” என்று சொல்லும் இளைஞர்கள்; தெருவில் மங்கையர் கடைக்கண் பார்வைக்காக சைக்கிளில் சில கிலோமீட்டர்கள் சென்று வழிந்துவிட்டு, மீண்டும் எங்கோ தெருவோரக் கடையில் உட்கார்ந்து சிகெரெட் பிடித்துச் சீரழியும் இளைஞர்கள் பலரை 35 வயதுக்கு மேற்பட்ட நாம் பல இடங்களில் பார்த்திருப்போம், அல்லது அவர்களாகவே இருந்திருப்போம். அவர்களது தொலைந்த வாழ்க்கையைத் திரையில் பார்க்கும் deja-vu-தான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம்.

22 comments:

  1. //எந்தக் குற்றங்களுக்கெல்லாம் பெயில் கொடுக்கலாம்? எதற்கு பெயில் கொடுக்கமாட்டார்கள்? கொலைக்குற்றம், அதுவும் திட்டமிட்டுக் கொலை செய்தது (murder, not involuntary manslaughter) என்பது பிணை கொடுக்கக்கூடாத ஒரு குற்றம். இந்தக் குற்றத்துக்குப் பிணை கொடுக்கவேண்டுமானால் அது லோக்கல் செஷன்ஸ் நீதிமன்றத்தால் முடியாது. இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனை மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை என்னும் பட்சத்தில் ஒரு உயர் நீதிமன்றம்தான் பிணை வழங்கவேண்டும். செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு மேஜிஸ்டிரேட் முன்னால் ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்துள்ளனர் குற்றவாளிகள். எனவே நிச்சயமாக இதற்கு மதுரையில் பெயில் கொடுத்திருக்கமுடியாது. (1980களில் மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை கிடையாது என்பதை நினைவில் வைக்கவும்.)//

    பத்ரி!
    இந்த மாதிரி லாஜிக் கேள்விகளெல்லாம் (அதுவும் தமிழ்படத்திற்கு) ர்ர்ர்ரொம்ப அதிகம் என்றே தோன்றுகிறது! காட்சியமைப்பு சரிவர அமைந்துவிட்டால் மக்களுக்கு பிடித்து விடும் என்பதே என் அவதானம் (அல்லது கவனிப்பு). இந்த வரிகளைப் படித்தபோது தசாவதாரத்தின் ஒரு (அரைவேக்காட்டுத்தனமான) விமர்சனம் நினைவுக்கு வந்தது.
    //பல்ராம் நாயுடுவின் ரிங்க் டோன் பாட்டும், கோவிந்த் கமல் அந்த உயிரியல் ஆயுதத்துடன் தப்பிப் போகும் அந்த வெள்ளைக் கார் வெளியான ஆண்டும் 2006. 2004ல் நடக்கும் கதைக்குள் இவை எப்படி வரலாம்?//
    இதை விட ஒரு வெட்டி வேலை இருக்க முடியாது என்றும், இந்த மாதிரி அறிவு ஜீவிகளெல்லாம் இருக்கும் வரையில்... ம்ஹூம் ஒன்னும் சொல்றதுக்கில்லை என்றும் தோன்றியது!

    இப்போதுள்ள தமிழ் திரைப்படச் சூழலில், சுப்பிரமணியபுரம் போன்ற படங்கள் நிச்சயம் வரவேற்கத்தக்கவை! ஆனால் ஒன்னு (ஆவன்னாதான் ரெண்டு!) நீங்களே கடைசியில் படத்திற்கு ஆதரவாகத்தான் முடித்திருக்கிறீர்கள்! அதுவரைக்கும் நல்லது! நன்றி!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  2. நியாயமான விமர்சனம். இந்த படம் வந்த வேளை தரம் இல்லாத தமிழ்படங்களின் நேரம். அதனால்தான் மிகப்பெரிய வெற்றி. அஞ்சாதே இதைவிட நல்ல படம். அதற்கு இவ்வளவு பெரிய டாக் கிடைக்கவில்லை. பெரும்பாலான ரஜினி ரசிகர்கள் வாலண்டியராக இதை புரமோட் செய்கிறார்கள்

    ReplyDelete
  3. //ஆனால் பல இடங்களில் கேமரா கிரெய்னியாக வருகிறது.//

    அது ஒரு டெக்னிக். டாட்ஸ் கொடுத்து ஷார்ப் செய்திருக்கிறார்கள். மழமழவென்று ஒளிப்பதிவு ஆகிவிடும் காட்சிகளுக்கு இதுபோல டாட்ஸ் கொடுப்பதுண்டு!


    //மேஜிஸ்டிரேட் முன்னால் ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்துள்ளனர் குற்றவாளிகள்.//

    ஒப்புதல் வாக்குமூலத்தை எங்குமே அழகரும், பரமனும் தருவதாக காட்சிகளில்லை. எங்களை போலிஸ் தேடுவதாக கேள்விப்பட்டு நாங்களே சரண்டர் ஆகிறோம் என்பதாக தான் மாஜிஸ்திரேட் முன்னால் அவர்கள் ஆஜராகிறார்கள்.

    எனவே இதுதொடர்பான உங்கள் விமர்சனம் சரியானதா என்று சொல்லத் தெரியவில்லை.

    ReplyDelete
  4. விமர்சனங்களை விமர்சிக்க கூடாது தான். எனினும் தாங்கள் ஆழ்ந்து கவனித்ததில் பிழைகளே மேலோங்கி சுட்டி காட்டியுள்ளீர்கள். பிழை இல்லாத படம் என்ற ஒன்று உண்டா என்ன? தங்கள் பிழைகளின் தொகுப்பை வரவேற்கும் நான், இரு பத்திகள் படத்தின் நிறைகளையும் குறிப்பித்து இருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

    ReplyDelete
  5. பத்ரி! என் மறுமொழியை பார்க்கும்போது எனக்கே கொஞ்சம் தவறாகப் படுகிறது - அதாவது //இந்த வரிகளைப் படித்தபோது தசாவதாரத்தின் ஒரு (அரைவேக்காட்டுத்தனமான) விமர்சனம் நினைவுக்கு வந்தது.// நான் சொல்ல நினைத்தது இந்தளவு டீடெயில்ஸ் பார்த்தல் தேவையில்லை என்பதுதான். மற்றபடி உங்கள் விமர்சன வாசகங்கள் அரைவேக்காடுன்னு நான் சொல்லலை!(அப்படி இல்லவும் இல்ல!)

    தெளிவுக்காக!

    அன்புடன்
    வெங்கட்ரமணன்!

    ReplyDelete
  6. மதுரையில அமெரிக்கன் கல்லூரியில படிக்கிற புள்ளகளுக்கு - அது 1980ஆவே இருந்தாலும் - இன்ஃபாச்சுவேஷன் தெரியக்கூடாதா? என்ன கொடுமை சார் இது?

    ReplyDelete
  7. பாலா, அமீர், சசி என்று முக்கோணக் கூட்டணி அமைக்கப்பட்டு விட்டது. சுப்ரமண்யபுரம் ஒரு வாழ்க்கையின் அங்கமாக பார்க்கலாம் (slice of life). ஆனால் ஏன் பார்க்க வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது.

    நாதாரிய சுத்திகிட்டு, வீட்டுல யார் பேச்சையும் கேட்காமல், சகவாசம்னு சொல்லி வர போரவன கொல்லுமளவுக்கு பொகின்றனர். அது மட்டுமல்ல நண்பர்களே நண்பர்களை காட்டிக்கொடுப்பதற்கு ஒரு காரணம் கூட இல்லை. என்ன தான் சொல்ல வரீங்க, சசி? காலத்தால் நண்பர்களும் எட்டப்பனாகி விடுவார்களென்றா?

    பத்ரி - அனாலிசிஸ் ஓவர். படம் பார்க்கும் போது பேனா பேப்பர் எல்லாம் கைல இருந்துதோ?

    ReplyDelete
  8. எது எப்படியோ, முதலில் ‘சுப்ரமணியபுரம் குழு’வை திறந்த மனதுடன் பாராட்டி விடுவோம்.

    பொதுவாக முன்னெப்போதையும் விட, இப்போதேல்லாம் பெரும்பான்மையான தமிழ் இயக்குநர்கள், முடிந்தவரை 'லாஜிக்' விஷயத்தில் சிரத்தை எடுத்துக்கொள்கிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. சில பழைய, வெற்றி பெற்ற திரைப்படங்களையெல்லாம் கூட, இப்போது பார்க்க சகிக்கவில்லை.

    இருந்தாலும், சில 'லாஜிக்' விஷயங்கள் தெரிந்தே கோட்டை விடப்படுவது போலவும் தெரிகிறது. மக்களின் காட்சிகளை புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும் போது இம்மாதிரி குறைகள் குறையக் கூடும். திரைப்படங்களில் வரும் சிறைக்கைதியின் உடைகள் கூட இவ்வகையான 'லாஜிக்' மீறல்கள்தான். போகப் போக சரியாகி விடும்.

    இப்போதெல்லாம் ஃபங்க் வைத்த போலீஸ், பதினெட்டு வயது கதாநாயகியின் முழுவதும் தலை நரைத்த அறுபது வயது அம்மா, நாற்பது வயது கல்லூரி கதாநாயக மாணவன், துப்பாக்கியால் சுடப்பட்ட பின்னும் நீளவசனங்கள் பேசும் குணச்சித்தர்கள் போன்ற அபத்தங்கள் எல்லாம் இபோது இல்லை. மணிவண்ணன், சந்தான பாரதி போன்ற ‘தாடிவாலா’க்கள் போலீஸாக நடிக்கும் போது குறைந்த பட்சம் ‘ஐயப்ப சாமி’யாகவாவது காட்டி விடுகிறார்கள்.

    மேலும் குறைகளை மிகவும் உன்னிப்பாக கவனிக்கும் போது, படத்தை முழுமையாக ரசிக்க முடிவதில்லை.

    ReplyDelete
  9. படம் பார்த்துவிட்டு கருத்து சொல்லக்கூட பயமாக இருந்தது. அப்படி ஒரு சுப்ரமண்யபுரம் ரசிகர் மன்றம் :-)

    உங்கள் விமர்சனம் பார்த்தவுடன் தான் கொஞ்சம் தைரியம் வந்தது - நான் தனி ஆள் இல்லை என்று!

    //அவர்களது தொலைந்த வாழ்க்கையைத் திரையில் பார்க்கும் deja-vu-தான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம்.// உண்மையோ உண்மை. இந்த ஒரு அம்சத்தை மட்டும் விலக்கிவிட்டுப் பார்த்தால், சத்யா கதை, பட்டியல் க்ளைமாக்ஸ், அஞ்சாதே ட்ரீட்மெண்ட் என்று எல்லாமே பழைய மொந்தை!

    ReplyDelete
  10. //பழைய மொந்தை!//

    புதிய மொந்தையில் பழைய கள் ???

    ReplyDelete
  11. I don't know why all the so called intellectuals (including charu nivedita)appreciate too much this film. leave alone theme. If you observe the way the actors speak dialogue and act looks like a drama. By luck i think the director this time has got throug. He has good potentials but has to improve.

    ReplyDelete
  12. Dear Badri

    Yes the movie is too grainy. I think it is shot in video camera (HD) and converted, to make it low cost. This is different from the yellow filter approach in veyyil.

    Almost all the actors are new and they would have taken many takes, so video should have been better.

    I am told that Cheran used this tech for Thavamai, and had to pay the cinematographers Association Rs 1 lakh as fine, for not using a regular registered member to handle camera.


    You can tell from the way tubelight appears in it (different in normal movie camera as I understand from my NY days), and also slimlines were not there in 1980 (goof). Lots of streets had cable wires, which is also a goof. Also they should have shown the antenna's sprouting out of skyline of 80's.

    Regards
    Ramesh

    ReplyDelete
  13. பத்ரி,
    படம் பார்த்தேன். நன்றாக இருந்தது. படம் பார்த்து முடித்தவுடன் வேறு சில கேள்விகள் மனதில் எழுந்தன. ஏன் இது மாதிரியான படங்களில் ஒரு பொறுக்கியை, வேலை வெட்டி இல்லாதவனை, கொலை செய்பவனை ஒரு ஹீரோ வாக சித்தரிக்கிறார்கள்? அதுவும் இந்த மாதிரி ஒரு ஆளை ஒரு அழகான அல்லது சுமாராக இருக்கும் பெண் ரசித்து காதலிப்பதாக சித்தரிக்கப்படுவது இந்த மாதிரி ஆட்களை positive ஆக கட்டுகிறது. இந்த படத்தை பார்த்து விட்டு, இது போல சும்மா சுற்றி கொண்டிருக்கும் இளைநர்கள் திருந்துவர்கள என்பது சந்தேகமே! அந்த பெண்ணுக்கு ஏன் வெட்டியாக ஊர் சுற்றி கொண்டிருக்கும் 'கதா நாயகன்' மீது காதல் வருகிறது என்று தெரியவில்லை. எல்லாரையும் கொலை காரனாகவே காட்டுகிறார்கள். கிராமத்தில் நல்ல இளைநர்களே இல்லையா?
    படத்தில் வன்முறை தலை விரித்தாடுகிறது. ஏதோ, அல்-கொய்தா ஆட்கள் அமெரிக்கா நிருபரை கொள்வது போல் தலையை அறுக்கிறார்கள்.
    மற்றபடி நடிப்பு நன்றாக இருந்தது. பருத்திவீரன் 'கார்த்தி' சாயலை ஹீரோவின் காண முடிந்தது. அவரை பார்த்து பார்த்து நடித்திருப்பரோ? ஆனால் 'கார்த்தி' is class.

    ReplyDelete
  14. Hi Badri,

    Overall it is a good attempt.
    There are many logical mistakes.
    Lot of violence,carrying in a bag per example.
    Even after she knows that he is the murderer,i don't know,any girl will contune to love and try to meet.
    It may give a bad example for youngsters.(s.v.sekar was scolded for commenting sethu as a bad example).We need lot of positive movies,not a movie making murderers as heroes.
    Thanks for sharing.

    Best Wishes,
    Kannan Viswagandhi
    http://www.growing-self.blogspot.com

    ReplyDelete
  15. //1980களில் சென்னைக்கு வெளியே ஆட்டோக்கள் இருந்து நான் பார்த்ததில்லை. சுப்ரமண்யபுர கொலைகார ஆட்டோ சற்றே உறுத்துகிறது.//

    நீங்கள் சென்னையை விட்டு வெளியே ,1980 வாக்கில் போனதில்லை என்றே நினைக்க வேண்டி உள்ளது. :)

    ReplyDelete
  16. // செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு மேஜிஸ்டிரேட் முன்னால் ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்துள்ளனர் குற்றவாளிகள். //
    இது தவறு. நீங்கள் அந்த வாக்குமூல கடிதத்தை சற்று உற்றுப் பார்தீங்கன்னா அதில் இப்படி இருக்கும். ".... அந்த கொலையை நாங்கள் இருவரும் செய்ததாக போலீஸ் எங்களை தேடி வருகிறது. ஆனால் மேற்கண்ட கொலைக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்....". (இருண்டு முறை படத்துடன் ஒன்றி பார்த்ததனால் அதை கவனிக்க முடிந்தது.)

    ReplyDelete
  17. ///சேது? ///
    சோமு

    ReplyDelete
  18. மிக நேர்மையான விமர்சனம்.
    //அஞ்சாதே இதைவிட நல்ல படம்.
    -முரளிகண்ணன்//
    வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  19. பத்ரி ஸார்..

    நானும் சிறை வட்டாரங்களில் விசாரித்தேன். குற்றவாளி என்று ஏதேனும் ஒரு கோர்ட் தண்டனை விதித்திருந்தால் மட்டுமே அவர்களுக்கு சிறை உடை கொடுக்கப்படுமாம். மற்ற விசாரணைக் கைதிகள் அனைவரும் அவரவர் உடைகளை அணியலாம் என்பதுதான் சிறையின் சட்ட விதியாம்.

    பெயில் கொடுப்பது என்பது இப்போது என்றில்லை எப்போதுமே பொதுவாக அந்தந்த நீதிபதிகளின் விருப்பமும் சேர்ந்ததுதான்.

    சாதாரண கொலை மிரட்டல் வழக்கில்கூட ஜாமீன் கிடைக்காமல் அரசுத் தரப்பு வழக்கறிஞர்களால் வாதாட முடியும். பலர் அதைச் செய்வதில்லை. சிலர் அதனைச் செய்கிறார்கள்.

    மதுரையில் தினகரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் மிகக் குறுகியா காலத்தில் எளிதாக வெளியில் வந்துவிட்டார். பிணையில்தான். இந்தப் பிணை எந்த ஊரில், எத்தனை நாட்கள் என்பது கொலையின் ஜாதகத்தை வைத்தும், நீதிபதியின் விருப்பத்தைப் பொறுத்தும்தான்..

    இன்னொரு விஷயம் அண்ணாமலை பல்கலைக் கழக ஊழியரின் கொலை வழக்கில் முதல் குற்றவாளியான ராஜேந்திரன் என்பவர் கைதாகமலேயே ஜாமீன் பெற்றுவிட்டார் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

    இந்தியாவில் எதுவும் முடியும்.. பணமும், பதவியும், அதிகாரமும் இருந்தால்..

    மற்றபடி உங்களுடைய கேள்விகள் நியாயமானவைகள்தான் என்றாலும் இயக்குநருக்கு தான் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்வதற்கு அந்தப் புறக் காரணிகள் தேவையில்லை என்று சொல்லி ஒதுக்கிவிட்டார் என்று நினைக்கிறேன்.

    நீங்கள் எழுதியிருப்பதுபோல் இந்தளவுக்கு லாஜிக் பார்த்து யாருமே திரைப்படம் எடுப்பதில்லை. அது பல்வேறு கவனச் சிதறல்களை ஏற்படுத்தும். திரைப்படம் பார்க்க வரும் ரசிகர்களை படத்தில் லயிக்க வைக்க வேண்டுமெனில் ஓரளவுக்குமேல் அவனுக்கு நிஜத்தை சொல்லிவிடக்கூடாது. கொஞ்சம் நயம் பூச்சுக்கள் வேண்டும்.

    கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது.. கஞ்சா கருப்பு கோர்ட்டிற்கு வந்து பேசுவது. போலீஸ் கஸ்டடியில் கஞ்சா கருப்புவை காட்டிக் கொடுக்காமலும், குற்றத்தை ஒப்புக் கொள்ளாமலும் போனது.. இது பற்றிய லாஜிக் ஓட்டைகளை அடைத்துச் சொல்லியிருநதால் அது கதையின் ஓட்டத்தை தாமதப்படுத்தியிருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

    பல்வேறு தவறுகளுடனும், இப்படித்தான் நடக்க வேண்டும் போல் இருக்கிறது. அதுதான் நடந்துவிட்டது என்ற மனப்பாங்கில் படத்தைப் பார்த்தீர்களானால் போதும் என்றுதான் இயக்குநர் நம்மிடம் சொல்லியிருக்கிறார்..))))))))

    நன்றி..

    ReplyDelete
  20. 1970க்கு முன்பே மதுரை கோவை போன்ற நகரங்களில் ஆட்டோக்கள் ஓடிக்கொண்டிருந்தன.

    ReplyDelete
  21. நன்கு கூர்ந்து அவதானித்திருக்கின்றீர்கள். ஆனால் பொதுவாகப் பிழைகள் என்று பார்த்தால் எல்லர்ப படங்களிலும் ஏதோ ஒரு வகையில் தவிர்க்கமுடியாமல் வரும். ஸ்பைடர்மான் என்று ஆங்கிலத்தில் வந்த படத்தில் கூட சிந்தனைத் தவறுகள் நிறையவே சொல்லலாம்.
    சாதாரண சிலந்தி வலையால் வீடுகளில் வலை போட்டால் எப்படி அசிங்கமாக இருக்கும். ஆனால் இவர் வீதி முழுக்க வலைகளைப் பாவித்துப் பறந்து திரிவார். ஆனால் அவ்வலைகளால் நியுயோர்க் மூடப்படாது, சுத்தமாக இருக்கும்.
    அவ்வாறே அவசர நேரங்களில் சிலந்தி உடைகளுக்கு மாறித் தாவுவார். ஆனால், முதல் போட்டிருந்த ஆடைகளைக் கொண்டு திரியாமல் பிறிதொரு இடத்தில் இறங்கிப் போட்டுக் கொண்டு திரிவார்.
    ரமணா படமும் யாராவது பார்த்திருப்பீர்கள். ஆரம்பத்தில் விஜயகாந்த் கணனியில் மும்முரமாகத் தட்டச்சு செய்து கொண்டிருப்பார். குற்றவாளிகளைப் பட்டியல் இடுவார். காட்சி கணனியை நோக்கித் திரும்பும். அதை வடிவபாகப் பார்த்தால் புரியும். அது விண்டோஸ் மீடியாப் பிளேயரில் ஓடிக்கொண்டிருக்கின்ற ஒரு காணோளிக்கு விஜாயகாந்த் தட்டச்சு செய்து கொண்டிருப்பார்....


    இப்படி அடிப்படைத் தவறுகள் பார்த்தால் சில விடயங்கள் தவர்க்க முடியாதத் தவறுகளாக அமையும்.

    தமிழ்சி சினிமாவைப் பொறுத்தவரைக்கும் புதிய தலைமுறையைச் சேர்ந்த பாலா, அமிர், ஜெயம் ராஜா, போன்றவர்களோடு சசிக்குமாரும் தரமான கதைகளைக் கொண்ட பட்டியலில் இணைந்துள்ளார். அவ்வாறே புது இசையமைப்பாளர்கள், ஐங்கரன் நிறுவனம், சாய்மிரா போன்றவர்களின் தயாரிப்புக்கள் அதிகரித்துள்ளன.

    தரமான தமிழ், பாலியல் சிந்தனைகளைத் தூண்டாத படங்களை ஆதரிப்போம். அது பலருக்கும் பாடமாக அமையும்.

    ReplyDelete
  22. //பாலா, அமிர், ஜெயம் ராஜா, //

    ஜெயம் ராஜாவும் இந்த பட்டியலா?? :O என்ன கொடும தூயவன்?? :)))

    ReplyDelete