Friday, August 01, 2008

மேக்சேசே விருது: பிரகாஷ் ஆம்டே, மந்தாகினி ஆம்டே

மேக்சேசே விருது பெற்ற முரளிதர் (பாபா) ஆம்டேயின் மகன் பிரகாஷ் ஆம்டேயும் அவரது மனைவி மந்தாகினி ஆம்டேயும் 2008-க்கான ராமோன் மேக்சேசே விருது பெறுபவர்களுள் ஒரு(இரு)வர்.

பாபா ஆம்டே பற்றிய பதிவு ஒன்றில் நான் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்:
ஒரு கட்டத்தில் ஆம்டே மத்தியப் பிரதேச பழங்குடியினர் நல்வாழ்வில் ஈடுபட ஆரம்பித்தார். பழங்குடியினருக்காக மருத்துவமனை கட்டுதல், அவர்களுக்குக் கல்வி கற்பித்தல், நல்ல விவசாய முறைகளைக் கற்றுக்கொடுத்தல் ஆகியவற்றில் ஆம்டேயின் மகன் பிரகாஷ் ஆம்டே ஈடுபட்டுவருகிறார்.
மடியா கோண்ட் என்ற மலைவாழ் பழங்குடியினர் மத்தியப் பிரதேச, மஹாராஷ்டிரா பகுதிகளில் வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்கு எழுத்து மொழி கிடையாது. தந்தையைப் பின்தொடர்ந்து, பிரகாஷ் ஆம்டே இந்தப் பழங்குடியினர் வசித்துவரும் பகுதிக்கு வந்து குடியேறினார். இவர்களது மொழியைக் கற்றார். இங்குள்ள குழந்தைகளுக்குப் பாடங்கள் நடத்த பள்ளிகளைக் கட்டினார். விவசாய முறைகளைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். பிரகாஷ், மந்தாகினி இருவருமே மருத்துவப் பட்டம் பெற்றவர்கள். இந்தப் பழங்குடியினருக்கு மருத்துவ உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் எதிர்த்தாலும் பின்னர் நாளடைவில் பழங்குடியினர் இந்த மருத்துவ உதவிகளைப் பெற்றுக்கொள்ள ஆரம்பித்தனர்.

இந்தப் பகுதியில் காயமடைந்த வன விலங்குகள் (சிங்கம், புலி முதற்கொண்டு), அனாதையாகும் வனவிலங்குகளுக்கு சரணாலயம் ஒன்றை அமைத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் மாநில அரசு, அனுமதியின்றி இவர்கள் வனவிலங்கு சரணாலயம் ஒன்றைக் கட்டுவதாகக் குற்றம் சாட்டியது. பிறகு, வேறு வழியின்றி ஆம்டேக்களின் விலங்குகள் சரணாலயத்துக்கு அனுமட்தி கொடுத்தது.

1 comment:

  1. இந்தியா போன்ற நாடுகளுக்கு நிறைய ஆம்டேக்கள் தேவைப்படுகிறார்கள்.

    ReplyDelete