Sunday, August 31, 2008

விஷ்ணு என்னும் சொல்லின் வேர்

‘விஷ்ணு' என்ற சொல் எங்கிருந்து தோன்றியது என்பதற்கான ஊகங்கள் பல. எம்.ப்ளூம்ஃபீல்டும் எச்.கோல்டன்பர்கும் இதன் பொருளை, ‘உலகை அல்லது பூமிப் பகுதியைச் சுற்றிக் கடத்தல்' என்பதாக விளக்குகிறார்கள். எச்.குண்டெர்ட்டும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்கிறார். த்.ப்லாக், அந்தச் சொல் ஒரு பறவையைக் குறிக்கிறது என்கிறார். கே.எஃப்.ஜொஹான்ஸன், அது ‘பெரிய பறவை' அல்லது ‘சூரியப் பறவை' என்பதைக் குறிக்கிறது என்ற கோட்பாட்டை முன்வைக்கிறார். ஹாப்கின்ஸ், அந்தப் பெயரின் வேரில் உள்ள ‘வி' என்பது ‘போகுதல், அவசரம், இயங்குதல்' ஆகியவற்றைக் குறிப்பதால், விஷ்ணு ‘நகர்தலின் கடவுள்' என்கிறார். மெக்டானல், ‘விஷ்ணு' என்பது ‘சூரியனின் இயக்கம்' என்கிறார். ஜே.ப்ரிசைலுஸ்கி, இந்தச் சொல், ஆரியத்துக்கு முந்தைய சொல் என்றும், ஆரியமல்லாச் சொல்லாகிய ‘விண்' (வானம்) என்பதுடன் இணைத்துப் பார்க்கவேண்டியது என்றும் சொல்கிறார். புராணங்களில் இந்தச் சொல்லுக்கு ‘(பிரபஞ்சம்) எங்கும் பரவியிருப்பவன்' என்று பொருள் வருகிறது.

இந்தச் சொல்லின் சரியான ஆதாரத்தைக் கண்டறிவது மிகவும் கடினம் என்றாலும் அனைத்துக் கோட்பாடுகளுமே ‘விஷ்ணு' என்பது வெளி தொடர்பான ‘நகர்தல்' என்பதைக் குறிப்பிடுகிறது என்பதை ஒப்புக்கொள்கின்றன. தமிழில் ‘இறைவன்' என்ற சொல் ‘விஷ்ணு'வுக்கு ஒப்பான சொல். ‘இறு' என்றால் ‘பரவுதல்'. நற்றிணை இறைவணக்கப் பாடலில் ‘எங்கும் பரவியிருக்கும் தன்மை'யுடன், விஷ்ணுவின் கையில் இருக்கும் சக்கரத்துடன் ஒப்பிட்டு ‘சூரியத் தன்மை'யும் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழின் பழைமையான இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் விஷ்ணு, காட்டுப் பகுதியின் (மேய்ச்சல்) கடவுளாகக் குறிப்பிடப்படுகிறார். இங்கு விஷ்ணு ‘மேயோன்' என்று அழைக்கப்படுகிறார். நச்சினார்க்கினியர், ‘மேயோன்' என்ற சொல்லை ‘கடல் நிறத்தை உடையவன்' என்று விளக்குகிறார். பதிற்றுப்பத்தின் ஏழாம் பகுதியின் பதிகத்தில் விஷ்ணு ‘மாய வண்ணன்' என்று அழைக்கப்படும்போது, அவரது வண்ணம் குறிப்பிடப்படுகிறது. ரிக் வேதம் ‘விஷ்ணு'வை ‘பசுக்களைக் காப்பவர்' என்று விளக்குகிறது. பவுதாயன தர்ம சூத்திரத்தில் அவர் ‘கோவிந்தா' என்றும் ‘தாமோதரா' என்றும் அழைக்கப்படுகிறார். ‘தாமோதரா' என்றால் கயிற்றால் வயிற்றில் கட்டப்பட்டவர். இந்த இரண்டு சொற்களுமே அவரது மேய்ச்சல் நிலப் பின்னணியைக் குறிப்பிடுகின்றன. இது தமிழ் பாரம்பரியத்தில் அவர் மேய்ச்சல் நிலத் தலைவராக இருப்பதுடன் ஒத்துப்போகிறது.

ஆக, இந்தச் சொல்லின் வேர் முற்றிலும் ஆரியமாக இருப்பதாகக் கருதமுடியாது. ப்ரிசைலுஸ்கியின் இந்தச் சொல் ஆரியத்துக்கு முந்தைய ஊற்றைக் கொண்டுள்ளது என்பது, சுனீதி குமார் சாட்டர்ஜியின் கருத்துகளால் மேலும் வலுவாகிறது: “விஷ்ணு என்பது சூரியக் கடவுளின் உருவாக்கம், இந்தப் பிரபஞ்சத்தைத் தனது கதிர்களால் வியாபித்திருக்கிறார் என்பது மட்டுமல்ல, திராவிடக் கருத்தான வான் கடவுள், நீல நிறத்தவர், ஏனெனில் வான் நீலமானது என்பதுமாகும்.” ரூபன் ஒருபடி மேலே சென்று, “விஷ்ணு வேதத்துக்குப் பிந்தைய காலத்தில் பெரும் கடவுளாக ஆனதற்குக் காரணம் அவர் அதற்கு முன்னரேயே ஆரியர்களுக்கு முந்தைய இந்தியாவில் முக்கியமான கடவுளாக இருந்தார்” என்கிறார். வேதக் கடவுள்களின் கருத்துருவாக்கத்தில் ஆரியத்துக்கு முந்தைய அல்லது ஆரியமல்லாத பகுதிகளை தெளிவாகப் பிரித்துக்காட்ட முடியாவிட்டாலும்கூட, வேதக் கடவுள்களின் தெய்வீகத்தில் பழங்குடியினரின் தொன்மையும் கலந்துள்ளது என்பதை வெறும் ஊகம் என்று மட்டுமே ஒதுக்கித் தள்ளிவிடமுடியாது.

[இது என்னோட எழுத்து இல்லைங்க. ஒரு பிரபல எழுத்தாளரின் பிஎச்.டி தீசிஸின் முதல் மூன்று பத்தி்களின் (என்னுடைய) தமிழாக்கம். அந்த எழுத்தாளர் யார் என்று கண்டுபிடியுங்கள்.]

14 comments:

  1. பிரபல எழுத்தாளர் == ஜெயமோகன் ?

    ReplyDelete
  2. சந்தோஷ் குரு: இல்லை.

    ReplyDelete
  3. கட்டாயமாக ஒரு தமிழ் வைணவர்தான்..

    ReplyDelete
  4. இவ்வளவு ஆங்கில ஆராய்ச்சியாளர்கள் பெயர் இருக்கிறதே. PHD வேற. ஒருவேளை மேற்கத்திய (ஆங்கில ?) எழுத்தாளராக இருக்கலாம். க்ளூ கொடுங்க.

    ReplyDelete
  5. இந்திரா பார்த்தசாரதிதான்.

    இதில் என்னை ஆச்சரியப்படவைத்தது, ‘விஷ்ணு' என்ற பெயருக்கான பொருளைக் கண்டுபிடிக்க இத்தனை வெளிநாட்டவரை துணைக்கு அழைத்தது. இதற்குக் காரணம், அவர்கள்தான் ‘ஆராய்ச்சி அறிக்கை/தாள்'களாக இவற்றை எழுதிவைத்ததாக இருக்கும்.

    போரடிக்காமல் படிக்கக்கூடிய முனைவர் பட்ட அறிக்கையாக உள்ளது இது. ஆனால் ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழை டயாக்ரிடிக்கில் படிப்பது சற்றே கஷ்டமாக இருக்கிறது.

    ReplyDelete
  6. பத்ரி

    இ பா அவர்களின் ஆய்வை மதுரைப் பல்கலை பேராசிரியர் ஏற்கனவே மொழி பெயர்த்துள்ளார், ஆனால் அது படிக்க மிகவும் கஷ்டமான கொடுந்தமிழில் இருந்தது. இப்பொழுது நீங்கள் புது மொழி பெயர்ப்பு கொண்டு வரப் போகிறீர்களா?

    அன்புடன்
    ச.திருமலை

    ReplyDelete
  7. திருமலை: நான் மொழிபெயர்ப்பு பற்றி யோசிக்கவில்லை. வெறுமனே அந்தப் புத்தகத்தைப் படிக்க இப்போதுதான் எடுத்துள்ளேன். அதனால்தான் அந்தப் பதிவு.

    ReplyDelete
  8. பத்ரி : புத்தகத்தின் பெயர் என்ன ?

    ReplyDelete
  9. இன்று வைணமோ அல்லது சைவம் பற்றி ஆய்வு செய்ய தமிழ், சம்ஸ்கிருத அறிவு மட்டும் போதாது.
    ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள நூற்களையும் படித்தேயாக வேண்டும்.
    ஜெர்மன்,பிரெஞ்ச் மொழிகளிலும் எழுதிக் குவித்திருக்கிறார்கள்.

    மோதிலால் பனராசிதாஸ் என்ற
    ஒரு பதிப்பகம் வெளியிடும் நூற்களை
    பார்த்தாலே நான் சொல்வது விளங்கும்.தமிழ் வைணவ பக்தி மரபு குறித்து ஆங்கிலத்தில் பலர் எழுதியிருக்கிறார்கள். உதாரணமாக
    வசுதா நாராயணன் எழுதியிருக்கும் நூற்கள்
    The Vernacular Veda: Revelation, Recitation, and Ritual (1994);
    The Way and the Goal: Expressions of Devotion in the Early Srivaisnava Tradition (1987);
    The Tamil Veda: Pillan's Interpretation of the Tiruvaymoli (1989; co-authored with John Carman);
    வைணவ பக்தி மரபு குறித்து ஆய்வு செய்யும் இன்றைய ஆய்வாளர் வைணவம் பற்றியே ஒரு ஐம்பது
    ஆங்கில நூற்களாவது படித்தேயாக வேண்டும் என்ற நிலைதான் இன்று.இ.பா முனைவர் பட்டத்திற்காக ஆய்வு
    செய்த போது நிலைமை பரவாயில்லை :).

    ReplyDelete
  10. நன்றி பத்ரி. எளிமையான மொழிபெயர்ப்பில் மீண்டும் கொணர்ந்தால் நல்லது.

    கிருஷ்ணன்: அந்தப் புத்தகத்தின் பெயர் "தமிழ் இலக்கியங்களில் வைணவம்". தமிழ் புத்தகாலயத்தின் பிரசுரம். இது இ பா ஆங்கிலத்தில் எழுதிய பி எச் டி தீஸிஸின் தமிழ் மொழி பெயர்ப்பு.

    அன்புடன்
    ச.திருமலை

    ReplyDelete
  11. http://www.islamkalvi.com/religions/islam_hindu_comparision_02.htm

    ReplyDelete