Sunday, October 12, 2008

ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன?

நேற்று, மக்கள் தொலைக்காட்சியிலிருந்து “ஸ்பெக்ட்ரம்னா என்ன, 2G, 3Gனா என்ன” என்று எளிதாக விளக்குங்கள் என்று கேட்டார்கள். பேசியதை ரெகார்ட் செய்துகொண்டு போனார்கள். அதை நேற்றோ, இன்றோ ஒளிபரப்பினார்களா என்று தெரியவில்லை.

தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜாமீது சில குற்றச்சாட்டுகள். அதற்கு அவர் கொடுத்த தன்னிலை விளக்கம். தினமணியில் வெளியான சில கடிதங்கள். பொதுவாக நில ஊழல், கோட்டா/பெர்மிட் ஊழல் என்றால் என்ன என்று நம் மக்களுக்குத் தெளிவாகப் புரியும். ஆனால் ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன என்று தெரியாததால் தயாநிதி மாறன் என்ன சொல்கிறார், ராஜா என்ன சொல்கிறார் என்று குழப்பம். முடிந்தவரை இங்கே விளக்குகிறேன்.

மின்சாரம் உருவாக்கும் மின்புலம் (electric field), காந்தம் உருவாக்கும் காந்தப் புலம் (magnetic field) ஆகியவற்றுக்கு இடையேயான உறவைக் கவனித்து, அவற்றை கோட்பாடு ரீதியாக ஒருங்கிணைத்து மின்காந்தப் புலம் (electromagnetic field) என்பதை முன்வைத்தார் பிரிட்டிஷ் விஞ்ஞானி, ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல். அதிலிருந்து மின்காந்த அலைகள் என்று ஏதேனும் இருக்கவேண்டும் என்று மேக்ஸ்வெல் சொன்னார். பின்னர் மேக்ஸ்வெல், ஒளி அலைகளும் மின்காந்த அலைகள்தான் என்ற கருத்தை வெளியிட்டார்.

நம் கண்ணில் படும் பல்வேறு நிறங்களைக் கொண்ட ஒளி அலைகள் யாவுமே மின்காந்த அலைகள்தாம். சூரிய ஒளி (வெள்ளை), ஒரு முக்கோணப் படிகம் வழியாகச் செலுத்தப்படும்போது 7 வெவ்வேறு வண்ணங்களாகப் பிரியும். அதே வண்ணங்கள் வானவில்லில் காணப்படும். இந்த ஒவ்வொரு வண்ண ஒளி அலையும் மின்காந்த அலைதான். இவை அனைத்தும் ஒன்றாகச் சேரும்போது வண்னங்கள் மறைந்து, வெளிர் ஒளி தென்படுகிறது.

ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாத பல மின்காந்த அலைகள் உள்ளன. எலும்பு முறிவைக் காண படம் எடுக்கப் பயன்படும் எக்ஸ் கதிர்கள், நீரில் உள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லப் பயன்படும் புற ஊதாக் கதிர்கள், இரவில் பொருள்களைக் காணப் பயன்படுத்தும் அகச் சிவப்புக் கதிர்களை வெளியிடும் சிறப்புக் கண்ணாடி, நம் வீட்டில் மைக்ரோவேவ் அடுப்பில் வெளிப்படும் கதிர்கள். இவை அனைத்தும் மின்காந்த அலைகளே.

இவைதவிர, நாம் கேட்கும் வானொலி ஒலிபரப்பு மிதந்துவரும் அலைகள், தூரதர்ஷன் படங்கள் மிதந்து வரும் அலைகள், செல்பேசிச் சேவை அலைகள் என்று அனைத்தும் மின்காந்த அலைகள்தாம்.

இப்படி எல்லாமே மின்காந்த அலைகள் என்கிறோம். அதே நேரம் அவை வெவ்வேறானவை என்றும் சொல்கிறோம். இவற்றுக்கு இடையேயான ஒற்றுமை, வேற்றுமை யாவை?

இவை அனைத்துக்குமான ஒற்றுமை, இவை பரவும் வேகம். அவை அனைத்துமே ஒளியின் வேகமான c = 3 x 108 m/s என்ற வேகத்தில் செல்லக்கூடியவை.

இந்த அலைகள் ஒவ்வொன்றுக்கும் பிரத்யேகமாக இரண்டு பண்புகள் உள்ளன. அவை அதிர்வெண் எனப்படும் frequency (f); அலை நீளம் எனப்படும் wavelength (l). இந்த இரண்டுமே ஒன்றோடு ஒன்று தொடர்புகொண்டவையும்கூட. ஒரு மின்காந்த அலையின் அதிர்வெண்ணையும் அலை நீளத்தையும் பெருக்கினால், மின்காந்த அலைகளின் வேகமான c = 3 x 108 m/s கிடைத்துவிடும்.

எனவே மின்காந்த அலையின் அதிர்வெண் அதிகரித்தால், அதன் அலை நீலம் குறையும். அலை நீளம் அதிகரித்தால் அதிர்வெண் குறைவாக இருக்கும்.

சரி, இந்த அதிர்வெண் என்றால் என்ன?

நம் வீட்டில் உள்ள தாத்தா காலத்து சுவர்க் கடிகாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள பெண்டுலம் விநாடிக்கு ஒரு முறை இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்கும் போய்விட்டு வரும். கடிகாரம் சரியாக இயங்குகிறது என்றால் சரியாக ஒரு விநாடிக்கு ஒருமுறை மட்டும்தான் இது இப்படி ஒரு கோடியிலிருந்து மறுகோடிக்குச் சென்று வரும். பெண்டுலம் விநாடிக்கு ஒருமுறை அதிர்கிறது என்று சொல்லலாம். அப்படியானால் இதன் அதிர்வெண் = 1. இதற்கு அலகாக ஹெர்ட்ஸ் என்பதைச் சொல்கிறோம். ஹெய்ன்ரிச் ஹெர்ட்ஸ் என்ற ஜெர்மன் விஞ்ஞானிதான், மேக்ஸ்வெல் சுட்டிக்காட்டிய மின்காந்த அலைகள் இருப்பதைச் சோதனை ரீதியாகக் கண்டுபிடிக்க ஒரு கருவியை உருவாக்கினார்.

இப்போது தாத்தா காலத்து கடிகாரத்தை எடுத்து அதில் உள்ள ஸ்பிரிங், பிற பாகங்களை உல்ட்டா செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது ஒரு விநாடிக்கு பெண்டுலம் இருமுறை ஆடுகிறது. இப்போது அதன் அதிர்வெண் = 2 ஹெர்ட்ஸ். இதே, விநாடிக்கு நூறு முறை ஆடினால், அதிர்வெண் = 100 ஹெர்ட்ஸ்.

கிராம், கிலோ கிராம் என்பதைப் போல, பைட், கிலோ பைட், மெகா பைட், கிகா பைட் போல, இங்கும் உண்டு.

1000 ஹெர்ட்ஸ் = 1 கிலோ ஹெர்ட்ஸ்,
1,000,000 ஹெர்ட்ஸ் = 1000 கிலோ ஹெர்ட்ஸ் = 1 மெகா ஹெர்ட்ஸ்
1000 மெகா ஹெர்ட்ஸ் = 1 கிகா ஹெர்ட்ஸ்
1000 கிகா ஹெர்ட்ஸ் = 1 டெரா ஹெர்ட்ஸ்.

நாம் கண்ணால் காணும் ஒளிக்கதிர்களுக்கு, அதிர்வெண் 430 - 750 டெரா ஹெர்ட்ஸ் என்பதற்குள் இருக்கும். இதில் 750 டெரா ஹெர்ட்ஸ் என்பது ஊதா நிற ஒளி. 430 டெரா ஹெர்ட்ஸ் என்பது சிவப்பு நிறம். புற ஊதாக் கதிர்கள் என்றால், 750 டெரா ஹெர்ட்ஸை விட அதிகம் அதிர்வெண் கொண்ட அலைகள். அகச் சிவப்புக் கதிர்கள் என்றால் 430 டெரா ஹெர்ட்ஸை விடக் குறைந்த அதிர்வெண் கொண்ட அலைகள்.

நாம் அதிகம் அறிந்த அலைகள், கிலோ ஹெர்ட்ஸ், மெகா ஹெர்ட்ஸ் என்பதில் இருக்கும். வானொலி இயங்கும் அலைவரிசை இங்குதான் உள்ளது.

பண்பலை வானொலி (FM) பிரபலமாவதற்கு முன்பிருந்தே, AM வானொலி இயங்கிவருகிறது. AM என்றால் Amplitude Modulation. அதாவது ஒரு குறிப்பிட்ட மின்காந்த அலையை எடுத்துக்கொண்டு (Carrier Frequency - ஊர்தி அதிர்வெண்), அதன்மீது நாம் பேசுவது, பாடுவது போன்ற ஒலி அலைகளின் வீச்சை ஏற்றி, கிடைக்கும் புதிய அலையை அனுப்பும் கருவி மூலம் அனுப்புவது. Frequency Modulation என்றால், அலை வீச்சுக்கு பதிலாக, ஒலி அலையின் அதிர்வெண் மாற்றத்தை, ஊர்தி அதிர்வெண்ணுடன் சேர்த்து அனுப்புவது. (இதைப்பற்றி பின்னர் தனியாக எழுதவேண்டும்.)

இங்கே கவனத்தில் கொள்ளவேண்டியது, AM வானொலி என்றால் அதில் மீடியம் வேவ் என்று சொல்லப்படுவது இயங்குவது 520 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 1610 கிலோ ஹெர்ட்ஸ் வரையிலானது. இந்தப் பகுதியை மீடியம் வேவ் ஸ்பெக்ட்ரம் என்று சொல்லலாம். அதாவது ஏம்.எம் வானொலியின் மீடியம் வேவ் அலைகளின் அலைப் பரவல்.

இதே பண்பலை வானொலி என்றால் 87.5 மெகா ஹெர்ட்ஸ் தொடங்கி 108 மெகா ஹெர்ட்ஸ் வரையிலானவை.

ஏ.எம் வானொலி என்றால் அடுத்தடுத்த நிலையங்களுக்கு இடையில் 9 கிலோ ஹெர்ட்ஸ் அல்லது 10 கிலோ ஹெர்ட்ஸ் இடைவெளி வேண்டும். அப்போதுதான் ஒரு நிலையத்தின் நிகழ்ச்சிகளை, பிற நிலையங்களின் குறுக்கீடு இல்லாமல் கேட்கமுடியும். பண்பலை வானொலி என்றால், அடுத்தடுத்த நிலையங்களுக்கு இடையில் குறைந்தது 0.8 மெகா ஹெர்ட்ஸ் இடைவெளி இருக்கவேண்டும். சென்னையில் அடுத்தடுத்துள்ள வானொலிகளின் அலைவரிசையை கவனியுங்கள். 0.8 என்ற வித்தியாசம் இருக்கும்.

சரி, ஒரு வானொலி நிலையம் எவ்வளவு தொலைவுக்கு ஒலிபரப்பமுடியும்? மீடியம் வேவ் ஏ.எம் என்றால் 100-200 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம். இதிலேயே ஷார்ட் வேவ் என்ற முறை மூலம் சில ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை செல்லலாம். அப்படித்தான் அமெரிக்க, ஆஸ்திரேலிய, பிரிட்டிஷ் வானொலிகளை இந்தியாவில் கேட்கமுடியும்.

பண்பலை என்றால், அவை ஒரே ஊருக்குள் அடங்கிவிடுபவை. அதிகபட்சம் 20-30 கிலோமீட்டர் தூரத்துக்குள் நின்றுவிடும். ஆனால், ஏ.எம் வானொலியைவிடத் துல்லியமாக, ஸ்டீரியோ திறனுடன், கொரமுர சத்தம் இல்லாமல் தெளிவாகக் கேட்கும்.

அப்படியானால் 87.5-ல் ஆரம்பித்து 108-க்குள் எத்தனை பண்பலை நிலையங்கள் இருக்கமுடியும்? 25 நிலையங்கள்தான். உடனேயே போட்டி ஆரம்பித்துவிடுகிறது அல்லவா?

யாருக்கு இந்த நிலையங்களை அளிப்பது? அதற்குத்தான் ஏலம் போடுகிறார்கள். யார் அதிக ஏலத்துக்கு எடுக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் கொடுக்கப்படும்.

*

சரி, இதை மனத்தில் வைத்துக்கொண்டு, இப்பொது செல்பேசிச் சேவைக்கு வருவோம். இந்தச் சேவைகள், 800, 900, 1800, 1900 மெகா ஹெர்ட்சில் ஏதோ ஒன்றில் இயங்கும். பல்வேறு நாடுகளில் வெவ்வேறு அதிர்வெண்ணில் இருக்கும். இந்தியாவில் 900, 1800 என்ற இரண்டு அதிர்வெண்களில் செல்பேசிச் சேவைகள் இயங்குகின்றன.

1800 மெகா ஹெர்ட்ஸில் செல்பேசிச் சேவை இயங்குகிறது என்றால் என்ன பொருள்? உண்மையில், இந்த ஊர்தி அதிர்வெண்ணை அடிப்படையாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட அலைப் பரவலை (spectrum) இந்தச் சேவைக்காக ஒதுக்குவார்கள். வானொலி போல இல்லாமல், செல்பேசிச் சேவைக்கு, ஒவ்வொரு நிறுவனத்துக்கு இரண்டு பரவல் தேவை. ஒன்று, செல்பேசிச் சேவையின் மையம், செல்பேசி கோபுரங்களோடு தொடர்பு கொள்ள. மற்றொன்று, கோபுரங்கள் தனிப்பட்ட செல்பேசிகளுடன் தொடர்பு கொள்ள. அதாவது,

1710 - 1785 MHz அப்லிங்க் (75 மெகா ஹெர்ட்ஸ் பரவல்)
1805 - 1880 MHz டவுன்லிங்க் (75 மெகா ஹெர்ட்ஸ் பரவல்)

இதற்குள், எத்தனை செல்பேசி நிறுவனங்களை அனுமதிக்கமுடியும்? தகவல் தொடர்பு அமைச்சகம், ஒரு GSM நிறுவனத்துக்கு 10 மெகா ஹெர்ட்ஸ் பரவலும், ஒரு CDMA நிறுவனத்துக்கு 5 மெகா ஹெர்ட்ஸ் பரவலும் தரலாம் என்று அதற்குமேல் தரப்படாது என்றும் சொல்கிறது. ஆக, சுமார் 10 நிறுவனங்கள்தான் அதிகபட்சம் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் இருக்கமுடியும்.

900, 1800 ஆகிய இரண்டையும் சேர்த்தால், இதைப்போல இரண்டு மடங்கு இருக்கமுடியும்.

இங்கும், போட்டிகள் அதிகமாக இருந்தால், ஏல முறையில் கொடுத்தால்தான் அரசுக்கு அதிகமாகப் பணம் கிடைக்கும்.

*

சரி, இந்த 2G, 3G என்றால் என்ன?

முதலில் செல்பேசி அனலாக் என்ற முறையில் இயங்கியது. இதனை முதலாம் தலைமுறை - 1st Generation - எனலாம். இதைத்தான் 1G என்கிறோம். அடுத்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் இயங்கும் இப்போதைய செல்பேசிச் சேவை - GSM (TDMA), CDMA என்ற இரு வழிகளிலும் இயங்குவது. இது இரண்டாம் தலைமுறை - 2G. இதில் குரலை அனுப்புவது எளிது. ஆனால் மக்களது விருப்பம், படங்கள், ஒலி, ஒளித் துண்டுகளை அனுப்புவது என்று இருப்பதால், அடுத்தக்கட்ட நுட்பம் உள்ளே வந்தது. இதுதான் 3G எனப்படும் மூன்றாம் தலைமுறை.

3G எந்த அதிர்வெண்ணில் இயங்கும்? இது 2100 மெகா ஹெர்ட்ஸ் என்ற ஊர்தி அதிர்வெண்ணில் இயங்கும் என்று வரையறுத்துள்ளாகள்.

அப்லிங்க்: 1920-1980 (60 மெகா ஹெர்ட்ஸ் பரவல்)
டவுன்லிங்க்: 2110-2170 (60 மெகா ஹெர்ட்ஸ் பரவல்)

அடுத்து, இந்தச் சேவையை வழங்க விரும்பும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் எவ்வளவு மெகா ஹெர்ட்ஸ் பரவலைத் தருவது; எனவே எவ்வளவு நிறுவனங்களை அனுமதிப்பது என்ற கேள்வி எழுகிறது. மேலும் பல கேள்விகளும் எழுகின்றன.

1. ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களுக்கு, இந்த அதிர்வெண் பரவலை சமமாகப் பிரித்துக் கொடுத்துவிடலாமா?
2. இலவசமாகவா? ஆண்டுக்கு இத்தனை என்ற கட்டணமாகவா? அல்லது வருமானப் பங்கு (revenue sharing) என்ற முறையிலா?
3. புது ஏலத்துக்கு விட்டு, புதிதாக யார் வேண்டுமானாலும் ஏலத்தில் போட்டியிடலாம் என்று சொல்வதா?
4. அப்படி ஏலம் விடுவதால் அரசுக்குப் பணம் நிறையக் கிடைத்தாலும், இதனால், இப்படி ஏலம் எடுத்த நிறுவனங்கள் போண்டியாகும் அபாயமும் உள்ளது. அப்போது என்ன செய்வது?
5. அரசின் நிறுவனமான BSNL-ஐ எப்படி எடுத்துக்கொள்வது? அவர்களைப் பணம் கட்டச் சொல்லப்போகிறோமோ? அப்படியானால் அவர்களும் ஏலத்தில் போட்டியிடுவதா? அல்லது ஏலத்தில் ஒர் இடத்தைக் குறைவாக வைத்து, ஏலம் எடுத்தவர்களில் குறைவான தொகை என்னவோ அதையே BSNL-ம் கொடுக்கும் என்று வைத்துக்கொள்ளலாமா? அல்லது தினமணியில் சொல்வதைப் போல, அதிகபட்ச தொகை என்னவோ அதை BSNL செலுத்தவேண்டும் என்று சொல்வதா?

மேலும் பல கேள்விகளும் உண்டு. இதில் நாட்டு மக்களுக்கு எது நன்மை, எது தீமை என்று ஒரு பக்கம் இருப்பதுபோல, பதவியில் இருக்கும் அரசியல்வாதிக்கு எது நன்மை, எது தீமை என்பதும் உண்டு.

ஸ்பெக்ட்ரம் (அலைப் பரவல்) என்பது மிக முக்கியமான வளம். கனிம வளங்களைப் போல, நிலத்தைப் போல, இதுவும் மிக முக்கியமானது. இதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் எப்பொதுமே கொள்கைக் குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும்.

எனவேதான் கொள்கை முடிவுகளை மிகவும் வெளிப்படையாகச் செய்யவேண்டும்.

அதில்தான் நமது அரசு தோல்வியுறுகிறது. மிகவும் ரகசியமாகப் பல முடிவுகள் எடுக்கப்படுகின்றன. கேபினெட்டில் உள்ள பல அமைச்சர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் எதுவுமே கிடையாது. அங்கேயே அப்படி என்றால், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பாடு சுத்தம்! அதற்கு மேலாக, நமக்கோ நமது அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள்மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் எல்லாம் பொதுவாகவே திருடர்கள் என்று நாம் நம்புகிறோம். அதற்கு ஏற்றார்போல அவர்களது சொத்துக்களின் விவரம் (அதாவது வெளியே தெரிந்தவை) நம்மை பிரமிக்கவைக்கிறது.

இப்போது, ஸ்பெக்ட்ரம் பற்றி வெகுஜனப் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் பேசப்படுவதே ஆரோக்கியமான விஷயம்.

29 comments:

  1. பத்ரி,
    நல்ல விளக்கம். இப்படி அலை வரிசையை பிரித்துக் கொடுப்பதில் அரசுக்கு சுமார் ௨௫,000
    கோடி நட்டம் என்று சொல்கிறார்கள். திரு.இராசா அதை மறுக்கிறார். ஆனால் , இதில் யார் சொல்வது உண்மை என்பதை எளிதில் கண்டு பிடிக்க முடியாதா? பத்திரிக்கைகளில் மாறி மாறி செய்தி வருகிறதே தவிர , யார் மீது தவறு எனபது தெரிய வில்லை.

    ReplyDelete
  2. நட்டம் என்பது ‘பெயரளவுக்குத்தான்’. அதாவது அரசு, அலைப்பரவலை இலவசமாகக் கொடுக்க முடிவு செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்படிச் செய்வதால் மக்களுக்கு நன்மை ஏற்படும் என்று கேபினெட் முடிவு செய்கிறது என்று வைத்துக்கொள்வோம். இதனை அரசுக்கு நட்டம் என்று எடுத்துக்கொள்ளலாமா? கூடாது.

    2G சேவைகளைக் கொடுக்க ஆரம்பித்த காலகட்டத்தில் முதலில் உரிமத் தொகை என்பதை வெகு அதிகமாக அரசு வைத்தது. அப்போது மிகக் குறைந்த வாடிக்கையாளர்கள் மட்டுமே இருந்தனர். அனைத்து செல்பேசி நிறுவனங்களும் கடுமையான நட்டமடைந்தனர். இதனால் அரசு ஸ்பெக்ட்ரத்துக்கு ஆண்டுக்கு இவ்வளவு உரிமத் தொகை என்பதாக இல்லாமல், ஒரு நிறுவனம் பெறும் மொத்த வருமானத்தில் 1.5% (என்று நினைக்கிறேன்) என்று கொடுக்கவேண்டும் என்று விதித்தனர்.

    ராஜாமீது குற்றம் சாட்ட எந்த முகாந்திரமும் இல்லை என்பதே என் கருத்து.

    எனக்கு ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் நம்பிக்கை இல்லை. ஐரோப்பாவில் பல நாடுகளில் ஏலத்தில் எக்கச்சக்கமாகப் பணத்தைப் போட்ட நிறுவனங்கள் அதனால் மிகவும் தடுமாறின. ஏலத்தில் எப்போதுமே தேவையைவிட அதிகமான தொகையை ஒருவர் கேட்க நேரிடும்.

    அதற்கு பதிலாக, முதல் 3 வருடங்களில் ஒரு குறிப்பிட்ட தொகை என்று அரசு குத்துமதிப்பாக நிர்ணயிக்கலாம். பிறகு 3 வருடங்கள் கழித்து, வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் என்பதை உரிமத் தொகையாக நிர்ணயிக்கலாம். இது அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

    ReplyDelete
  3. இலவசமாகவோ, அல்லது குறைந்த தொகைக்கோ ஏன் கொடுக்க வேண்டும்? இதை வைத்து பணம் பண்ணுபவர்கள் தனியார் துறை முதலாளிகள் தானே? வருமானத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அரசுக்கு செலுத்த வேண்டும் எனபது நல்ல முறை தான் என்றாலும், நிறுவனகள் ஒழுங்காக கணக்கு வழக்கை காட்டி அதைப் பின்பற்றுமா எனபது தெரியவில்லை!
    எந்த நிறுவனமும் மக்களுக்கு சேவை செய்வதில்லை. இலாபம் எனபது மட்டுமே அவர்களது குறிக்கோள். இதற்கு அரசு துணை போகக் கூடாது.

    ReplyDelete
  4. நன்றி பத்ரி,

    தகவல் அனைத்தும் நன்கு விளக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  5. பத்ரி

    மிகவும் முக்கியமான நேரத்தில் மிகவும் முக்கியமான பதிவு என்றே நினைக்கிறேன், திரு. ராஜாவின் மீதான புகார்கள் அர்த்தமில்லாதவை என்பதை உங்கள் விளக்கம் தெளிவுபடுத்துகின்றது, தேன் எடுத்தவன் புறங்கையை நக்காமல் விடமாட்டான் என்கிற எண்ணம் மக்களிடம் உள்ளது அதை உருவாக்கியவர்களும் அரசியல்வாதிகள்தான், 1G, 2G,3G பற்றிய வேறுபாடு இப்போது புரிகிறது, அதில் 2G அலைகள் கவனத்துக்கு வராமல் மறைந்து இருந்ததுபோல் ஒரு குழப்பம் இருந்ததாகவும், தான் அதை கண்டு பிடித்து இப்போது விற்றுள்ளதாகவும் திரு.ராஜா கூறுகிறார் அது என்ன, ஒவ்வொரு G யிலும் 60 மெகா ஹெர்ட்ஸ் இருக்குமா, 3G இனிதான் ஏலத்தில் விடப்போகிறோம் என்கிறார் அப்படியானால் அது எப்படி மக்களுக்கு நன்மை செய்தது போல் ஆகும் ஏன்னனில் தாங்கள் கூறியது போல் ஏலமுறை நஷ்டமடைய செய்ய வாய்ப்புகள் உள்ளதாக கூறியுள்ளீர்கள்

    செல்வம்
    dhavaneri.blogspot.com

    ReplyDelete
  6. கிருஷ்: இலவசமாகக் கொடுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால் ஆரம்பத்தில் ஏலம் என்று சென்றால், பல நிறுவனங்கள் அதிகமாக ஏலம் கேட்கும். பிறகு அந்தப் பணத்தைச் செலவழித்தபிறகு, எப்படி நிறுவனத்தை லாபத்துக்குக் கொண்டுசெல்வது என்று தெரியாமல் முழிக்கும். இன்றைய கிரெடிட் கிரஞ்ச் கட்டத்தில், இவர்கள் பணம் கடன் வாங்கியும் கொடுக்கமுடியாது. எனவே பல இந்திய நிறுவனங்களால் போட்டி போட முடியாது.

    ஆனால், வருமானத்தில் ஒரு பங்கு அரசுக்கு என்றால், கணிசமான தொகை உரிமமாக அரசுக்கு வந்துசேரும்.

    செல்வன்: குறிப்பிட்ட அளவு அலைப்பரவலைத் தான்தான் கண்டுபிடித்து வெளியே விட்டதாக ராஜா சொல்வதும் அபத்தமானதே.

    ஆரம்ப கட்டத்தில் ஒரு வட்டத்துக்கு இரண்டே இரண்டு பேர்தான் சேவையைக் கொடுக்கலாம் என்று ஆர்பிட்ரரியாக ஒரு கொள்கையை வைத்திருந்தார்கள். பின்னர் மேலும் 2 பேர் வரலாம் என்று அனுமதித்தார்கள். பின் ஐந்தாவதாக பி.எஸ்.என்.எல்/எம்.டி.என்.எல் வந்தது. அடுத்து சி.டி.எம்.ஏ தொழில்நுட்பப் பின் கொல்லை வழியாக ரிலையன்ஸ் உள்ளே வந்தது. அதனால் அதை சட்டபூர்வமாக்கி யுனிவர்சல் லைசன்ஸ் என்பதைக் கொடுத்தார்கள். அதற்கு அடுத்து, டாடா சி.டி.எம்.ஏ முறையைக் கொண்டுவந்தது.

    அதன்பின்னரே, அலைப்பரவலுக்கு அடிதடி ஆரம்பித்தது. நிறுவனங்களது வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகமாகவே, இந்த நிலை ஏற்பட்டது. நடுவில் 2G, 3G அலைப்பரவலில் ஒரு பங்கு, ராணுவத்தின் கையில் இருந்தது. இது சுமார் 60 மெகா ஹெர்ட்ஸ். இதை ராணுவத்திடம் இருந்து திரும்பிப் பெற, யாரும் பெருமுயற்சி எடுக்காதபோது, ராஜா அதில் கவனத்தைச் செலுத்தினார்.

    ஆனால் முந்தைய அமைச்சர்கள் அதில் ஆர்வம் செலுத்தவில்லை என்று சொல்லக்கூடாது. அவர்கள் அமைச்சர்களாக இருந்தபோது, அந்த அலைப்பரவல் தேவையாக இருக்கவில்லை.

    இப்படிக் கிடைத்த அலைப்பரவலைக் கொண்டு மேற்கொண்டு பல உரிமங்களைக் கொடுக்கமுடிந்தது. இது நல்லதா, கெட்டதா என்று இப்பொது சொல்லமுடியாது. எந்த வட்டத்திலும் (மாநிலத்திலும்) ஐந்துக்குமேல் செல்பேசிச் சேவைகள் இருந்து உருப்பட்டுவிட முடியாது என்பதே என் எண்ணம். எனவே 10-12 உரிமங்களைக் கொடுத்தால் இதில் 6-7 பேர் நஷ்டப்பட்டு கடையை மூடவேண்டிவரும். ஆனால் அது அவர்கள் பணம்.

    ஒவ்வொரு சேவையைத் தரும் அதிர்வெண்ணிலும் குறிப்பிட்ட பரவல்தான் இருக்கும். ஆனால் அது ஒரே சீராக இருக்காது. அதிகத் தகவலை (பேண்ட்விட்த்) அனுப்பும் பகுதியில், குறைவான சேவை நிறுவனங்களே இருக்கமுடியும். 2G சேவையை 10-12 பேர் ஒரு குறிப்பிட்ட புவிப் பரப்பில் தரும் நிலையில், அதே பகுதியில் 3G சேவையை 5-6 பேர்தான் அளிக்கமுடியும். 2G யுடன் ஒப்பிடும்போது, 3G யில் அதிக கோபுரங்களை நடவேண்டும். கருவிகளின் செலவு அதிகமாகும். எனவே 3G சேவை தரும் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க அதிகக் காலம் பிடிக்கும்.

    ReplyDelete
  7. இந்த மாதிரி யாராச்சும் எனக்கு பௌதீகம் சொல்லித் தந்திருந்தா எங்கயோ போயிருப்பேன்.

    என்ன வேலை செஞ்சுட்டு இருந்தாலும், அப்படியே போட்டுட்டு ஒரு ரெண்டு வருஷம் சபாட்டிகல்ல வாத்தியார் ( ஐவி லீக் தவிர்த்த கல்லூரிகள் :-)) வேலைக்குப் போங்க..நெறைய பசங்க உருப்படுவாங்க.

    ReplyDelete
  8. நன்றி பத்ரி, தங்கள் பதில் மிக அழகாக புரிகிறது, மேலும் 10 -12 நிறுவனங்களுக்கு கொடுப்பதன் தவறும் புரிகிறது, இங்கு(gulf) 2 -3 நிருவனங்களே உள்ளன ஆனால் சலுகைகள் குறைவு சிக்னல் பிரச்சினைகள் இல்லை, சிறிய நாடுகள் என்பதால் இருக்கலாம், ஆகையால் இவர்கள் கட்டனத்தை குறைக்காமல் இரூக்கிறார்கள்.

    ReplyDelete
  9. பதிவினை படித்து முடிக்கும் முன்னரே பிரகாஷ் கூறியதுதான் எனக்கும் தோன்றியது...

    இன்னமும் அதிகமாக எழுதியிருந்தாலும் படித்திருப்பேன்...

    அதிக ஏலம் என்பது, பின்னர் வாடிக்கையாளரின் தலையில்தானே வைக்கப்படும். உரிமத் தொகை வாங்குவதே புத்திசாலித்தனம். சேவைக் கட்டணத்தை கட்டுக்குள் வைக்க உதவும்

    தொலைத்தொடர்பு குறைந்த செலவில் பரந்துபட்ட அளவில் மக்களை சென்று அடைவது, பொருளாதார முன்னேற்றத்துக்கே வழி வகுக்கும்.

    GDP பெருக்கியும் ஏலத்தொகையினை எடுத்து விடலாம். இல்லையா?

    ஒரு அசட்டுத்தனமான கேள்வி. இந்த மின் காந்த அலைகள் எப்போதும் நம்மைச் சுற்றி இருக்குமா? அதனால் பாதிப்பு ஏதும் கிடையாதா?

    ReplyDelete
  10. பிரபு: நீங்கள் சொல்லும் காரணத்தால்தான் நானும் ஏலத்துக்கு பதில் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் என்பதை உரிமத் தொகையாக நிர்ணயிக்குமாறு சொல்வேன்.

    நம்மைச் சுற்றி எங்கு பார்த்தாலும் மின்காந்த அலைகள் உள்ளன. சூரிய ஒளி ஒன்று. வானொலி அலைகள், செல்பேசி அலைகள், நமது வீட்டில் உள்ள ரிமோட் கண்ட்ரோலின் அகச் சிவப்புக் கதிர்கள், நம் வீட்டில் உள்ள மைக்ரோவேவ் அடுப்பில் வெளியாகும் மைக்ரோவேவ், எக்ஸ் கதிர் மெஷினில் இருந்து வெளியாகும் கதிர்கள், தொலைக்காட்சிப் பெட்டியில் இருந்தும் கம்ப்யூட்டர் மானிட்டரிலிருந்தும் வெளியாகும் அகச்சிவப்பு மற்றும் புற ஊதாக் கதிர்கள், செல்ஃபோன் கோபுரங்கள், கார்ட்லெஸ் தொலைபேசிகள், இப்படி, இப்படி...

    மின்காந்த அலைகளால் நிச்சயம் உடலுக்கு பாதிப்பு இருக்கும். ஆனால் அணுக் கதிர் வீச்சு போலவோ அல்லது ஒருமித்த புற ஊதாக் கதிர் வீச்சு போலவோ, கடுமையாக இருக்காது. மேற்கொண்டு நிறைய ஆராய்ச்சிகள் தேவை.

    ஒவ்வொரு மின்னணுப் பொருளும் எத்தனை மின்காந்தக் கதிர்விச்சை வெளியிடலாம் என்பதற்கு சில எல்லைகள் உள்ளன. பொதுவாகவே எல்லாப் மின்னணுப் பொருள்களின் பின்னாலும் இதற்கான குறிப்புகள் இருக்கும். ஆனாலும் நம்மைச் சுற்றி ஏகப்பட்ட மின்னணுப் பொருள்கள் இருக்கும்போது, இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

    செல்பேசி கோபுரங்கள் போன்றவை, 3G சேவைகளுக்காக அமைக்கப்படும்போது அவற்றிலிருந்து 2G-ஐவிட அதிகமான கதிர்வீச்சு இருக்கும். Wi-Fi, Wi-Max தொழில்நுட்பங்கள் எல்லாவற்றுக்கும் கதிர்வீச்சு அளவு அதிகமாகிக்கொண்டே வரும்.

    மேலும், இந்தக் கதிர்வீச்சு எங்கு தொடங்குகிறதோ, அங்குதான் பாதிப்பு கடுமையாக இருக்கும். தினம் தினம் செல்பேசி கோபுரத்தின்கீழ் அமர்ந்தால் நிச்சயம் அதனால் பாதிப்பு இருக்கும்.

    நம் உடலின் செல்களால் எந்த அளவுக்கு இந்தக் கதிர்வீச்சுகளைத் தாங்கமுடியும் என்று தெரியவில்லை. இப்போதைக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பாதிப்பு இல்லை என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  11. //அதற்கு பதிலாக, முதல் 3 வருடங்களில் ஒரு குறிப்பிட்ட தொகை என்று அரசு குத்துமதிப்பாக நிர்ணயிக்கலாம். பிறகு 3 வருடங்கள் கழித்து, வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் என்பதை உரிமத் தொகையாக நிர்ணயிக்கலாம். இது அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.//

    நல்ல யோசனை !!

    ReplyDelete
  12. //ஆனால், வருமானத்தில் ஒரு பங்கு அரசுக்கு என்றால், கணிசமான தொகை உரிமமாக அரசுக்கு வந்துசேரும்.//

    அதிக லாபம் என்றால் அரசிற்கு அதிக வருமானம் தானே

    ReplyDelete
  13. //என்ன வேலை செஞ்சுட்டு இருந்தாலும், அப்படியே போட்டுட்டு ஒரு ரெண்டு வருஷம் சபாட்டிகல்ல வாத்தியார் ( ஐவி லீக் தவிர்த்த கல்லூரிகள் :-)) வேலைக்குப் போங்க..நெறைய பசங்க உருப்படுவாங்க.//

    வழி மொழிகிறேன்

    ReplyDelete
  14. //நம் உடலின் செல்களால் எந்த அளவுக்கு இந்தக் கதிர்வீச்சுகளைத் தாங்கமுடியும் என்று தெரியவில்லை. இப்போதைக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பாதிப்பு இல்லை என்றே நினைக்கிறேன்.//

    தொலைகாட்சி இருக்கும் அறையில் இருப்பதை விட அலைபேசி மின்காந்த அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று தோன்றவில்லை

    --

    பின் குறிப்பு : வீட்டில் இருக்கும் போது அலைபேசியில் பேசாமல் சாதா தொலைபேசியில் பேச மருத்துவர்கள் அறிவறுத்துகிறார்கள்

    ReplyDelete
  15. சுஜாதா நம்முடன் இல்லாத குறையை நீக்கி விட்டீர்கள்..........மேலும் இது போன்று தொடர்ந்து எழுதுங்கள் நாங்கள் பயன்பெறுவோம்..........

    ReplyDelete
  16. பத்ரி ஸார்..

    உங்களுடைய ஒவ்வொரு பதிவும் வலைப்பதிவுகளையும் தாண்டி அரசியல்வாதிகளுக்கே அதிக நன்மை தரக் கூடியதாக உள்ளது.

    அவர்களுக்கே தெரியாத புதிய, புதிய விஷயங்களைத் தொகுத்து வழங்கியுள்ளீர்கள். படித்துத் தெரிந்து கொண்டேன். நன்றி..

    ஆனாலும் ராசா மீதான ஒரு புகாருக்கு அவர் இன்னமும் வாய் திறக்கவில்லை.

    பல ஆயிரக்கணக்கான கோடிகள் புழங்கும் சக்தி கொண்ட இந்த ஏலத்தில் முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று சினிமா தியேட்டரில் டிக்கெட் கொடுப்பதைப் போல் அறிவித்து அதே போல் விடியற்காலை 5 மணிக்கெல்லாம் கியூவில் நிற்க வைத்து ஒப்பந்தங்களை வழங்கியிருக்கிறாரே.. அவ்வளவு அவசரம் ஏன்..

    2. உரிமம் பெற்ற ஒரு நிறுவனம் வெறும் லெட்டர்பேடு நிறுவனமாக இருந்து, அந்த உரிமத்தை மலேசியாவில் இருக்கும் வேறொரு நிறுவனத்திற்கு சுமார் 4000 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது.. அதனால் பயன் பெற்றவர்கள் யார், யார்.. அந்த நிறுவனத்தின் பங்குதாரர்கள் யார் என்று பத்திரிகையாளர்கள் கேட்ட பின்பு பதிலளிக்காமல் கூட்டத்தை முடித்துக் கொண்டு வெளியேறியதாக செய்திகள் வந்துள்ளன.

    இதில் அபாயமாக இருப்பது இந்த மறைமுகமான பேரங்கள்தான். இதற்காகத்தான் அமைச்சரை துறை தொழிலாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

    இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க விஷயம்.. பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு இந்த ஏலத்தில் கலந்து கொள்ள மறைமுகமாத் தடை விதித்து கொடுக்கப்படவும் இல்லையாம்.. ஏன்..

    பி.எஸ்.என்.எல்.லிற்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் அதுவும் ஒரு பிஸினஸ் செய்யுமே.. அரசுக்கு லாபமும், பங்கும் கிடைத்திருக்குமே.. யார் தடுத்தது.. ஏன் தடுத்தார்கள்..

    இதுதான் ஸார் அரசியல்..

    ReplyDelete
  17. உண்மைத் தமிழன்: உங்களது கேள்விகள் தெளிவானவை அல்ல. அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துக்கொள்வோம்.

    முதலில் பி.எஸ்.என்.எல். இப்பொது நடந்தது 2G அலைப்பரவல் “விற்பனை”. அதில் பி.எஸ்.என்.எல் கலந்துகொள்ளவேண்டியதில்லை. ஏனெனில் அவர்களுக்கு ஏற்கெனவே 2G அலைப்பரவல் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் நாளை 3G அலைப்பரவல் ஏலம் வந்தால், அங்கும்கூட பி.எஸ்.என்.எல்லுக்கு சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஏலத்தில் பங்குகொள்ளவேண்டியதில்லை. ஏலத்தில் ஐந்து இடங்கள் என்றால், அதிகம் ஏலத்தொகை கேட்ட ஐந்து பேர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஐவரில் மிகக் குறைந்த தொகையை யார் சொல்லியுள்ளனரோ, அதே தொகையை மட்டும் பி.எஸ்.என்.எல் கொடுத்தால் போதும். பி.எஸ்.என்.எல்லுக்கு (எம்.டி.என்.எல்லுக்கு அந்த இரண்டு நகரங்களிலும்) 3G அலைப்பரவல் கொடுக்கப்பட்டுவிடும்.

    எனவே பி.எஸ்.என்.எல், எந்தவிதத்திலும் பாதிக்கப்படப்போவதில்லை. மேலும் பி.எஸ்.என்.எல்லுக்கு 3G அலைப்பரவலும், சேவை அளிக்கும் உரிமையும் இப்போதே உண்டு. பிர தனியார் நிறுவனங்களுக்குத்தான் பிரச்னையே. அவர்களுக்குக் கிடைக்கலாம். கிடைக்காமலும் போகலாம்.

    இதனால், அவர்கள் யாரும் கருவிகளை வாங்குவதற்கு முன்னரே, பி.எஸ்.என்.எல் கருவிகளை வாங்கி, தயாராக இருக்கலாம். வேலையை ஆரம்பிக்கவும் செய்யலாம்.

    அடுத்து, ஸ்வான் டெலிகாம் பிரச்னை. இது ஒரு பிரச்னையே கிடையாது. ஒன்றும் தெரியாதவர்கள் கிளப்பிவிடும் வதந்தி. எந்த ஒரு நிறுவனமும் ஸ்பெக்ட்ரம் பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சகம் அறிவிக்கிறது. ஸ்வான் டெலிகாம் பெறுகிரது. இதில் பிரச்னை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

    அடுத்து ஸ்வான் டெலிகாமில் வேறு ஒருவர் வந்து பல மில்லியன் டாலர்களை முதலிடு செய்கிறார். இதில் என்ன பிரச்னை? அந்தப் பணத்தைக்கொண்டு, அந்த ஸ்பெக்ட்ரத்தை வைத்துக்கொண்டு, இந்த நிறுவனம் ஏகப்பட்ட செலவில் கருவிகளை வாங்கி, ஆட்களை வேலைக்கு எடுத்து, சேவையை வழங்கி, வாடிக்கையாளர்களைப் பிடித்து, பணம் சம்பாதித்து... போட்டிகளை சமாளித்து, சில ஆண்டுகள் கழித்து லாபம் சம்பாதிக்கப்போகிறது. அல்லது லாபம் சம்பாதிக்கமலேயே நஷ்டமும் அடைந்து கடையை இழுத்துமூடலாம்.

    இதைப்பற்றி அமைச்சகம் கண்டுகொள்ளவேண்டியதே இல்லை.

    ஏன் இந்த 2G அலைப்பரவலை வெறும் கட்டணத்துக்கு விற்றாகள்? ஏன் ஏலத்துக்கு விடவில்லை?

    இதற்கான பதிலை ராஜா தெளிவாகவே சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் (1991, 1992) 2G உரிமத்துக்கு என்று கனமான ஒரு தொகை வசூலிக்கப்பட்டது. பிறகு இது வருமானத்தில் ஒரு பங்கு என்று மாற்றப்பட்டது. பிறகு ஒரு குறிப்பிட்ட கட்டணம் என்று மாற்றப்பட்டது. இது கடந்த சில வருடங்களாக இருந்துவருவது.

    இதில் ராஜா வந்து ஏதோ குழப்படி செய்து, அரசு வருமானத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கினார் என்பது அபத்தமான பொய்.

    ஒரு கொள்கை என்று இருந்தால், அதன்படித்தான் செயல்படமுடியும். கொள்கையை நடுநடுவே மாற்றினால், முன்னால் வந்தவர்களுக்கு வசதியாகவும் பின்னால் வருபவர்களுக்குக் கஷ்டமாகவும் ஆகிவிடலாம் அல்லவா?

    பத்திரிகையாளர் கூட்டம் பற்றி: இங்கு கேள்வி கேட்டிருப்பவர், ராஜாவுக்கு எரிச்சலை ஊட்டியிருக்கலாம். அதனால் அவர் எழுந்து போயிருக்கலாம். அதனை விடுத்து, விஷயம் என்ன என்ரு ஆராய்ந்து பாருங்கள். விளங்கும்.

    ReplyDelete
  18. திரு.பத்ரி,

    அருமையான கட்டுரை.
    சில நாட்களுக்கு முன்தான் இந்த உரலைப் படித்தேன்.

    சபாட்டிகல் மற்றும் பாடமெடுப்பது - நானும் வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  19. ஸ்பெக்‌ட்ரம் பிரச்சினை இப்போது ஏன் எழுப்பப்படுகிறது என்பதும் அமைச்சர் ராசாவின் (நான் ரொம்ப நல்லவன் பாணி) பதிலும் போன்ற தி.மு.க-வின் உள்கட்சி அரசியலின் வெளிப்பாடே. மற்ற அரசியல் கட்சிகளும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் கூட்டணியை முன்வைத்தே கருத்துக்களை உதிர்கின்றன.

    ReplyDelete
  20. http://mdmk.org.in/article/apr09/spectrum

    Also read the above article.

    ReplyDelete
  21. பத்ரி சார் , இணையத்தில் மேய்வதில் ஏதாவது உருப்படியான விடயம் இருக்கும் என நிரூபிப்பது இது போன்ற விசயங்கள்தான் , மிக மிக நன்றி

    ReplyDelete
  22. ரொம்ப நாளா ராசா மேல் எனக்கு நம்பிக்கை உண்டு. அதை மிகத் தெளிவாக சொல்லி உள்ளீர்கள். சமீபத்தில் தமிழக அரசு உணவு பதப்படுத்தும் அமைச்சகம் உருவாக்க வேண்டும் என்று ஒரு மைய அமைச்சர் தெரிவித்தார்.

    அதற்கு பின்னூட்டமிட்ட நபர் ஒருவர் கருணாநிதி பேரன் ஒருவர் அமைச்சர் பதவி பெற வாய்ப்பு என்று எழுதினார்.

    மக்கள் தம்மைப் போல் மற்றவரை நம்ப வேண்டும்,. நான் எல்லோரும் யோக்கியமா? என்று யோசிக்க வேண்டும். ஒரு திட்டம் அரசு கொண்டு வந்தாலே ஊழலுக்குத் தான் அது
    என்று நினைத்தால் எப்படி அரசு திட்டங்களை கொண்டு வருவது.

    ReplyDelete
  23. Badri Sir!,
    I am an ardent admirer of Yours and Sujatha Sir. I request to you to ignorte and forgive my tone(if it does not sound humble) . I wish to humbly put in my thoughts.

    Are you saying that if companies like swan telechom did what they did, and even if raja had indirect shares in that company, it goes to show only that - Raja had business acumen and not his corruption,and no one shud shout at this act of raja?

    I have also heard that, raja in a great machination,managed to award the license to swan,by employing the first come first serve method, and pre-poning(forgive for this un-grammatical word) the last-date to current date on the morning of the day - just by changing the last-date text in the MoTelecom website.
    Due to this, there was a mad scramble for procuring demand draft for the license amount(some hundreds of crores) from a nationalised bank,as is required by the government rules.

    Swan(a real estate company) had the dd ready,and submitted easily.

    I consider the scheming of Raja as a great business acumen, which deserves a case-study berth in IIMs and even in Harvar,Yale etc. Raja acted as per the rules,no doubt about it, but just that, he framed the rules,changed the rules,which resulted in loss for the exchequer.(of-course there is no loss,if govt had decided to award for free-as you had mentioned),but govt was not intenbding to award for free,but for lots of money( i dodnt remeber).there was provision made for income via 2g,3g auctions in the financial bill as well.
    and swann and unitech managed to off-load their shares to companies from gulf,norway,etc for nearly 60,000 crores,(we all know that the worth of the shares was based on the 2g,3g license they have)which could have been won by the government in the first place. and the foreign companies wont pay like this, if there is not going to be any business in the spectrum. so, this signifies that, none of the companies will become "bondi" also.
    எந்த ஒரு நிறுவனமும் ஸ்பெக்ட்ரம் பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சகம் அறிவிக்கிறது -

    Shoudnt Raja have checked if Swan is a telecom compoany or not? if they have infrastructure or not? what is the point of awarding license to a real estate company. by this,service is not going to be started by the company and people are not going to be benifitted. In fact, Bsnl entered into a MOU with Swan to lease the equpment for no fee at all,based on which Swan was able to off-load the shares to foreign companies.

    I cringe at my powerlesness as a citizen,every time I see the uninor advt, (unitech along with swan benifitted in the raja's machinations)

    Thanks,
    Venkat

    ReplyDelete
  24. Sir,
    There may not be direct graft involved in spectrum allocation.
    But, there has been a heavy loss to exchequer. This loss might have been due to
    1. in-efficeint and in-ept minister
    [no corruption here]

    2. omniscient minister , who has acted with nepotism, favoring "dubaakoor" companies resulting in in-direct benifits to himself
    [corruption involved, action need to be taken on concerned]


    In both the above scenarios, it is imminent that the minister and responsible officials in the ministry resgn,and actions be taken to reduce more loss to exchequer, and even try to salvage as much money that was lost as possible. [by canceling hte license, re-issuing again / or introduce revenue sharing in a high rate], etc..

    We all know that Mr.Lal Bhagadhur Shastri, resigned from Railway minister post, taking responsibility for the mistake committed by a person working as signal operator.

    Sir,
    Can this issue be tackle by citizen via RTI ? Can you please guide us on this ?

    Thanks,
    Venkat

    ReplyDelete
  25. பொன். மகாலிங்கம்
    தெளிவான, எளிமையான கட்டுரை. பத்திரிக்கைச் செய்திகளைப் படித்து எனக்கு ஏற்பட்ட பல சந்தேகங்களுக்கு, நல்ல விளக்கம் கிடைத்தது உங்கள் பதிவில். விகடன், கல்கி போன்ற பிரபல வார இதழ்கள், இதுபோன்ற கட்டுரைகளை வெளியிட்டால், மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
    சுஜாதா-வின் ஏன் ?எதற்கு ? எப்படி ? படிப்பது போன்ற பிரமை பல சமயத்தில் ஏற்பட்டது உண்மை. இவ்வளவு மெனக்கெட்டு இதை எழுதிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  26. பனசை நடராஜன்...

    நல்லா புரியிற மாதிரி எழுதியிருக்கீங்க... பயனுள்ள கட்டுரை... அடிச்ச பணம் அரசுக்கு திரும்பி வருமான்னுதான் யாருக்கும் புரியல....

    ReplyDelete
  27. போற்றுவோர் போற்ற புழுதி வாரி தூற்றுவார் தூற்ற என் கடன் பணி செய்து கிடப்பதேன்னு நீங்களும் விடாம அடிச்சு ஆடிக்கிட்டேயிருக்கீங்க.........

    ReplyDelete
  28. Saar,
    Sorry for asking very belatedly :).i have a doubt in following statement given above:
    அடுத்து ஸ்வான் டெலிகாமில் வேறு ஒருவர் வந்து பல மில்லியன் டாலர்களை முதலிடு செய்கிறார்.
    As per your opinion(nice one),the govt has given license(with bundled spectrum)in a very low rate in a view that the provider will provide service in cheap rate to people.
    If the receiver of the spectrum from govt,re-sells to an investor,will the new investor provide services in cheap rate?
    Shouldnt the govt make a check to give license to only companies that already have infrastructure?
    Request you to please provide your reply.
    Thanks
    Request you to please

    ReplyDelete