Tuesday, November 18, 2008

இந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்

பொருளாதாரச் சுணக்கம் காரணமாக இந்திய நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஆனால் நிதியமைச்சர் சிதம்பரம் தொடர்ந்து, ஆட்குறைப்பு தேவையில்லை என்பதை வலியுறுத்தி வருகிறார். வர்த்தக அமைச்சர் கமல்நாத், தன் பங்குக்கு, ஆட்குறைப்பு தேவையில்லை என்றும், இந்தியத் தொழில் நிறுவனங்களால் தாக்குப்பிடிக்க முடியும் என்றும் சொல்லியுள்ளார்.

***

என் கருத்தில் ஆட்குறைப்பு என்பது குறுகிய காலத்தில் தடுக்க முடியாதது என்றே தோன்றுகிறது. பொதுவாகவே, பல நிறுவனங்களும் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு, தேவைக்கு அதிகமான பணியாளர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். வளர்ச்சி இருக்கப்போவதில்லை என்று தெரிந்ததுமே, அந்த ‘அதிகப்படி’ பணியாளர்களுக்கு பணியகத்தில் இடமிருக்காது.

தனியார் துறையில், நிச்சயமாக வேலை வாய்ப்புகள் அடுத்த ஒரு வருடத்துக்கு பாதிக்கப்படும். ஏற்கெனவே வேலையில் இருக்கும் பலர் வெளியேற்றப்படுவர். அதே நேரம் புதிதாகப் படித்துமுடித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு வேலைகள் எளிதாகக் கிடைக்காது. புதியவர்களுக்கு சம்பளங்களும் பெரிதாக இருக்காது.

இவை அனைத்துமே, மீண்டும் பொருளாதாரத்தைப் பாதிக்கும். அடிப்படைத் தேவைகளுக்குமேல் மக்கள் செய்யும் செலவுகள் குறையும்.

***

அரசின் கொள்கைகள் உடனடியாக என்னவாக இருக்கவேண்டும்?

* வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் கடுமையாகக் குறைக்கவேண்டும். ஒரு கட்டத்தில் 7% என்று இருந்த இந்த வட்டி, இப்போது எம்பிக் குதித்து 12-13.5% என்று உள்ளது. இது, 9-10% என்ற நிலைக்கு வரவேண்டும். இதற்குத் தேவையானவற்றை ரிசர்வ் வங்கியும் நிதியமைச்சரும் செய்யவேண்டும்.

வீடு வாங்குவது, கட்டுவது தொடர்ந்து நடந்தால், கட்டுமானத் தொழிலாளர்கள், இரும்பு, சிமெண்ட் உற்பத்தியாளர்கள் என்று ஆரம்பித்து பல துறைகளில் வேலைவாய்ப்பு தொடரும்.

* மக்கள் கையில் பணம் இருந்து, அவர்கள் பொருள்களை வாங்கினால்தான், பல தொழிற்சாலைகள், தங்களது உற்பத்தியைப் பெருக்கமுடியும் அல்லது தொடரமுடியும். வேலை வாய்ப்புகள் குறையும்போது, வேலையில்லாதவர்கள் கையில் பணம் இருக்காது. வேலையில் இருப்பவர்கள் கைக்கு அதிகப் பணம் போக வைக்கவும் அரசால் முடியாது. நேரடி அரசு அலுவலர்களுக்கு ஊதிய உயர்வு ஏற்கெனவே பேசியாயிற்று. வருமான வரி விகிதத்தைப் பார்த்தால் அங்கும் குறைப்பதற்கு ஒன்றுமில்லை. (வேண்டுமானால் கூட்டலாம்!)

அப்படியென்றால் என்ன செய்வது? மறைமுக வரிகளை ஒரு வருடத்துக்குக் குறைக்கலாம். ஆயத்தீர்வை (Excise), பொருள்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி (VAT), சேவை வரி (Service Tax) ஆகியவற்றைச் சற்றே குறைக்கலாம். இதில் VAT மாநிலங்கள் கையில் உள்ளது. மற்ற இரண்டும் மத்திய அரசின் கையில் உள்ளது. எனவே மாநிலங்களை மறந்துவிட்டு, மத்திய அரசு, இவற்றைக் குறைத்தால், மக்கள் கையில் அதிகமான பணம் இருப்பதைப் போன்ற தோற்றம் ஏற்படும்.

ஆயத்தீர்வை குறையும்போதே, பல பொருள்களின் விற்பனை விலையும் கம்மியாகும். இவ்வாறு குறைக்கப்படும் வித்தியாசத்தை அப்படியே மக்களுக்குத் தராவிட்டால், அந்தத் துறைக்கான ஆயத்தீர்வை மீண்டும் அதிகமாக்கப்படும் என்று நிதி அமைச்சர் தொழிற்சாலைகளை எச்சரிக்கவேண்டும்.

இதனால் அரசுக்கு என்ன ஆகும்? அரசின் வருமானம் நிச்சயம் குறையும். ஆனால், அரசு ஒரே ஆண்டில், பொருளாதாரம் சரியானவுடன் தனது வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள, ஆயத்தீர்வை, சேவை வரி ஆகியவற்றை மீண்டும் அதிகமாக்கிக்கொள்ளலாம்.

* பெட்ரோல் விலையைக் குறைப்பதா, வேண்டாமா? இந்தக் கேள்விக்கு எனது பதில் - இப்போதைக்குக் குறைக்கவேண்டாம் என்பதே. பொதுமக்கள் பெட்ரோலை மிக மோசமான முறையில் பயன்படுத்திக்கொண்டிருந்தார்கள். இப்போது, விலை ஏற்றம் காரணமாக, நிறைய சிக்கன நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். எனவே உடனடியாக மாற்றவேண்டியதில்லை.

இதனால் பணவீக்கம் சற்றே அதிகமாக இருக்கும்தான். ஆனால் வேறு பல காரணங்களால் மிக அதிகமாக ஆன பணவீக்கம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியுள்ளதால், பெட்ரோல்/டீசல் விலையை இப்போதைக்குக் குறைக்கவேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன்.

7 comments:

  1. //இதனால் பணவீக்கம் சற்றே அதிகமாக இருக்கும்தான். ஆனால் வேறு பல காரணங்களால் மிக அதிகமாக ஆன பணவீக்கம், இப்போது கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியுள்ளதால், பெட்ரோல்/டீசல் விலையை இப்போதைக்குக் குறைக்கவேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன்.//

    அப்ப தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் குறைக்க வேண்டுமா :) :)

    ReplyDelete
  2. உங்கள் நிறுவனத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆட்குறைப்பை நியாயப்படுத்தவே இப்பதிவு எழுதப்பட்டுள்ளதாக எவரேனும் ஐயப்படுவார்களேயானால் அவர்களைக் குறை சொல்ல முடியாது.

    ReplyDelete
  3. All in the Game! but People should releasize where their money are all utilised unnecessarily, in other words- wasted.

    ReplyDelete
  4. Very good post. To summarize what you say, "the economic downturn causes loss of jobs. to combat this the govt should try to create more jobs. all the govt policies should focus on reduction of expenses and increase of national income. "

    But, one of your point will never be actualized.

    If things go so bad, and if the govt requires IMF to step in, then taxes will not be reduced.

    If things go smooth, then also the govt will not reduce the taxes, because govt is an organization that always works for its profit; of course, it can waive off only in those areas where the govt and people benefit together.

    ReplyDelete
  5. Good to see a post which emphasizes some free market policy implementation (reducing Taxes and interest rates) from a blogger like Badri Seshadri.

    ReplyDelete
  6. சந்திராயண் ஐ தொடர்ந்து update செய்து கொண்டிருந்தீர்களே. சந்திரனில் விண்கலம் இறங்கியதும் நீங்களும் இறங்கிவிட்டீரே ?

    இந்தியக் கொடி சந்திரனில் பறக்கும் காட்சி எப்போது வலை ஏற்றப் போகிறீர்கள் ?

    ReplyDelete
  7. சந்திரயான் பற்றி நிறைய எழுதவேண்டும். தொடர்ந்து எழுதுவேன். ஆனால் சந்திரனில் இந்தியக் கொடி “பறக்கவில்லை” - அதற்கு நாம் சந்திரயாந்2 வரை பொறுத்திருக்கவேண்டும். இந்திய மூவர்ணக் கொடி வரையப்பட்ட ஒரு பெட்டி பயங்கர வேகத்தில் சந்திரனின் பரப்பில் விழுந்தது. அது நிச்சயம் சுக்கு நூறாகிப் போயிருக்கும். இந்தியக் கொடி வரையப்பட்ட பகுதியும் நிச்சயமாகச் சிதறியிருக்கும்.

    ReplyDelete