Sunday, January 04, 2009

ராமன்

கார்னல் பல்கலைக்கழகத்தில், சிப்ளி ஸ்கூல் ஆஃப் மெக்கானிகல் அண்ட் ஏரோஸ்பேஸ் எஞ்சினியரிங் அறைகளும் வகுப்புகளும், அப்சன் ஹால் என்ற கட்டடத்தில் அமைந்திருந்தன. தரைத்தளத்திலும் அதன்மேல் இரண்டு மாடிகளிலும். நான்காம் மாடியில் கம்ப்யூட்டர் சயன்ஸ் துறை இருந்தது.

நான் ஆராய்ச்சி செய்யச் சேர்ந்தது மெக்கானிகல் அண்ட் ஏரோஸ்பேஸ் துறையில். லிஃப்டைப் பயன்படுத்தும் இடத்தில்தான் ராமனைப் பார்ப்பேன். ராமன் கம்ப்யூட்டர் சயன்ஸ் துறையில் பிஎச்.டி செய்துவந்தார். அவரது அறை நான்காம் மாடியில். எனது அறை தரைத்தளத்தில்.

கார்னல் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்களும் செல்லப்பிராணிகளைக் கூடவே கூட்டிக்கொண்டு வருவார்கள். ஆனால் கட்டடங்களுக்குள் அழைத்துக்கொண்டு வரமுடியாது. வாசலில் கட்டிப்போட இடம் இருக்கும். அங்கே கட்டிவைத்துவிட்டு மீண்டும் வெளியே போகும்போது அழைத்துச் செல்லலாம்.

ஆனால் ராமன், தனது நாயை கூடவே அழைத்துச் செல்லலாம் என்று அனுமதி கொடுத்திருந்தார்கள். நன்கு கொழுகொழுவென்று வளர்ந்த நாய். அது எந்த ஜாதி நாய் என்றெல்லாம் பார்த்தவுடனே அடையாளம் சொல்வது அன்றும் சரி, இன்றும் சரி, எனக்குக் கைவராத ஒன்று. அந்த நாய் கடிக்காது என்றாலும் எனக்கென்னவோ அதனருகில் நெருங்கவே பயமாகத்தான் இருக்கும்.

*

கார்னல் இந்தியன் அசோசியேஷன் என்ற, சி.ஐ.ஏ என்று செல்லமாக அழைக்கப்பட்ட, முதுநிலை படிப்பு படிக்கும் இந்திய மாணவர்களுக்கான சங்கத்தில் நான் இரண்டாம் ஆண்டு முதல் ஏதோ பணியில் இருந்து வந்திருக்கிறேன். அப்போது பொருளாளராக இருந்தேன். செலவைக் குறைத்து வருமானத்தைப் பெருக்கவேண்டும். ஒவ்வொரு நிகழ்ச்சிக்காகவும் சுமார் 200-250 கடிதங்களை உறுப்பினர்களுக்கு அனுப்பவேண்டும். அதற்கு செலவானது. அச்சிடச் செலவு, அஞ்சலில் அனுப்பச் செலவு.

செலவைக் கட்டுப்படுத்த, அஞ்சலில் அனுப்புவதற்கு பதில், மின்னஞ்சல் முகவரிகளைச் சேர்த்து, தகவல்கள் அனைத்தையும் மின்னஞ்சலில் அனுப்பிவிடலாமே என்ற யோசனையை முன்வைத்தேன். கவனியுங்கள். இது 1992-ல். அனைவரும் ஏற்றுக்கொள்ள, மின்னஞ்சல் முகவரிகளைச் சேர்க்கும் வேலை ஆரம்பமானது.

சுமார் 150 மின்னஞ்சல் முகவரிகள் கிடைத்ததும் சந்தோஷமாக அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பினேன். அந்தச் செய்தியில் தேவையற்ற அலங்காரங்கள் (ஹைஃபன், டில்டா) எல்லாம் இருந்தன. கவனியுங்கள்... அப்போது எச்.டி.எம்.எல் கிடையாது, கிராஃபிக்ஸ் கிடையாது. மின்னஞ்சல் fixed width font-ல் ஆங்கிலத்தில் மட்டும்தான் வரும். அதனால் அழைப்பிதழ் “look and feel” வரவேண்டும் என்பதற்காக சில அபத்தங்களைச் செய்திருந்தேன்.

முதல் பதில் ராமனிடமிருந்துதான் வந்தது. சற்றே காட்டமாக. இந்தத் தேவையற்ற அபத்தங்கள் எதற்கு. வெறும் செய்தி மட்டும் இருந்தால் போதுமே. என் மானிட்டர் கன்னாபின்னாவென்று கத்துகிறது.

இதென்னடா இது! சந்தோஷமாக ஒரு விஷயத்தை, ஒரு சாதனையைப் பகிர்ந்துகொண்டால் இப்படி இந்த ஆள் காட்டுக் கத்தல் கத்துகிறாரே. அதென்ன இவரது மானிட்டர் கத்துகிறதாமே? உடனே “அய்யா, மன்னிக்கவும்” என்று ஒரு செய்தியை அனுப்பினேன். அடுத்த விநாடி, அவரிடமிருந்து பதில். “பரவாயில்லை. இனி இப்படி அனுப்பாதே.”

அடுத்த ஐந்து நிமிடங்களில் பத்து முறை மாறி மாறி மின்னஞ்சல் பரிமாறிக்கொண்டோம்.

பிறகுதான் உரைத்தது. ராமனுக்குக் கண் பார்வை இல்லை. அவர் கணினித் திரையில் எதையும் பார்ப்பதில்லை. அவருக்கு அதற்கு பதில் ஒரு பேசுகருவி உண்டு. அவருக்கு மின்னஞ்சல் அனுப்பினால், அதில் “Raman, how are you” என்று இருந்தால், அவரது கருவி, படுவேகமாக ஆர்-ஏ-எம்-ஏ-என்-கமா-ஸ்பேஸ்-எச்-ஓ-டபிள்யூ-ஸ்பேஸ்-ஏ-ஆர்-ஈ-ஸ்பேஸ்-ஒய்-ஓ-யூ என்று சொல்லும். அத்துடன் பழகிய ராமனால் அதை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். அந்த மின்னஞ்சலில் நான் -------------------------- போன்றவற்றை அனுப்பினால், அவரது மானிட்டர் டேஷ்-டேஷ்-டேஷ்-டேஷ்-டேஷ்-டேஷ் என்று கத்த, அவருக்குக் கோபம் வருவது நியாயம்தான்!

*

ஒருமுறை சகுந்தலா (இவரைக் கணிதமேதை என்று சொன்னால் அடுக்குமா என்று தெரியவில்லை) கார்னல் வந்திருந்தார். அவரை எப்படியாவது மடக்கிவிடுவது என்று ராமன் தனது கம்ப்யூட்டரை முடுக்கிவிட்டார். பிரைம் ஃபேக்டரைசேஷன் என்று ஒரு விஷயம். மிகப்பெரும் இரு பகா எண்களை - ஒவ்வொன்றும் 10-12 இலக்கங்கள் கொண்டதாக இருக்கலாம் - எடுத்துக்கொண்டு அவற்றைப் பெருக்குங்கள். இப்படிக் கிடைக்கும் விடையை ஒரு கணினியிடம் கொடுத்து எந்த இரு பகா எண்களைப் பெருக்கி இந்த விடை வந்துள்ளது என்று கேளுங்கள். கணினி, இதற்கான விடையைக் கண்டுபிடிக்க பல மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும். (இதை வைத்துத்தான் இணையத்தில் செக்யூரிட்டி விஷயங்கள் நடைபெறுகின்றன.)

இப்படி பல எண்களை உருவாக்கி, அவற்றிலிருந்து சிலவற்றை சகுந்தலாவிடம் கொடுத்து அவரால் தனது மூளையைப் பயன்படுத்தி பிரைம் ஃபேக்டரைசேஷன் செய்ய முடிகிறதா என்று பார்க்க விரும்பினார் அவர். சுமார் 200-300 பேர் நிரம்பியிருந்த அறை. சகுந்தலா கலந்துகொண்ட அந்த நிகழ்ச்சி பெரும்பாலும் அபத்தமாகவே இருந்தது. ராமன் ஓர் எண்ணை வீசி, பிரைம் ஃபேக்டரைசேஷன் செய்யமுடியுமா என்றார். அந்த எண்ணை மனத்தாலேயே குறித்துக்கொண்ட சகுந்தலா, விடைக்குப் பின்னர் வருகிறேன் என்று சொல்லிவிட்டு பிற கேள்விகளை எதிர்கொள்ள ஆரம்பித்தார்.

சில பல கேள்விகளுக்குப் பிறகு, அரை மணி நேரம் ஆகியிருக்கலாம், ராமனின் கேள்விக்கு வந்தார். சட்டென சரியான விடையைச் சொன்னார். அது ஒன்றுதான் அன்றைய நிகழ்ச்சியின் ஹை பாயிண்ட்.

எப்படி சகுந்தலாவால் அந்தக் கடினமான பிரைம் ஃபேக்டரைசேஷனைச் செய்யமுடிந்தது என்பது எங்கள் அனைவருக்குமே ஆச்சரியம்தான்.

*

இன்று காலை தி ஹிந்துவைப் பிரித்ததும் கடைசிப் பக்கத்தில் ராமனும் ராமனுடைய நாயும் தென்பட்டனர். நியூ யார்க் டைம்ஸ் கட்டுரையின் மறுபதிப்பு அது. இப்போது கூகிளில் வேலை செய்கிறாராம். ஜிஃபோனை கண் பார்வையற்றோர் உபயோகிக்க வசதியாக எப்படி மாற்றுவது என்பதில் அவரது ஆராய்ச்சிகள் இப்போது உள்ளனவாம்.

*

இன்று ஏன் இந்தச் செய்தி என்று யோசித்தேன். இன்றுதான் லூயி பிரெய்ல் (4 ஜனவரி 1809) பிறந்த தினம். அவர் பிறந்தநாளின் 200-வது வருடக் கொண்டாட்டம்.

கண் பார்வையற்றோர் படிப்பதற்காக பிரெய்ல் (Braille) என்ற முறையைக் கையாள்கிறார்கள் அல்லவா? அழுத்தமான ஒரு தாளில் (கிட்டத்தட்ட 200 gsm) குண்டூசியால் குத்துவதால் அல்லது அடியிலிருந்து அழுத்துவதால் புடைத்து எழும் புள்ளிகள். இந்தப் புள்ளிகளை மாறி மாறி அமைப்பதன்மூலம் ரோமன் எழுத்துகள் அனைத்துக்கும் குறியீடுகளைக் கொண்டுவந்தார் லூயி பிரெய்ல்.

இந்தப் புள்ளிகளைத் தொட்டுத் தடவிப் பார்த்து, அவை ஒவ்வொன்றும் என்ன எழுத்து என்பதை அறிந்துகொள்வதன்மூலம் ஒரு கண்பார்வையற்றவரால் படிக்கமுடியும்.

சமீபத்தில்தான் தமிழுக்கும் பிரெய்ல் குறியீடுகள் உள்ளன என்பதைத் தெரிந்துகொண்டேன். மாடுலர் இன்ஃபோடெக் (ஸ்ரீலிபி எழுத்துரு) நிறுவனம், அவர்களது எழுத்துருவில் எழுதப்பட்டிருப்பதை பிரெய்ல் அச்சிடக்கூடிய தயார் நிலைக்கு மாற்றும் ஒரு மென்பொருளை வெளியிட்டுள்ளது. அதை பரிசீலித்து வருகிறோம். சென்னையில் பிரெய்ல் அச்சடிக்கும் சில பிரிண்டர்களுடனும் பேசிவருகிறோம்.

ஆனால் பிரெய்ல் புத்தகங்கள் உருவாக்குவது செலவு அதிகம் எடுக்கும் விஷயம். உதாரணத்துக்கு 80 பக்கம் கிரவுன் 1/8 புத்தகம் ஒன்று, பிரெய்லாக மாறும்போது, 240-250 பக்கம் கொண்டதாக, A4 அளவுக்கு, மிகவும் தடிமனாக இருக்கும். பொதுவாக எங்களுடைய 80 பக்கப் புத்தகங்களுக்கு 60 gsm தாளைப் பயன்படுத்துகிறோம். (அதாவது ஒரு சதுர மீட்டர் பரப்பளவுள்ள தாளை எடை போட்டால், அது 60 கிராம் இருக்கும்.) ஆனால், பிரெய்ல் அச்சிட, 200 gsm தாள் வேண்டும் என்று ஏற்கெனவே சொன்னேன். எனவே மூன்று மடங்குக்கு மேல் பக்கங்கள், ஒவ்வொரு தாளும் மூன்று மடங்குக்கு மேல் கனம் அதிகம். பரப்பளவு சுமார் இரண்டு மடங்கு அதிகம்... என்றால் மொத்தம் 20 மடங்கு எடை அதிகமாகிவிடும்.

அச்சிடும் செலவும் அதிகம்.

எனவே சாதாரண 80 பக்க புத்தகம் ரூ. 25-க்கு விற்பனை ஆகிறது என்றால், இந்த பிரெய்ல் புத்தகத்தைத் தயாரிக்க மட்டுமே கிட்டத்தட்ட ரூ. 300 அல்லது அதற்குமேல் ஆகிவிடும். இதுவே 200 பக்க, டெமி 1/8 புத்தகம் என்றால், அது கிட்டத்தட்ட 800 பக்க A4 அளவுக்கு வந்துவிடும்! தயாரிப்பு விலை மட்டுமே கிட்டத்தட்ட ரூ. 1,000 ஆகிவிடும்.

அதன் பிறகு, கண்பார்வையற்றோர் இந்தப் புத்தகத்தைக் காசு கொடுத்து வாங்கக்கூடிய அளவு சந்தை தமிழகத்தில் உள்ளதா என்பதையும் கவனிக்கவேண்டும்.

ஆனால் சந்தை பற்றிய கேள்விகளைத் தவிர்த்து, குறைந்தபட்சம் பிரெய்லில் சில புத்தகங்களையாவது கொண்டுவரவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

பார்ப்போம்.

17 comments:

  1. காகிதத்திற்கு பதிலாக கேசட் அல்லது குறுந்தகடுகளில் Audio நூல்களாக வெளியிடும் சாத்தியத்தையும் பரிசீலித்துப் பார்க்கலாம்.

    ReplyDelete
  2. இதை ஏற்கெனவே செய்துவருகிறோம். சிடியில் எம்.பி3 கோப்புகளாக 70-க்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. மேலும் பலவற்றையும் வரும் நாள்களில் கொண்டுவருவோம். ஆனால்... பிரெய்லில் இருக்கும் வசதி ஆடியோவில் என்றும் வராது என்பது என் கருத்து. ஓரிடத்தில் நின்று நிதானமாக, முன்னும் பின்னுமாகச் சென்று படிப்பது ஒலிப்புத்தகத்தில் சாத்தியம் அல்ல. பல நேரங்களில் படிப்பவரின் குரல் நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் போகலாம்.

    ஒலிப்புத்தகம், பிரெய்ல் என இரண்டு சாத்தியங்களையும் நாம் செய்யவேண்டும் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. அன்பு பத்ரி, ராமன் பற்றிய உங்கள் கட்டுரை நெகிழ்வூட்டுவதாக இருக்கிறது. உங்களை நினைத்து எனக்குக் கொஞ்சம் பொறாமையாகக்கூட இருக்கிறது. அதுசரி, ஷகுந்தலா தேவியை கணித மேதை என்று சொல்வதில் உங்களுக்கு ஏன் தயக்கம்? (எனக்கு அவரைப்பற்றி ஒன்றும் தெரியாது. ராமானுஜத்தைத் தெரிந்த அளவு). இருந்தாலும் நீங்கள் ஏன் அப்படி நினைக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை.

    ராமன் பற்றிப் படித்தபோது எனக்கு ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ்தான் -- Stephen Hawkings -- ஞாபகம் வந்தது.

    அன்புடன்
    ரூமி

    ReplyDelete
  4. ரூமி: மேதை vs freak. சகுந்தலா தேவி, math freak என்ற வகையில்தான் வருவார். அவரால் மிக வேகமாகக் கணக்கு போடமுடியும். ஆனால் அவையெல்லாம் அரித்மெடிக் எனப்படும் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், வர்க்கம், வர்க்கமூலம். எண்ணைப் பகுக்கும் ஃபேக்டரைசேஷனும் ஒருவித பெருக்கல், வகுத்தல் அல்காரிதம்தான்.

    இதையெல்லாம் வேகமாக, படுவேகமாகச் செய்யக்கூடியவர்கள்; எண்களை அப்பளம் போல அள்ளிச் சாப்பிடுபவர்கள் - இவர்கள் ஃப்ரீக் என்ற வகையைச் சார்ந்தவர்களே. நாளாக, நாளாக, மூளையின் வேகம் குறைய, இவர்கள் மங்கி மறைந்துவிடுவார்கள்.

    ஆனால், கணித மேதை என்று சொல்பவர், கோட்பாட்டு ரீதியில் கணிதத்தை முன்னெடுத்துச் செல்பவர். ஆய்லர், ஜாகோபி, காஸ், ரீமான், ராமானுஜன் ஆகியோர் அங்கே வருகிறார்கள்.

    இவர்கள் வெறும் கணிப்பிடும் இயந்திரங்கள் அல்லர். அதற்கும் மேலாக, கணித ஆராய்ச்சியில் சாதாரண மனிதர்கள் மட்டுமல்ல, கணித விற்பன்னர்களுமே தடுமாறும் பல இடங்களை அநாயாசமாகக் கடக்கக்கூடியவர்கள். இவர்கள்தான் மேதைகள்.

    ReplyDelete
  5. கணித மேதை விளக்கம் நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  6. T.V. Raman has been working on accessibility issues at Google for quite some time. He frequently writes about accessibility issues in Google's official blog. Following link provides the posts by Raman in Google's official blog,
    http://googleblog.blogspot.com/search/label/accessibility

    ReplyDelete
  7. //மேதை vs freak.//

    ஒரு பாடலை (தேவைப்படும்) அனைத்து விரல்களையும் உபயோகித்து வாசிப்பது சாதாரண மனிதனின் செயல்

    ஒரு பாடலை ஒரு விரலை (மட்டும்) வைத்துக்கொண்டு பியானோவில் வாசிப்பது freak

    அந்த இசையை எழுதுவது மேதை

    --

    அனைத்து திருக்குறளையும் மனப்பாடம் செய்து ஒரு வார்த்தை சொன்னால் முழு குறளையும் கூறுவது freak

    திருக்குறளை எழுதியவர் மேதை

    ReplyDelete
  8. மிகப்பெரும் இரு பகா எண்களை - ஒவ்வொன்றும் 10-12 இலக்கங்கள் கொண்டதாக இருக்கலாம் - எடுத்துக்கொண்டு அவற்றைப் பெருக்குங்கள். இப்படிக் கிடைக்கும் விடையை ஒரு கணினியிடம் கொடுத்து எந்த இரு பகா எண்களைப் பெருக்கி இந்த விடை வந்துள்ளது என்று கேளுங்கள். கணினி, இதற்கான விடையைக் கண்டுபிடிக்க பல மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும். (இதை வைத்துத்தான் இணையத்தில் செக்யூரிட்டி விஷயங்கள் நடைபெறுகின்றன.)

    Could you tell how the security is being done by prime numbers?

    ReplyDelete
    Replies
    1. Prime numbers form the base for cryptology. In today's world, the RSA encryption, which's the popular encryption algorithm uses prime numbers and prime factorization only.

      Delete
  9. பார்வையற்றவர்கள் படிக்கும் சாதனங்கள் பற்றிய விவரங்களுக்கு மத்தியில் அவர்கள் எழுதுவதற்கு ஒலிப்பானின் வழி ஏதேனும் செயலிகள் இருக்கிறதா?

    காட்டாக எம்.எஸ்.ஆபீஸ் தொகுப்பின் மொழி ஒலிப்பான்-Language bar-ன் ஒலிப்பானின் வழி ஆங்கிலம் சுலபமாக தட்டச்ச வருகிறது,பேசுவதன் மூலம்!

    இது போன்ற முறைகள் தமிழில் இருந்தால் பார்வையற்றவர்கள் எளிதாக எழுத இயலும் அல்லவா?

    பார்வையுள்ளவர்களில் என் போன்ற சோம்பேறிகளும் பயன்பெறலாம்!

    NHM செயலியில் இது போல ஏதாவது முயற்சிக்கும் திட்டம் இருக்கிறதா?

    இப்போதைக்கு NMH செயலியை கைத்தொலைபேசிகளில் சொல் தொகுப்பு செயலிகளுடன் இணைத்து இயக்க முடிந்தால் அது பெரும் உதவி !

    மொழிப்ப

    ReplyDelete
  10. Is it possible to Hyperlink Audios using Hyper Speech/word or simply AHL - Audio Hyper Links . Interesting move towards that possibility is Audio Tagging and http://en.wikipedia.org/wiki/XSPF

    ReplyDelete
  11. http://video.google.com/videoplay?docid=-4180435763269825467

    ReplyDelete
  12. Guide dogs are usually Labradors. I saw Ramnan's too the same race. My brother can read braille in english and Tamil. He studied at Adyar blind institute. He used to get free braille magazines from abroad (australia i remember).

    ReplyDelete
  13. மிக அருமையான பதிவு!
    திரு. ராமன் அவர்களைப் பற்றிய கட்டுரையைப் படித்து பிரமித்தேன். இந்த மனிதர் மிகவும் ஆச்சரியப்பட வைக்கிறார். இவரது கனவுகள் விரைவில் கூகிள் ஜி-ஃபோனில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

    மேலும் உங்களுடைய ப்ரெய்ல் முயற்சியும் கைகூட வாழ்த்துகிறேன். மிகவும் அருமையான ஒரு முயற்சி.

    அருமையான ஒரு பதிவிற்கு நன்றி.

    இப்படிக்கு,
    ராம்ஜி.

    ReplyDelete
  14. வழக்கம்போல இந்தப் பதிவும் நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தது. நன்றி பத்ரி ஸார்..

    ReplyDelete
  15. The iPad could be the best mobile accessibility device on the market
    In 1995 Dr. Norman Coombs, a blind professor of history at the Rochester Institute of Technology and chairman of EASI: Equal Access to Software and Information wrote that the rapid adoption of a graphical user interface (GUI) would close the door on computing for the visually impaired. This was in largely in response to the Microsoft's Windows OS, but his point was well taken regarding all GUI based computing. Speech output systems, at that time, were based on character recognition and didn't work with a GUI that relied on icons and graphics. He wrote that many impaired users had lost their employment or found their positions downgraded because they could not function in the new GUI based environment.

    The National Federation of the Blind (NFB) has commended Apple for including VoiceOver capability in the iPad allowing just about everything displayed on the screen to be read aloud. This enables blind users to use the device as soon as it's taken out of the box, and proves that touchscreen devices need not be a limitation to the blind. Using VoiceOver, every action from screen dim, to screen lock is spoken along with built in hints. The implementation of what would be useful to the blind community is effective and useful.

    This is in direct opposition to the blind community's reaction to the Amazon Kindle, which does not allow the use of voice to aid in navigating one's way around its menus without assistance. It's not good enough to have downloaded text read if you can't actually get to it or even turn pages while unassisted. Both the NFB and the American Council for the Blind have sued Arizona State University and sent complaints to five other universities that have been involved in pilot programs geared to replace textbooks with eBooks. Amazon has stated that the Kindle would be more accessible to the blind by the summer, but the iPad did it from day one.

    To understand just how deeply Apple has considered the blind community, Mac-cesibility has published an excellent series of articles on how the iPad's use of VoiceOver along with the advantage of having a larger screen than the iPhone or iPad Touch has created a functional and useful interface for the non-sighted.
    The findings are that although the iPad isn't yet perfect for the visually impaired, the interface is excellent and "it will be a compelling alternative to far more expensive devices from assistive tech companies." They note that the iPad is a new category of device that really can't be compared to netbooks or eBook readers, and with the wide variety of already available iPhone/iPod Touch software, a user can accomplish just about anything on day one. This is not the case with any other mobile device.

    The iPad has also become quite beneficial for the speech disabled. We reviewed the excellent Proloquo2Go app for the iPhone/iPod Touch last October, and since then it was re-written as a Universal app bringing full screen resolution to the iPad.

    ReplyDelete