Wednesday, February 18, 2009

நாட்டுடைமை குழப்பம்

2000-வது ஆண்டுக்கு முன், சுமார் 20 பேருடைய நூல்கள் மட்டுமே தமிழக அரசால் காப்புரிமைத் தொகை வழங்கப்பட்டு, நாட்டுடைமை ஆக்கப்பட்டிருந்தது. 2000-2005 காலகட்டத்தில் மேலும் 7-8 பேருடைய நூல்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கலாம். தெளிவான தகவல்கள் என்னிடம் இல்லை.

2006-ல் கருணாநிதி தலைமையிலான அரசு 22 பேருடைய நூல்களை நாட்டுடைமையாக்கியது. 2007-ல் 14 பேர். 2008-ல் 27 பேர். இப்போது 2009-ல் 28 பேருடைய பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டோ அல்லது அதற்கு முந்தைய ஆண்டோ - இப்போது நினைவில் இல்லை - கிருபானந்த வாரியாரது நூல்களை நாட்டுடைமையாக்கப் போவதாக அரசு சொன்னது. குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் என்ற பெயரில் வாரியாரின் வாரிசு ஒருவர் வாரியாரின் அனைத்து நூல்களையும் பதிப்பித்து வருகிறார். அவர் கேட்டுக்கொண்டதன்பேரில் அரசு அந்த முயற்சியைக் கைவிட்டது. குகஸ்ரீ வாரியார் பதிப்பகம் பதிப்பிக்கும் நூல்கள் அனைத்துமே வாரியாருடையவை. அந்த நூல்களை நாட்டுடைமையாக்கினால் அந்தப் பதிப்பகத்தின் தொழில் அம்பேலாகிவிடும்.

பொதுவாகவே, நாட்டுடைமையாக்குவதாகச் சொல்லப்படும் பட்டியலில் இடம் பெறுபவர்கள் கீழ்க்கண்ட வகையில் இருப்பார்கள்:

1. அறிஞர்கள். நிஜமாகவே நல்ல, உருப்படியான விஷயங்களை எழுதியவர்கள். இவர்களது நூல்கள் பெரும்பாலும் விற்கா. அதற்கான சந்தை இல்லாமல் இருக்கும். அதனால் யாருமே பதிப்பிக்க மாட்டார்கள். சரி, இந்த நூல்களை நாட்டுடைமையாக்கினால், நான்கு பேர் பதிப்பிக்க வாய்ப்பு உண்டு என்று கருதி அரசு இந்தக் காரியத்தைச் செய்யலாம்.

2. கட்சித் தொண்டர்கள். சும்மா நம்ம கட்சிக்காரன் குடும்பத்துக்கு நாலு பணம் போய்ச் சேரட்டுமே என்று ஆட்சியாளர்கள் கொடுக்கும் பரிவுத் தொகை. இதைப்பற்றி அதிகம் சொல்லிப் பிரயோசனமில்லை.

3. ஏற்கெனவே அச்சில் இருக்கும், ஓரளவுக்கு சந்தை மதிப்புள்ள நூல்கள் - இவை வணிக நூல்களாலவும் இருக்கலாம், இலக்கியமாக இருக்கலாம், திறனாய்வாக இருக்கலாம், சமூகம் பற்றி இருக்கலாம். ஆனால் இந்த விற்பனைக்கான ராயல்டியை அந்த எழுத்தாளரின் வாரிசுகள் பார்த்திருக்கமாட்டார்கள். சரி, நாட்டுடைமையாக்கினால் ஏதோ ‘லம்ப்சம்’ பணம் கையில் கிடைக்கும், அதை வைத்துப் பிழைக்கலாம் என்ற அவர்கள் கருதக்கூடும்.

இந்த ஆண்டுக்கு முன்னதாக நாட்டுடைமையாக்கியதில் மிகவும் ஆச்சரியமான பெயர் கல்கி. அவரது புத்தகங்கள் வணிக வெற்றிக்கு உரியவை. ‘பொன்னியின் செல்வன்’ இன்றும் கூறு கட்டி விற்பனை செய்யப்படுகிறது. வானதி பதிப்பகம்தான் வெளியிட்டு வந்தது. ஏனோ, கல்கி வாரிசுகள், புத்தகங்களை நாட்டுடைமையாக்கச் சம்மதித்தார்கள். ஒரேயடியாக அவர்களுக்கு ரூ. 25 லட்சம் கிடைத்திருக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், கல்கி வாரிசுகளுக்கு இதனால் பணம் இழப்புதான்.

இந்த ஆண்டுக்கான பட்டியலைப் பார்த்ததுமே எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. கண்ணதாசன், சுந்தர ராமசாமி என்ற இரண்டு பெயர்களுடன் சாண்டில்யன் பெயரும் அங்கே இருந்தது.

சுந்தர ராமசாமி, கண்ணதாசன் அளவுக்கு விற்பனையில் சாதனை படைப்பவர் கிடையாதுதான். கண்ணதாசனின் ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ ஒன்றே போதும். இன்றும் ஆண்டுக்கு 20,000 - 40,000 பிரதிகள் வரை (முழு செட்) விற்கும் என்று உத்தேசமாகக் கணிக்கிறேன். அதைத்தவிர கண்ணதாசனின் பிற புத்தகங்கள். எந்தக் காரணம் கொண்டும் கண்ணதாசன் வாரிசுகள் இந்தப் புத்தகங்களை நாட்டுடைமையாக்க விரும்பமாட்டார்கள்.

மேலும் கண்ணதாசனின் மகனான காந்தி கண்ணதாசனே ‘கண்ணதாசன் பதிப்பகம்’ என்ற பெயரில் ஒரு பதிப்பகத்தை நடத்திவருகிறார். கண்ணதாசன் புத்தகங்கள்தான் அவரது பதிப்பகத்தின் காலிங் கார்ட். அவை நாட்டுடைமை ஆக்கப்பட்டால், கண்ணதாசன் பதிப்பகத்தின் ன்ய்ண்வ்ன்ங்ய்ங்ள்ள் பாதிக்கப்படும்.

அதேபோலத்தான் சுந்தர ராமசாமியின் புத்தகங்களும். காலச்சுவடு என்ற பதிப்பகத்தின் முத்திரையே சுந்தர ராமசாமியின் புத்தகங்கள்.

அதேபோல, சாண்டில்யனின் புத்தகங்களும் நன்றாக விற்பனை ஆகக்கூடியவை. எனவே நிச்சயம் சாண்டில்யனின் குடும்பத்தினர் இதற்கான ராயல்டியை ஆண்டாண்டுக்கு அதிகமாகவே வாங்கி வந்திருப்பார்கள். அரசு கொடுக்கும் அதிகபட்சப் பரிவுத்தொகையே ரூ. 25 லட்சத்தைத் தாண்டாது. எனவே ஆண்டுக்கு ஐந்தாறு லட்ச ரூபாய்க்கு மேல் ராயல்டி பெறுபவர்கள், நிச்சயம் அரசின் நாட்டுடைமை முயற்சியை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

***

அரசு சில கேள்விகளை முதலில் கேட்கவேண்டும்.

1. யாருடைய நூல் இன்று அதிகம் பரவலாக வேண்டும்? ஏன்?

2. அப்படிப் பரவலாகாமல் தடுப்பது எது? ஏன் இப்போது அச்சாவதில்லையா? அச்சானாலும், விநியோகம் சரியில்லையா? விலை அதிகமாக உள்ளதா? காப்புரிமையை சிலர் தக்கவைத்துக்கொண்டு, நூல் வெளியிடாமல் நசுக்கப் பார்க்கிறார்களா? அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா?

3. அரசு ஒருவருடைய நூலை நாட்டுடைமையாக்க முடிவெடுத்தால், முதலில் மரபுரிமை உள்ளவர்களை அணுகவேண்டும். பேச்சளவில் அவர்கள் அதற்கு ஒப்புதல் அளித்தபின்னரே அவர்களது பெயர்களை வெளிவிட வேண்டும்.

4. நாட்டுடைமையாக்குதல் என்பது பட்ஜெட்டுக்குள் வரவே கூடாது. பட்ஜெட்டில் அதற்கென ஒரு தொகையை ஒதுக்கிவிட்டு, நிபுணர் குழுவைக் கொண்டு செயல்படுத்தப்படவேண்டிய ஒரு விஷயம் இது.

நேற்று நடந்தது தேவையில்லாத குழப்பம். அரசு, இது எப்போதும் தாங்கள் செய்யும் ஒன்றுதான் என்றும், மரபுரிமை உடையவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் தாங்கள் வற்புறுத்தமாட்டோம் என்றும் சொல்வது அபத்தம். இது ஓர் opt-out முறையாக இருக்கக்கூடாது. Opt-in ஆக இருக்கவேண்டும்.

அரசு யோசிக்காமல் செய்த ஒரு விஷயம் இது என்றுதான் சொல்வேன். மற்றபடி, காலச்சுவடு கண்ணன் சொல்வதுபோல இதில் நுண்ணரசியல் ஏதேனும் உள்ளதா என்று நினைக்க எனக்குத் தோன்றவில்லை. What you can attribute to stupidity, you should never attribute to malevolence.

10 comments:

  1. //அரசு யோசிக்காமல் செய்த ஒரு விஷயம் இது என்றுதான் சொல்வேன். மற்றபடி, காலச்சுவடு கண்ணன் சொல்வதுபோல இதில் நுண்ணரசியல் ஏதேனும் உள்ளதா என்று நினைக்க எனக்குத் தோன்றவில்லை.//

    நுண்ணரசியல் நிச்சயம் இருக்கிறது. அது சிறுபத்திரிகை வாசகர்கள் பலரும் அறிந்த ஒன்றே. கண்ணன் இதனை வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாம்.

    சுந்தர ராமசாமியின் படைப்புகளை நாட்டுடமையாக்கி, காலச்சுவடு பதிப்பகத்திற்குப் பொருளாதார இழப்பை ஏற்படுத்துவது அல்லது கண்ணனுக்குத் தமிழக அரசை வெளிப்படையாகப் பகைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தி, தமிழக அரசுக்கு விரோதமான ஒரு நபராக அவரை ஆக்குவது என்பதே இங்கு செய்யப்படும் நுண்ணரசியல்.

    கலைமாமணி விருதுகளை வாரிவிடும் இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர் இளையபாரதிக்கும் காலச்சுவடுக்கும் உள்ள பகைமை, மனுஷ்ய புத்திரனின் தமிழக அரசியல் தொடர்புகள் போன்ற காரணிகள் இந்த நுண்ணரசியலின் ஊகிக்கத்தக்க பின்னணிகள்.

    ReplyDelete
  2. ஈ.வே.ராவின் புத்தகங்கள், கருணாநிதியின் புத்தகங்களை நாட்டுடமை ஆக்கலாமே?!

    ReplyDelete
  3. பத்ரி சார்

    What you can attribute to stupidity, you should never attribute to malevolence என்பதை தவிர இங்கு நீங்கள் கூறிய பல கருத்துக்களில் எனக்கு உடன்பாடு கிடையாது

    சில தவறு என்றே கருதுகிறேன்.

    இது குறித்த எனது பதிவு
    புத்தகங்களும் நாட்டுடைமையும் : பதிவர் லக்கிலூக்கின் புத்தகம் நாட்டுடைமையாக்கப்பட்டால் ???

    அதில் உங்கள் பதிப்பக புத்தகம் ஒன்றை உதாரணமாக வைத்து விளக்கியுள்ளேன் :) :)

    ReplyDelete
  4. //ஈ.வே.ராவின் புத்தகங்கள், கருணாநிதியின் புத்தகங்களை நாட்டுடமை ஆக்கலாமே?!//

    1. யாரும் பதிப்பிக்க முன்வரமாட்டார்கள்.

    2. ஏனென்றால் யாரும் படிக்க விரும்புவதில்லை.

    3. அரசு செலவில் பிரச்சாரம் செய்ய முடியாது.

    4. ஈவேரா உளறிய அனைத்தும் தணிக்கை செய்யப்படாமல் வெளிவரும். இது கெட்டவர்களுக்கு ஆபத்து.

    5. கருநாநிதி பூட்டபின் வாரிசுகள் யாராவது ஆட்சிக்கு வரமுடிந்தால் அந்தப் புத்தகங்களை ”வாங்க வைத்து” லாபம் பார்க்கலாம். அரசுடமையாக்கிவிட்டால் அது நடக்காது.

    ReplyDelete
  5. //மற்றபடி, காலச்சுவடு கண்ணன் சொல்வதுபோல இதில் நுண்ணரசியல் ஏதேனும் உள்ளதா என்று நினைக்க எனக்குத் தோன்றவில்லை.//

    நுண்ணரசியல் என்ற பிரயோகம் நகைப்பை வரவழைப்பதாக உள்ளது. அரசியலில் நுண்ணரசியல் என்ன, பேரரசியல் என்ன. அரசியல், அவ்வளவுதான்!!!

    ReplyDelete
  6. இன்று படுக்கையில் படுத்துக்கொண்டு, முதுகு வலிக்க, அறிக்கை விடுத்துள்ள முதல்வர் கருணாநிதி, காந்தி கண்ணதாசனின் பேச்சு, தனக்கு சலிப்பை வரவழைத்துள்ளது என்று சொல்லியிருக்கிறார். எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் தான் நிறையச் செய்துள்ளதாகவும், முறையான வழியில் தங்களுக்கு விருப்பம் இல்லை என்பதைத் தெரிவிக்காமல் அவர் நடந்துகொண்டது சரியல்ல என்ற வகையிலும் அறிக்கையில் உள்ளதாக சன் நியூஸ் செய்தி சொன்னது.

    மீதி விவரங்கள் இங்கே.

    http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/tn-karunanidhi-condemns-gandhi-kannadasan.html

    ***

    கருணாநிதி இதுபோன்ற அறிக்கைகளைத் தவிர்க்கவேண்டும். காந்தி கண்ணதாசனை வில்லன் போலச் சித்திரிக்க முனைந்துள்ளார். தவறு அரசின்மீதுதான் என்பது என் கருத்து.

    இதில் நிஜமாகவே வைரமுத்து வாழ்த்தியதுதான் நுண்ணரசியல். வைரமுத்துவுக்கு பரிவுத்தொகை கொடுத்து அவர் வாழும் காலத்திலேயே அவரது எழுத்துகளை “நாட்டுடமை” ஆக்க அவர் சம்மதம் சொல்லலாமே:)

    ReplyDelete
  7. லா.ச.ரா., நகுலன், சுஜாதா போன்றோரின் படைப்புகளை விட்டுவிட்டு சுந்தரராமசாமியின் படைப்புகளை மட்டும் நாட்டுடமையாக்கியதில் நிச்சயம் அரசியல் இருக்கிறது. புதுமைப்பித்தன் படைப்புகளை வெளியிடும் விவகாரத்தில் காலச்சுவடு கண்ணனுக்கும், இளையபாரதிக்கும் இடையே ஏற்பட்ட பூசலை இங்கு நாம் நினைவுகூரலாம்.

    ReplyDelete
  8. //ஏனோ, கல்கி வாரிசுகள், புத்தகங்களை நாட்டுடைமையாக்கச் சம்மதித்தார்கள். ஒரேயடியாக அவர்களுக்கு ரூ. 25 லட்சம் கிடைத்திருக்கும். ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், கல்கி வாரிசுகளுக்கு இதனால் பணம் இழப்புதான்.//

    //காப்பிரைட் சட்டப்படி எழுத்தாளர் இறந்து 60 ஆண்டுகள் வரைதான் உரிமை. எனவே அறுபது ஆண்டுகள் கழித்து சட்டரீதியில், எவ்வித பரிவுத் தொகையும் இன்றி தன்னாலேயே பொதுவுடமை ஆகி விடும்.//

    நாட்டுடைமை என்பதே அறுபது வருடங்களுக்கு முன்னர் அந்த எழுத்தாளரின் குடும்பத்திற்கு சிறிது தொகையை அளித்து அந்த உரிமத்தை பொதுவாக ஆக்குவது தான்.

    உதாரணமாக கல்கியின் எழுத்துக்களை 2014க்கு பிறகு யார் வேண்டுமென்றாலும் பதிப்பிக்க முடியும். அது நாட்டுடமையாக்கப்பட்டாலும், படாவிட்டாலும்

    எனவே அவர்கள் நாட்டுடைமைக்கு சம்மதிக்காவிட்டாலும் கல்கியின் எழுத்துக்கு அவரது வாரிசுகளின் உரிமையின் ஆயுள் மேலும் சில வருடங்களே. எனவே அவர்கள் கூட்டி கழித்து முடிவெடுத்து இருக்கலாம்

    ஆனால் அரசு பரிவு தொகை அளித்ததே அதற்கு முன்னர் கல்கியின் எழுத்துக்கள் அனைவரையும் போய் சேர வேண்டும் என்பதற்காகத்தான்

    அது போல் இன்னமும் 32 வருடங்கள் கழித்து (2041 முதல்) யார் வேண்டுமென்றாலும் கண்ணதாசனின் நூல்களை அச்சிட்டு வெளியிடலாம்

    அதே போல் 2033 முதல் பெரியாரின் எழுத்துக்களே யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம் !!

    ReplyDelete
  9. நீங்கள் கேண்டீட் புத்தகத்தை மொழிபெயர்த்தது கூட இந்த ”60 வருடம் மட்டுமே காப்புரிமை” மூலம் தான் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  10. //4. நாட்டுடைமையாக்குதல் என்பது பட்ஜெட்டுக்குள் வரவே கூடாது. பட்ஜெட்டில் அதற்கென ஒரு தொகையை ஒதுக்கிவிட்டு, நிபுணர் குழுவைக் கொண்டு செயல்படுத்தப்படவேண்டிய ஒரு விஷயம் இது.//

    அப்படி செய்தால் transparency என்பதே இல்லாமல் போக வாய்ப்பு அதிகம்

    அதன் பிறகு வரக்கூடிய பிரச்சனைகளை பற்றி தெரிய கீழ் உள்ள சுட்டிகளை படியுங்கள்
    http://thoughtsintamil.blogspot.com/2009/02/blog-post_23.html
    http://www.hindu.com/2008/10/24/stories/2008102454110400.htm

    ReplyDelete