Thursday, February 19, 2009

சுப்ரமணியம் சுவாமி மீதான தாக்குதல்

கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது இந்தச் செயல். நீதிமன்றத்தில் புகுந்து வக்கீல்களே அடாவடியாக இதுபோன்ற ரகளைகளில் ஈடுபட்டுள்ளது குடியாட்சி முறை மீது நம்பிக்கையுள்ள அனைவராலும் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டிய செயல். இந்த ரவுடிச் செயலுக்கும் மங்களூரில் மதுவகங்களில் பெண்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன.

ஆனால், இணைய பெரியாரிய, திராவிட, மார்க்ஸிய, லெனினிய வஸ்தாதுகள் மதிமாறன், வினவு போன்றோர் கைகொட்டி இதனைக் கொண்டாடுவது அவர்களது முதிர்ச்சியின்மையையும் அவர்கள் பின்பற்றிவரும் பாதையின் அரைவேக்காட்டுத் தன்மையையும் மட்டுமே காட்டுகிறது.

ஒருவருடைய கருத்துகள் ஏற்கமுடியாதவையாக இருந்தாலும், அதைச் சொல்ல அவருக்கு முழு உரிமை உண்டு என்பதையும், வன்முறையைத் தம் கையில் எடுத்துக்கொண்டு அடுத்தவருக்குத் தீர்ப்பு வழங்க நமக்கு எந்தக் கட்டத்திலும் அதிகாரம் இல்லை என்பதையும் ஏற்காத கருத்துத் தீவிரவாதிகள், இடதாக இருந்தாலும் சரி, வலதாக இருந்தாலும் சரி, நம் நாட்டுக்கு மிகவும் கேடு செய்யக்கூடியவர்கள். இந்த ஒரு விஷயத்தில் ஸ்ரீராம சேனையும் வினவும் மதிமாறனும் ஒன்றுசேர்ந்து ஓரணியில் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.

27 comments:

  1. Despicable act. We need funny men like Subramaniya Swamy to keep us entertained in the Poltics, which is otherwise smug.

    ReplyDelete
  2. பத்ரி,

    //இந்த ஒரு விஷயத்தில் ஸ்ரீராம சேனையும் வினவும் மதிமாறனும் ஒன்றுசேர்ந்து ஓரணியில் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. //

    ஒரு இந்துத்துவவாதியான நான் உங்களது இந்தக் கருத்தோடு நூற்றுக்கு நூறு ஒத்துப் போகிறேன்.

    இந்த விஷயத்தில் உங்களது நேர்மையையும், துணிவையும் பாராட்டுகிறேன்.

    தர்மத்திற்காகக் குரல் கொடுத்துள்ளீர்கள். தர்மம் உங்களைக் காக்கட்டும்.

    ReplyDelete
  3. சட்டத்தைக் காக்க வேண்டியவர்களே அதை கையில் எடுத்துக் கொண்டு அராஜகமாக செயல்படுவது அநியாயம். கடுமையான தண்டனைகளின் மூலம் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை நீதித்துறை தடுக்க முன்வர வேண்டும். சக மனிதனின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்கிற அடிப்படை நாகரிகம்,படித்தவர்களிடம் கூட இல்லாதது நம் கல்வித்துறையின் தோல்வியையே காட்டுகிறது. இந்த வன்முறைக் கலாச்சாரத்தை சிலாகிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்களே.

    ReplyDelete
  4. பத்ரி,

    Of course, I agree. Beyond that:

    இதில் ஒரு விதமான 'apres moi, les deluge' மனப்பான்மை தெரிவது அச்சமூட்டுகிறது. அதாவது, எனக்குத் தேவையானது நடக்காவிடில், எது நடந்தாலும் அக்கறையில்லை என்ற மனப்பான்மை.

    மேலும், 'கருத்து வன்முறையை' எதிர்க்க நிஜ வன்முறை உதவும் என்றோ, அது நியாயம் தான் என்றோ கருதும் முட்டாள்தனமான, அநாகரீகமான சிந்தனைப் போக்கு இணையத்தில் பெருகி வருவது அதிர்ச்சி அளிக்கிறது. உதாரணம், தமிழ்சசியின் குறுஞ்செய்திகள் (ட்வீட்).

    ReplyDelete
  5. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். விதர்பா பகுதியில் அரசின் புதிய பொருளாதார கொள்கை காரணமாக 1 லட்சம் விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். அவர்களின் பிரச்சனையை தீர்க்க மனுபோட வேண்டும் என்கிறீர்களா?

    ReplyDelete
  6. //ஒருவருடைய கருத்துகள் ஏற்கமுடியாதவையாக இருந்தாலும், அதைச் சொல்ல அவருக்கு முழு உரிமை உண்டு//
    Voltaire is attributed with having said, ‘I disapprove of what you say, but I will defend to the death your right to say it.’

    ReplyDelete
  7. http://balaji_ammu.blogspot.com/2009/02/525.html

    //இந்த விஷயத்தில் உங்களது நேர்மையையும், துணிவையும் பாராட்டுகிறேன்.
    //
    வன்முறை என்பதை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் கண்டிக்க வேண்டும். அதற்கு எதற்கு பாராட்டு என்று விளங்கவில்லை ?????

    ReplyDelete
  8. "Despicable act. We need funny men like Subramaniya Swamy to keep us entertained in the Poetics, which is otherwise smug."
    ரிப்பீட்டேய்....

    ReplyDelete
  9. பத்ரி உங்களிடம் சில கேள்விகள் +++++++++++++++++++++++++++++++
    தீட்சிதர்களிடம் தமிழில் பாடும் உரிமைக்காக போராடிய 70 வயது கிழடான சிவனடியார் ஆறுமுகசாமியின் கருத்துரிமையை மதிக்காத தீட்சிதர்கள் அவரை உதைத்து கையை உடைத்து வெளியேற்றிவிட்டார்கள். அவர்கள் மேல் வழக்கு தொடுத்து அந்த வழக்குக்குக்காக நீதி மன்றத்தில் ஆஜரான சிவனடியார் தனியாக சிக்க பயந்து தனது ஆதரவாளர்களுடன் சென்றார். தீட்சிதர் தரப்பில் சு.சாமியும் வந்தார், தீட்சிதரை அடித்த சம்பவத்துகாக பழி தீர்க்கும் வகையில் அவர்களுடன் வந்த சு.சாமியை அடித்த்தில் என்ன தவறு. (இதோடு இலங்கை பிரச்சனையில் சு.சாமியின் தமிழர் விரோத போக்கு ஒரு கிளை கதை) வழக்குறைஞர்கள் அடிக்கலாமா என விவாதித்தால் அரசியல்வாதிக்கு தீட்சிதர்களுடன் என்ன வேலை என்பதையும் சேர்த்து விவாதிக்க வேண்டும். தீட்சிதருக்கு துணை அரசியல்வாதியென்றால் சிவனடியாருக்கு துணை வக்கீல்கள். நீதிபதி முன்னிலையில் நடந்த்து என்றால் அன்று போலிசு முன்னிலையில் தீட்சிதர் தாக்கப்பட்டார். அடிக்கு பதில் அடியா என்றால் கருத்துக்கு பதில் கருத்து எனும்போது அடிக்கு பதில் அடிதானே.
    +++++++++++++++++++++++++++++++
    இன்று வினவு மற்றும் மதிமாறன் சு.சாமியை அடித்த சம்பவத்தை கண்டித்து எழுதும் நீங்கள் ஏன் தீட்சிதர்களை கண்டித்து எழுதவில்லை சு.சாமியின் கருத்துரிமைக்காக குரல் கொடுக்கும் நீங்கள் ஏன் ஆறுமுகசாமியின் கருத்துரிமைக்காக குரல் கொடுக்கவில்லை. சு.சாமியை அடித்த்து உங்களுக்கு மங்களூரை நினைவு படுத்தும் அதே நேரத்தில் அவர் ஆதரவு பெற்ற தீட்சிதர்கள், ஆறுமுகசாமியின் கையை உடைத்த்து ஏன் நினைவுக்கு வரவில்லை ஏன் எழுதுவில்லை என கேட்பது தவறு என்றால் ஏன் எழுதுகிறார்கள் என்று நீங்கள் கேட்பதும் தவறாகிவிடும்
    +++++++++++++++++++++++++++++++
    ஆளும் வர்க்கத்தை சேர்ந்தவர்களின் கருத்துரிமைக்காக குரல் கொடுக்கும் நீங்கள் நடந்த வழக்கு அதன் பிண்ணனி ஆகியவையை திட்டமிட்டு மறைத்து எழுதுவது கருத்து தீவிரவாதமில்லையா? +++++++++++++++++++++++++++++++
    வினவு மற்றும் மதிமாறன் பின்பற்றி வரும் பாதை அரை வேகாட்டுதனமானது என்றால் இந்த அரைவேக்காட்டு த்ததுவங்களாகிய மார்க்சிய, பெரியாரிய கருத்துக்களையும், அதன் தலைவர்களையும் புத்தகமாக நீங்கள் போட்டு பணம் சம்பாதிப்பது ஏன். அதை பிழைப்புவாதம் என நான் கருதுவது தவறா? தவறென்றால் விளக்கவும்
    +++++++++++++++++++++++++++++++
    உங்கள் பதிவையும் எனது கருத்தையும் நான் வினவு தளத்திலும் பின்னூட்டமாக வெளியிடுகிறேன்.
    நன்றி

    ReplyDelete
  10. மா.சே: “தீட்சிதர் தரப்பில் சு.சாமியும் வந்தார், தீட்சிதரை அடித்த சம்பவத்துகாக பழி தீர்க்கும் வகையில் அவர்களுடன் வந்த சு.சாமியை அடித்த்தில் என்ன தவறு.”

    இந்த வாதம்தான் உங்கள் வாதம் என்றால், இதற்கு நான் என்ன பதில் சொல்ல?

    தீட்சிதர்கள் அடித்தார்கள்; சரி, தீட்சிதர்களை இவர்கள் திரும்ப அடித்தார்கள் என்றால்கூட அதுவும் சட்டப்பூர்வமாகச் சரியானதல்ல; ஆனால் புரிந்துகொள்ளக்கூடியதே. ஆனால் சுப்ரமண்யம் சுவாமி கூட வந்தார் என்பதால் அடித்தார்கள் என்றால் நான் என்ன சொல்லமுடியும்?

    மேலும் மார்க்ஸிய லெனினியர்களான சிலர் குடியாட்சியையே பன்றிகள் உழலும் சாக்கடை, ஓட்டுப் பொறுக்கிகள் என்று சஹஸ்ரநாம அர்ச்சனை செய்பவர்கள். அங்கே போய், வன்முறை வழிகளைக் கையாள்வது சரியல்ல என்று சொல்லிக்கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை.

    இந்த விவாதத்தைப் பின்பற்றினால், இதே வழிமுறையைப் பின்பற்றி நடக்கும் சிங்களனை நீங்கள் எந்த விதத்தில் குற்றம் சாட்டமுடியும்?

    தீட்சிதர்கள், ஈழ விவகாரம் ஆகியவை பற்றி என் பதிவில் நான் எழுதுவருபவனே. என் வர்க்கம், என் மூலம், என் கனம் என்று எனது குடும்ப, சாதி, முதலாளித்துவ ஆராய்ச்சிகள் உங்களுக்கு அதிகம் பயன்தராது என்றே நினைக்கிறேன். இருந்தாலும் நீங்கள் சந்தோஷமாக அந்த ஆராய்ச்சியைத் தொடரலாம்.

    பாதை அரைவேக்காட்டுத்தனமானது என்றால் பாதையை ஆரம்பித்துக் கொடுத்தவர்கள் அரைவேக்காட்டுத்தனமானவர்கள் என்ற பொருள் அல்ல. பெரியாரோ, மார்க்ஸோ எதிர்க்கருத்து உள்ளவன்மீது முட்டையை உடைத்து ஆம்லெட் போடு என்று சொன்னார்களா? அம்பேத்கர் சொன்னாரா? அம்பேத்கர், பெரியார் வாழ்க்கைகளை நன்கு படித்து வருகிறேன். அவர்களது பெயர்களைச் சொல்வதற்குக்கூட வன்முறையாளர்களுக்கு உரிமை கிடையாது.

    ReplyDelete
  11. மா.சே: உங்களுக்கு ஆதாரம் தர இரண்டு பதிவுகள் + மேற்கோள்கள்:

    1. http://thoughtsintamil.blogspot.com/2006/06/blog-post_23.html

    “முதலில் தமிழக அரசு சிதம்பரம் கோயிலை தன் கையில் எடுத்துக்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். அங்கும் யாரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தை நிலைநாட்டவேண்டும்.”

    http://thoughtsintamil.blogspot.com/2008/03/blog-post_31.html

    “பாரம்பரியம் என்ற போர்வையில் சில பிரிவினரை ஓரங்கட்டி, பொதுமக்கள் மொழியையும் பெரும்பான்மை சாதியினரையும் அவமதிப்புக்குள்ளாக்கும் எந்தப் பழக்கத்தையும் லிபரல் சிந்தனையாளர்கள் அனுமதிக்கக்கூடாது. 'தேவாரம் பாடக்கூடாது' என்பது அல்லது 'நாங்கள்தான் பாடுவோம், இவர் பாடக்கூடாது' என்பது அல்லது 'இந்த இடத்திலிருந்து பாடக்கூடாது' என்பது அவமரியாதையான செயல். இதைக் கேட்க ம.க.இ.க அல்லது பெரியார் ஆதரவாளர்கள் யார் என்ற கேள்விக்கே இடம் இல்லை. உயர்சாதி இந்துக்கள், உருப்படியாக ஒன்றும் செய்யாதபோது, இந்தப் பிரச்னையை போராட்டமாக்கி, எதிர்கொண்டு, அரசை சரியான தீர்ப்பு அளிக்க வைத்தது இவர்களே.”

    “எந்தவித சடங்கு, சம்பிரதாயத்துக்கும் ஆதரவு தெரிவிக்காத, அவற்றை ஏற்றுக்கொள்ளாத எனக்கு இதில் கருத்து கூற உரிமையுள்ளது என்றே நினைக்கிறேன். அதுபோன்றே ம.க.இ.க போன்றோருக்கும், பெரியார் அமைப்பினருக்கும் இதற்கு முழு உரிமையுள்ளது என்று நினைக்கிறேன்.”

    ReplyDelete
  12. மா சே: அடித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தீட்சிதர்கள் சார்பாக ஆஜராக வந்த வக்கீலான சுவாமியை அடிப்பது நியாயம் என்றால், அன்றாடம் கொலைக்குற்றம் சாட்டப்பட்டு வரும் குற்றவாளிகள் சார்பாக ஆஜராகும் வக்கீல்களை கொலை செய்வது நியாயமா?

    ஒன்று உணர்ச்சி வசப்பட்டுப் பேச வேண்டும், இல்லை தர்க்க ரீதியாகப் பேச வேண்டும். இரண்டும்கெட்டானாக இருந்தால் இப்படித் தான் அபத்தமாக இருக்கும்.

    ReplyDelete
  13. ரவியா சொன்னது…
    //Voltaire is attributed with having said, ‘I disapprove of what you say, but I will defend to the death your right to say it.’//

    ஏங்க ரவியா(ர்?)!பத்ரிகிட்டேயேவா?!

    ReplyDelete
  14. ”இந்த ரவுடிச் செயலுக்கும் மங்களூரில் மதுவகங்களில் பெண்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன”

    தவறு. இந்த இரண்டு வன்முரைகளிலும் சில பெரிய வித்தியாசங்கள் இருக்கிறன.

    முன்னதைப்போல் இல்லாமல் பின்னது நீதிமன்றத்தில், நீதிபதி முன்னாடியேயே நடந்தது. மேலும் அது லாயர்களால் செய்யப் பட்டது. இந்தியாவில் நீதி முறை நன்றாக நடக்க வேண்டும் என்றால். அந்த வன்முறை லாயர்களை 1 வருடம் நீதி பிராக்டீஸிலிருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும். ராமசேனை ஆட்கள் கைது செய்ய்ப் பட்டுள்ளனர். அதைப் போல் முட்டை எரிந்த வழக்கரிஞர்கள் (அறிஞர்களா!, பெரிய ஜோக்கு) 2 வாரமாவது சிறைக்கு அனுப்ப வேண்டும்.

    விஜயராகவன்

    ReplyDelete
  15. பத்ரி & மீனாக்ஷி,

    சுப்பிரமணியசாமியை நீதிமன்றத்தில், நீதியரசர்களின் முன்னிலையில் அடித்தது நீதிமன்றத்தை அவமதிப்பது என்ற வகையில் கண்டனத்துக்குரியது. ஆனால், சுப்பிரயமணியசாமி மைய அரசாங்கத்தின், அரசியல், அதிகார மட்டங்களில் தொடர்புகளை வைத்துக்கொண்டு தமிழர்களுக்கு எதிராக, தமிழ்நாட்டுக்கு எதிராக அராஜகங்கள், கருத்துவன்முறைகளை செய்து வரும் இந்த ஆளை எதிர்கொள்ள வேறு என்ன வழிமுறைகள் இருக்கின்றன என்று விளக்கினால் நல்லது. இந்த ஆளுக்கு அரசியல், அதிகார மையங்களில் உள்ள் அதே செல்வாக்கு அவரால் பாதிக்கப்படுபவர்களுக்கு இல்லாதபட்சத்தில் இந்த ஆளை அடக்குவது முடியும் என்று நீங்கள் உண்மையிலேயே நினைக்கிறீர்களா? அவருக்குண்டான வழியில் அவர் அராஜகம் செய்கிறார். அவருடைய எதிரிகள் அவர்களுக்குண்டான வழிகளில் அராஜாகம் செய்கிறார்கள். அவரை வெறும் கருத்துக்காக மட்டும் தாக்கியதாக கொள்ள முடியாது. அவர் கருத்துக்களும், செயல்பாடுகளும் உருவாக்கும் விளைவுகளுக்காக தாக்கப்பட்டிருக்கிறார்.

    ReplyDelete
  16. பத்திரி உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன்.

    ஆனால் சில கேள்விகளும் இல்லாமல் இல்லை.
    ஈழவிவகாரத்தில் கருத்துச்சொல்லும் சீமானை ராஜீவ் மன்னித்தாலும் நாம் விட மாட்டோம் என சொல்லும் காங்கிரசார் சோனியா காந்தியும் அவரது தாயாரும் சேர்ந்தே புலிகளுடன் சேர்ந்து சதிசெய்து கொன்றனர்..இந்தியாவில் இருந்து கலைப்பொருட்களை கடத்தி இத்தாலியில் விற்கின்றனர் எனப் பேசும் சுப்பிரமணியசுவாமியை ஏன் கைது பண்ண கோரவில்லை?

    ReplyDelete
  17. Now a days Tamilnadu lawyers are behaving like Rowdies. Whatever may be the reason they simply boycott the court and attack lawyers who don't join with their unruly behavior. This final act of attack inside the court before judges is worst and undermines the very institution of Democracy.

    ReplyDelete
  18. இப்போது எந்தவிதமான மாறுபட்ட கருத்தையும் எதிர்கொள்ளும் போது எழுதுபவரின் பின்புலத்தை புலனாய்வு செய்வது, பெரியாரிய தோழர்களின் நடவடிக்கையாக உள்ளது. ஞாநி முற்போக்கான சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளராக இருந்தாலும் அவரின் பின்புல ரீதீயாக கொச்சையான கருத்துக்கள்/விமர்சனங்கள் பதிவில் வருகின்றன, மேலும் சபை நாகரீகமில்லாத வசனங்களும் தவிற்கப்படவேண்டியவை.

    வன்முறை ஜனநாயகத்தை நம்புவோர் விரும்பாத பாதை.

    ReplyDelete
  19. Can't there be a revoke of their license to practice or suspension if lawyers indulge in violent acts that too within Court's premises ?
    Does the contempt of court not apply to lawyers at all ? These are really dangerous examples for future generations.

    ReplyDelete
  20. Gaurdians of Freedom of Expression aka Suresh Kannan and Raviya:

    Do people like Seeman have the same freedom to express or such freedom is reserved only for Subramanyam Swamy and his ilk? Doesn't Subramanyam Swamy deny such right to the supporters of Tamil Tigers when he calls for their arrest at the drop of the hat? Did you ever raise your voice against the arrest of Seeman and others who just spoke their mind without ever indulging in violence? You cannot open your mouth against the State suppressing the free speech but make noise about free speech when it is not risky to do so. Good show guys.

    ReplyDelete
  21. ஐயா சேதுராமன் இங்கு ஞாநி எங்கய்யா சம்பந்த படுறார்? இது எப்படி தெரியுமா இர்ருக்கு சொத்த பாட்டெல்லாம் fmல திருப்பி திருப்பி போட்டு ஹிட் ஆக்கிருவாங்க,அத மாதிரி ஞாநி பெரிய முற்போக்கான சிந்தனை கொண்ட எழுத்தாளர்,வல்லவர், நல்லவர்,நாளும் தெரிந்தவர்ன்னு சொல்லி சொல்லி ஹிட் ஆக்குரிங்க போல

    ஆமா பத்ரி ", இணைய பெரியாரிய, திராவிட, மார்க்ஸிய, லெனினிய வஸ்தாதுகள் மதிமாறன், வினவு போன்றோர் "கள் கருத்துகள் ஏற்கமுடியாதவையாக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்காமல்! வார்த்தைகளை எடுத்துள்ளீர் போல ஹா ஹா இருந்தாலும் பதிவு பயங்கர ஹாட் ..
    பத்ரி, ஒவ்வொரு மனுஷ புள்ளைங்களுக்கும் ஒவ்வொரு பீலிங்கு

    ReplyDelete
  22. http://thoughtsintamil.blogspot.com/2006/06/blog-post_23.html

    http://thoughtsintamil.blogspot.com/2008/03/blog-post_31.html

    பத்ரி இரண்டு சுட்டிகளிலுமே நீங்கள் தீட்சிதர்களின் செயல் மாறவேண்டும் அதுதான் அவர்களுக்கு நல்லது என்ற கண்ணோட்டத்தில் மட்டும் எழுதியுள்ளீர்களே தவிர, சிவனடியார் ஆறுமுக சாமி தக்கப் பட்டதை கண்டித்து நீங்கள் ஒரு வரி கூட எழுத வில்லை என்பது வேதனையான உண்மை.

    //இணைய பெரியாரிய, திராவிட, மார்க்ஸிய, லெனினிய வஸ்தாதுகள் மதிமாறன், வினவு போன்றோர்
    என்ன பத்ரி நீங்களும் பொதுப்படுத்துதலில்
    இறங்கிவிட்டீர்களா?

    பத்ரி எனக்கும் சட்டம், அறவழிப் போராட்டம் எல்லாம் நல்ல கொள்கைகள்தான். ஆனால் இங்கு சட்டம் எளிய மக்களுக்கு வெறும் ஏடுகளில் மட்டும்தான் நிற்க்கிது. அப்படிப்பட்ட சட்டத்திற்கு பாதுகாவலர்கள்தான் சுப்பிரமணிய சாமிக்களும் தீட்சிதர்களும். சுப்பிரமணிய சாமிக்கு இந்திய அரசியல் சட்டம், தீட்சிதர்களுக்கு இந்து சாதி அரசியல் சட்டம். காலம் காலமாக இவர்களிடமிருந்து சட்டத்தை எளிய மக்களுக்கு எடுத்து சென்றது பெரியாரும், மர்க்சும் இவர்களின் அடியாள்களான[வஸ்தாதுகள்] திகா, மகஇகளுமே என்பதை சற்று நினைத்துப் பாருங்கள்.

    //இப்போது எந்தவிதமான மாறுபட்ட கருத்தையும் எதிர்கொள்ளும் போது எழுதுபவரின் பின்புலத்தை புலனாய்வு செய்வது, பெரியாரிய தோழர்களின் நடவடிக்கையாக உள்ளது.//
    தோழர்களின் பின்புலம் பெரியாரியம் என்று இவருக்கு எப்படி தெரிந்தது?

    சுப்பிரமணிய சாமி தாக்கப்பட்டதும் தவறே, காவல் துறை தாக்கப் பட்டதும் தவறே, வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டதும் தவறே, இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அநாகரிகள் என்றால் சிவனடியாரை தாக்கியவர்களும் அநாகரிகள்தான். என்னுடைய கோபம் எல்லாம் இப்போது குதிக்கும் நீதிமன்றமும், சட்டத்தின் மேல் நம்பிக்கை கொன்ட சனநாயக வாதிகளும் சிவனடியார் தாக்கப் பட்டபோதும், சீமான் கைது செய்யப்பட்ட போதும், செய்யப்படும் போதும், புத்தக விற்பனை தடை என வாய் வழி உத்தரவு போட்ட போதும் இதே கோபத்தை காட்டவில்லை என்பதுதான்.

    //Voltaire is attributed with having said, ‘I disapprove of what you say, but I will defend to the death your right to say it.’//
    வால்டரின் மேற்கோள் சீமனுக்கும், விடுதலை புலிகள் ஆதரவாளர்களுக்கும், தமிழ் தேசிய வாதிகளுக்கும் பொருந்தும் என்று நம்பிகிறேன்

    ReplyDelete
  23. செந்தில்: எவர்மீது செலுத்தப்படும் வன்முறையையும் நான் ஆதரிக்கவில்லை. ஓதுவார் ஆறுமுகசாமியை தீட்சிதர்கள் தாக்கியது ஏற்கப்படக்கூடியதல்ல. அதற்காக தீட்சிதர்கள்மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்குப் பிறகு அவர்கள் தண்டனை பெறவேண்டும்

    நான் எந்த இடத்திலும் ‘தீட்சிதர்கள் மாறுவது அவர்களுக்கு நல்லது’ என்று எழுதவில்லை. அரசு தில்லைக் கோயிலை எடுத்துக்கொள்ளவேண்டும், அங்கு சமத்துவம் நிலவ வழிவகுக்கவேண்டும் என்றுதான் எழுதியுள்ளேன்.

    ReplyDelete
  24. பத்ரி,

    வினவு தளத்தில் ஏறக்குறைய தனி மனிதனாக சாமி மீது முட்டை வீசியது தவறு என்று திருப்பி திருப்பி புலம்பிக் கொண்டிருந்தேன். இதை பற்றி பதிவு எழுத வேண்டும் என்று நினைக்கும்போதெல்லாம் என்னடா தமிழ் ப்ளாக் உலகில் ஒருவர் கூடவா இது தவறு என்று நினைக்கவில்லை, ஒரு பதிவு கூட வரவில்லையே என்று சோர்வாக இருந்தது. முரளி என்ற நண்பர் உங்கள் பதிவை பற்றி சொன்னார். பார்க்க கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. நன்றி!

    ReplyDelete
  25. பத்ரி நீங்கள் வன்முறையை ஆதரிப்பவர் என்றோ தீட்சிதர்களை ஆதரிப்பவர் என்றோ பொருள் தர நான் முயற்சிக்கவில்லை.

    //எவர்மீது செலுத்தப்படும் வன்முறையையும் நான் ஆதரிக்கவில்லை. //
    எனக்கும் இப்படி கடைசிவரை சொல்ல ஆசைதான் பத்ரி, சட்டம் நல்லவர்களுக்கு உதவியாகவும், கெட்டவர்களுக்கு தடையாகவும் இருக்க வேண்டும். ஆனால் சட்டம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இன்னும் சுப்பிரமணிய சாமிக்கு எளிதாகவும், எங்க ஊர் செல்லதுரைக்கு எட்டா கனியாகவும் இருக்கிறது. கருணாநிதிக்கு எதிராக ஞாயிற்றுக் கிழமைகளில் கூட நீதி மன்றம் திறக்கிறது, ஆனால் நர்மதா அனை விவகாரத்தில் அத்தனை எளிய மக்களுக்கும் நீதி கண்ணாமூச்சி ஆடுகிறது. விமர்சித்தாலே நீதி மன்ற அவமதிப்பு என பூச்சான்டி காட்டும் ஒரு சட்ட அமைப்பில் எனக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. எந்த ஒரு அமைப்பு விமர்சனத்தை மறுக்கிறதோ அது காலப்போக்கில் துருப் பிடித்து அழிந்து விடும் என்பதே எனது கருத்து. நீதி மன்றத்தை எந்த அளவுக்கு விமர்சிக்கலாம், நீதி பதிகள் சில நேரங்களில் முரட்டுத் தனமாக கருத்து கூறுகிறார்களே அதை எப்படி [சட்ட ரீதியில்]எதிர்கலாம், நீதி துறை எந்த அளவிற்க்கு வெளிப்படியா நடக்கிறது/நடக்கவேண்டும் என்று விரும்பிகிறீர்கள் என்பதை கொஞ்சம் பதிவிடுமாறு கேட்டு கொள்கிறேன்.

    நன்றி
    செந்தில்

    ReplyDelete
  26. மிகத்தாமதமாகத்தான் இந்த இடுகையைப் படிக்க நேர்ந்தது. பத்ரி கருத்துச் சுதந்திரத்தைப் பற்றி பொதுவாக இரண்டுபக்கப் பார்வைகளில் எழுதி வருகிறார். முன்பு திருமாவளவன் மற்றும் சீமான் ஆகியோருடைய பேச்சுரிமைக்கு ஆதரவாகக் கருத்துகள் தெரிவித்துள்ளார். எனவே அவருடைய நிலைப்பாடு புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் என்னுடைய அருமை நண்பர் ஸ்ரீகாந்த் இங்கு வெளிப்படுத்தியிருக்கும் கருத்துரிமை முத்துக்கள்தான் நகைப்புக்குரியன. கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்றுதான் விமர்சிக்க வேண்டும்.

    //இதில் ஒரு விதமான 'apres moi, les deluge' மனப்பான்மை தெரிவது அச்சமூட்டுகிறது. அதாவது, எனக்குத் தேவையானது நடக்காவிடில், எது நடந்தாலும் அக்கறையில்லை என்ற மனப்பான்மை. //

    இலங்கையில் ஒரு அரசு கொத்துக் குண்டுகளை எரிந்து கோரதாண்டவம் ஆடிக் குழந்தைகளைக் கொன்று குவிப்பதைப் பற்றி ஸ்ரீகாந்துக்கு எந்த அக்கறையுமில்லை. ஆனால் அவருடைய புலியெதிர்ப்பு ஜனநாயகப் பாசத்தில் இலங்கை அரசின் பயங்கரவாதத்துக்கு ஆதரவான சுட்டிகளை மட்டும் தேடியெடுத்து ட்விட்டரில் போடுவார். இதுதான் அவரது அக்கறையின் இலட்சணம்.

    //மேலும், 'கருத்து வன்முறையை' எதிர்க்க நிஜ வன்முறை உதவும் என்றோ, அது நியாயம் தான் என்றோ கருதும் முட்டாள்தனமான, அநாகரீகமான சிந்தனைப் போக்கு இணையத்தில் பெருகி வருவது அதிர்ச்சி அளிக்கிறது.//

    இப்பொழுது கருத்து வன்முறையை எதிர்ப்பதாக நாடகமாடும் ஸ்ரீகாந்த் முன்பு வைக்கோ-நெடுமாறன்-சுபவீயையும், தற்பொழுது அமீர்-மணியரசன்-சீமானையும் நீதிமன்றக் கண்டனங்களுக்குப் பிறகும் அரசுகள் சிறையிலடைத்துத் துன்புறுத்துவது குறித்து எங்காவது பேசியிருக்கிறாரா? முன்பெல்லாம நண்பர் ஸ்ரீகாந்த் அளவுக்கு அதிகமான இந்திய தேசியப் பாசத்தினால் ஒருபக்கச் சார்புடன் பேசுவார் என்று நினைத்தேன். இப்பொழுது அதிகார வர்க்கத்து சாதி வெறியர்களின் மூலம் எத்தனையோ ஒடுக்குமுறைகளை நடத்திக் கொண்டிருக்கும் சுப்பிரமணியசாமியின் கருத்துரிமைக்கு மட்டும் வக்காலத்து வாங்குவது மூலம் ஸ்ரீகாந்துக்கு இந்தியப் பாசமெல்லாம் இல்லையென்று மட்டும் புரிந்து கொண்டேன்.

    தமிழருக்கெதிரான ஸ்ரீகாந்தின் இரட்டை வேடத்தை முன்பொரு முறை அவருடைய இடுகைகள் மூலம் தெளிவாகத் தோலுரித்துக் காட்டியிருந்தேன். இப்பொழுது சில வாரங்களாக அவரைப் பற்றிய முழுமையான புரிதலுக்கு வழிகாட்டியுள்ளார். நன்றிதான் சொல்ல வேண்டும்.

    நன்றி - சொ.சங்கரபாண்டி

    ReplyDelete
  27. //சட்டம் நல்லவர்களுக்கு உதவியாகவும், கெட்டவர்களுக்கு தடையாகவும் இருக்க வேண்டும். ஆனால் சட்டம் எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இன்னும் சுப்பிரமணிய சாமிக்கு எளிதாகவும், எங்க ஊர் செல்லதுரைக்கு எட்டா கனியாகவும் இருக்கிறது. கருணாநிதிக்கு எதிராக ஞாயிற்றுக் கிழமைகளில் கூட நீதி மன்றம் திறக்கிறது, ஆனால் நர்மதா அனை விவகாரத்தில் அத்தனை எளிய மக்களுக்கும் நீதி கண்ணாமூச்சி ஆடுகிறது. விமர்சித்தாலே நீதி மன்ற அவமதிப்பு என பூச்சான்டி காட்டும் ஒரு சட்ட அமைப்பில் எனக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. எந்த ஒரு அமைப்பு விமர்சனத்தை மறுக்கிறதோ அது காலப்போக்கில் துருப் பிடித்து அழிந்து விடும் என்பதே எனது கருத்து. நீதி மன்றத்தை எந்த அளவுக்கு விமர்சிக்கலாம், நீதி பதிகள் சில நேரங்களில் முரட்டுத் தனமாக கருத்து கூறுகிறார்களே அதை எப்படி [சட்ட ரீதியில்]எதிர்கலாம்//
    நீதிபதிகளின் மீது ஒருவகை வெறுப்பு இருப்பது புரிகிறது. அவ்வாறு நீதிமன்றங்கள் ஆனதற்கு யார் பொறுப்பு?
    நீதியைத் தொழிலாகக் கொண்டவர்களே நீதியை மதிக்காது நீதி மன்றத்துக்கு உள்ளேயே நீதிபதிகளுக்கு முன்பாகவே முட்டை, கல் அடிப்பது எந்த ஒரு பிரிவும் கட்சியும் ஆதரிக்க முடியாத ஒன்று. சுப்ரமணியம் சுவாமி எந்தவகை கீழ்தனமானவராக இருந்தாலும் இதை ஒப்புக் கொள்ளக் கூடாது.
    மீண்டும் சொல்கிறேன் (இன்னொரு தளத்தில் பின்னோட்டமாக சொன்னது) : சட்டக் கல்லூரியில் படிக்கும் பொது முக்குலத்தாரா தலித்தா? என்று பார்த்து, தன் கூட படிக்கும் மாணவனை கத்தி கொண்டு குத்தும் மாணவன் பரீட்சை தேறி வக்கீல் ஆனால் சட்டத்தை எவ்வாறு மதிப்பான்? அவனை சட்டக் கல்லூரியில் சேர்த்தது யார் குற்றம்? இதைக் கேட்டால் என் பின்னணியை ஆராய்ச்சி செய்வார்கள். நான் சொல்வது உண்மை என சொல்லமாட்டார்கள்.
    இதை விட மோசமாக நாள் வராது என்று பல முறை கருதி இருக்கிறோம்; ஆனால் நிகழ்வுகள் அதை தவறு, இன்னும் மோசமாக நிகழ்வுகள் வரலாம் என காட்டியிருக்கின்றன.

    ReplyDelete