Thursday, April 30, 2009

சோழர் கால ஓவியங்கள்

ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை அன்று மாலை, தமிழகப் பாரம்பரியம் பற்றி ஒரு சிறப்புப் பேச்சு ஒன்றை நாங்கள் நடத்திவருகிறோம். நாங்கள் என்றால் அதில் நான், அடிக்கோடியில் ஒரு சிறு துரும்பை மட்டும் கிள்ளிப்போடுபவன்.

பேராசிரியர் சுவாமிநாதன் ஐஐடி டெல்லியில் (இடையில் ஐஐடி சென்னையில் ஓரிரு வருடங்கள்) பேராசிரியராக இருந்தவர். இப்போது ஓய்வுபெற்று சென்னையில் வசிக்கிறார். அண்ணாமலை, தக்கர் பாபா (Bapa) வித்யாலயாவில் உள்ள காந்தி ஆராய்ச்சி மையத்தை நடத்திவருபவர். டி.கே.ராமச்சந்திரன், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தின் சேர்மனாக இருக்கும் ஐ.ஏ.எஸ் அலுவலர். கண்ணன். பிறகு நான்.

இவர்களது முன்முயற்சியில் உருவானதுதான் தமிழகப் பாரம்பரியம் என்ற குழுமம். அதன் முயற்சிதான் இந்தத் தொடர் பேச்சுகள். ஓவியம், இசை, சிற்பம், கட்டடக் கலை, மொழி, பண்பாடு போன்ற பலவற்றைப் பற்றியும் பெரும்பான்மை மக்களுக்குக் கொண்டுசெல்வது எங்கள் நோக்கம்.

இது சிறு ஆரம்பமே. செய்யவேண்டியவை நிறைய உள்ளதன. என்ன செய்வதென்று சரியாகப் புரியாத நிலையில், எங்கிருந்தாவது ஆரம்பிப்போம், பிறகு வழி தெளிவாகத் தெரியக்கூடும் என்றுதான் எங்களது முயற்சிகள் தொடங்கியுள்ளன.

ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை, மாலை 5.00 மணி தொடங்கி 7.00 மணிக்குள் தி.நகர், வெங்கட்நாராயணா சாலை, தக்கர் பாபா வித்யாலயா பின்பக்கமாக உள்ளே நுழைந்தால் அங்கே எங்களைப் பார்க்கலாம். (கொஞ்சம் கொசு ஜாஸ்தி, எனவே அதற்கேற்ப ஆடை அணிந்துவருதல் நலம். ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு சென்று காலை ரணகளமாக்கிக்கொண்டு வந்துள்ளேன்!) பேச்சுடன் (சுமாரான) காப்பி அல்லது டீயும் கிடைக்கும்.

சரி. பீடிகை போதும். விஷயத்துக்கு வருவோம். வரும் சனி, மே 2 அன்று...

இந்திய தொல்லியல் துறையின் ஸ்ரீராமன், தஞ்சை பிருகதீஸ்வரர் கோயில் கருவறையைச் சுற்றியுள்ள, பொதுவாக யாருக்கும் செல்ல அனுமதி கிடைக்காத இடத்தில் வரையப்பட்டுள்ள சோழர் கால ஓவியங்களைப் பற்றிப் பேசுகிறார். ஸ்ரீராமன், இந்த ஓவியங்களை படமெடுத்து ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். முதல் முறையாக நம்மில் பலருக்கு இந்த ஓவியங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கப்போகிறது.

இந்த ஓவியங்கள் உலகக் கலை வரலாற்றிலேயே மிகச் சிறப்பு வாய்ந்தவை என்று அறியப்படுபவை. இது உண்மைதானா என்று நீங்களே பார்த்து உணர்ந்துகொள்ள இது அரிய வாய்ப்பு.

இந்தப் பேச்சின் இரண்டாம் பாகம் அடுத்த மாதம் (ஜூன் முதல் சனிக்கிழமை) தொடரும். அப்போது (நாயன்மார்களில் ஒருவரான) ‘சுந்தரரின் வாழ்க்கையிலிருந்து சில பகுதிகள்’ என்ற ஓவியத்தை எடுத்துக்கொண்டு, அதை ஆழ்ந்து, கூர்ந்து பார்க்கும் முயற்சியில் ஸ்ரீராமன் ஈடுபடுவார்.

ஒரு புதிய உலகை உங்களுக்குக் காண்பிக்கும் இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் கட்டாயம் வருவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

10 comments:

  1. தங்கள் நோக்கம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. பத்ரி,

    உங்களது இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள்...

    இந்த கூட்டம் நிறைவு பெற்ற பின் அந்த படங்களை வலையேற்றுவீர்களா?

    அப்படிச் செய்தால், கலந்து கொள்ள இயலாதவர்களுக்கும் அதனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்...

    ReplyDelete
  3. is there any plans to upload the audio and video of these talks?!

    ReplyDelete
  4. ஆடியோ பதிவு செய்வேன். ஆனால் வீடியோ எடுக்கும் நோக்கம் இப்போதைக்கு இல்லை. இந்தப் பேச்சுகள் நடக்கும் இடம் ஒலி, ஒளி அமைப்பு சுமார்தான். வீடியோ எடுக்கும் செலவு பற்றி இதுவரை யோசிக்கவில்லை. இதைப்பற்றி நாளைக்குள் பேசி ஏதேனும் செய்யமுடியுமா என்று பார்க்கிறேன். பேச்சாளரின் அனுமதியும் தேவைப்படும்.

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி பத்ரி.

    இந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்கிய
    கே.ஏ. நீலகண்டசாஸ்திரி எழுதிய சோழர்கள் (NCBH வெளீயீடு இரண்டு பாகம் விலை ரூ:600}

    இப்போதுதான் வாசிக்க தொடங்கியுள்ளேன்.


    நிறைய தகவல்கள்.

    நீங்கள் வாசித்தீர்களா..??

    கூட்டத்திற்கு வரவேண்டும் என்றும் ஆவல்.

    ReplyDelete
  6. அமெரிக்காவில் இருந்து கொண்டு இது போன்ற‌ குழும‌‌ங்க‌லில் ப‌ங்கு பெற‌‌ முடியாத‌து பெரிய‌ குறை.

    வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள்.

    ReplyDelete
  7. பத்ரி,

    இக்கூட்டத்தின் பேச்சுகளை ஒலிப் பதிவு செய்தீர்களா? பதிவேற்றம் செய்தபின் வலைமுகவரியை கொடுக்கவும்.

    நன்றி.

    ReplyDelete
  8. வரவேண்டும் என்று நினைத்திருந்தேன், வெளியூருக்குச் சென்றிருந்ததால் வரமுடியவில்லை.

    இந்த ஐ.ஐ.டி. ப்ரொஃபசர் சுவாமிநாதன், புதுக்கோட்டையைச் சேர்ந்த, இப்பொழுது பள்ளிக்கரனையில் வசிக்கும் சுவாமிநாதனா? நிகழ்ச்சி எப்படி இருந்தது?

    எப்டிக்கீது ஓவியமெல்லாம்? :-)

    இந்த ஓவியங்களைப் பற்றிய இலாவண்யா, கமல், கோகுல், டாக்டர். கலைக்கோவன், ராம் போன்றோர் எழுதிய சில கட்டுரைகள் வரலாறு.காமில் வெளிவந்திருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று:

    http://www.varalaaru.com/Default.asp?articleid=63

    ReplyDelete
  9. க்ருபா: அவர்தான். ஆனால் அவர் இப்போது மந்தவெளியில் வசிக்கிறார்.

    ReplyDelete
  10. விக்னேஷ்Sun Jul 22, 12:05:00 AM GMT+5:30

    ஐயா, கே.ஏ. நீலகண்டசாஸ்திரி எழுதிய சோழர்கள் புத்தகம் மின்னூல் வடிவில் இணையத்தில் இருந்தால் பெரிதும் உபயோகமாய் இருக்கும்

    ReplyDelete