Sunday, May 24, 2009

அரசியல் பேரங்கள்

நம் நாட்டில் அரசியல் பேரங்கள் பெரும்பாலும் அபத்தமாகவே நடைபெறுகின்றன. தேர்தலுக்கு முந்தைய pre-poll கூட்டணி, இடங்கள் தொடர்பான பேரங்கள் ஒருமாதிரியானவை. இங்கே hardball சண்டைகள் போடலாம். ஏனெனில் தேர்தல் நடந்தபின் பெரும்பாலும் தேர்தலுக்கு முந்தைய கட்டம் மறந்துவிடும்.

தேர்தல் முடிந்தபின் நடக்கும் பேரம் வேறு வகையானது. எதிராளியின் நிலை (இந்த இடத்தில் கூட்டணியின் முக்கியக் கட்சி) என்ன என்று தெரிந்து நடத்தும் பேரம் ஒருவகை. தன் காரியமே குறி என்று நடத்தும் பேரம் ஒருவகை. இந்த இரண்டாவது வகை பேரத்தில் எதிராளிக்கு நிறைய கஷ்டங்களைக் கொடுத்தால் அடுத்த ஐந்து வருடங்கள் சுமுகமாக இருக்காது.

கருணாநிதியின் பேரம், திமுகவின் தொண்டர்கள், தமிழ் இன உணர்வாளர்கள் போன்ற சில அதீத ஆசாமிகளைத் தவிர மற்ற எல்லோருக்கும் கசப்புணர்வையே ஏற்படுத்தியுள்ளது. சில தமிழ் உணர்வாளர்கள், “வேணுமய்யா, நல்லா வேணும். இந்த வடவன் கொண்டையைப் பிடிச்சு தலைவர் நல்லா ஆட்றாருல்ல, வேணும்” என்று கொக்கரிக்கிறார்கள். திமுக தொண்டனுக்கு இந்த அளவுக்கு யோசிக்க வேண்டியதில்லை. “கருணாநிதி, தி கலைஞர்” என்ன கேட்டாலும் எதிர்த்துப் பேச இவர்களுக்கு என்ன தைரியம் என்ற அளவில்தான் அவர்கள் இருக்கிறார்கள்.

இன்று நாடு அதிகம் மாறிவருகிறது. அங்கே இங்கே ஊழலில் அள்ளிக்கொண்டாலும் performance என்ற விஷயம் அடிபடுகிறது. எந்தக் கட்சி அல்லது கூட்டணி என்ன சாதிக்கிறதோ அதை வைத்துத்தான் அவர்களுக்கு அடுத்த வாய்ப்பு தரப்படுகிறது. அதனால்தான் சில மாநிலங்களில் ஒரே கட்சி/கூட்டணி மீண்டும் மீண்டும் ஆட்சிக்கு வருகிறது. பல இடங்களில் தூக்கி எறியப்படுகிறது.

திமுக குடும்பத்தையே மந்திரியாக்குவதில்கூடப் பிரச்னை இல்லை. ஆனால் மந்திரி ஆவதே அந்தத் துறையில் கல்லா கட்டத்தான் என்றில்லாமல், தீவிரமாக நாட்டுக்கோ, தனது மாநிலத்துக்கோ என்ன செய்யமுடியும் என்று யோசித்துப் பார்த்தார்களா என்று தெரியவில்லை. தொலைத்தொடர்பு என்பது ஏறுமுகம் கொண்ட ஒரு துறை. அதற்கு யார் மந்திரியாக இருந்தாலும் பெரிய பிரச்னையில்லை. வேலைகள் நடந்தே தீரும். ஆனால் பல துறைகளில் சரியான ஆள் இல்லாவிட்டால் அதோகதிதான். உதாரணமாக, தரைவழிப் போக்குவரத்து. உள் கட்டமைப்புகளுக்கு எக்கச்சக்கமான பணம் செலவழிக்கவேண்டும். நீண்டகாலத் தொலைநோக்குடன் திட்டங்கள் தீட்டி வேலைகளைச் செய்யவேண்டும்.

இந்த வேலையை, ஒரு தமிழனால் செய்யமுடியாதா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாகச் செய்யமுடியும். எந்தத் தமிழனால் என்பதில்தான் கேள்வியே.

காங்கிரஸ் மட்டும் சரியான அமைச்சர்களைத் தேர்ந்தெடுத்துள்ளதா என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக இல்லை. இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18 கேபினெட் அமைச்சர்களில் நாலைந்து பேர் உபயோகமற்றவர்கள் என்றே நினைக்கிறேன்.

இந்த பேர விவகாரம் சட்டுப்புட்டென்று முடிந்தால் தேவலை. நாட்டில் பல பிரச்னைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. எந்தத் துறைக்கு யார் யார் அமைச்சர் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும். புதுமுகங்கள் யார் யார் என்று தெரிந்துகொள்ளவும் ஆசை.

4 comments:

  1. இந்த பேர விவகாரம் சட்டுப்புட்டென்று முடிந்தால் தேவலை. நாட்டில் பல பிரச்னைகள் காத்துக்கொண்டிருக்கின்றன. //

    பேரம் என்று வியாபாரமும் பேசுகிறீர்கள்.உடனே மக்கள் நலன் என்று பல பிரச்சினைகளையும் பேசுகிறீர்கள்.
    அறுத்துச் சொன்னால் நாம் எல்லோரும் சுயநலவாதிகளே.முக மூடிகள் மட்டுமே வேறு.

    ReplyDelete
  2. தமிழுணர்வால் திமுக எதிர்ப்பு என்ற பெயரில் நீங்கள் சமீபகாலமாக அடித்து வரும் கொட்டம் தாங்க இயலவில்லை :-)

    தயவுசெய்து தேர்தலுக்கு முந்தைய உங்கள் கருத்துகளையும், மக்கள் தீர்ப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கவும். யதார்த்தத்தில் இருந்து விலகிப் போய்க்கொண்டிருப்பது நீங்களா அல்லது socalled திமுக தொண்டர்களா என்று புரியும்.

    மாநிலத்துக்கு ஒன்றும் செய்யாமலா கிட்டத்தட்ட தொண்ணூறாயிரம் கோடி ரூபாய்க்கு கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்துக்கு திட்டங்கள் கொண்டுவந்தார்கள்?

    கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு நாட்டுநடப்பை கவனிக்க வேண்டாம்!

    ReplyDelete
  3. ///தயவுசெய்து தேர்தலுக்கு முந்தைய உங்கள் கருத்துகளையும், மக்கள் தீர்ப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கவும். யதார்த்தத்தில் இருந்து விலகிப் போய்க்கொண்டிருப்பது நீங்களா அல்லது socalled திமுக தொண்டர்களா என்று புரியும்.///

    Well said Mr. Lucky look,

    They(!) never change.

    sathappan

    ReplyDelete
  4. வே. இளஞ்செழியன்Mon May 25, 11:07:00 PM GMT+5:30

    கருணாநிதியின் இழிச் செயலை நியாப்படுத்துவதற்க்கும் ஆட்கள் இருக்கிறார்களே என்ற எண்ணம்தான் வேதனையளிக்கின்றது.

    தமிழ் உணர்வாளர்கள் கருணாநிதியை ஆதரிப்பதாக உங்கள் கட்டுரையில் கூறியிருந்தீர்கள். இக்கருத்து தவறாக எனக்குப் படுகின்றது. கருணாநிதி செய்த, செய்துவரும் காரியங்களைத் தன்மானமுள்ள எந்தத் தமிழுணர்வாளனால் ஆதரிக்க முடியும்? அப்படி ஆதரிப்பவன் தமிழுணர்வாளனா என்ற கேள்வியும் எழும்புகிறதல்லவா...

    தமிழனுக்குத் தன்மானம் கற்பிக்க தந்தை பெரியார் பார்ப்பனரை எதிர்த்தார். அது ஒருவித அரசியல். கருணாநிதியின் அரசியலோ, தமிழர் நலனையும் சுயமரியாதையையும் மிதிப்பதாக அன்றோ அமைந்துள்ளது. கேவளம்.

    ReplyDelete